Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் நான்கு

இயேசு கிறிஸ்து யார்?

இயேசு கிறிஸ்து யார்?
  • கடவுளுடைய நோக்கத்தில் இயேசுவின் விசேஷ பங்கு என்ன?

  • அவர் எங்கிருந்து வந்தார்?

  • அவர் எப்படிப்பட்டவராக இருந்தார்?

1, 2. (அ) பிரபலமானவர்களை வெறுமனே தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பதற்காக அவர்களை உங்களுக்கு மிக நன்றாகத் தெரியும் என்று ஏன் சொல்லிவிட முடியாது? (ஆ) இயேசுவைப் பற்றி என்ன குழப்பம் இருந்து வருகிறது?

பெயரும் புகழும் பெற்ற ஏராளமானோர் இவ்வுலகில் இருக்கிறார்கள். சிலர் தங்களுடைய சொந்த சமுதாயத்தில், நகரத்தில், அல்லது நாட்டில் பிரபலமானவர்களாகத் திகழ்கிறார்கள். மற்றவர்கள் உலகளவில் புகழ்பெற்று விளங்குகிறார்கள். ஆனால், இப்படிப்பட்ட பிரபலமானவர்களின் பெயரை மட்டும் தெரிந்து வைத்திருப்பதால், அவர்களை உங்களுக்கு மிக நன்றாகத் தெரியும் என்று சொல்லிவிட முடியாது. அவர்களுடைய பின்னணி, அவர்கள் நிஜமாகவே எப்படிப்பட்டவர்கள் என்பதும்கூட உங்களுக்குத் தெரியுமென்று சொல்லிவிட முடியாது.

2 இயேசு கிறிஸ்து சுமார் 2,000 வருடங்களுக்கு முன் இந்தப் பூமியில் வாழ்ந்திருந்தாலும், உலகெங்குமுள்ள மக்கள் இன்று அவரைப் பற்றி ஓரளவாவது தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதேசமயத்தில், இயேசு உண்மையில் யாரென்று தெரியாமல் அநேகர் குழம்புகிறார்கள். அவர் வெறுமனே ஒரு நல்ல மனிதர் என்று சிலர் சொல்கிறார்கள். வேறு சிலர் அவர் ஒரு சாதாரண தீர்க்கதரிசி என்கிறார்கள். இன்னும் சிலர் அவர்தான் கடவுள் என்று நம்புகிறார்கள், அவரையே வணங்க வேண்டுமென்றும் சொல்கிறார்கள். அப்படியானால் நாம் அவரை வணங்க வேண்டுமா?

3. இயேசுவைப் பற்றிய உண்மைகளை நீங்கள் அறிந்துகொள்வது ஏன் முக்கியம்?

3 இயேசுவைப் பற்றிய உண்மைகளை நீங்கள் தெரிந்துகொள்வது முக்கியம். ஏன்? ஏனென்றால், ‘ஒன்றான மெய்த் தேவனையும் அவர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்’ என்று பைபிள் சொல்கிறது. (யோவான் 17:3) ஆம், யெகோவா தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றிய உண்மைகளை அறிந்துகொள்வது பரதீஸ் பூமியில் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள வழிவகுக்கும். (யோவான் 14:6) அதுமட்டுமல்ல, எப்படி வாழ்வது, மற்றவர்களை எப்படி நடத்துவது என்பதற்கு இயேசுவே மிகச் சிறந்த முன்மாதிரியாக விளங்குகிறார். (யோவான் 13:34, 35) இப்புத்தகத்தின் முதல் அதிகாரத்தில், கடவுளைப் பற்றிய உண்மைகளை நாம் பார்த்தோம். இப்போது இயேசு கிறிஸ்துவைப் பற்றி பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது என்பதைச் சிந்திக்கலாம்.

வாக்குப்பண்ணப்பட்ட மேசியா

4. “மேசியா,” “கிறிஸ்து” ஆகிய பட்டப் பெயர்களின் அர்த்தம் என்ன?

