Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் தலைமுடியைப் பற்றி கவலையா?

உங்கள் தலைமுடியைப் பற்றி கவலையா?

உங்கள் தலைமுடியைப் பற்றி கவலையா?

ஒவ்வொரு நாளும் கண்ணாடி முன் நின்று தலைமுடியை கவனமாக ஆராயும் அநேகரில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் தங்கள் தலைமுடியில் அக்கறை காட்டுகிறார்கள்; சில சமயங்களில் அதுவே கவலைக்கும் காரணமாகிவிடலாம்.

உங்கள் முடியைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்

உங்களுக்கு எத்தனை தலைமுடி இருக்கிறது தெரியுமா? சராசரியாக, சுமார் 1,00,000. முடி வளர்ந்துகொண்டே இருப்பதில்லை, மாறாக இரண்டு முதல் ஆறு வருடங்கள்தான் வளருகிறது. பின்னர் அது உதிர்ந்து, சிறிது இடைவெளிக்கு பிறகு அதே துளையிலிருந்து மற்றொரு புதிய முடி வளர ஆரம்பிக்கிறது. ஒரு முடியின் வாழ்நாள் காலம், முடி சுழற்சி என்று அழைக்கப்படுகிறது. (பக்கம் 15-⁠ல் உள்ள பெட்டியைக் காண்க.) ஒருவருக்கு தலைமுடி சம்பந்தமாக எந்த பிரச்சினையும் இல்லாதிருந்தாலும்கூட, இந்த சுழற்சியால் ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 70 முதல் 100 முடிகள் தானாகவே உதிர்கின்றன.

தலைமுடி பல்வேறு நிறங்களில் இருப்பதற்கு காரணம் என்ன? “மெலனின் என்ற கரும் பழுப்பு நிறமியின் அளவும் அது பரவியிருக்கும் விதமுமே தலைமுடியின் நிறத்தை பெருமளவு தீர்மானிக்கின்றன” என த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா விவரிக்கிறது. மெலனின் என்பது முடி, தோல், கண்கள் ஆகியவற்றில் காணப்படும் உயிரியல் நிறமியாகும். நிறமி அதிகளவில் இருந்தால் தலைமுடியின் நிறமும் கன்னங்கரேல் என்று இருக்கும். மெலனின் அளவு குறைய குறைய முடியின் நிறமும் கருப்பிலிருந்து பழுப்பு, சிவப்பு அல்லது பொன்னிறமாக மாறும். முடியில் கொஞ்சம்கூட மெலனின் இல்லையென்றால் அது வெண்ணிறத்தில் பளபளக்கும்.

பொடுகு தவிர தலைமுடி உதிர்வதும் தலைமுடி நரைப்பதும்கூட அநேகரின் கவலைக்கு காரணமாகின்றன.

உங்கள் தலைமுடி நரைக்கிறதா?

தலைமுடி நரைப்பது பொதுவாக வயதானதற்கு அடையாளமாக கருதப்படுகிறது. வெள்ளை முடி வயதானவர்களின் சின்னம் என்ற கருத்து நிலவுகிறது. வயதாக ஆக தலைமுடி அதிகம் நரைப்பது உண்மையே. என்றாலும், வயோதிகம் மட்டுமல்லாமல் ஒரேயடியாக டயட்டிங் இருப்பது போன்ற காரணங்களாலும் தலைமுடி நரைக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது. ஒருவரின் பாலினத்தையோ முடியின் இயல்பான நிறத்தையோ சார்ந்து தலைமுடி நரைப்பதில்லை; என்றாலும் கன்னங்கரேல் என முடியுள்ளவர்களில் அது தெளிவாக தெரியலாம்.

தலைமுடி நரைப்பதால் சிலர் உண்மையான வயதைவிட அதிக வயதானவர்களாக தோன்றலாம், இது அவர்களுக்கு கவலை தரலாம். மறுபட்சத்தில் சிலருக்கு நரை முடியே இருக்காது. இவர்களோ தங்கள் வயதிற்கு ஏற்ற தோற்றம் இல்லாததை எண்ணி கவலைப்படலாம்.

