Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் பதினேழு

ஜெபத்தில் கடவுளிடம் நெருங்கி வாருங்கள்

ஜெபத்தில் கடவுளிடம் நெருங்கி வாருங்கள்
  • கடவுளிடம் நாம் ஏன் ஜெபிக்க வேண்டும்?

  • நம்முடைய ஜெபத்தைக் கடவுள் கேட்பதற்கு, நாம் என்ன செய்ய வேண்டும்?

  • நம்முடைய ஜெபங்களுக்குக் கடவுள் எப்படிப் பதிலளிக்கிறார்?

‘வானத்தையும் பூமியையும் படைத்தவர்’ நம் ஜெபங்களைக் கேட்கத் தயாராயிருக்கிறார்

1, 2. ஜெபத்தை ஒரு பெரிய பாக்கியமாக நாம் ஏன் கருத வேண்டும், அதைக் குறித்து பைபிள் என்ன கற்பிக்கிறது என்பதை நாம் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?

பரந்து விரிந்திருக்கும் இந்தப் பிரபஞ்சத்தோடு ஒப்பிட, நம்முடைய பூமி மிக மிகச் சிறியது. சொல்லப்போனால், “வானத்தையும் பூமியையும் படைத்த” யெகோவாவுக்கு, உலக தேசங்களெல்லாம் வாளியிலுள்ள ஒரு சொட்டுத் தண்ணீர் போலத்தான் இருக்கின்றன. (சங்கீதம் 115:15; ஏசாயா 40:15) ஆனாலும், “தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் [“யெகோவா,” NW] சமீபமாயிருக்கிறார். அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்” என பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 145:18, 19) அதன் அர்த்தத்தைச் சற்று யோசித்துப் பாருங்கள்! சர்வவல்லமையுள்ள சிருஷ்டிகர் நமக்குச் சமீபமாயிருக்கிறார்; நாம் ‘உண்மையாய் அவரை நோக்கிக் கூப்பிட்டால்’ நிச்சயம் அவர் நம் ஜெபத்தைக் கேட்பார். கடவுளிடம் ஜெபிப்பது எப்பேர்ப்பட்ட ஒரு பாக்கியம்!

2 என்றாலும், நம்முடைய ஜெபங்களை யெகோவா கேட்க வேண்டுமென்றால், அவருக்குப் பிடித்தமான விதத்தில் நாம் அவரிடம் ஜெபிப்பது அவசியம். ஆனால், ஜெபத்தைப் பற்றி பைபிள் என்ன கற்பிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளாமல் நாம் எப்படி அவ்வாறு ஜெபிக்க முடியும்? ஆக, வேதவசனங்கள் ஜெபத்தைப் பற்றி என்ன சொல்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வது மிக மிக முக்கியம், ஏனெனில் யெகோவாவிடம் நெருங்கி வர ஜெபம்தான் நமக்கு உதவுகிறது.

யெகோவாவிடம் ஏன் ஜெபிக்க வேண்டும்?

3. நாம் யெகோவாவிடம் ஜெபிப்பதற்கு ஒரு முக்கிய காரணம் என்ன?

3 யெகோவாவிடம் ஜெபிப்பதற்கான ஒரு முக்கிய காரணம், அவ்வாறு செய்யும்படி அவரே நம்மிடம் சொல்வதுதான். அவருடைய வார்த்தை இவ்வாறு நம்மை ஊக்குவிக்கிறது: “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.” (பிலிப்பியர் 4:6, 7) இப்பிரபஞ்சத்தின் உன்னதப் பேரரசர் அன்புடன் நமக்காகச் செய்துள்ள அத்தகைய ஏற்பாட்டைப் புறக்கணிக்க நிச்சயமாகவே நாம் விரும்ப மாட்டோம்!

4. யெகோவாவிடம் தவறாமல் ஜெபிப்பது அவரோடுள்ள நம் பந்தத்தை எவ்வாறு பலப்படுத்துகிறது?