4 இயேசுவின் பிறப்புக்கு வெகு காலத்திற்கு முன்னதாகவே, கடவுளால் அனுப்பப்படவிருந்த மேசியாவைப் பற்றி, அதாவது கிறிஸ்துவைப் பற்றி பைபிள் முன்னறிவித்தது. (எபிரெய வார்த்தையிலிருந்து வந்துள்ள) “மேசியா” என்ற பட்டப் பெயரும் (கிரேக்க வார்த்தையிலிருந்து வந்துள்ள) “கிறிஸ்து” என்ற பட்டப் பெயரும் “அபிஷேகம் செய்யப்பட்டவர்” என்ற அர்த்தத்தைக் கொடுக்கின்றன. வாக்குப்பண்ணப்பட்ட இவர், கடவுளால் அபிஷேகம் செய்யப்படவிருந்தார், அதாவது ஒரு விசேஷ ஸ்தானத்திற்கு நியமிக்கப்படவிருந்தார். கடவுளுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மேசியாவின் முக்கிய பங்கைப் பற்றி இப்புத்தகத்தின் பின்வரும் அதிகாரங்களில் அதிகமாகக் கற்றுக்கொள்வோம். அதோடு, இயேசு இப்போதே நமக்கு என்னென்ன நன்மைகளை அளித்து வருகிறார் என்பதைப் பற்றியும் கற்றுக்கொள்வோம். ஆனால், அவர் பிறப்பதற்கு முன்னரே, ‘மேசியாவாக வரப்போகிறவர் யார்?’ என்று அநேகர் நிச்சயம் யோசித்திருப்பார்கள்.

5. எந்த விஷயத்தில் இயேசுவைப் பற்றி அவருடைய சீஷர்களுக்குச் சந்தேகமே இருக்கவில்லை?

5 நசரேயனாகிய இயேசுதான் முன்னறிவிக்கப்பட்ட மேசியா என்பதில் பொ.ச. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த அவருடைய சீஷர்களுக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. (யோவான் 1:41) அந்தச் சீஷர்களில் ஒருவரான சீமோன் பேதுரு, இயேசுவைப் பார்த்து “நீர் . . . கிறிஸ்து” என்று வெளிப்படையாகவே சொன்னார். (மத்தேயு 16:16) ஆனால், இயேசுதான் வாக்குப்பண்ணப்பட்ட மேசியா என்பதில் அந்தச் சீஷர்கள் எப்படி அவ்வளவு நிச்சயமாய் இருந்தார்கள்? நாமும்கூட எப்படி நிச்சயமாய் இருக்கலாம்?

6. மேசியாவை அடையாளம் கண்டுகொள்ள உண்மையுள்ளவர்களுக்கு யெகோவா எப்படி உதவியிருக்கிறார் என்பதை விளக்குங்கள்.

6 மேசியாவைக் குறித்து ஏராளமான விவரங்களை இயேசுவுக்கு முன் வாழ்ந்த கடவுளுடைய தீர்க்கதரிசிகள் அறிவித்திருந்தார்கள். அவரை அடையாளம் கண்டுகொள்ள இந்த விவரங்கள் மற்றவர்களுக்குப் பிற்பாடு உதவின. இதை இப்படி விளக்கலாம்: முன்பின் பார்த்திராத ஒருவரை நெரிசலான பஸ் ஸ்டான்டிலிருந்தோ ரயில்வே ஸ்டேஷனிலிருந்தோ ஏர்போர்ட்டிலிருந்தோ அழைத்து வருமாறு உங்களிடம் சொல்லப்படுகிறது என வைத்துக்கொள்ளுங்கள். அந்த நபரைப் பற்றிய சில விவரங்களை யாராவது உங்களுக்குச் சொன்னால் எவ்வளவோ உதவியாக இருக்கும் அல்லவா? அதேபோல, மேசியா என்ன செய்வார், அவருக்கு என்ன ஆகும் என்பதையெல்லாம் பற்றி யெகோவா தேவன் நுணுக்கமான பல விவரங்களை பைபிள் தீர்க்கதரிசிகள் மூலம் அளித்தார். ஏராளமான இந்தத் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றம், மேசியா யார் என்பதைத் தெளிவாக அடையாளம் கண்டுகொள்ள உண்மையுள்ளவர்களுக்குப் பிற்பாடு உதவியது.

