Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாலுறவு

பாலுறவு

பாலுறவு

சொற்பொருள் விளக்கம்:  இரு பெற்றோர் ஒருவர்மீதொருவர் செயலாற்றுவதால் இனப்பெருக்கத்துக்கு ஏதுவாகச் சேவிக்கும் பூமிக்குரிய சிருஷ்டிகளின் தனியியல்பாகும். ஆண்பால் மற்றும் பெண்பால்களுக்கிடையேயுள்ள வேறுபாடுகள் மனித வாழ்க்கையில் பரந்த செயல்விளைவுகளையுடையன. கடவுள்தாமே உயிரின் ஊற்றுமூலமாயிருப்பதாலும் மனிதர் அவருடைய குணங்களைப் பிரதிபலிக்கக் கருதப்பட்டதாலும், பாலுறவுகள்மூலம் உயிரைக் கடத்தும் திறமையை மிகுந்த மதிப்புடன் கையாளவேண்டும்.

பாலுறவுகள் பாவமென பைபிள் கற்பிக்கிறதா?

ஆதி. 1:28: ‘நீங்கள் [ஆதாமும் ஏவாளும்] பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள் என்று சொல்லி தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.’ (இந்தத் தெய்வீகக் கட்டளையை நிறைவேற்றுவது அவர்கள் பாலுறவுகள் கொள்ளும்படி தேவைப்படுத்தும் அல்லவா? அவ்வாறு செய்வது பாவமாயிராது, பூமியைக் குடியேற்றுவதற்கான கடவுளுடைய நோக்கத்தோடு பொருந்தியிருக்கும். சிலர், ஏதேனில் ‘விலக்கப்பட்ட கனியே’ ஒருவேளை தெய்வீகத் தடை கட்டுப்பாட்டுக்கு அடையாளக்குறிப்பாக அல்லது ஆதாமும் ஏவாளும் பாலுறவு கொள்வதன்பேரில் தடையுத்தரவாகவுங்கூட இருந்திருக்கலாமென எண்ணியிருக்கின்றனர். ஆனால் இது மேலே மேற்கோளாக எடுத்துக் குறிப்பிட்ட கடவுளுடைய கட்டளைக்கு முரணாயிருக்கிறது. மேலும், விலக்கப்பட்ட கனியை ஆதாமும் ஏவாளும் ஏதேனில் சாப்பிட்டபோதிலும், அவர்கள் பாலுறவு கொண்டதைப் பற்றிய முதல் குறிப்பு அவர்கள் அங்கிருந்து வெளியே துரத்தப்பட்டபின்பே கொடுத்திருப்பதோடும் முரண்படுகிறது.—ஆதி. 2:17; 3:17, 23; 4:1.)

ஆதி. 9:1: “தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள் . . . என்றார்.” (இந்த மேலுமான ஆசீர்வாதம், பிள்ளைகளைப் பிறப்பிக்கும்படியான தெய்வீகக் கட்டளையைத் திரும்பக் கூறுவதோடு, நோவாவின் நாளில் ஏற்பட்ட அந்தப் பூகோள ஜலப்பிரளயத்துக்குப் பின் கொடுக்கப்பட்டது. சட்ட முறைப்படியான பாலுறவுகளைக் குறித்த கடவுளுடைய நோக்குநிலை மாறவில்லை.)

1 கொரி. 7:2-5, தி.மொ.: “வேசித்தனம் இராதபடிக்கு ஒவ்வொருவனுக்கும் சொந்த மனைவியும் ஒவ்வொருத்திக்கும் சொந்தப் புருஷனுமிருக்கட்டும். புருஷன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன். அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள். . . . சில காலம் பிரிந்திருப்பதற்கு இருவரும் சம்மதித்தாலன்றி ஒருவரைவிட்டொருவர் பிரியவேண்டாம்; இச்சையடக்கம் உங்களுக்கு இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடி மறுபடியும் கூடிவாழுங்கள்.” (இவ்வாறு வேசித்தனமே தவறென காட்டப்பட்டுள்ளது, புருஷனுக்கும் மனைவிக்குமிடையே சரியான பாலுறவுகள் அல்ல.)

திருமணத்துக்கு முன்னால் பாலுறவுகள் கொள்வது தவறா?