4 யெகோவாவிடம் தவறாமல் ஜெபிப்பதற்கான மற்றொரு காரணம், அவரோடுள்ள நம் பந்தத்தை அது பலப்படுத்துகிறது என்பதே. உண்மையான நண்பர்கள் தங்களுக்கு ஏதோவொன்று தேவைப்படுகிறபோது மட்டுமே பேசிக்கொள்ள மாட்டார்கள். மாறாக, ஒருவரிலொருவர் அக்கறையுடையவர்களாக இருப்பார்கள், தங்களுடைய எண்ணங்களையும், கவலைகளையும், உணர்ச்சிகளையும் மனந்திறந்து பேசுவார்கள், அப்போது அவர்களுடைய நட்பு மேலும் பலப்படும். சில அம்சங்களில், யெகோவா தேவனோடுள்ள நம் பந்தத்தைக் குறித்தும் அவ்வாறே சொல்லலாம். இப்புத்தகத்தின் உதவியுடன் யெகோவாவையும், அவருடைய குணங்களையும், அவருடைய நோக்கங்களையும் பற்றி நீங்கள் நிறைய விஷயங்களைக் கற்றிருக்கிறீர்கள். அவரை நிஜமான ஒரு நபராகப் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறீர்கள். அப்படியானால், உங்களுடைய பரலோகத் தகப்பனான அவரிடம் உங்கள் எண்ணங்களையும் மனதில் புதைந்து கிடக்கிற உணர்ச்சிகளையும் ஜெபத்தின் மூலம் நீங்கள் தெரிவிக்கலாம். அப்படித் தொடர்ந்து செய்கையில், யெகோவாவிடம் நீங்கள் மேலும் மேலும் நெருங்கி வருவீர்கள்.—யாக்கோபு 4:8, NW.

நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

5. எல்லா ஜெபங்களையுமே யெகோவா கேட்பதில்லை என்பதை எது காட்டுகிறது?

5 எல்லா ஜெபங்களையுமே யெகோவா கேட்கிறாரா? தீர்க்கதரிசியான ஏசாயாவின் நாட்களிலிருந்த கலகக்கார இஸ்ரவேலரிடம் அவர் என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள்: “நீங்கள் மிகுதியாய் ஜெபம் பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.” (ஏசாயா 1:15) ஆகையால், நம்முடைய ஜெபங்களை அவர் கேட்காததற்கு நாம் செய்யும் சில செயல்களே காரணமாகி விடலாம். எனவே, நம்முடைய ஜெபங்களுக்கு அவர் செவிகொடுக்க வேண்டுமானால், சில அடிப்படை காரியங்களை நாம் செய்ய வேண்டும்.

6. நம்முடைய ஜெபங்களுக்குக் கடவுள் செவிசாய்க்க வேண்டுமானால், எது மிக முக்கியம், அதை நாம் எவ்வாறு காண்பிக்க வேண்டும்?

6 நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான காரியம் விசுவாசத்தைக் காண்பிப்பதாகும். (மாற்கு 11:24) அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.” (எபிரெயர் 11:6) கடவுள் இருக்கிறார், நம் ஜெபங்களைக் கேட்டு பதிலளிக்கிறார் என்று தெரிந்து வைத்திருப்பது மட்டுமே உண்மையான விசுவாசமல்ல. விசுவாசம் செயல்களால் நிரூபிக்கப்படுகிறது. நமக்கு விசுவாசம் இருப்பதை நம்முடைய வாழ்க்கை முறையின் மூலம் நாம் தெளிவாகக் காண்பிக்க வேண்டும்.—யாக்கோபு 2:26.

7. (அ) யெகோவாவிடம் ஜெபத்தில் நாம் ஏன் மரியாதையோடு பேச வேண்டும்? (ஆ) மனத்தாழ்மையாகவும் உள்ளப்பூர்வமாகவும் நாம் எப்படிக் கடவுளிடம் ஜெபிக்க வேண்டும்?

