Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உண்மையான நம்பிக்கையை எங்கே கண்டடையலாம்?

உண்மையான நம்பிக்கையை எங்கே கண்டடையலாம்?

உண்மையான நம்பிக்கையை எங்கே கண்டடையலாம்?

உங்களுடைய கடிகாரம் நின்றுவிட்டது, அது ரிப்பேர் ஆகிவிட்டது போல் தெரிகிறது. இப்பொழுது அதை சரிசெய்ய வேண்டும், வாட்ச் ரிப்பேர் செய்யும் கடைகள் நிறைய விளம்பரம் கொடுக்கின்றன. சரிசெய்து தருவதாக அவை அனைத்தும் உறுதியளிக்கின்றன, அவற்றில் சில சொல்வது முரண்பாடாக தொனிக்கிறது. ஆனால் உங்களுடைய அண்டை வீட்டுக்காரர் ஒருவர்தான் பல வருடங்களுக்கு முன்பு அந்த வாட்சை தயாரித்த திறமைசாலி என்பது உங்களுக்குத் தெரிய வருகிறது. அப்பொழுது என்ன செய்வீர்கள்? அதோடு, ஒரு பைசாவும் வாங்காமல் உங்களுக்கு இலவசமாக ரிப்பேர் செய்து கொடுப்பதாகவும் சொல்கிறார். இப்பொழுது, யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் உங்களுக்கு குழப்பமே இருக்காது அல்லவா?

நம்பிக்கை கொள்வதற்குரிய உங்களுடைய சொந்த திறமையுடன் அந்த வாட்சை ஒப்பிட்டுப் பாருங்கள். கொந்தளிப்புமிக்க இவ்வுலகில் வாழும் அநேகரைப் போல, நீங்கள் நம்பிக்கை இழந்து வருவதாக உணருகிறீர்களென்றால், உதவிக்காக எங்கே செல்வீர்கள்? பிரச்சினையை தங்களால் சரிசெய்ய முடியும் என அநேகர் மார்தட்டுகிறார்கள், ஆனால் எண்ணற்ற ஆலோசனைகள் குழப்பமாகவும் முரண்பாடாகவுமே இருக்கின்றன. அப்படியானால், முதன்முதலில் நம்பிக்கை கொள்வதற்கான திறமையைத் தந்து மனிதகுலத்தை உருவாக்கியவரிடம் ஏன் செல்லக் கூடாது? “அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்ல” என்றும், உதவ மனமுள்ளவராக இருக்கிறார் என்றும் பைபிள் சொல்கிறது.​—⁠அப்போஸ்தலர் 17:27; 1 பேதுரு 5:⁠7.

நம்பிக்கைக்கு ஆழமான விளக்கம்

நம்பிக்கை என்பதற்கு பைபிள் தரும் கருத்து அதிக விரிவானது, இன்றைய மருத்துவர்கள், விஞ்ஞானிகள், உளவியலாளர்கள் மத்தியில் பொதுவாக காணப்படும் கருத்தைவிட அதிக அர்த்தம் பொதிந்தது. “நம்பிக்கை” என பைபிளில் மொழிபெயர்க்கப்படும் மூலமொழி வார்த்தைகள் ஆர்வத்துடன் காத்திருப்பதையும் நல்லது வருமென எதிர்நோக்கியிருப்பதையும் அர்த்தப்படுத்துகின்றன. அடிப்படையில், நம்பிக்கை என்பதில் இரண்டு அம்சங்கள் உட்பட்டுள்ளன. நன்மையான ஒன்றின்மீது ஆசை வைப்பதையும், அந்த நன்மையான ஒன்று வருமென நம்புவதற்குரிய ஆதாரத்தையும் குறிக்கிறது. பைபிள் தரும் நம்பிக்கை ஏதோவொரு ஆசைக் கனவு அல்ல. அதற்கு உண்மையும் அத்தாட்சியும் கொண்ட உறுதியான ஆதாரம் இருக்கிறது.

