Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மூலிகை மருத்துவம் உங்களுக்கு உதவுமா?

மூலிகை மருத்துவம் உங்களுக்கு உதவுமா?

மூலிகை மருத்துவம்—உங்களுக்கு உதவுமா?

மூலிகைகள் நோய்களை குணமாக்க தொன்றுதொட்டே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. சுமார் பொ.ச.மு. 16-⁠ம் நூற்றாண்டில் எகிப்தில் தயாரிக்கப்பட்ட ஏபர்ஸ் பப்பைரஸில், பல்வேறு நோய்களுக்கு நூற்றுக்கணக்கான பாரம்பரிய வைத்தியக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் பொதுவாக, மூலிகை மருத்துவம் வாய்மொழியாகத்தான் அடுத்தடுத்த தலைமுறையினருக்கு விளக்கப்பட்டது.

முதல் நூற்றாண்டு கிரேக்க வைத்தியரான டையஸ்கோரடிஸின் ஆராய்ச்சியிலிருந்துதான் மேற்கத்திய மூலிகை மருத்துவம் தோன்றியதாக தெரிகிறது. அவர் டெ மாடெர்யா மேடிக்கா என்ற புத்தகத்தை எழுதினார்; அடுத்த 1,600 ஆண்டுகளுக்கு அதுவே முன்னணி மருந்தியல் நூலாக விளங்கியது. உலகின் அநேக பகுதிகளில் பாரம்பரிய மூலிகை மருத்துவம் இன்னும் பிரபலமாக இருக்கிறது. ஜெர்மனியில், உடல்நலம் காக்கும் அரசாங்க திட்டங்களின் கீழ், மூலிகைகள் வாங்க ஒருவர் செலவழித்த பணத்தை அவர் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

பாரம்பரிய, பண்டைய மூலிகை மருந்துகள் நவீன மருந்துகளைவிட பாதுகாப்பானவை என சிலர் சொல்கிறார்கள்; என்றாலும் அவற்றிலும் சில ஆபத்துக்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆகவே பின்வரும் கேள்விகள் எழும்புகின்றன: மூலிகை மருந்துகளை உபயோகிப்பதற்கு முன்பு ஒருவர் என்ன எச்சரிக்கைகளுக்கும் சிபாரிசுகளுக்கும் கவனம் செலுத்த வேண்டும்? ஒரு வகையான சிகிச்சை மற்றவற்றைவிட அதிக பயனளிக்கும் சந்தர்ப்பங்கள் ஏதேனும் உண்டா? *

மூலிகைகள் எவ்வாறு உதவலாம்

மூலிகைகளுக்கு அநேக மருத்துவ குணங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றில் சில, இன்ஃபெக்‍ஷனை எதிர்த்துப் போராட உடலுக்கு உதவுவதாக கருதப்படுகிறது. மற்றவை, செரிமானத்திற்கு, நரம்புகளை ‘ரிலாக்ஸ்’ செய்வதற்கு, குடலை இளக்குவதற்கு, அல்லது சுரப்பிகளை கட்டுப்படுத்துவதற்கு உதவுவதாக சொல்லப்படுகின்றன.

மூலிகைகள் ஊட்டச்சத்தும் அளிக்கலாம், குணமும் அளிக்கலாம். உதாரணத்திற்கு, சிறுநீரிறக்கிகளாக செயல்படும் பார்ஸ்லி போன்ற தாவரங்களில் கணிசமான அளவு பொட்டாஷியம் இருக்கிறது. முக்கிய தணிமப் பொருளான பொட்டாஷியம் சிறுநீரில் இழக்கப்படுவதால் இந்தத் தாவரத்திலுள்ள பொட்டாஷியம் அதை ஈடு செய்கிறது. அதேபோல், வெகு காலமாக தூக்க மருந்தாய் பயன்படுத்தப்பட்டிருக்கும் சடாமாசி தாவரத்தில் (valerian plant) கால்சிய சத்து மிக அதிகம் இருக்கிறது. இந்தக் கால்சிய சத்தினால், நரம்பு மண்டலத்தை இளைப்பாற வைக்கும் இம்மூலிகையின் வீரியம் கூடலாம்.