7 தம்மிடம் ஜெபிப்பவர்கள் விசுவாசமாக மட்டுமல்ல, மனத்தாழ்மையாகவும் உள்ளப்பூர்வமாகவும் ஜெபிக்க வேண்டுமென்றும்கூட யெகோவா எதிர்பார்க்கிறார். யெகோவாவிடம் அவ்வாறு மனத்தாழ்மை காண்பிக்க நமக்குக் காரணங்களா இல்லை? ஒரு ஜனாதிபதியிடமோ பிரதமரிடமோ பேச ஜனங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், பொதுவாக அந்தப் பெரிய பதவிக்கு மதிப்புக் கொடுத்து, மரியாதையோடுதான் அவரிடம் பேசுவார்கள். அப்படியானால், யெகோவாவிடம் ஜெபிக்கும்போது நாம் இன்னும் எந்தளவு மரியாதையோடு பேச வேண்டும்! (சங்கீதம் 138:6) அவர் “சர்வவல்லமையுள்ள தேவன்” ஆயிற்றே! (ஆதியாகமம் 17:1) அவருக்கு முன்னால் நாம் மிகவும் தாழ்மையானவர்கள் என்று காட்டும் விதத்தில் ஜெபிக்க வேண்டும். அத்தகைய மனத்தாழ்மை, மனப்பாடம் செய்து திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிற ஜெபங்களைத் தவிர்ப்பதற்கும் இருதயப்பூர்வமாக ஜெபிப்பதற்கும் நம்மைத் தூண்டும்.—மத்தேயு 6:7, 8.

8. ஜெபிப்பதற்கு இசைவாக நாம் எப்படிச் செயல்படலாம்?

8 நாம் செய்ய வேண்டிய மற்றொரு காரியம், நம்முடைய ஜெபங்களுக்கு இசைவாக செயல்படுவதாகும், அப்போதுதான் நம்முடைய ஜெபங்களைக் கடவுள் கேட்பார். நாம் எதற்காக ஜெபிக்கிறோமோ அதற்காக நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டுமென யெகோவா எதிர்பார்க்கிறார். உதாரணத்திற்கு, “எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்” என்று ஜெபித்தோமானால், கிடைக்கிற எந்தவொரு வேலையிலும் நாம் கடினமாக உழைக்க வேண்டும். (மத்தேயு 6:11; 2 தெசலோனிக்கேயர் 3:10) அதோடு, ஏதோவொரு மாம்ச பலவீனத்திலிருந்து மீளுவதற்காக ஜெபித்தோமானால், சபலத்தைத் தூண்டுகிற எந்தவொரு சந்தர்ப்ப சூழ்நிலையையும் தவிர்ப்பதற்கு நாம் கவனமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். (கொலோசெயர் 3:5) இந்த அடிப்படை காரியங்களைத் தவிர, ஜெபத்தைக் குறித்த இன்னும் சில கேள்விகளுக்கு நாம் விடைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஜெபத்தைக் குறித்த சில கேள்விகளுக்கு விடை

9. யாரிடம், யார் மூலமாக நாம் ஜெபிக்க வேண்டும்?

9 நாம் யாரிடம் ஜெபிக்க வேண்டும்? ‘பரமண்டலங்களிலிருக்கிற பிதாவிடம்’ ஜெபிக்கும்படி இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். (மத்தேயு 6:9) அப்படியானால், நாம் யெகோவா தேவனிடம் மட்டும்தான் ஜெபிக்க வேண்டும். என்றாலும், தம்முடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுடைய ஸ்தானத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார். 5-ம் அதிகாரத்தில் கற்றுக்கொண்டபடி, மீட்கும் பலியைக் கொடுத்து நம்மைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுவிப்பதற்காக இயேசு பூமிக்கு அனுப்பப்பட்டார். (யோவான் 3:16; ரோமர் 5:12) கடவுளால் நியமிக்கப்பட்ட பிரதான ஆசாரியர் அவர்தான், நியாயத்தீர்ப்பு வழங்குபவரும் அவர்தான். (யோவான் 5:22; எபிரெயர் 6:20) அதனால், இயேசுவின் மூலம் ஜெபிக்கும்படியே வேதவசனங்கள் நமக்குச் சொல்கின்றன. இயேசுவே இவ்வாறு கூறினார்: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.” (யோவான் 14:6) நம்முடைய ஜெபங்கள் கேட்கப்பட வேண்டுமானால், இயேசுவின் மூலமாக நாம் யெகோவாவிடம் மட்டுமே ஜெபிக்க வேண்டும்.

