Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிற்சேர்க்கை

மேசியாவின் வருகையை தானியேல் தீர்க்கதரிசனம் முன்னறிவிக்கிற விதம்

மேசியாவின் வருகையை தானியேல் தீர்க்கதரிசனம் முன்னறிவிக்கிற விதம்

இயேசுவின் பிறப்பிற்கு 500-க்கும் அதிக வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்தான் தானியேல் தீர்க்கதரிசி. என்றாலும், இயேசு எப்போது மேசியாவாக (கிறிஸ்துவாக) பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்படுவார், அதாவது நியமிக்கப்படுவார் என்ற விவரங்களை தானியேலுக்கு யெகோவா இவ்விதமாக வெளிப்படுத்தினார்: “இப்போதும் நீ அறிந்து உணர்ந்துகொள்ள வேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவது முதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும்.”—தானியேல் 9:25.

மேசியா எப்போது வருவார் என்பதை உறுதிசெய்ய முதலாவது மேசியாவின் வருகைக்குரிய காலப்பகுதி எப்போது துவங்குகிறது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். தானியேல் தீர்க்கதரிசனத்தின்படி, அந்தக் காலப்பகுதி, “எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவது முதல்” துவங்குகிறது. எப்போது இந்தக் ‘கட்டளை வெளிப்பட்டது’? பைபிள் எழுத்தாளரான நெகேமியாவின்படி, ‘அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் வருஷத்திலே’ எருசலேமின் மதில்களைத் திரும்பக் கட்டுவதற்கான கட்டளை வெளிப்பட்டது. (நெகேமியா 2:1, 5-8) அர்தசஷ்டா ராஜா ஆட்சிசெய்த முதல் முழு ஆண்டு பொ.ச.மு. 474 என்பதைச் சரித்திராசிரியர்கள் உறுதிப்படுத்துகிறார்கள். ஆகையால், அவருடைய ஆட்சியின் 20-ம் வருடம் பொ.ச.மு. 455 ஆகும். இப்போது, தானியேல் முன்னறிவித்த மேசியானிய தீர்க்கதரிசனத்திற்கான துவக்க வருடத்தை நாம் தெரிந்துகொண்டோம், அது பொ.ச.மு. 455.

‘பிரபுவாகிய மேசியாவின்’ வருகைக்குரிய காலப்பகுதி எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்பதைத் தானியேல் குறிப்பாகத் தெரிவித்தார். அது “ஏழு வாரமும், அறுபத்திரண்டு வாரமும்” நீடிக்கும், அதாவது மொத்தம் 69 வாரங்கள் நீடிக்கும் என்று சொன்னார். இது எவ்வளவு நீண்ட காலப்பகுதி? இந்த வாரங்கள் ஏழு நாட்களையுடைய வாரங்கள் அல்ல, ஆனால் இவை வார வருடங்கள் என்பதை ஏராளமான பைபிள் மொழிபெயர்ப்புகள் குறிப்பிடுகின்றன. அதாவது, ஒவ்வொரு வாரமும் ஏழு வருடங்களைக் குறிக்கிறது. வார வருடங்களை, அதாவது ஏழு வருடங்களாலான காலப்பகுதிகளைப் பற்றிப் பூர்வத்திலிருந்த யூதர்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. உதாரணத்திற்கு, ஒவ்வொரு ஏழாவது வருடத்தின்போதும் அவர்கள் ஓய்வு வருடத்தை ஆசரித்தார்கள். (யாத்திராகமம் 23:10, 11) ஆகையால், தீர்க்கதரிசனத்திலுள்ள 69 வாரங்கள் 69 வார வருடங்களுக்குச் சமம், அதாவது மொத்தம் 483 வருடங்களுக்குச் சமம்.

இப்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம் கணக்கிட்டுப் பார்ப்பதாகும். பொ.ச.மு. 455-லிருந்து 483 வருடங்களை ஒவ்வொன்றாக எண்ணினால், பொ.ச. 29-ம் ஆண்டிற்கு நாம் வருகிறோம். மிகச் சரியாகவே, அந்த வருடத்தில்தான் இயேசு முழுக்காட்டப்பட்டு மேசியாவாக ஆனார்! * (லூக்கா 3:1, 2, 21, 22) பைபிள் தீர்க்கதரிசனத்தின் எப்பேர்ப்பட்ட நிறைவேற்றம் இது!

^ பாரா. 2 பொ.ச.மு. 455-லிருந்து பொ.ச.மு. 1 வரை 454 வருடங்கள் ஆகின்றன. பொ.ச.மு. 1-லிருந்து பொ.ச. 1 வரை ஒரு வருடம் (பூஜ்ய வருடம் என ஒன்று இருக்கவில்லை). பிறகு பொ.ச. 1-லிருந்து பொ.ச. 29 வரை 28 வருடங்கள் ஆகின்றன. இந்த மூன்று எண்களையும் கூட்டிப்பார்த்தால் மொத்தம் 483 வருடங்கள் நமக்குக் கிடைக்கின்றன. 70-வது வார வருடத்தின் மத்திபத்தில், அதாவது பொ.ச. 33-ம் ஆண்டில், இயேசு ‘சங்கரிக்கப்பட்டார்.’ (தானியேல் 9:24, 26) தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்! புத்தகத்தில் 11-ம் அதிகாரத்தைப் பார்க்கவும்; அதோடு வேதாகமத்தின் பேரில் உட்பார்வை (ஆங்கிலம்), தொகுதி 2-ல் பக்கங்கள் 899-901-ஐப் பார்க்கவும். இவ்விரண்டு புத்தகங்களும் யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டவை.