தலைமுடி நரைப்பதால் அது செத்துவிடுவதாக அர்த்தமில்லை. உண்மையில், முடியில் நாம் பார்க்கும் பகுதி ஏற்கெனவே செத்துவிட்டது. ஒவ்வொரு முடியும் தோலிற்கு கீழிலிருந்து வளருகிறது. குமிழ் என்று அழைக்கப்படும் இந்தப் பகுதி மட்டுமே ஒரு முடியின் உயிருள்ள பகுதியாகும். இந்தக் குமிழ்தான் முடியை உற்பத்தி செய்கிறது. குமிழிலிருக்கும் செல்கள் வேகமாக பிரிகையில் முடி உருவாகிறது; அப்படி உருவாகையில் அது நிறமி செல்கள் பிறப்பிக்கும் மெலனினை உறிஞ்சிக் கொள்கிறது. ஆகவே, நிறமி செல்கள் மெலனின் உற்பத்தியை நிறுத்திவிட்டால் முடி வெள்ளையாகவே இருந்துவிடுகிறது.

நிறமி செல்கள் திடீரென்று மெலனின் உற்பத்தியை நிறுத்திவிடுவதற்குரிய காரணத்தை இன்று வரை யாரும் கண்டுபிடிக்கவில்லை. ஆகவே, தலைமுடி நரைப்பதை தடுக்க இதுவரை எந்தக் குறிப்பிட்ட சிகிச்சை முறையும் கண்டுபிடிக்கப்படவில்லை. செயல்படாமல் முடங்கிவிட்ட நிறமி செல்கள் மீண்டும் செயல்பட ஆரம்பிக்கலாம் என்பதும் அறியப்பட்டுள்ளது. முடியைப் பற்றி அநேக குறிப்புகள் பைபிளில் இருப்பது அக்கறைக்குரிய ஒன்று, அதிலும் இயேசு சொன்ன ஓர் உதாரணம் நரை முடியைப் பற்றியது. “ஒரு மயிரையாவது வெண்மையாக்கவும் கறுப்பாக்கவும் உன்னால் கூடாதே” என்று அவர் கூறினார். (மத்தேயு 5:36) தலைமுடி நரைப்பதை தடுப்பதோ குணப்படுத்துவதோ மனித சக்திக்கு மிஞ்சியது என வெகு காலமாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதை இந்த வார்த்தைகள் காட்டுகின்றன.

மெலனின் ஊசி போடுவது போன்ற புதிய சிகிச்சை முறைகளை சிலர் முயன்று பார்க்கின்றனர். மற்றவர்களோ தங்கள் தலைமுடிக்கு “டை” அடிக்க தீர்மானிக்கின்றனர்; என்றாலும் இது நேற்று இன்று தோன்றிய பழக்கமல்ல. பூர்வ கிரேக்கர்களும் ரோமர்களும் முடிக்கு டை அடித்தனர். பண்டைய எகிப்தியர்கள் முடிக்கு டை அடிக்க எருதுகளின் இரத்தத்தை உபயோகித்தனர். இயேசு கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்த மகா ஏரோது தனது வயதை மறைக்க தலை நரைக்கு டை அடித்ததாக பதிவு உள்ளது.

இருந்தாலும், தொடர்ந்து டை அடிப்பதற்கு நேரமும் முயற்சியும் தேவை. அதுமட்டுமல்ல, இதனால் சிலருக்கு தோல் பிரச்சினைகளோ அலர்ஜியோகூட ஏற்படலாம். ஒருவேளை நரை முடிக்கு டை அடிக்க நீங்கள் தீர்மானித்தாலும் ஒரு காலக்கட்டத்தில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பலாம். அப்போது, புதிதாக வளரும் முடி உண்மையான நிறத்தை காட்டிக்கொடுத்துவிடுவதால் அப்பிரச்சினையை நீங்கள் நிச்சயம் சமாளித்தாக வேண்டும். என்றாலும், தலை நரை நேர்த்தியான தோற்றத்தை அளித்து முன்பு கிடைக்காத மதிப்பை உங்களுக்கு பெற்றுத் தரலாம் என்பது உற்சாகமளிக்கும் உண்மை. “நீதியின் வழியில் உண்டாகும் நரைமயிரானது மகிமையான கிரீடம்” என்று பைபிள் கூறுகிறது.​—நீதிமொழிகள் 16:31.