10. ஜெபிக்கும்போது குறிப்பிட்ட ஒரு நிலையில் இருப்பது ஏன் அவசியமல்ல?

10 ஜெபிக்கும்போது நாம் ஏதோவொரு விசேஷ நிலையில் இருக்க வேண்டுமா? வேண்டியதில்லை. கைகளை அல்லது உடலை ஒரு குறிப்பிட்ட நிலையில் வைத்து ஜெபிக்க வேண்டுமென யெகோவா எதிர்பார்ப்பதில்லை. வெவ்வேறு நிலைகளில் இருந்தவாறு நாம் ஜெபிக்கலாம் என பைபிள் கற்பிக்கிறது. அதாவது, உட்கார்ந்து, தலைகுனிந்து, முழங்காற்படியிட்டு, நின்று என எந்த நிலையிலும் நாம் ஜெபிக்கலாம். (1 நாளாகமம் 17:16, NW; நெகேமியா 8:6; தானியேல் 6:10; மாற்கு 11:25) மற்றவர்களுக்குத் தெரிகிற மாதிரியான விசேஷ அங்கநிலை அல்ல, ஆனால் சரியான மனநிலைதான் மிக மிக முக்கியம். சொல்லப்போனால், நாம் வேலை செய்து கொண்டிருக்கையிலோ ஏதோவொரு அவசர ஆபத்து நேரிடுகையிலோ, இருக்கிற இடத்திலிருந்தவாறு மனதிற்குள்ளாகக்கூட நாம் ஜெபிக்கலாம். நம்மைச் சுற்றியிருப்பவர்கள் அதைத் துளியும் கவனிக்காதபோதிலும், அத்தகைய ஜெபங்களை யெகோவா கேட்கிறார்.—நெகேமியா 2:1-6.

11. ஜெபத்தில் கேட்பதற்குத் தகுந்த சில சொந்த விஷயங்கள் யாவை?

11 என்னென்ன காரியங்களுக்காக நாம் ஜெபிக்கலாம்? ‘நாம் எதையாகிலும் அவருடைய [யெகோவாவுடைய] சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார்’ என்று பைபிள் விளக்குகிறது. (1 யோவான் 5:14) எனவே, கடவுளுடைய சித்தத்திற்கு இசைவான எந்தவொரு காரியத்திற்காகவும் நாம் ஜெபிக்கலாம். நம்முடைய சொந்தக் கவலைகளுக்காக ஜெபிப்பது அவருடைய சித்தமாக இருக்கிறதா? ஆம், நிச்சயமாக! யெகோவாவிடம் ஜெபிப்பது நெருங்கிய ஒரு நண்பரிடம் பேசுவதைப் போல் இருக்கலாம். ஒளிவுமறைவில்லாமல் பேசி, அவரிடம் நம்முடைய ‘இருதயத்தை ஊற்றிவிடலாம்.’ (சங்கீதம் 62:8) பரிசுத்த ஆவி வேண்டுமெனக் கேட்டு ஜெபிப்பதும் பொருத்தமானதே, ஏனெனில் சரியான காரியங்களைச் செய்ய பரிசுத்த ஆவி நமக்கு உதவும். (லூக்கா 11:13) ஞானமான தீர்மானங்களை எடுப்பதற்கு வேண்டிய வழிநடத்துதலுக்காகவும், இன்னல்களைச் சமாளிப்பதற்கு வேண்டிய பலத்திற்காகவும் நாம் அவரிடம் ஜெபிக்கலாம். (யாக்கோபு 1:5) நாம் ஏதாவது பாவம் செய்துவிட்டால், கிறிஸ்துவுடைய பலியின் அடிப்படையில் கடவுளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். (எபேசியர் 1:3, 7) என்றாலும், நம்முடைய சொந்த விஷயங்களைக் குறித்து மட்டுமே ஜெபிப்பதற்குப் பதிலாக, மற்றவர்களுக்காகவும்​—⁠குடும்ப அங்கத்தினர்களுக்காகவும், சக வணக்கத்தாருக்காகவும்—நாம் ஜெபிக்க வேண்டும்.—அப்போஸ்தலர் 12:5; கொலோசெயர் 4:12.