மூலிகைகளை பயன்படுத்தும் விதம்

மூலிகைகளை பல விதங்களில் மருந்தாக பயன்படுத்தலாம்; டீ, கஷாயம், சாராயக்கரைசல் (tincture), பத்து (poultice) போன்ற வடிவில் உபயோகிக்கலாம். ‘மூலிகை டீ’ தயாரிக்க மூலிகை மீது கொதிக்கும் தண்ணீரை ஊற்ற வேண்டும், ஆனால் மூலிகையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கக் கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். கஷாயம், மூலிகை வேர்களையும் பட்டைகளையும் தண்ணீரில் கொதிக்க வைத்து தயாரிக்கப்படுகிறது; மருத்துவ குணமுள்ள பொருட்களின் சாறை இறக்குவதற்கு அவை இவ்வாறு கொதிக்க வைக்கப்படுகின்றன.

சாராயக்கரைசல்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன? அவை “சுத்தமான அல்லது நீர்கலந்த மது, பிராந்தி, வோட்கா போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் மூலிகை சாறுகள்” என ஒரு புத்தகம் சொல்கிறது. பத்துகளோ பல விதங்களில் தயாரிக்கப்படலாம். பொதுவாக அவை நோய்ப்பட்ட அல்லது வலியுள்ள உடல் உறுப்புகளின்மீது தடவப்படுகின்றன.

அநேக வைட்டமின்களையும் மருந்துகளையும் போலல்லாமல், பெரும்பாலான மூலிகைகள் உணவுப்பொருட்களாகவே கருதப்படுகின்றன; அவை பெரும்பாலும் வெறும் வயிற்றில் உட்கொள்ளப்படுகின்றன. மாத்திரை வடிவில்கூட அவை உட்கொள்ளப்படலாம்; அதிக சௌகரியமாகவும் சுவை தெரியாமலும் விழுங்கிவிட மாத்திரைகள் வசதியானவை. மூலிகை மருந்துகளை பயன்படுத்த நீங்கள் முடிவு செய்தால், மருத்துவரின் உதவியை நாடுவது நல்லது.

காலங்காலமாக, ஜலதோஷம், அஜீரணம், மலச்சிக்கல், தூக்கமின்மை, குமட்டல் போன்றவற்றிற்கு மூலிகைகளே பரிந்துரைக்கப்படுகின்றன. இருந்தாலும், அதைவிட பெரிய கோளாறுகளுக்கும் அவை சிலசமயங்களில் உபயோகிக்கப்படுகின்றன; அதுவும் குணப்படுத்தும் மருந்தாக மட்டுமல்ல, தடுப்புமருந்தாகவும்கூட பயன்படுத்தப்படுகின்றன. உதாரணத்திற்கு, ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும், சா பால்மெட்டோ (Serenoa repens) என்ற மூலிகை, புற்றுநோயல்லாத விந்துச்சுரப்பி வீக்கத்திற்கு (benign prostatic hyperplasia) ஆரம்ப சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது. சில நாடுகளில் இந்த வியாதி 50 முதல் 60 சதவீத ஆண்களுக்கு வருகிறது. இருந்தாலும் அந்த வீக்கத்தின் காரணத்தை மருத்துவர் கண்டுபிடிப்பது முக்கியம்; அப்போதுதான் புற்றுநோயைப் போல் இதற்கு தீவிர சிகிச்சை தேவையா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும்.