இந்த விஷயத்தில் நம்பிக்கை என்பது விசுவாசத்துடன் தொடர்புடையது; இந்த விசுவாசம் அத்தாட்சியின் அடிப்படையில் இருக்க வேண்டும், இது வெறுமனே மத சம்பந்தப்பட்ட காரியங்களை கண்ணை மூடிக்கொண்டு சட்டென்று நம்பிவிடும் இயல்புடையதல்ல. (எபிரெயர் 11:1, NW) என்றாலும், விசுவாசத்தையும் நம்பிக்கையையும் பைபிள் வேறுபடுத்திக் காட்டுகிறது.​—⁠1 கொரிந்தியர் 13:13.

உதாரணமாக, உங்களுடைய அருமை நண்பரிடம் ஓர் உதவி கேட்கும்போது அதை அவர் செய்வார் என நீங்கள் நம்பிக்கை வைக்கலாம். உங்களுடைய நம்பிக்கை ஆதாரமற்றது அல்ல, ஏனென்றால் உங்களுடைய நண்பர் மீது உங்களுக்கு விசுவாசம் இருக்கிறது​—⁠அவரைப் பற்றி உங்களுக்கு நன்கு தெரியும், கடந்த காலத்தில் அவர் உங்களுடன் தயவாகவும் தாராளமாகவும் நடந்திருக்கிறார். உங்களுடைய விசுவாசமும் நம்பிக்கையும் நெருங்கிய தொடர்புடையவை, ஒன்றையொன்று சார்ந்தும் இருக்கின்றன, ஆனால் அவை வித்தியாசமானவை. இத்தகைய நம்பிக்கையை கடவுள் மீது நீங்கள் எவ்வாறு வைக்கலாம்?

நம்பிக்கைக்கு ஆதாரம்

உண்மையான நம்பிக்கைக்கு கடவுளே ஊற்றுமூலர். பைபிள் காலங்களில், “இஸ்ரவேலின் நம்பிக்கை” என யெகோவா அழைக்கப்பட்டார். (எரேமியா 14:8) எந்தவொரு நிச்சயமான நம்பிக்கையையும் அவரிடமிருந்தே அவருடைய ஜனங்கள் பெற்றார்கள். எனவே, அவரே அவர்களுடைய நம்பிக்கையாக இருந்தார். இத்தகைய நம்பிக்கை வெறுமனே ஏதோவொன்றிற்காக ஆசைப்படுவதை அர்த்தப்படுத்தவில்லை. நம்பிக்கைக்குரிய உறுதியான ஆதாரத்தை யெகோவா அவர்களுக்கு கொடுத்திருந்தார். நூற்றாண்டுகளாக அவர்களுடன் தொடர்புகொண்டு வந்தபோது, வாக்குறுதிகளை கொடுத்து அவற்றை காப்பாற்றுகிறவர் என்ற ஒரு நல்ல பதிவை ஏற்படுத்தினார். இஸ்ரவேலரிடம் அவர்களுடைய தலைவராகிய யோசுவா இவ்வாறு கூறினார்: “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை . . . அறிந்திருக்கிறீர்கள்.”​—⁠யோசுவா 23:14.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப்பின், அந்தப் பதிவு இன்றும் உண்மையாக இருக்கிறது. பைபிளில் கடவுளுடைய ஒப்பற்ற வாக்குறுதிகள் நிறைந்துள்ளன; அவை நிறைவேற்றமடைந்ததைப் பற்றிய துல்லியமான சரித்திரப்பூர்வ பதிவுகளும் அடங்கியுள்ளன. தீர்க்கதரிசனமாக அவர் கொடுத்த வாக்குறுதிகள் அந்தளவுக்கு நம்பகமானவையாக இருப்பதால், ஏற்கெனவே நிறைவேறியதைப் போல சிலசமயங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதனால்தான் பைபிளை நம்பிக்கையின் புத்தகம் என நாம் சொல்லலாம். மனிதருடன் கடவுள் கொண்ட தொடர்புகளைப் பற்றிய பதிவுகளை ஆராய்கையில், அவர் மீது நீங்கள் நம்பிக்கை வைப்பதற்குரிய ஆதாரம் இன்னும் பலமாகும். அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “தேவ வசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.”​—⁠ரோமர் 15:4.