12. ஜெபிக்கும்போது, நம் பரலோகத் தகப்பனைப் பற்றிய விஷயங்களுக்கு எவ்வாறு முதலிடம் கொடுக்கலாம்?

12 ஜெபிக்கும்போது, யெகோவா தேவனைப் பற்றிய விஷயங்களுக்கே நாம் முதலிடம் கொடுக்க வேண்டும். அவர் அளித்துள்ள எல்லா நன்மையான காரியங்களுக்காகவும் மனமார்ந்த நன்றியையும் துதியையும் செலுத்த நிச்சயமாகவே நமக்கு நல்ல காரணங்கள் இருக்கின்றன. (1 நாளாகமம் 29:10-13) மத்தேயு 6:9-13-⁠ல் பதிவு செய்யப்பட்டுள்ள மாதிரி ஜெபத்தை இயேசு கற்றுக்கொடுக்கையில், கடவுளுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டுமென, அதாவது புனிதமாக்கப்பட வேண்டுமென, ஜெபிக்கச் சொன்னார். அடுத்ததாக, கடவுளுடைய ராஜ்யம் வர வேண்டுமென்றும் அவருடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூமியிலேயும் செய்யப்பட வேண்டுமென்றும் ஜெபிக்கச் சொன்னார். யெகோவா தேவனைப் பற்றிய இந்த முக்கிய விஷயங்களைக் குறிப்பிட்ட பிறகுதான் தனிப்பட்ட அக்கறைகளுக்கு இயேசு கவனம் செலுத்தினார். அதேபோல, நம்முடைய ஜெபங்களிலும் கடவுளுக்கு மிக முக்கியமான இடத்தைக் கொடுக்கும்போது, நம்முடைய சொந்த நலனில் மட்டுமே நாம் அக்கறையோடு இல்லை என்பதைக் காண்பிக்கிறோம்.

13. நாம் எவ்வளவு நேரம் ஜெபிக்க வேண்டும் என்பதைக் குறித்து வேதவசனங்கள் என்ன காண்பிக்கின்றன?

13 எவ்வளவு நேரம் நாம் ஜெபிக்க வேண்டும்? தனிப்பட்ட ஜெபங்களையும் பொது ஜெபங்களையும் எவ்வளவு நேரம் செய்ய வேண்டுமென பைபிள் வரையறுப்பதில்லை. சாப்பிடும் முன் சொல்லப்படுகிற சுருக்கமான ஜெபமாகவும் அது இருக்கலாம், அல்லது யெகோவாவிடம் இருதயத்தை ஊற்றி நாம் செய்யும் நீண்ட ஜெபமாகவும் அது இருக்கலாம். (1 சாமுவேல் 1:12, 15) ஆனால், எல்லார் முன்பாகவும் பகட்டான விதத்தில் நீண்ட நேரம் ஜெபித்த சுயநீதிமான்களை இயேசு கண்டனம் செய்தார். (லூக்கா 20:46, 47) அத்தகைய ஜெபங்களை யெகோவா விரும்புவதில்லை. ஜெபங்கள் நம் இருதயத்திலிருந்து ஏறெடுக்கப்படுவதே முக்கியமானது. ஆகையால், நாம் எவ்வளவு நேரம் ஜெபிக்க வேண்டுமென்பது, தேவைகளையும் சூழ்நிலைகளையும் பொறுத்து வித்தியாசப்படலாம்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் உங்கள் ஜெபம் கேட்கப்படும்

