Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பணம்—⁠உங்கள் எஜமானா அடிமையா?

பணம்—⁠உங்கள் எஜமானா அடிமையா?

பணப்பித்து நோய் உங்களைப் பீடித்திருக்கிறதா? இவ்வுலகில் வாழும் அநேகரை இந்நோய் பீடித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. சரி, அது என்ன நோய்?

“மனி சிக்னஸ் சின்ட்ரோம்” (பணப்பித்து கோளாறு) என்ற புது வார்த்தையைச் சமீபத்தில் கண்டுபிடித்தார் பிரிட்டன் நாட்டு மனநல ஆய்வாளர் டாக்டர் ராஜர் ஹென்டர்சன்; பணக் கவலையால் அவதிப்படுவோருக்கு உடல் ரீதியிலும் மனோ ரீதியிலும் காணப்படும் அறிகுறிகளைக் குறிப்பதற்கு ராஜர் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார். மூச்சுத் திணறல், தலைவலி, குமட்டல், தோலில் தடிப்புகள், பசியின்மை, காரணமற்ற கோபம், பயம், எதிர்மறையான சிந்தனை போன்றவை இந்த அறிகுறிகளில் அடக்கம். “பணக் கவலையே மனக் கவலைக்கு முக்கியக் காரணம்” என்கிறார் ஹென்டர்சன்.

பணக் கவலைகளால் வரும் பிரச்சினைகளுக்குப் பலர் பலியாகி வருவதில் ஆச்சரியமேதும் இல்லை. சமீபத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக அநேக நாடுகளில் வாழும் மக்கள் தங்களுடைய வேலை, வீடு, சேமிப்பு ஆகிய அனைத்தையும் இழந்திருக்கிறார்கள். இதனால் பெரிய பெரிய நிதி நிறுவனங்களும் அடிவாங்கியிருக்கின்றன. நாட்டின் நிதிநிலை அடியோடு சரிந்துவிடுவதைத் தடுப்பதற்காக பணபலம் படைத்த நாடுகள்கூட அதிரடி நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றன. வளர்ந்துவரும் நாடுகளில், உணவு மற்றும் அடிப்படை பொருள்களின் விலைவாசி விஷம் போல் ஏறியிருப்பது மிகுந்த கவலையை உண்டாக்கியிருக்கிறது.

பணம் ஏராளமாக புரளும் காலங்களிலும் பணத்தினால் பல துன்பங்கள் வருகின்றன. சமீப ஆண்டுகளில் பணப் புழக்கம் அதிகமாயிருந்த போதிலும் அநேகர் பணக் கவலைகளால் பீடிக்கப்பட்டிருந்தார்கள். உதாரணமாக, “கண்மூடித்தனமாகச் செலவழிக்கும் பழக்கமும், லாபம் ஈட்டுகிற வெறியும், அதீத பொருளாசையும் ஆப்பிரிக்காவில் தொற்றுநோய்போல் பரவியதாக தென் ஆப்பிரிக்க தினசரி, த விட்னஸ் கூறியது. “கடன், வீண்செலவு, வேலைப் பித்து, மனக்கவலை, அதிருப்தி, பொறாமை, மன அழுத்தம்” ஆகியவை இந்த “வியாதிக்கு” சில அறிகுறிகள் என்று அந்தச் செய்தித்தாள் சொன்னது. ஆப்பிரிக்காவில் மனித வாழ்க்கையின் தரம் தினம் தினம் சீரழிந்து வருவதற்குப் பணம்தான் காரணமெனச் சொல்லப்பட்டது.

இந்தியா சமீபத்தில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டாலும் அதற்கு முன்பு அது பணத்தில் மிதந்தது. “பணத்தைச் செலவழிப்பதில்” இந்நாடு 2007-⁠ஆம் ஆண்டில் “புதிய உச்சநிலையை எட்டியதாக” இண்டியா டுடே இன்டர்நேஷனல் என்ற ஆங்கிலப் பத்திரிகை அறிவித்தது. என்றாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அமைதியின்மைக்கும் வன்முறைக்கும்கூட வித்திடலாமென அச்சமயத்தில் அதிகாரிகள் அஞ்சினார்கள்.