கடவுள் நமக்கு எத்தகைய நம்பிக்கையை கொடுக்கிறார்?

நம்பிக்கை மிக மிகத் தேவை என்பதை நாம் எப்பொழுது உணருகிறோம்? சாவை எதிர்ப்படும்போது அல்லவா? ஆனால், அநேகருக்கு அந்த கணப்பொழுதில்தான், உதாரணமாக அன்பானவரை மரணம் கொண்டு செல்லும் அத்தருணத்தில்தான் அந்த நம்பிக்கை கைநழுவிப் போவதாகத் தோன்றுகிறது. சொல்லப்போனால், மரணத்தைவிட வேறெது அதிக நம்பிக்கையற்ற ஒன்றாக இருக்க முடியும்? அது ஈவிரக்கமின்றி நம் ஒவ்வொருவரையும் விரட்டி வருகிறது. ஓரளவு காலத்திற்கு மட்டுமே அதை நாம் தவிர்க்க முடியும், நிகழ்ந்த பிறகோ அதை மாற்றும் சக்தியின்றி தவிக்கிறோம். பொருத்தமாகவே, மரணத்தை “கடைசி சத்துரு” என பைபிள் அழைக்கிறது.​—⁠1 கொரிந்தியர் 15:26.

அப்படியானால், மரணத்தை எதிர்ப்படுகையில் நாம் எவ்வாறு நம்பிக்கையை கண்டடையலாம்? மரணத்தை கடைசி சத்துரு என அழைக்கும் பைபிள் வசனமே இந்தச் சத்துரு ‘அழிக்கப்படுவான்’ என சொல்கிறது. யெகோவா தேவன் மரணத்தைவிட வல்லமை வாய்ந்தவர். இதை அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபித்திருக்கிறார். எப்படி? மரித்தோரை உயிர்த்தெழுப்புவதன் மூலமே. மரித்தோரை உயிர்த்தெழுப்புவதற்கு கடவுள் தமது சக்தியைப் பயன்படுத்திய ஒன்பது சந்தர்ப்பங்களைப் பற்றி பைபிள் விவரிக்கிறது.

குறிப்பிடத்தக்க ஒரு சந்தர்ப்பத்தில், மரித்து நான்கு நாட்களாகியிருந்த லாசரு என்ற பெயருடைய அருமையான நண்பரை உயிர்த்தெழுப்ப யெகோவா தமது குமாரனாகிய இயேசுவுக்கு வல்லமை அளித்தார். இயேசு இதை இரகசியமாக அல்ல, ஆனால் கூட்டத்தாருக்கு முன்பு வெளிப்படையாக செய்தார்.​—⁠யோவான் 11:38-48, 53; 12:9, 11.

நீங்கள் இவ்வாறு யோசிக்கலாம்: ‘ஏன் ஆட்கள் உயிர்த்தெழுப்பப்பட்டார்கள்? எப்படியிருந்தாலும், அவர்களும் வயதாகி கடைசியில் மறுபடியும் மரிக்கவில்லையா?’ அவர்கள் மரித்தார்கள். என்றாலும், இதுபோன்ற நம்பகமான உயிர்த்தெழுதல் பதிவுகளின் காரணமாக, மரித்த நமது அன்பானவர்கள் மீண்டும் உயிரடைய வேண்டுமென ஆசை வைப்பது மட்டுமல்ல, அவர்கள் நிச்சயம் வருவார்கள் என நம்பிக்கை வைப்பதற்கும் இப்பொழுது நம்மிடம் அத்தாட்சி இருக்கிறது. வேறு வார்த்தையில் சொன்னால், நமக்கு உண்மையான நம்பிக்கை இருக்கிறது.