அடர்த்தி குறைவதும் வழுக்கை விழுவதும்

அடர்த்தி குறைவதும் வழுக்கை விழுவதும் தலைமுடி சம்பந்தப்பட்ட மற்ற பிரச்சினைகளாகும். இவையும் தொன்றுதொட்டே இருந்து வருகின்றன. பூர்வ எகிப்தில், சிங்கங்கள், நீர் யானைகள், முதலைகள், பூனைகள், பாம்புகள், வாத்துகள் ஆகியவற்றின் கொழுப்பு கலந்த ஒரு கலவை வழுக்கையை போக்கும் நிவாரணியாக உபயோகிக்கப்பட்டது. இன்றோ, தலைமுடி மற்றும் மண்டையோட்டு தோல் பிரச்சினைகளை சரி செய்வதில் ஆற்றல் வாய்ந்ததாக கருதப்படும் பல காரியங்கள் மார்கெட்டில் மலிந்து கிடக்கின்றன. இவற்றிற்காக ஒவ்வொரு வருடமும் ஏராளமான பணம் செலவழிக்கப்படுகிறது.

முடி சுழற்சி அசாதாரண செயலாகையில் வழுக்கை விழுகிறது. ஊட்டச்சத்து குறைவு, நீண்ட நாட்களாக அதிக காய்ச்சல், ஏதாவது ஒருவித தோல் வியாதி போன்ற சரீர குறைபாடுகளால் இயல்பாக நிகழும் முடி சுழற்சி பாதிக்கப்படலாம். கர்ப்பமாவதும் குழந்தை பிறப்பதும்கூட முடி சுழற்சியை பாதிக்கலாம்; இதனால் இயல்பான முடி சுழற்சி முடிவதற்கு முன்பே தலையிலிருந்து அதிக முடி உதிர்ந்துவிடலாம். என்றாலும் இவ்விதமான முடி உதிர்தலில், அதற்கு காரணமான பிரச்சினைகள் மறைகையில் முடி சுழற்சி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புகிறது.

மற்றொரு விதமான முடி உதிர்தல் அலபீஷியா என்று அழைக்கப்படுகிறது. a இந்தக் கோளாறு உள்ளவர்களின் தலைமுடி, மண்டையோட்டு தோலிலிருந்து இங்கும் அங்கும் கொத்துக் கொத்தாக உதிர்கிறது. உடலின் நோய் தடுப்பு முறையில் ஏற்படும் கோளாறே இதற்கு காரணமாக இருக்கலாம் என சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சி காட்டுகிறது.

அடர்த்தி குறைவதில், ஆண்களின் பரம்பரை வழுக்கை என அழைக்கப்படுவதே சர்வசாதாரணமாக நிகழுவது. இதன் பெயரே சுட்டிக்காட்டுகிறபடி இது ஆண்களுக்கு ஏற்படுகிறது. இது, முன்னந்தலையில் அல்லது உச்சந்தலையில் உள்ள தலைமுடியின் அடர்த்தி குறைவதில் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக மோசமடைகிறது. பாதிக்கப்பட்ட இடத்தில் இயல்பான முடி சுழற்சி அசாதாரணமாகி கடைசியில் முடி வளருவது நின்றுவிடுகிறது. “முன்பிருந்த நீண்ட, முரட்டுத்தனமான, இயல்பான நிறத்திலிருந்த தலைமுடிக்கு பதிலாக மண்டையோட்டு தோலின் பாதிக்கப்பட்ட இடங்களில் வேலஸ் என்று அழைக்கப்படும் பட்டுப்போன்ற மென்மையான தலைமுடி வளருகிறது” என த என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா விளக்குகிறது. இயல்பான முடி சுழற்சி தொடருகையில் அது இன்னும் மென்மையாகி, கொஞ்ச காலமே வாழ்கிறது, கடைசியில் சுத்தமாக முடி வளருவது நின்றுவிடுகிறது என்பதே இதன் அர்த்தம். இதற்கு பரம்பரை குணங்களும் ஆண்களின் ஹார்மோன்களும் காரணமாகும்.