7. இயேசுவில் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களில் இரண்டு யாவை?

7 அவற்றில் இரண்டு தீர்க்கதரிசனங்களை மட்டும் இப்போது பார்க்கலாம். முதலாவதாக, யூதா தேசத்திலுள்ள பெத்லகேம் என்ற ஒரு சிறிய ஊரில் மேசியா பிறப்பார் என மீகா தீர்க்கதரிசி 700 வருடங்களுக்கும் முன்னரே அறிவித்தார். (மீகா 5:2) அப்படியானால், இயேசு எங்கே பிறந்தார்? அதே ஊரில்தான்! (மத்தேயு 2:1, 3-9) இரண்டாவதாக, எந்த வருடத்தில் மேசியா தோன்றுவார் என்பதைப் பற்றி பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தானியேல் 9:25 குறிப்பிட்டது; அதாவது, பொ.ச. 29-⁠ம் வருடம் என்று குறிப்பிட்டது. * இந்தத் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றமும் மற்ற தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றமும் இயேசுதான் வாக்குப்பண்ணப்பட்ட மேசியா என்பதை நிரூபிக்கின்றன.

இயேசு முழுக்காட்டப்பட்ட சமயத்தில் மேசியாவாக, அதாவது கிறிஸ்துவாக ஆனார்

8, 9. இயேசுவுடைய முழுக்காட்டுதலின்போது, அவர்தான் மேசியா என்பதற்கான என்ன அத்தாட்சி தெளிவானது?

8 இயேசுதான் மேசியா என்பதற்கு மேலுமொரு அத்தாட்சி பொ.ச. 29-⁠ம் வருடம் முடிவடைகிற தறுவாயில் தெளிவானது. அந்த வருடத்தில்தான் யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெறுவதற்கு முழுக்காட்டுபவரான யோவானிடம் இயேசு சென்றார். மேசியாவைக் கண்டுகொள்ள ஓர் அடையாளத்தைத் தரப்போவதாக யோவானிடம் யெகோவா வாக்குக் கொடுத்திருந்தார். இயேசுவை முழுக்காட்டியபோது அந்த அடையாளத்தை யோவான் கண்ணாரக் கண்டார். நடந்ததை பைபிள் இவ்வாறு விவரிக்கிறது: “இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப் போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.” (மத்தேயு 3:16, 17) கண்ணால் பார்த்த, காதால் கேட்ட விஷயங்கள் இயேசுதான் கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதை யோவானுக்கு மிக நன்றாகவே தெளிவுபடுத்தின. (யோவான் 1:32-34) கடவுளுடைய பரிசுத்த ஆவி, அதாவது செயல் நடப்பிக்கும் சக்தி இயேசுவின் மீது ஊற்றப்பட்ட அந்தச் சமயத்தில்தான் அவர் மேசியாவாக, அதாவது கிறிஸ்துவாக ஆனார்; வேறு வார்த்தைகளில் சொன்னால், நியமிக்கப்பட்ட தலைவராகவும் ராஜாவாகவும் ஆனார்.—ஏசாயா 55:4.

9 பைபிள் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றமும் யெகோவா தேவன் அளித்த சாட்சியும் இயேசுவே வாக்குப்பண்ணப்பட்ட மேசியா என்பதைத் தெள்ளத் தெளிவாக்குகின்றன. என்றாலும், இயேசு கிறிஸ்துவைப் பற்றி இன்னும் இரண்டு முக்கிய கேள்விகளுக்கு பைபிள் பதிலளிக்கிறது: அவர் எங்கிருந்து வந்தார்? எப்படிப்பட்டவராக இருந்தார்?