இயேசு கூறினார்: “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்.” (யோவான் 11:25) உலகளாவிய விதத்தில் உயிர்த்தெழுதலை நடப்பிப்பதற்கு யெகோவாவிடமிருந்து வல்லமை பெற போகிறவர் இவரே. இயேசு சொன்னார்: ‘பிரேதக் குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய [கிறிஸ்துவுடைய] சத்தத்தைக் கேட்டு எழுந்து வரும் காலம் வரும்.’ (யோவான் 5:28, 29) ஆம், கல்லறையில் நித்திரையில் ஆழ்ந்திருக்கும் அனைவரும் பூங்காவனம் போன்ற பரதீஸிய பூமியில் உயிர்த்தெழுப்பப்படும் நம்பிக்கை இருக்கிறது.

உயிர்த்தெழுதலைப் பற்றி மனதைத் தொடும் இந்த வர்ணனையை தீர்க்கதரிசியாகிய ஏசாயா எழுதினார்: “இறந்தோர் உயிரடைவர், அவர்களுடைய உடல்கள் மீண்டும் எழும்பும். மண்ணிலே உறங்குகிறவர்கள் விழித்தெழுந்து ஆனந்த சந்தோஷத்தில் ஆர்ப்பரிப்பார்கள்; ஏனென்றால் நீர் பெய்விக்கும் பனி மின்னுகிற ஒளி போன்ற பனி. இறந்து நெடுங்காலமானோரை பூமி மறுபடியும் பிறப்பிக்கும்.”​—⁠ஏசாயா 26:19, த நியூ இங்லிஷ் பைபிள்.

இது ஆறுதலாக இல்லையா? சிசு தனது தாயின் கருப்பையில் பாதுகாப்பாக இருப்பது போல, இறந்தோர் மிகவும் பாதுகாப்பான சூழலில் இருக்கிறார்கள். சொல்லப்போனால், கல்லறையில் ஓய்வெடுப்பவர்கள் சர்வ வல்லமையுள்ள கடவுளின் எல்லையற்ற நினைவில் பூரண பாதுகாப்புடன் இருக்கிறார்கள். (லூக்கா 20:37, 38) அவர்கள் விரைவில் உயிரடைவார்கள்; புதிதாக பிறக்கும் குழந்தையின் வரவுக்காக காத்திருந்த குடும்பத்தினர் அதை அன்போடு வரவேற்பதைப் போல மகிழ்ச்சி ததும்பும் உலகில் அவர்கள் வரவேற்கப்படுவார்கள்! ஆகவே, மரணமே வந்தாலும்கூட நம்பிக்கை இருக்கிறது.

நம்பிக்கை உங்களுக்கு எதை செய்யும்

நம்பிக்கையின் மதிப்பைப் பற்றி பவுல் நமக்கு நிறைய கற்பிக்கிறார். நம்பிக்கை ஆன்மீக சர்வாயுதவர்க்கத்தின் இன்றியமையாத பாகம் என அவர் பேசினார்; அதை தலைக்கவசத்திற்கு (ஹெல்மெட்) ஒப்பிட்டார். (1 தெசலோனிக்கேயர் 5:8) ஏன் அவர் அதற்கு ஒப்பிட்டார்? நாம் பார்க்கலாம், பைபிள் காலங்களில், ஒரு படைவீரன் போருக்குச் செல்வதற்கு முன் தோல் அல்லது துணி தொப்பிக்கு மேல் உலோகத்தாலான ஒரு ஹெல்மெட்டை அணிவது வழக்கம். இந்த ஹெல்மெட் இருந்ததால், தலைக்கு வரும் பெரும்பாலான தாக்குதல்கள் ஹெல்மெட்டில் பட்டு தெறித்துச் சென்றுவிடும். பவுல் சொல்ல வந்த குறிப்பு என்ன? தலைக்கு ஹெல்மெட் பாதுகாப்பாக இருப்பது போல, நம்பிக்கை மனதை, அதாவது சிந்தனா திறன்களைப் பாதுகாக்கிறது. கடவுளுடைய நோக்கங்கள் சம்பந்தமாக உங்களுக்கு உறுதியான நம்பிக்கை இருந்தால், துன்பங்கள் வரும்போது பயத்தினாலோ நம்பிக்கையின்மையாலோ உங்களுடைய மன சமாதானம் குலையாது. யாருக்குத்தான் இப்படிப்பட்ட ஹெல்மெட் தேவையில்லை?