1 தெச. 4:3-8, தி.மொ.: “கடவுளின் சித்தம் இதுவே: நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருக்கவும் கடவுளை அறியாத புறஜாதிகளைப்போல மோக இச்சைக்குட்படாமல் உங்களில் அவனவன் தன்தன் சரீர பாண்டத்தைப் பரிசுத்தத்திலும் கனத்திலும் ஆள அறிந்துகொள்ளவும் இவ்விஷயத்தில் ஒருவனும் வரம்பு கடவாமலும் தன் சகோதரனை வஞ்சியாமலும் இருக்கவும் வேண்டுமென்பதே. முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லித் திட்டமாய்ச் சாட்சிபகர்ந்தபடியே இப்படிப்பட்ட விஷயங்களெல்லாவற்றினிமித்தமும் கர்த்தரே [யெகோவாவே, NW] பழிவாங்குகிறவர். கடவுள் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தமாவதற்கே அழைத்திருக்கிறார். ஆகையால் அசட்டபண்ணுகிறவன் மனுஷனையல்ல தமது பரிசுத்த ஆவியை உங்களுக்குக் கொடுத்துவருகிற கடவுளையே அசட்டைபண்ணுகிறான்.” (“வேசித்தனம்” என்று மொழிபெயர்த்துள்ள கிரேக்கச் சொல் போர்னியா (por.nei’a), திருமணம்செய்யாத ஆட்களுக்கிடையே பாலுறவு புணர்ச்சியையும், மேலும் திருமணம் செய்தவர்கள் திருமணத்துக்குப் புறம்பே வைத்துக்கொள்ளும் பாலுறவுகளையும் குறிக்கிறது.)

எபே. 5:5: “விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லை.” (இது, கடந்த காலத்தில் வேசித்தனம் செய்பவனாயிருந்த ஒருவன் கடவுளுடைய ராஜ்யத்தின் ஆசீர்வாதங்களை அனுபவிக்க முடியாதென பொருள்கொள்வதில்லை, ஆனால் அவன் கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெறுவதற்கு அம்முறையான வாழ்க்கையை விட்டு விடவேண்டும். 1 கொரிந்தியர் 6:9-11-ஐ பாருங்கள்.)

சட்டப்பூர்வ திருமணம் செய்யாமல் கணவன் மனைவியாக ஒன்றுசேர்ந்து வாழ்வதை பைபிள் அங்கீகரிக்கிறதா?

பக்கங்கள் 248-250-ல் “திருமணம்” என்ற தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.

ஒத்தப் பாலினத்தவர் புணர்ச்சியைப்பற்றி பைபிளில் என்ன சொல்லியிருக்கிறது?

ரோமர் 1:24-27: “இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். . . . தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள். அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து, தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்.”

1 தீமோ. 1:9-11: “நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல், அக்கிரமக்காரருக்கும், அடங்காதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும், பாவிகளுக்கும், . . . வேசிக்கள்ளருக்கும், ஆண்புணர்ச்சிக்காரருக்கும், . . . நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி . . . ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது.” (லேவியராகமம் 20:13-ஐ ஒத்துப்பாருங்கள்.)

யூதா 7: “சோதோம் கொமாரா பட்டணத்தார்களும், அவைகளைச் சூழ்ந்த பட்டணத்தார்களும் . . . அந்நிய மாம்சத்தைத் தொர்ந்து, நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்து, திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.” (சோதோம் என்ற பெயர் “சோதோமி” என்றச் சொல்லுக்கு ஆதாரமாயிற்று, இது பொதுவாய் ஒரேபாலினத்தவர் புணர்ச்சி பழக்கத்தைக் குறிக்கிறது. ஆதியாகமம் 19:4, 5, 24, 25-ஐ ஒத்துப்பாருங்கள்.)

ஒரேபாலின புணர்ச்சி வாழ்க்கை நடத்துவோரிடம் உண்மையான கிறிஸ்தவர்களின் மனப்பான்மை என்ன?