இயேசு எங்கிருந்து வந்தார்?

10. இயேசு பூமிக்கு வருவதற்கு முன் எங்கு இருந்தாரென பைபிள் கற்பிக்கிறது?

10 இயேசு பூமிக்கு வருவதற்கு முன் பரலோகத்தில் வாழ்ந்தார் என பைபிள் கற்பிக்கிறது. பெத்லகேமில்தான் மேசியா பிறப்பார் என்றும் அவருடைய ஆரம்பம் ‘பூர்வத்திலிருந்தே’ வந்திருக்கிறது என்றும் மீகா முன்னுரைத்தார். (மீகா 5:2) ஒரு மனிதனாகப் பிறப்பதற்கு முன் பரலோகத்தில் வாழ்ந்ததாக இயேசுவே பல முறை சொல்லியிருந்தார். (யோவான் 3:13; 6:38, 62; 17:4, 5) பரலோகத்தில் ஓர் ஆவி சிருஷ்டியாக யெகோவாவோடு அவருக்கு விசேஷித்த ஒரு பந்தம் இருந்தது.

11. யெகோவாவின் மிக அருமையான குமாரன்தான் இயேசு என்பதை பைபிள் எப்படிக் காண்பிக்கிறது?

11 யெகோவாவின் மிக அருமையான குமாரன்தான் இயேசு; அப்படிச் சொல்ல தகுந்த காரணங்கள் இருக்கின்றன. அவர் கடவுளுடைய முதல் படைப்பாக இருப்பதால் ‘சர்வ சிருஷ்டிக்கும் முந்தினவர்’ என அழைக்கப்படுகிறார். * (கொலோசெயர் 1:15) அந்தக் குமாரன் விசேஷித்தவராக இருப்பதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது​—⁠அவர்தான் கடவுளுடைய ‘ஒரேபேறான குமாரன்.’ (யோவான் 3:16) இதற்கு என்ன அர்த்தம்? இயேசு ஒருவரே கடவுளால் நேரடியாகப் படைக்கப்பட்டவர் என்று அர்த்தம். அதோடு, மற்ற எல்லாவற்றையும் படைப்பதற்குக் கடவுள் பயன்படுத்திய ஒரே நபர் இயேசுதான் என்றும் அர்த்தம். (கொலோசெயர் 1:16) அதுமட்டுமா? “வார்த்தை” என்றும்கூட இயேசு அழைக்கப்படுகிறார். (யோவான் 1:14) கடவுளின் சார்பாக அவர் பேசினார் என்று இது அர்த்தப்படுத்துகிறது; அப்படியென்றால், பிதாவின் மற்ற ஆவி குமாரர்களுக்கும் மானிட குமாரர்களுக்கும் அவர் செய்திகளையும் கட்டளைகளையும் அறிவித்திருப்பார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

12. முதற்பேறான குமாரன் கடவுளுக்குச் சமமானவர் அல்ல என்பது நமக்கு எப்படித் தெரியும்?

12 சிலர் நினைக்கிறபடி, இந்த முதற்பேறான குமாரன் கடவுளுக்குச் சமமானவராக இருக்கிறாரா? பைபிள் அவ்வாறு கற்பிப்பதில்லை. முந்தின பாராவில் நாம் கவனித்தபடி, அந்தக் குமாரன் கடவுளால் படைக்கப்பட்டவர். அப்படியென்றால் அவருக்கு ஓர் ஆரம்பம் இருந்திருக்கிறது, ஆனால் யெகோவா தேவனுக்கு ஆரம்பமும் இல்லை முடிவும் இல்லை. (சங்கீதம் 90:2) தம்முடைய பிதாவுக்குச் சமமானவராக இருக்க வேண்டுமென்று ஒரேபேறான அந்தக் குமாரன் ஒருபோதும் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. குமாரனைவிட பிதா பெரியவராக இருக்கிறார் என்று பைபிள் தெளிவாகக் கற்பிக்கிறது. (யோவான் 14:28; 1 கொரிந்தியர் 11:3) யெகோவா ஒருவரே “சர்வவல்லமையுள்ள தேவன்.” (ஆதியாகமம் 17:1) ஆக, வேறு எவருமே அவருக்கு நிகர் கிடையாது. *