சில எச்சரிக்கைகள்

ஒரு மூலிகை தீங்கற்றதென பரவலாக கருதப்பட்டாலும் எச்சரிக்கையாயிருப்பது அவசியம். “இயற்கை மருந்து” என்ற லேபிளைப் பார்த்தவுடனேயே பயப்பட தேவையில்லை என ஒருபோதும் நினைக்காதீர்கள். மூலிகைகள் சம்பந்தமாக ஒரு என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு குறிப்பிடுகிறது: “சில மூலிகைகள் மிக ஆபத்தானவை என்பதே கசப்பான உண்மை. [வருத்தகரமாக] சிலர் எவ்வித மூலிகைக்கும், அது ஆபத்தானதோ இல்லையோ, தகுந்த கவனம் செலுத்துவதில்லை.” மூலிகைகளில் உள்ள ரசாயனப் பொருட்கள் இதயத்துடிப்பை, இரத்த அழுத்தத்தை, க்ளூகோஸ் அளவை மாற்றலாம். ஆகவே இதயக் கோளாறு, உயர் இரத்த அழுத்தம், அல்லது சர்க்கரை நோய் போன்ற கோளாறுகள் உள்ளவர்கள் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

என்றாலும் பொதுவாக, மூலிகைகளின் பக்க பாதிப்புகள் அலர்ஜியைப் போலத்தான் இருக்கின்றன. அதாவது, தலைவலி, தலைச்சுற்றல், குமட்டல், தோல் தடிப்பு போன்ற பாதிப்புகள்தான் ஏற்படுகின்றன. மூலிகைகள் ஃப்ளூ காய்ச்சலை அல்லது மற்ற அறிகுறிகளை உண்டாக்குவதன் மூலம் “குணப்படுத்தும் சீரழிவை” தூண்டுவதாகக்கூட சொல்லப்படுகிறது. அதாவது மூலிகைகளை சாப்பிடும் ஒருவரின் உடல்நிலை முதலில் மிகவும் மோசமாகும், பிறகுதான் தேறும். மூலிகை வேலை செய்ய ஆரம்பிக்கும் சமயத்தில் உடலிலிருந்து நச்சுப் பொருட்கள் வெளியேற்றப்படுவதால் அவ்வாறு நடப்பதாக சொல்லப்படுகிறது.

அவ்வப்போது, குறிப்பிட்ட சில மூலிகைகளால் சிலர் உயிரையே இழந்திருக்கிறார்கள்; ஆகவே உஷாராக இருப்பதும், விஷயமறிந்தவர்களின் உதவியைப் பெறுவதும் எவ்வளவு முக்கியம் என்பது புரிகிறது. உதாரணத்திற்கு, உடல் எடையைக் குறைப்பதற்காக பொதுவாக உட்கொள்ளப்படும் எஃபிடிரா என்ற மூலிகை, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம். ஐக்கிய மாகாணங்களில் அறிக்கை செய்யப்பட்டிருக்கும் 100-⁠க்கும் அதிகமான சாவுக்குக் காரணம் எஃபிடிரா என்று சொல்லப்படுகிறது; இருந்தாலும் சான் பிரான்ஸிஸ்கோவைச் சேர்ந்த நோயியல் மருத்துவரான ஸ்டீவன் கார்ச் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “எனக்குத் தெரிந்தவரை [எஃபிடிராவை சாப்பிட்டதால்] இறந்தவர்களுக்கு கடும் இதயத்தமனி நோய் இருந்தது அல்லது அவர்கள் எஃபிடிராவை அளவுக்கதிகமாக சாப்பிட்டுவிட்டார்கள்.”

மூலிகை மருந்துகள் பற்றிய ஒரு புத்தக ஆசிரியரான டாக்டர் லோகன் சேம்பர்லின் இவ்வாறு சொல்கிறார்: “சமீப வருடங்களில், மூலிகைகளால் தீய பாதிப்புகள் ஏற்பட்டதாக காட்டும் ஒவ்வொரு அறிக்கையை எடுத்துக்கொண்டாலும், ஆலோசனைகளை பின்பற்றாததால் வந்த வினையே அது என்பது தெளிவாகிறது. . . . நம்பத்தகுந்த மருந்துபொருட்களின் லேபிளில் கொடுக்கப்பட்டுள்ள அளவுகள் பாதுகாப்பானவை, மிதமானவைகூட. ஆகவே, பயிற்சி பெற்ற மூலிகை நிபுணரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே அதன் அளவை கூட்டிக் குறைக்கலாம்.”