1 கொரி. 6:9-11: “வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், . . . தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.” (முன்பு இத்தகைய வாழ்க்கை நடத்தினோராயிருப்பினும், ஆட்கள் தங்கள் முந்திய அசுத்தமான பழக்கவழக்க நடத்தைகளை இப்பொழுது முற்றிலும் விட்டுவிட்டு, யெகோவாவின் நீதியுள்ள தராதரங்களைக் கடைப்பிடித்து, கிறிஸ்துவின்மூலம் பாவங்களை மன்னிப்பதற்கான அவருடைய ஏற்பாட்டில் விசுவாசம் காட்டினால், கடவுளுக்கு முன்பாக அவர்கள் சுத்தமான நிலைநிற்கையை அனுபவித்து மகிழ முடியும். அவர்கள் மாறி சீர்ப்பட்டபின், கிறிஸ்தவ சபையில் வரவேற்கப்படலாம்.)

பிறப்புமூல அடிப்படை கொண்டவை அல்லது உடல்சம்பந்த அல்லது சூழ்நிலை சார்ந்தக் காரணங்களால் உண்டானவை உட்பட, மிக ஆழமாய் வேரூன்றிய தவறான ஆசைகளுங்கூட, யெகோவாவைப் பிரியப்படுத்த உண்மையில் விரும்புவோருக்கு அடக்கிவெல்ல முடியாதவையல்லவென உண்மையான கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கிறார்கள். சிலர் இயல்பான சுபாவத்தால் மிக அதிக உணர்ச்சிவசப்பட்டவர்கள். ஒருவேளை கடந்த காலத்தில் அவர்கள் தங்களைக் கட்டுப்படுத்தாமல் கோவேசங்களுக்கு இடங்கொடுத்திருக்கலாம்; ஆனால் கடவுளுடைய சித்தத்தைப்பற்றிய அறிவும், அவரைப் பிரியப்படுத்தவேண்டுமென்ற ஆசையும், அவருடைய ஆவியின் உதவியும் தன்னடக்கத்தை வளர்க்க அவர்களுக்கு உதவிசெய்கின்றன. ஒருவன் குடிப்பழக்கத்துக்கு ஆட்பட்டிருக்கலாம், ஆனால், சரியான உள்நோக்கத் தூண்டுதலுடன், அவன் குடிப்பதைத் தவிர்த்து இவ்வாறு குடிவெறியனாவதைத் தவிர்க்கலாம். இவ்வாறே, ஒருவன் தன்னொத்தப் பாலினத்தவரான மற்றவர்களிடம் மிகவும் கவர்ந்திழுக்கப்படுபவனாய் உணரலாம், ஆனால் கடவுளுடைய வார்த்தையின் அறிவுரைக்குச் செவிகொடுப்பதனால் அவன் ஒத்தப்பாலினத்தவர் புணர்ச்சிப் பழக்கங்களுக்கு விலகி சுத்தமாய் நிலைத்திருக்க முடியும். (எபேசியர் 4:17-24-ஐ பாருங்கள்.) தவறான நடத்தை எந்த வேறுபாட்டையும் உண்மையில் உண்டாக்குகிறதில்லையென தொர்ந்து சிந்தித்துக்கொண்டிருக்க யெகோவா நம்மை அனுமதிக்கிறதில்லை; அதன் விளைவுகளைப்பற்றி அவர் தயவாய் ஆனால் கண்டிப்பாய் நம்மை எச்சரித்து, “பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் [தங்களில்] தரித்துக்கொள்ள” விரும்புவோருக்கு மிகுதியான உதவியை அளிக்கிறார்.—கொலோ. 3:9, 10.

பாலுறவைக் குறித்த பைபிளின் கருத்து ஒருவேளை பழம்பாணியும் தேவையற்றக் கட்டுப்பாடுமுடையதாய் இருக்கிறதா?