13. ‘அதரிசனமான தேவனுடைய தற்சுரூபம்’ என்று குமாரனைப் பற்றி பைபிள் குறிப்பிடுவது எதை அர்த்தப்படுத்துகிறது?

13 நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தையும் இந்தப் பூமியையும் படைப்பதற்கு வெகு காலத்துக்கு முன்பே, கோடானுகோடி வருடங்களாக யெகோவாவும் அவருடைய ஒரேபேறான குமாரனும் நெருக்கமான பந்தத்தை அனுபவித்து மகிழ்ந்தார்கள். அப்படியானால், அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் எவ்வளவாய் நேசித்திருப்பார்கள்! (யோவான் 3:35; 14:31) இந்த நேசமகன் தம் பிதாவைப் போலவே இருந்தார். அதனால்தான் இவர் ‘அதரிசனமான தேவனுடைய தற்சுரூபம்’ என்று பைபிள் குறிப்பிடுகிறது. (கொலோசெயர் 1:15) உதாரணத்திற்கு, ஒரு மகன் பல விதங்களில் தன் தந்தையைப் போலவே இருக்கலாம்; அவ்வாறே இந்தப் பரலோக மகனும் தம்முடைய தந்தையின் குணங்களையும் சுபாவத்தையும் அப்படியே பிரதிபலிப்பவராக இருக்கிறார்.

14. யெகோவாவுடைய ஒரேபேறான குமாரன் எப்படி ஒரு மனிதனாகப் பிறந்தார்?

14 யெகோவாவின் ஒரேபேறான குமாரன் ஒரு மனிதனாக வாழ்வதற்குப் பரலோகத்தைவிட்டு மனமுவந்து பூமிக்கு வந்தார். ஆனால், ‘ஒரு ஆவி சிருஷ்டி எப்படி ஒரு மனிதனாகப் பிறக்க முடிந்தது?’ என்று ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம். இதற்காக யெகோவா ஓர் அற்புதத்தை நிகழ்த்தினார். பரலோகத்திலிருந்த தம் முதற்பேறான குமாரனின் உயிரை யூத வம்சத்தைச் சேர்ந்த மரியாள் என்ற கன்னியின் கருப்பைக்கு மாற்றினார். இதில் எந்த மனிதத் தகப்பனுடைய பங்கும் இருக்கவில்லை. இவ்வாறு மரியாள் ஒரு பரிபூரண மகனைப் பெற்றெடுத்தார், அந்த மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.—லூக்கா 1:30-35.

இயேசு எப்படிப்பட்டவராக இருந்தார்?

15. இயேசுவின் மூலம் யெகோவாவை நம்மால் நன்கு தெரிந்துகொள்ள முடியுமென ஏன் சொல்லலாம்?