ஆண்களின் பரம்பரை வழுக்கை டீனேஜில்கூட ஆரம்பமாகலாம், ஆனால் இது பெரும்பாலும் 30-களின் முடிவிலும் 40-களிலும் ஏற்படவே அதிக வாய்ப்பு உள்ளது. அநேக ஆண்களுக்கு தலைமுடி இப்படி உதிர்ந்தாலும் அது இனத்திற்கு இனமும், நபருக்கு நபரும் மாறுபடுகிறது. இந்தப் பிரச்சினைக்கு முழுமையான பரிகாரம் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே வருத்தமான விஷயம். சிலர் “விக்” அணியலாம் அல்லது முடி மாற்று சிகிச்சை செய்துகொள்ளலாம். பலருடைய விஷயத்தில், உள்ள முடியை கவனமாக பராமரிப்பதே முடி உதிர்வதைக் குறைக்க உதவியாக இருக்கலாம்.

ஒருவருடைய தலைமுடியின் அடர்த்தி குறைவது, தலைமுடி உதிர்வதையே எப்போதும் அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக, ஒவ்வொரு முடியின் அடர்த்தியும் குறைவுபடுவதை குறிக்கலாம், இவ்வாறு முடியின் மொத்த அடர்த்தி குறைகிறது. ஒரு முடியின் பருமன் எவ்வளவு? ஒரு சர்வேயின்படி அது 50 மைக்ரான் முதல் 100 மைக்ரான் வரை இருக்கலாம். b வயதாக ஆக முடியின் பருமன் குறைகிறது. சில மைக்ரான்கள் குறைவது பெரிய விஷயமல்ல என்றே தோன்றலாம். ஆனால், 1,00,000 முடிகள் இருப்பதை மறந்துவிடாதீர்கள். ஆகவே, ஒவ்வொரு முடியும் கொஞ்சம் அடர்த்தி குறைந்தாலும் மொத்த அடர்த்தி ரொம்பவே குறைந்துவிடும்.

உங்கள் முடியை பராமரியுங்கள்

ஒவ்வொரு மாதமும் தலைமுடி பத்து மில்லிமீட்டருக்கு மேல் வளர்கிறது; மனித உடலில் வேகமாக வளர்ச்சியுரும் பாகங்களில் இதுவும் ஒன்று. எல்லா முடிகளின் வளர்ச்சியையும் ஒன்று சேர்த்தால் அது ஒரு நாளைக்கு 20 மீட்டருக்கும் அதிகமாகும்!

தலைமுடி நரைப்பதையும் வழுக்கை விழுவதையும் ஒழித்துக்கட்ட எந்தவித மருத்துவ சிகிச்சையும் இன்று வரை கண்டுபிடிக்கப்படாவிட்டாலும், உள்ள தலைமுடியை பராமரிக்க நாம் நிறைய காரியங்களை செய்யலாம். போதுமான ஊட்டச்சத்துள்ள உணவை உட்கொள்வதும் மண்டையோட்டு தோலுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதும் மிக முக்கியம். ஒரேயடியாக டயட்டிங் இருப்பது அல்லது சமநிலையற்ற உணவை சாப்பிடுவது தலைமுடி நரைப்பதையும் அடர்த்தி குறைவதையும் அதிகரிக்கலாம். தலைமுடிக்கு அடிக்கடி ஷாம்பூ போட்டு, மண்டையோட்டு தோலை நகங்களால் சொரியாமல் மசாஜ் செய்துவிட வேண்டுமென தொழில் வல்லுனர்கள் சிபாரிசு செய்கின்றனர். இதனால் மண்டையோட்டு தோலுக்கு போதுமான இரத்த ஓட்டம் கிடைக்கிறது. முடிக்கு ஷாம்பூ போட்ட பிறகு அதை நன்கு அலசிவிடுங்கள்.