1 தெச. 4:3-8, தி.மொ.: “கடவுளுடைய சித்தம் இதுவே: நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருக்க . . . வேண்டுமென்பதே. . . . ஆகையால் அசட்டபண்ணுகிறவன் மனுஷனையல்ல தமது பரிசுத்த ஆவியை உங்களுக்குக் கொடுத்துவருகிற கடவுளையே அசட்டைபண்ணுகிறான்.” (பாலுறவைப் பற்றிய பைபிளின் கருத்து பல ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மனிதர் எவரோ வெறுமென தோற்றுவித்த ஒன்றல்ல. அது மனிதவர்க்கத்தின் சிருஷ்டிகரிடமிருந்து வருகிறது; அவருடைய அங்கீகாரத்தைப் பெறுவதற்கு என்ன தேவையென அது தெளிவாய்க் கூறுகிறது; குடும்பங்கள் நிலைத்திருப்பதற்கும், குடும்பத்துக்குப் புறம்பே ஆரோக்கியமான, மகிழ்ச்சியுள்ள உறவுகளிருப்பதற்கும் வழிநடத்துதல்களையும் அது அளிக்கிறது. இந்த அறிவுரையைப் பொருத்திப் பயன்படுத்துவோர், ஒழுக்கக்கேடான நடத்தையுடன் செல்லும் ஆழ்ந்த உணர்ச்சிவச துயர வடுக்களுக்கும் அருவருப்பான நோய்களுக்கும் எதிரே தங்களைப் பாதுகாத்துக்கொள்கிறார்கள். கடவுளுக்கு முன்பாகச் சுத்தமான மனச்சாட்சியையும் தேவையற்ற ஏமாற்ற சங்கடத்துக்கு விலகிய வாழ்க்கையையும் விரும்புவோரின் தேவைகளை நிறைவாக்குவதில் பைபிளின் அறிவுரை வெகுவாய்க் காலத்துக்குப் பொருந்தியதாயிருக்கிறது.)

ஒருவர் இவ்வாறு சொன்னால்—

‘ஒத்தப்பாலினத்தவர் புணர்ச்சியைக் குறித்து உங்கள் மனப்பான்மை என்ன?’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘இங்கே பைபிளில் சொல்லியுள்ள இந்தக் கருத்தே அது. எந்த மனித அபிப்பிராயத்தைப் பார்க்கிலும் பைபிளில் சொல்லியிருப்பதே அதிக முக்கியமென நான் நம்புகிறேன், ஏனெனில் இது மனிதவர்க்கத்தின் சிருஷ்டிகருடைய எண்ணங்களை நமக்குக் கொடுக்கிறது. (1 கொரி. 6:9-11) கிறிஸ்தவர்களான இவர்களில் சிலர் முன்னால் ஒத்தப்பாலினத்தவர் புணர்ச்சியில் ஈடுபட்டுவந்தவர்களென நீங்கள் கவனிப்பீர்கள். ஆனால் கடவுள்மீது அவர்களுக்கிருந்த அன்பினாலும், அவருடைய ஆவியின் உதவியைக்கொண்டும், அவர்கள் மாறினார்கள்.’

அல்லது நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:  ‘இதற்குப் பதிலளிப்பதில், ஒத்தப்பாலினப் புணர்ச்சி வாழ்க்கைப்போக்குடன் எந்த இகழ்ச்சியும் சேர்க்கப்படக்கூடாதென உணரும் பலர், பைபிள் கடவுளுடைய வார்த்தையென நம்புகிறதில்லையென்று நான் கவனித்திருப்பதைச் சொல்லவேண்டும். பைபிளை நீங்கள் எவ்வாறு கருதுகிறீர்களென நான் கேட்கலாமா?’ அந்த ஆள் பைபிளில் தனக்கு விசுவாசம் இருப்பதாகச் சொன்னால், நீங்கள் மேலும் சொல்லலாம்:  ‘ஒத்தப் பாலினத்தவர் புணர்ச்சியைப் பற்றியது ஒரு புதிய விவாதம் அல்ல. பைபிளில் யெகோவா தேவனின் மாறாத எண்ணம் வெகு தெளிவான மொழிநடையில் குறித்து வைக்கப்பட்டுள்ளது. (368, 369-ம் பக்கங்களிலுள்ள குறிப்புகளை ஒருவேளை பயன்படுத்தலாம்.)’ கடவுள் இருப்பதைப்பற்றி அல்லது பைபிளைப்பற்றிச் சந்தேகங்களை அவர் வெளிப்படுத்தினால், நீங்கள் மேலும் சொல்லலாம்:  ‘கடவுள் இல்லையென்றால், நாம் விவாதமுறைப்படி அவருக்கு பதில் சொல்லும் பொறுப்புடையோராயில்லை, ஆகையால் நாம் விரும்பியபடி வாழலாம். ஆகையால் உண்மையான கேள்வி என்னவெனில், ஒரு கடவுள் இருக்கிறாரா என் உயிருக்கு நான் அவருக்குக் கடன்பட்டிருக்கிறேனா [மேலும், பைபிள் கடவுளால் ஏவப்பட்டதா]? என்பவையாகும். (145-151 அல்லது 58-68-ம் பக்கங்களிலுள்ள எண்ணங்களைப் பயன்படுத்துங்கள்.)’