மூலிகை நிபுணரான லின்டா பேஜ் இந்த எச்சரிக்கையை தருகிறார்: “உடல்நிலை மிக மோசமாக இருந்தால்கூட, மிதமாகத்தான் மருந்துகளை சாப்பிட வேண்டும், அளவுக்கதிகமாக அல்ல. சிறந்த பலனைப் பெறுவதற்கு உங்களுக்கு தேவை அதிக நேரமும் மிதமான சிகிச்சையும்தான். ஆரோக்கியத்தை மீண்டும் பெற காலம் எடுக்கும்.”

சில மூலிகைகள், அளவுக்கு மீறி உட்கொள்ளப்பட்டால் உடனே எதிர்விளைவை உண்டாக்குகின்றன; இவ்வாறு அதன் அளவு அதிகமாகிவிடாதபடி பாதுகாக்கும் இயல்பை இயற்கையாகவே பெற்றிருக்கின்றன என்று மூலிகையியல் புத்தகம் ஒன்று கூறுகிறது. உதாரணத்திற்கு, உடலை ரிலாக்ஸ் செய்ய பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை, அளவுக்கு அதிகமாக உட்கொள்ளப்படும்போது வாந்தியை உண்டுபண்ணுகிறது. இருந்தாலும், இந்த குணம் எல்லா மூலிகைகளுக்குமே இல்லை; ஆகவே உரிய அளவு மட்டுமே சாப்பிட வேண்டியது எப்போதும் அவசியம்.

இருந்தாலும், ஒரு மூலிகை திறம்பட வேலை செய்வதற்கு போதுமான அளவை தகுந்த வடிவில் சாப்பிடுவது அவசியம் என அநேகர் நினைக்கிறார்கள். சிலசமயங்களில் இவ்வாறு செய்வதற்கு ஒரே வழி சாரத்தை பிரித்தெடுப்பதாகும். ஞாபகசக்தியையும் இரத்த ஓட்டத்தையும் அதிகரிப்பதற்காக வெகு காலமாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கும் ஜின்க்கோ பிலோபா என்ற மூலிகையைப் பொறுத்தவரை இதுதான் செய்யப்படுகிறது. ஏனென்றால், ஒருமுறை சாப்பிடுவதற்கு தேவையான அளவைத் தயாரிக்கவே பவுண்டு கணக்கில் இலைகள் தேவை; அப்போதுதான் மருந்து திறம்பட வேலை செய்யும்.

ஆபத்தான கலவை

மூலிகைகள் மற்ற மருந்து மாத்திரைகளோடு சேர்த்து சாப்பிடப்படும்போது பல வித பாதிப்புகளை ஏற்படுத்தலாம். உதாரணத்திற்கு, அவை மற்ற மருந்துகளின் வீரியத்தை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்யலாம், அம்மருந்துகளை சீக்கிரமாகவே உடலிலிருந்து வெளியேற்றலாம், அல்லது பக்க பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கச் செய்யலாம். ஜெர்மனியில் லேசான அல்லது மிதமான மனச்சோர்வுக்கு பரிந்துரைக்கப்படும் வெட்டைப்பாக்கு (St. John’s wort), மற்ற மருந்துகளை உடலிலிருந்து இரு மடங்கு அதிக வேகமாக வெளியேற்றுகிறது; இவ்வாறு அவற்றின் வீரியத்தை குறைக்கிறது. ஆகவே கருத்தடை மாத்திரைகள் உட்பட வேறெந்த மருந்து மாத்திரைகளை நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும், அவற்றோடு சேர்த்து மூலிகை மருந்துகளை சாப்பிடுவதற்கு முன்பு உங்கள் டாக்டரிடம் ஆலோசனை கேளுங்கள்.