கடவுளுடைய சித்தத்தோடு தொடர்புடைய நம்பிக்கைக்கு பவுல் மற்றொரு தத்ரூபமான உதாரணத்தைப் பயன்படுத்தினார். அவர் இவ்வாறு எழுதினார்: “அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது.” (எபிரெயர் 6:19) ஒரு தடவைக்கும் மேல் கப்பல் சேதத்திலிருந்து உயிர் தப்பியதால், நங்கூரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பவுல் நன்றாக அறிந்திருந்தார். புயலில் சிக்கிக்கொள்ளும்போது மாலுமிகள் கப்பலின் நங்கூரத்தை கீழே இறக்குவார்கள். கடலுக்கு அடியில் மண்ணில் அது புதைந்துகொண்டு உறுதியாக இருந்தால், கப்பல் கரைக்கு அடித்துச் செல்லப்பட்டு பாறையில் மோதி சேதமடைந்துவிடாமல் ஓரளவு பாதுகாப்பாக இருக்கும்.

இதைப் போலவே, நமக்கு கடவுள் தந்துள்ள வாக்குறுதிகள் ‘நிலையும் உறுதியுமான’ நம்பிக்கையாக இருந்தால், புயல் போல் தாக்கும் கொந்தளிப்புமிக்க காலங்களில் அந்த நம்பிக்கை நம்மை பாதுகாக்கும். போரோ குற்றச்செயலோ துன்பமோ, ஏன் மரணமோகூட மனிதகுலத்தை இனி ஒருபோதும் வாட்டி வதைக்காத ஒரு காலம் விரைவில் வருமென யெகோவா வாக்குறுதி தருகிறார். (பக்கம் 10-⁠ல் உள்ள பெட்டியைக் காண்க.) அந்த நம்பிக்கையை உறுதியாக பற்றிக்கொள்வது பேரழிவிலிருந்து தப்பிப்பிழைக்க நமக்கு உதவும்; இன்று இந்த உலகில் பரவலாக காணப்படும் தாறுமாறான, ஒழுக்கங்கெட்ட மனப்பான்மைக்கு இணங்கிச் செல்வதற்குப் பதிலாக கடவுளுடைய தராதரங்களின்படி வாழ்வதற்குத் தேவையான ஊக்கத்தையும் தரும்.

யெகோவா தரும் நம்பிக்கை உங்களையும் தனிப்பட்ட விதமாக உட்படுத்துகிறது. நீங்கள் எப்படி வாழ வேண்டும் என கடவுள் நோக்கம் கொண்டிருந்தாரோ அதன்படி நீங்கள் வாழ்க்கையை அனுபவித்து மகிழவே விரும்புகிறார். ‘எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட வேண்டும்’ என்பதே அவருடைய ஆசை. எப்படி? முதலாவதாக, ஒவ்வொருவரும் ‘சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை அடைய வேண்டும்.’ (1 தீமோத்தேயு 2:4) கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்தைப் பற்றிய ஜீவனளிக்கும் அறிவை பெறும்படி இந்தப் பத்திரிகையை பிரசுரிப்போர் உங்களை உற்சாகப்படுத்துகிறார்கள். அதன் மூலம் கடவுள் தரும் நம்பிக்கை இவ்வுலகில் நீங்கள் கண்டடையும் எந்தவொரு நம்பிக்கையையும்விட மிகவும் மேலான ஒன்றாக ஆகும்.

இத்தகைய நம்பிக்கை இருப்பதால், நீங்கள் ஒருபோதும் உதவியற்றவராக உணர வேண்டியதில்லை, ஏனென்றால் கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக நீங்கள் வைக்கும் எந்த இலக்குகளையும் அடையத் தேவையான பலத்தை கடவுள் உங்களுக்குத் தருவார். (2 கொரிந்தியர் 4:7; பிலிப்பியர் 4:13) அப்படிப்பட்ட நம்பிக்கைதான் உங்களுக்குத் தேவை அல்லவா? ஆகவே, அப்படிப்பட்ட நம்பிக்கை உங்களுக்கு தேவையென்றால், அதற்காக நீங்கள் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், தைரியம் கொள்ளுங்கள். நம்பிக்கை உங்கள் அருகிலேயே இருக்கிறது. அதை நீங்கள் கண்டடைய முடியும்! (g04 4/22)

[பக்கம் 10-ன் பெட்டி/படம்]

நம்பிக்கைக்கு காரணங்கள்

பின்வரும் பைபிள் கருத்துக்கள் உங்கள் நம்பிக்கையை அதிகரிக்க உதவும்:

◼ மகிழ்ச்சிகரமான எதிர்காலத்தை கடவுள் வாக்குறுதி அளிக்கிறார்.