15 பூமியிலிருந்தபோது இயேசு சொன்ன விஷயங்களும் செய்த காரியங்களும் அவரை நன்றாகப் புரிந்துகொள்ள உதவுகின்றன. அதுமட்டுமா, யெகோவாவைப் பற்றியும் இன்னுமதிகமாகப் புரிந்துகொள்ள உதவுகின்றன. ஏன் அவ்வாறு சொல்லலாம்? ஏனென்றால், இந்தக் குமாரன் தம்முடைய பிதாவை அச்சுப்பிசகாமல் அப்படியே பிரதிபலிக்கிறார். அதனால்தான் ஒருமுறை இயேசு தமது சீஷர் ஒருவரிடம், “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” என்று சொன்னார். (யோவான் 14:9) சுவிசேஷங்கள் என்றழைக்கப்படுகிற நான்கு பைபிள் புத்தகங்களான மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகியவற்றில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையைப் பற்றியும், அவருடைய செயல்களைப் பற்றியும், அவரது சுபாவத்தைப் பற்றியும் ஏராளமான விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

16. இயேசு முக்கியமாக எதைப் பற்றி போதித்தார், அவருடைய போதனை யாருடையது?

16 ‘போதகர்’ என்றே இயேசு நன்கு அறியப்பட்டிருந்தார். (யோவான் 1:38; 13:13) அவர் என்ன போதித்தார்? முக்கியமாக, “ராஜ்யத்தின் சுவிசேஷத்தை,” அதாவது கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் போதித்தார்; முழு பூமியையும் ஆட்சி செய்து, கீழ்ப்படிதலுள்ள மனிதர்களுக்கு முடிவில்லா ஆசீர்வாதங்களைக் கொண்டு வரப்போகிற அந்தப் பரலோக அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அவர் போதித்தார். (மத்தேயு 4:23) யாருடைய செய்தி அது? இயேசுவே இதற்குப் பதிலளிக்கிறார்: ‘என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாய் இருக்கிறது.’ ஆம், அது யெகோவாவுடைய செய்தி. (யோவான் 7:16) ராஜ்யத்தைப் பற்றிய அந்த நல்ல செய்தியை மக்கள் கேட்க வேண்டுமென்று தம் பிதா விரும்புகிறார் என்பது இயேசுவுக்குத் தெரியும். கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றியும் அது எதையெல்லாம் நிறைவேற்றப் போகிறது என்பதைப் பற்றியும் 8-ம் அதிகாரத்தில் இன்னுமதிகமாக நாம் கற்றுக்கொள்வோம்.

17. இயேசு எங்கெல்லாம் போதித்தார், மற்றவர்களுக்குப் போதிப்பதில் அவர் ஏன் கொஞ்சங்கூட சிரமம் பார்க்கவில்லை?

17 இயேசு எங்கெல்லாம் போதித்தார்? ஜனங்களை எங்கெல்லாம் பார்த்தாரோ அங்கெல்லாம் போதித்தார்​—⁠நாட்டுப்புறங்களிலும் போதித்தார், நகரங்களிலும் போதித்தார். அதோடு, கிராமங்களிலும், சந்தைவெளிகளிலும், வீடுகளிலும் போதித்தார். ஜனங்கள் தம்மைத் தேடி வரட்டும் என்று அவர் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கவில்லை. அவரே ஜனங்களைத் தேடிச் சென்றார். (மாற்கு 6:56; லூக்கா 19:5, 6) பிரசங்க வேலையிலும் போதிக்கும் வேலையிலும் சிரமம் பார்க்காமல், இவ்வளவு அதிக நேரத்தை அவர் ஏன் செலவிட்டார்? அவர் அப்படிச் செய்ய வேண்டுமென்பது கடவுளுடைய சித்தமாக இருந்தது. பிதாவுடைய சித்தத்தையே அவர் எப்போதும் செய்தார். (யோவான் 8:28, 29) என்றாலும், மற்றொரு காரணத்திற்காகவும் அவர் பிரசங்க வேலையில் ஈடுபட்டார். தம்மைப் பார்க்க வந்த ஜனக்கூட்டத்தார் மீது அவர் மனதுருகினார். (மத்தேயு 9:35, 36) கடவுளையும் அவரது நோக்கங்களையும் பற்றிய உண்மைகளைக் கற்றுக்கொடுக்க வேண்டிய மதத் தலைவர்களால் அவர்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தார்கள். எனவே, ராஜ்ய செய்தியை அந்த ஜனங்கள் கேட்பது எவ்வளவு அவசியம் என்பதை அறிந்து அவர்களிடம் பிரசங்கித்தார்.