அதே காலக்கட்டத்தில், அமெரிக்காவின் இளம் தலைமுறை மத்தியில் ஆடம்பர பொருட்களுக்காக ஊதாரித்தனமாய்ச் செலவு செய்யும் போக்கு அதிகமாய்க் காணப்பட்டது. ஆனால், கணக்குவழக்கில்லாமல் செலவு செய்தாலும் அவர்களால் சந்தோஷத்தை விலைக்கு வாங்க முடியவில்லை. இந்தச் செல்வச் செழிப்புதான் அங்குள்ள இளைஞர்கள் மதுபானத்திற்கு அடிமையாவதற்கும், மன அழுத்தத்தினால் கஷ்டப்படுவதற்கும், தற்கொலை செய்துகொள்வதற்கும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் சொன்னார்கள். இது சம்பந்தமாக நடத்தப்பட்ட ஆய்வில் ஓர் உண்மை தெரியவந்தது: என்னதான் செல்வமும் செழிப்பும் கொட்டிக் கிடந்தாலும் ‘அமெரிக்கா வாசிகளில் மூன்றில் ஒருவர்கூட நாங்கள் ரொம்ப சந்தோஷமாய் இருக்கிறோம்’ என சொல்லவில்லை.

பிரச்சினையின் மறுபக்கம்

மறுபட்சத்தில், செழிப்பான காலங்களிலும் சரி நெருக்கடியான காலங்களிலும் சரி, அநேகர்—பணக்காரர்களும் ஏழைகளும்—பணத்தைக் குறித்தோ பொருளுடைமைகளைக் குறித்தோ அதிகமாய்க் கவலைப்படுவதில்லை. ஏன் இந்த முரண்பாடு?

பணத்தின் அர்த்தம் என்று தலைப்பிடப்பட்ட ஓர் ஆங்கில அறிக்கையில், ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்: “பணம் சிலரை ஆட்டிவைக்கிறது. சிலரை அடிமைப்படுத்திவிடுகிறது. இதனால் மனக்கவலைகளும் மனக்கோளாறுகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.” ஆனால், “பணத்தைக் கவனமாக பட்ஜெட் செய்கிறவர்கள் வாழ்க்கையைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக உணருகிறார்கள்; தங்களைக் குறித்துப் பெருமிதம் கொள்கிறார்கள். இவர்கள் பணத்திற்கு எஜமானர்கள், அடிமைகள் அல்ல . . . பணத்தைக் கவனமாய் பட்ஜெட் செய்கிறவர்களுக்கு மனக்கவலையும் குறைவு, அதனால் உண்டாகும் உடல்நல பாதிப்பும் குறைவு” என்று அந்த ஆராய்ச்சியாளர்கள் அடித்துச் சொன்னார்கள்.

பணத்தைப் பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன? ஊசலாடும் உலகப் பொருளாதாரம் உங்களை எப்படிப் பாதிக்கிறது? பணம் உங்களுடைய எஜமானா அல்லது அடிமையா? பணப் பித்துக்கான அறிகுறிகள் உங்களுக்கு ஒருவேளை இல்லாதிருக்கலாம். ஆனால், செல்வச்சீமான்களாக இருந்தாலும்சரி ஏழைபாழைகளாக இருந்தாலும்சரி, பணக் கவலைகளுக்கு பலியாகாதோர் யாருமே இல்லை. நிதியை நிர்வகிக்கும் விஷயத்தில் மாற்றங்கள் செய்தால் உங்கள் வாழ்வில் நிம்மதியையும் சந்தோஷத்தையும் காண்பீர்கள். எப்படி? அடுத்த பக்கத்தைப் பாருங்கள். (g 3/09)