இந்த முழு பூமியும் பூங்காவனம் போன்ற பரதீஸாக மாறும், ஒன்றுபட்ட ஒரே குடும்பமாக மனிதர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என அவரது வார்த்தை சொல்கிறது.​—⁠சங்கீதம் 37:11, 29; ஏசாயா 25:8; வெளிப்படுத்துதல் 21:3, 4.

◼ கடவுளால் பொய் சொல்ல முடியாது.

எல்லா விதமான பொய்களையும் அவர் வெறுக்கிறார். அளவிட முடியாதளவுக்கு யெகோவா பரிசுத்தமானவர், அதாவது தூய்மையானவர்; ஆகவே அவரால் பொய் சொல்லவே முடியாது.​—⁠நீதிமொழிகள் 6:16-19; ஏசாயா 6:2, 3; தீத்து 1:3; எபிரெயர் 6:⁠18.

◼ கடவுளுக்கு அளவற்ற வல்லமை இருக்கிறது.

யெகோவா மட்டுமே சர்வ வல்லமையுள்ளவர். இப்பிரபஞ்சத்தில் உள்ள எதுவுமே அவர் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை தடுக்க முடியாது.​—⁠யாத்திராகமம் 15:11; ஏசாயா 40:25, 26.

◼ நீங்கள் என்றென்றும் வாழ வேண்டுமென கடவுள் விரும்புகிறார்.

​—⁠யோவான் 3:16; 1 தீமோத்தேயு 2:3, 4.

◼ கடவுளுக்கு நம்மீது நம்பிக்கை இருக்கிறது.

நம் குற்றங்குறைகளை பார்க்காமல் நம் நற்குணங்களையும் முயற்சிகளையும் முக்கியமாய் கவனிக்கிறார். (சங்கீதம் 103:12-14; 130:3; எபிரெயர் 6:10) நாம் சரியானதை செய்வோம் என நம்புகிறார், அவ்வாறே செய்யும்போது சந்தோஷப்படுகிறார்.​—⁠நீதிமொழிகள் 27:⁠11.

◼ தெய்வீக இலக்குகளை அடைய கைகொடுப்பதாக கடவுள் வாக்குறுதி தருகிறார்.

தங்களுக்கு உதவி ஏதும் இல்லையென அவரது ஊழியர்கள் ஒருபோதும் நினைக்க வேண்டியதில்லை. நமக்கு உதவ கடவுள் தமது பரிசுத்த ஆவியை தாராளமாக அள்ளி வழங்குகிறார்; அதுதான் இப்பிரபஞ்சத்திலேயே மிக வலிமைமிக்க சக்தி.​—⁠பிலிப்பியர் 4:⁠13.

◼ கடவுள்மீது வைக்கும் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது.

முழுக்க முழுக்க நம்பகமான அவர் உங்களுக்கு ஒருபோதும் ஏமாற்றமளிக்க மாட்டார்.​—⁠சங்கீதம் 25:⁠3.

[பக்கம் 12-ன் படம்]

தலையை ஹெல்மெட் பாதுகாப்பது போல, நம்பிக்கை உங்கள் மனதை பாதுகாக்கிறது

[பக்கம் 12-ன் படம்]

நங்கூரத்தைப் போல, உறுதியாக ஊன்றப்பட்ட நம்பிக்கை ஸ்திரத்தன்மையை வழங்கும்

[படத்திற்கான நன்றி]

Courtesy René Seindal/Su concessione del Museo Archeologico Regionale A. Salinas di Palermo