14. “எப்பொழுதும் ஜெபம் பண்ண வேண்டும்” என பைபிள் சொல்வது எதை அர்த்தப்படுத்துகிறது, இதில் என்ன விஷயம் ஆறுதலளிக்கிறது?

14 எத்தனை முறை நாம் ஜெபிக்க வேண்டும்? “சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ண வேண்டும்,” “ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்,” “இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்” என்றெல்லாம் பைபிள் நம்மை ஊக்குவிக்கிறது. (லூக்கா 18:1; ரோமர் 12:12; 1 தெசலோனிக்கேயர் 5:17) ஆனால் அதற்காக நாள் முழுக்க ஒவ்வொரு விநாடியும் யெகோவாவிடம் ஜெபித்துக்கொண்டே இருக்க வேண்டுமென இந்த வசனங்கள் அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக, யெகோவாவிடம் நாம் தவறாமல் ஜெபம் செய்ய வேண்டுமென்றும், அவர் நமக்காகச் செய்கிற நற்காரியங்களுக்காக எப்போதும் நன்றி செலுத்த வேண்டுமென்றும், வழிநடத்துதலுக்காக, ஆறுதலுக்காக, பலத்திற்காக அவருடைய உதவியை நாம் நாட வேண்டுமென்றும் பைபிள் நமக்கு அறிவுறுத்துகிறது. எவ்வளவு நேரம் அல்லது எத்தனை முறை ஜெபத்தில் நாம் யெகோவாவிடம் பேச வேண்டும் என்பதைக் குறித்து அவர் எந்த வரையறையையும் வைக்காதது ஆறுதலளிக்கிறது, அல்லவா? ஜெபம் என்ற பெரிய பாக்கியத்திற்கு நாம் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாய் இருந்தால், நம்முடைய பரலோகத் தகப்பனிடம் ஜெபத்தில் பேசுவதற்கு ஏராளமான வாய்ப்புகளைக் கண்டடைவோம்.

15. தனிப்பட்ட ஜெபங்களின் முடிவிலும் பொது ஜெபங்களின் முடிவிலும் நாம் ஏன் “ஆமென்” சொல்ல வேண்டும்?

15 ஜெபத்தின் முடிவில் நாம் ஏன் “ஆமென்” சொல்ல வேண்டும்? “ஆமென்” என்ற வார்த்தை, “நிச்சயமாக நடக்கட்டும்,” அல்லது “அப்படியே ஆகட்டும்” என அர்த்தப்படுத்துகிறது. தனிப்பட்ட ஜெபங்களின் அல்லது பொது ஜெபங்களின் முடிவில் “ஆமென்” சொல்வது சரியானதென்று வேதப்பூர்வ உதாரணங்கள் காட்டுகின்றன. (1 நாளாகமம் 16:36; சங்கீதம் 41:13) நம்முடைய சொந்த ஜெபங்களின் முடிவில் “ஆமென்” சொல்லும்போது, உள்ளப்பூர்வமாகவே அந்த வார்த்தைகளைச் சொன்னோம் என்பதை நாம் ஊர்ஜிதப்படுத்துகிறோம். மற்றவர்கள் செய்கிற பொது ஜெபங்களின் முடிவில், “ஆமென்” என்று மனதிற்குள்ளாகவோ சத்தமாகவோ சொல்லும்போது, அந்த ஜெபத்தில் கூறப்பட்ட விஷயங்களை நாம் ஒப்புக்கொள்வதைக் காட்டுகிறோம்.—1 கொரிந்தியர் 14:16.