அதிக பலம் கொடுத்து தலைமுடியை சீவாதீர்கள். உங்கள் முடி நீளமாக இருந்தால், எடுத்தவுடன் மேலிருந்து கீழ் வரை சீவுவது நல்லதல்ல. மாறாக, முதலில் முடியை கையில் பிடித்துக்கொண்டு சீப்பினால் நுனியில் இருக்கும் சிக்கை நீக்குங்கள். அடுத்து, நடுவிலிருந்து நுனி வரை சீவுங்கள். கடைசியாக, உங்கள் முடியை மெதுவாக தொங்கவிட்டு மேலிருந்து கீழ் வரை சீவுங்கள்.

தலை நரைப்பதைப் பார்த்தோ எக்கச்சக்கமாக முடி உதிர்வதை பார்த்தோ நீங்கள் ரொம்ப கவலையாக இருக்கலாம். என்றாலும், உங்கள் தலைமுடியை நினைத்து நீங்கள் கவலைப்படும் அளவிற்கு மற்றவர்கள் பொதுவாக கவலைப்பட மாட்டார்கள் என்பதை நினைவில் வையுங்கள். டை அடிப்பதா வேண்டாமா, விக் வைப்பதா வேண்டாமா, வேறு சிகிச்சை பெற வேண்டுமா வேண்டாமா, என்பதெல்லாம் உங்கள் தனிப்பட்ட விஷயம். உங்கள் தலைமுடி எந்த நிறத்தில் இருந்தாலும் சரி உங்களுக்கு எவ்வளவு முடி இருந்தாலும் சரி, அதை சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருப்பதே முக்கியம். (g02 8/08)

[அடிக்குறிப்புகள்]

a 1991, ஏப்ரல் 22, தேதியிட்ட ஆங்கில விழித்தெழு!-வில் பக்கம் 12-ஐக் காண்க.

b ஒரு மைக்ரான் என்பது ஒரு மில்லிமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு.

[பக்கம் 15-ன் பெட்டி/படம்]

முடி சுழற்சி

நமது முடியின் வளர்ச்சி ஒரு சுழற்சியாகும். வளரும் கட்டம், சிறிய இடைப்பட்ட கட்டம், ஓய்வெடுக்கும் கட்டம் ஆகியவை அச்சுழற்சியில் உள்ளன. த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு விளக்குகிறது: “ஒவ்வொரு முறை ஓய்வெடுக்கும் கட்டத்தில் இருக்கையிலும் ஒரு முடியின் வளர்ச்சி நின்றுவிடுகிறது, அப்போது அது குமிழ் முடி என அழைக்கப்படுகிறது. அடுத்து வரும் வளரும் கட்டம் வரை இந்த குமிழ் முடி, மயிர்மூட்டுப் பைக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறது. வளரும் கட்டத்தில் ஒரு புதிய முடி வளருகையில் குமிழ் முடியை மயிர்மூட்டுப் பையிலிருந்து வெளியே தள்ளிவிடுகிறது.” எந்தவொரு குறிப்பிட்ட சமயத்திலும் 85 முதல் 90 சதவிகித தலைமுடி வளரும் கட்டத்தில் இருக்கையில், 10 முதல் 15 சதவிகிதம் ஓய்வெடுக்கும் கட்டத்திலும், 1 சதவிகிதம் இடைப்பட்ட கட்டத்திலும் இருக்கும்.

[படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

ஆரம்ப வளர்ச்சி

அதிக வளர்ச்சி

தலைமுடி காம்பு

இரத்தக் குழாய்கள்

எண்ணெய் சுரப்பி

மயிர்மூட்டுப் பை

பின்னடைவு

ஓய்வு

மறுவளர்ச்சி