மூலிகைகளின் குணப்படுத்தும் பண்பைப் பற்றி விவரிக்கும் ஒரு புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “மது, மரிஹுவானா, கோகேன், மற்ற மனநிலை மாற்றும் மருந்துகள், புகையிலை ஆகியவை சில மூலிகைகளுடன் சேரும்போது உயிருக்கே உலை வைக்கலாம். . . . ஆகவே [அப்படிப்பட்ட போதை மருந்துகளை] தவிர்ப்பது, முக்கியமாக ஏதேனும் வியாதி இருக்கும்போது தவிர்ப்பது புத்திசாலித்தனம்.” கர்ப்பிணி பெண்களும் பால்கொடுக்கும் தாய்மாரும்கூட இந்த அறிவுரைக்கு கவனம் செலுத்த வேண்டும். புகையிலையையும் போதை மருந்துகளையும் பொறுத்தவரை, ‘மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க [உங்களை] சுத்திகரித்துக்கொள்ள’ வேண்டும் என்ற பைபிள் கட்டளைக்குக் கீழ்ப்படிவதன் மூலம் கிறிஸ்தவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.​—⁠2 கொரிந்தியர் 7:1.

மூலிகைகள் சம்பந்தமாக ஒரு புத்தகம் இந்த எச்சரிக்கையை தருகிறது: “மூலிகை மருந்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் நீங்கள் கர்ப்பமானால், உங்கள் டாக்டரை அணுகி அது சம்பந்தமாக அறிவுரை கேட்கும் வரை அதை சாப்பிடுவதை நிறுத்திவிடுங்கள். சரியாக எவ்வளவு மூலிகையை எவ்வளவு காலத்திற்கு உபயோகித்து வந்திருக்கிறீர்கள் என்பதை ஞாபகம் வைக்க முயற்சி செய்யுங்கள்.”

“[மூலிகைகளைக் கொண்டு] கைவைத்தியம் பார்ப்பதில் அநேக ஆபத்துக்கள் உள்ளன” என மூலிகைகள் சம்பந்தமாக ஒரு என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள, “கைவைத்தியத்தின் ஆபத்துக்கள்” என்ற பெட்டியில், சில ஆபத்துக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

உடல்நலத்திற்குரிய மற்ற எல்லா மருந்து மாத்திரைகளையும் போலவே மூலிகைகளையும் கவனத்தோடு, விவரமறிந்து, அளவோடு எடுக்க வேண்டும்; சில விதமான வியாதிகளுக்கு தற்போது மருந்தே இல்லை என்பதை ஞாபகம் வையுங்கள். வியாதிக்கும் மரணத்திற்கும் அடிப்படைக் காரணம், முதல் பெற்றோரிடமிருந்து நாம் சுதந்தரித்திருக்கும் அபூரணமே என்பதை உண்மை கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கிறார்கள்; ஆசீர்வாதங்களைப் பொழியும் கடவுளுடைய ராஜ்ய ஆட்சியில் அந்த அபூரணம் ஒரேயடியாக ஒழிக்கப்படும் காலத்தை அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார்கள்.​—ரோமர் 5:12; வெளிப்படுத்துதல் 21:3, 4. (g03 12/22)

[அடிக்குறிப்பு]

^ பாரா. 4 விழித்தெழு! மருத்துவ பத்திரிகை அல்ல; ஆகவே மூலிகை மருத்துவமாக இருந்தாலும் சரி மற்றவையாக இருந்தாலும்சரி, எந்தக் குறிப்பிட்ட சிகிச்சையையோ உணவுத்திட்டத்தையோ அது சிபாரிசு செய்வதில்லை. இக்கட்டுரையில் உள்ள விஷயங்கள் தகவலளிப்பதற்காக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. உடல்நலம், மருத்துவம் சம்பந்தமாக வாசகர்கள்தான் சொந்த தீர்மானம் எடுக்க வேண்டும்.