நம்முடைய ஜெபங்களுக்குக் கடவுள் எப்படிப் பதிலளிக்கிறார்

16. ஜெபம் சம்பந்தமாக எதைக் குறித்து நாம் உறுதியாக இருக்கலாம்?

16 யெகோவா உண்மையிலேயே ஜெபங்களுக்குப் பதிலளிக்கிறாரா? ஆம், அதில் சந்தேகமே இல்லை! ‘ஜெபத்தைக் கேட்கிறவர்’ லட்சக்கணக்கானோரின் உள்ளப்பூர்வமான ஜெபங்களுக்குப் பதிலளிக்கிறார் என்று உறுதியாக நம்புவதற்கு நம்மிடம் பலமான காரணங்கள் இருக்கின்றன. (சங்கீதம் 65:2) நம்முடைய ஜெபங்களுக்கு யெகோவா பல்வேறு வழிகளில் பதிலளிக்கலாம்.

17. நம்முடைய ஜெபங்களுக்குப் பதிலளிக்க, தேவதூதர்களையும் பூமியிலுள்ள தமது ஊழியர்களையும் கடவுள் பயன்படுத்துகிறார் என நாம் ஏன் சொல்லலாம்?

17 ஜெபங்களுக்குப் பதிலளிக்க யெகோவா தமது தேவதூதர்களையும் பூமியிலுள்ள தமது ஊழியர்களையும் பயன்படுத்துகிறார். (எபிரெயர் 1:13, 14) பைபிளைப் புரிந்துகொள்ள உதவிகேட்டு கடவுளிடம் ஜெபித்த அநேகரை யெகோவாவின் ஊழியர்கள் சீக்கிரத்திலேயே சந்தித்தது பற்றிய ஏராளமான அனுபவங்கள் இருக்கின்றன. அத்தகைய அனுபவங்கள் ராஜ்யப் பிரசங்க வேலையில் தேவதூதர்களின் வழிநடத்துதல் இருப்பதற்கு அத்தாட்சி அளிக்கின்றன. (வெளிப்படுத்துதல் 14:6) ரொம்பவும் கஷ்டத்திலிருக்கும்போது நாம் செய்கிற ஜெபங்களுக்குப் பதிலளிப்பதற்காக, ஒரு கிறிஸ்தவரின் மனதைத் தூண்டி அவர் மூலமாய் யெகோவா நமக்கு உதவி செய்யலாம்.—நீதிமொழிகள் 12:25; யாக்கோபு 2:16.

நமக்கு உதவி செய்யும்படி ஒரு கிறிஸ்தவரின் மனதைத் தூண்டுவதன் மூலம் யெகோவா நம் ஜெபத்திற்குப் பதிலளிக்கலாம்

18. தமது ஊழியர்களின் ஜெபங்களுக்குப் பதிலளிக்க யெகோவா பரிசுத்த ஆவியையும் பைபிளையும் எப்படிப் பயன்படுத்துகிறார்?