18. இயேசுவின் எந்தெந்த குணங்கள் உங்கள் மனதை மிகவும் கவருகின்றன?

18 இயேசு அன்பும் இரக்கமும் கனிவும் மிக்கவராக இருந்தார். எனவே, ஜனங்களால் அவரிடம் நெருங்கிப் பழக முடிந்தது, அவரைத் தயவானவராயும் காண முடிந்தது. குழந்தைகள்கூட எந்தத் தயக்கமும் இல்லாமல் அவரோடு சகஜமாகப் பழகினார்கள். (மாற்கு 10:13-16) அவர் பாரபட்சமற்றவராக இருந்தார். ஊழலையும் அநீதியையும் வெறுத்தார். (மத்தேயு 21:12, 13) பெண்களுக்கு மரியாதையும் உரிமைகளும் அவ்வளவாகக் கொடுக்கப்படாத அந்தக் காலத்தில் அவர்களைக் கண்ணியத்தோடு நடத்தினார். (யோவான் 4:9, 27) உள்ளப்பூர்வமான மனத்தாழ்மையைக் காண்பித்தார். ஒரு சாதாரண வேலைக்காரனைப் போல ஒருசமயம் தம்முடைய அப்போஸ்தலர்களின் பாதங்களைக்கூட கழுவினார்.

இயேசு எங்கெல்லாம் ஜனங்களைப் பார்த்தாரோ அங்கெல்லாம் பிரசங்கித்தார்

19. மற்றவர்களுடைய தேவைகளை இயேசு குறிப்பறிந்து பூர்த்தி செய்தார் என்பதை எந்த உதாரணம் காண்பிக்கிறது?

19 மற்றவர்களுடைய தேவைகளை இயேசு குறிப்பறிந்து பூர்த்தி செய்தார். முக்கியமாக, கடவுளுடைய ஆவியின் வல்லமையால் ஜனங்களை அவர் அற்புதமாய்ச் சுகப்படுத்தியபோது இது தெளிவாகத் தெரிந்தது. (மத்தேயு 14:14) உதாரணத்திற்கு, குஷ்டரோகி ஒருவன் இயேசுவிடம் வந்து, “உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும்” என்று சொன்னான். அவன் படுகிற வேதனையையும் அவஸ்தையையும் இயேசு நன்றாகவே உணர்ந்தார். மனதுருகி அவனைத் தொட்டு, “எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு” என்றார். உடனடியாக அவன் குணமானான்! (மாற்கு 1:40-42) அப்போது அவனுக்கு எப்படி இருந்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?

கடைசிவரை உண்மையுடன்

20, 21. கடவுளுக்கு உண்மையுடன் கீழ்ப்படிவதில் இயேசு எப்படி முன்மாதிரி வைத்தார்?

20 கடவுளுக்கு உண்மையுடன் கீழ்ப்படிவதில் இயேசு மிக அருமையான முன்மாதிரி வைத்தார். எல்லாவித சூழ்நிலைகளிலும் எதிர்ப்புகளிலும் வேதனைகளிலும் அவர் தமது பரலோகத் தகப்பனுக்கு உண்மையுள்ளவராக நிலைத்திருந்தார். சாத்தானுடைய சோதனைகளை உறுதியாகவும் வெற்றிகரமாகவும் எதிர்த்து நின்றார். (மத்தேயு 4:1-11) ஒருசமயம், அவருடைய சொந்தக்காரர்கள் சிலர்கூட அவரை விசுவாசிக்கவில்லை, “அவர் மதி மயங்கியிருக்கிறார்” என்றும் அவர்கள் சொன்னார்கள். (மாற்கு 3:21) ஆனால், தம்முடைய வாழ்க்கையில் தலையிட அவர்களை இயேசு அனுமதிக்கவில்லை; கடவுளுடைய வேலையையே அவர் தொடர்ந்து செய்து வந்தார். அவமானப்படுத்தப்பட்ட போதிலும் தூஷிக்கப்பட்ட போதிலும், தம்மையே கட்டுப்படுத்திக் கொண்டார், தம்மை எதிர்த்தவர்களுக்கு ஒருபோதும் தீங்குசெய்ய முயலவில்லை.—1 பேதுரு 2:21-23.

21 இயேசு சாகும்வரை உண்மையுடன் இருந்தார்—எதிரிகள் கொடூரமாக வேதனைப்படுத்தி சாகடித்தபோதிலும் உண்மையுடன் இருந்தார். (பிலிப்பியர் 2:8) பூமியில் தமது கடைசி நாளன்று அவர் எதையெல்லாம் சகித்தார் என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். அவர் கைது செய்யப்பட்டார், பொய் சாட்சிகளால் குற்றம் சாட்டப்பட்டார், ஊழல்மிக்க நீதிபதிகளால் குற்றவாளியென்று தீர்க்கப்பட்டார், ஜனங்களால் ஏளனம் செய்யப்பட்டார், படைவீரர்களால் சித்திரவதையும் செய்யப்பட்டார். கழுமரத்தில் ஆணியடிக்கப்பட்ட நிலையில், “எல்லாம் நிறைவேறிற்று” என்று சொல்லி இறுதி மூச்சுவிட்டார். (யோவான் 19:30, பொ.மொ.) என்றாலும், மூன்றாம் நாளில், அவருடைய பரலோகத் தந்தை அவரை ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுப்பினார். (1 பேதுரு 3:18) சில வாரங்களுக்குப் பின் அவர் பரலோகத்திற்குத் திரும்பிப்போனார். அங்கே, ராஜாவாக நியமிக்கப்படும்வரை ‘தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்திருந்தார்.’—எபிரெயர் 10:12, 13.

22. மரணம்வரை உண்மையுடன் இருந்ததன் மூலம் இயேசு எதற்கு வழிசெய்தார்?

22 மரணம்வரை உண்மையுடன் இருந்ததன் மூலம் இயேசு எதற்கு வழிசெய்தார்? யெகோவாவுடைய ஆதி நோக்கத்தின்படி பரதீஸ் பூமியில் நித்தியமாக வாழ்வதற்கு வழிசெய்தார். இயேசுவின் மரணம் அதை எப்படிச் சாத்தியமாக்குகிறது என்பது அடுத்த அதிகாரத்தில் கலந்தாலோசிக்கப்படும்.

^ பாரா. 7 இயேசுவில் நிறைவேறிய தானியேல் தீர்க்கதரிசனத்தின் விளக்கத்தை அறிய, பக்கங்கள் 197-9-ல் உள்ள பிற்சேர்க்கையைக் காண்க.

^ பாரா. 11 யெகோவா சிருஷ்டிகராக இருப்பதால்தான் பிதா என்று அழைக்கப்படுகிறார். (ஏசாயா 64:8) கடவுளால் இயேசு சிருஷ்டிக்கப்பட்டதால் கடவுளுடைய குமாரன் என்று அழைக்கப்படுகிறார். இதுபோன்ற காரணங்களுக்காக, மற்ற ஆவி சிருஷ்டிகளும், ஏன் மனிதனான ஆதாமும்கூட, கடவுளுடைய குமாரர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.—யோபு 1:6; லூக்கா 3:38, பொது மொழிபெயர்ப்பு.

^ பாரா. 12 முதற்பேறான குமாரன் கடவுளுக்குச் சமமானவர் அல்ல என்பதற்கான கூடுதல் அத்தாட்சிகளுக்கு, பக்கங்கள் 201-4-ல் உள்ள பிற்சேர்க்கையைக் காண்க.