18 அதுமட்டுமல்ல, தமது ஊழியர்களுடைய ஜெபங்களுக்குப் பதிலளிக்க யெகோவா தேவன் தம்முடைய பரிசுத்த ஆவியையும், தம்முடைய வார்த்தையான பைபிளையும் பயன்படுத்துகிறார். சோதனைகளைச் சமாளிக்க உதவுமாறு நாம் ஜெபிக்கும்போது, தம்முடைய பரிசுத்த ஆவி மூலமாக நமக்கு வழிநடத்துதலையும் பலத்தையும் தந்து அவர் பதிலளிக்கலாம். (2 கொரிந்தியர் 4:7) ஆலோசனைத் தரும்படி நாம் செய்யும் ஜெபங்களுக்குப் பெரும்பாலும் பைபிளிலிருந்தே அவர் நமக்குப் பதிலளிக்கலாம்; ஞானமான தீர்மானங்கள் எடுப்பதற்கு யெகோவா அளிக்கும் உதவி அதில்தான் இருக்கிறது. தனிப்பட்ட பைபிள் படிப்பின்போதோ, இந்தப் புத்தகத்தைப் போன்ற கிறிஸ்தவப் பிரசுரங்களை வாசிக்கும்போதோ நமக்குத் தேவையான வசனம் ஒருவேளை நம் கண்களில் படலாம். நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய வேதப்பூர்வ குறிப்புகள் கிறிஸ்தவக் கூட்டம் ஒன்றில் நம் கவனத்திற்குக் கொண்டு வரப்படலாம், அல்லது நம்மீது அக்கறையுள்ள சபை மூப்பர் ஒருவர் சொல்லும் குறிப்புகள் அதை நமக்கு உணர்த்தலாம்.—கலாத்தியர் 6:1.

19. நம்முடைய ஜெபங்களுக்குப் பதில் கிடைக்காதது போல் தெரிகையில், நாம் எதை மனதில் வைக்க வேண்டும்?

19 நம்முடைய ஜெபங்களுக்குப் பதிலளிப்பதில் யெகோவா தாமதிப்பது போல் தெரிந்தால், அவரால் அதற்குப் பதிலளிக்க முடியவில்லை என்று நாம் ஒருபோதும் நினைத்துக்கொள்ளக் கூடாது. மாறாக, அவரது சித்தத்தின்படி, அவருக்குரிய நேரத்தில்தான் ஜெபங்களுக்குப் பதிலளிப்பார் என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். நம்முடைய தேவைகள் என்ன என்பதையும் அவற்றை எப்படிப் பூர்த்தி செய்வது என்பதையும் குறித்து நம்மைவிட அவருக்கு எத்தனையோ மடங்கு நன்றாகத் தெரியும். ஆனால், நாம் ‘கேட்டுக்கொண்டே இருப்பதற்கும், தேடிக்கொண்டே இருப்பதற்கும், தட்டிக்கொண்டே இருப்பதற்குமே’ அவர் பெரும்பாலும் விட்டுவிடுகிறார். (லூக்கா 11:5-10, NW) அப்படிக் கடவுளிடம் நாம் தொடர்ந்து கேட்பது, அதைப் பெற்றுக்கொள்ள நாம் ரொம்பவே ஆசையோடு இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது; அதோடு, நம்முடைய விசுவாசம் உண்மையானது என்பதையும் காட்டுகிறது. நமக்குப் புலப்படாத விதத்தில்கூட யெகோவா நம் ஜெபங்களுக்குப் பதிலளிக்கலாம். உதாரணத்திற்கு, ஏதோவொரு சோதனையைக் குறித்து நாம் ஜெபிக்கும்போது, அதை நீக்கிவிடுவதற்குப் பதிலாக, அதைச் சகிப்பதற்கு வேண்டிய பலத்தை அவர் நமக்குத் தரலாம்.—பிலிப்பியர் 4:13.

20. ஜெபம் என்ற அரும்பெரும் பாக்கியத்தை நாம் ஏன் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்?

20 பரந்து விரிந்திருக்கும் இந்தப் பிரபஞ்சத்தின் சிருஷ்டிகர், தம்மிடம் சரியான விதத்தில் ஜெபிக்கிற அத்தனை பேரிடமும் நெருக்கமாக இருக்கிறார், இதைக் குறித்து நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கலாம்! (சங்கீதம் 145:18) எனவே, ஜெபம் என்ற அரும்பெரும் பாக்கியத்தை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வோமாக! அப்படிச் செய்யும்போது, ஜெபத்தைக் கேட்கிறவரான யெகோவாவிடம் இன்னுமதிகமாக நெருங்கி வரும் சந்தோஷமான வாய்ப்பை நாம் பெற்றுக்கொள்வோம்.