Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிற்சேர்க்கை

1914—பைபிள் தீர்க்கதரிசனத்தின் முக்கிய வருடம்

1914—பைபிள் தீர்க்கதரிசனத்தின் முக்கிய வருடம்

குறிப்பிடத்தக்க சம்பவங்கள் 1914-ம் ஆண்டில் நடைபெறுமென அதற்கு ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்கு முன்னரே பைபிள் மாணாக்கர் அறிவித்தார்கள். அந்தச் சம்பவங்கள் யாவை, 1914-ஐ மிக முக்கியமான வருடமாக எது சுட்டிக்காட்டுகிறது?

லூக்கா 21:24-ல் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, இயேசு பின்வருமாறு சொன்னார்: “புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்.” எருசலேம் யூத தேசத்தின் தலைநகராக விளங்கியது; தாவீது ராஜாவின் வம்சாவளியில் வந்த ராஜாக்கள் இங்கிருந்துதான் ஆட்சி செய்து வந்தார்கள். (சங்கீதம் 48:1, 2) அந்த ராஜாக்கள் புறஜாதியாரின் தலைவர்களிலிருந்து வித்தியாசப்பட்டவர்களாய் இருந்தார்கள். எப்படியெனில், கடவுளுடைய பிரதிநிதிகளாக “கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] சிங்காசனத்தில்” அவர்கள் அமர்ந்திருந்தார்கள். (1 நாளாகமம் 29:23) இவ்வாறு, எருசலேம் யெகோவாவின் அரசாட்சிக்கு ஓர் அடையாளமாக இருந்தது.

ஆனால், யெகோவாவின் அரசாட்சி ‘புறஜாதியாரால் மிதிக்கப்படுவது’ எப்போது ஆரம்பமானது, எப்படி ஆரம்பமானது? பொ.ச.மு. 607-ல் பாபிலோனியர் எருசலேமைக் கைப்பற்றியபோது இது ஆரம்பமானது. அது முதற்கொண்டு, யாருமே ‘யெகோவாவுடைய சிங்காசனத்தில்’ அமரவில்லை, தாவீதின் வம்சாவளியில் வந்த ராஜாக்களின் ஆட்சி தடைப்பட்டது. (2 இராஜாக்கள் 25:1-26) இப்படி ‘மிதிக்கப்படுவது’ என்றென்றும் தொடருமா? இல்லை, எருசலேமின் கடைசி ராஜாவான சிதேக்கியாவைக் குறித்து எசேக்கியேலின் தீர்க்கதரிசனம் பின்வருமாறு சொன்னது: “பாகையைக் கழற்று, கிரீடத்தை எடுத்துப்போடு . . . உரிமைக்காரனானவர் வருமட்டும் அது இல்லாதிருக்கும்; அவருக்கே அதைக் கொடுப்பேன்.” (எசேக்கியேல் 21:26, 27) தாவீதின் கிரீடத்தைப் பெற்றுக்கொள்கிற ‘உரிமைக்காரர்’ கிறிஸ்து இயேசுவே. (லூக்கா 1:32, 33) ஆகையால், இயேசு ராஜாவாக ஆகும்போது, ‘மிதிக்கப்படுகிற’ அந்தக் காலம் முடிவுறும்.

அந்த முக்கியமான சம்பவம் எப்போது நடைபெறும்? குறிப்பிட்ட ஒரு காலம்வரை புறஜாதியார் ஆட்சி செய்வார்கள் என்று இயேசு சொன்னார். அந்தக் காலம் எதுவரை நீடிக்கும் என்பதைப் புரிந்துகொள்ள தானியேல் 4-ம் அதிகாரத்தில் ஒரு குறிப்பு உள்ளது. பாபிலோனிய ராஜாவான நேபுகாத்நேச்சார் கண்ட ஒரு தீர்க்கதரிசனக் கனவு அதில் விவரிக்கப்பட்டிருக்கிறது. பிரமாண்டமான ஒரு மரம் வெட்டப்படுவது போல அவன் கண்டான். அந்த மரம் வளராதபடிக்கு, அதன் அடிமரம் இரும்பினாலும் வெண்கலத்தினாலும் விலங்கிடப்பட்டது. அதன்மேல் ‘ஏழு காலங்கள் கடந்துபோக வேண்டும்’ என்று ஒரு தேவதூதன் அறிவித்தார்.—தானியேல் 4:10-16.

பைபிளில், அரசாட்சியைப் பிரதிநிதித்துவம் செய்வதற்காக மரங்கள் சிலசமயம் பயன்படுத்தப்பட்டுள்ளன. (எசேக்கியேல் 17:22-24; 31:2-5) எனவே கடவுளுடைய அரசாட்சி, அதாவது எருசலேமில் கடவுளுடைய பிரதிநிதிகளாக ஆட்சி செய்த ராஜாக்கள் மூலம் வெளிப்பட்ட கடவுளுடைய அரசாட்சி, திடீரென முடிவுக்கு வரும் என்பதையே அந்த அடையாளப்பூர்வ மரம் வெட்டப்படுவது அர்த்தப்படுத்துகிறது. என்றாலும், தற்காலிகமாகத்தான், அதாவது ‘ஏழு காலங்களுக்கு’ மட்டும்தான், ‘எருசலேம் மிதிக்கப்படும்’ என்று அந்தத் தரிசனம் குறிப்பிட்டுக் காட்டியது. ஏழு காலங்கள் என்பது எவ்வளவு நீண்ட காலப்பகுதியைக் குறிக்கிறது?

மூன்றரைக் காலங்கள் ‘ஆயிரத்திருநூற்று அறுபது நாட்களுக்குச்’ சமம் என்று வெளிப்படுத்துதல் 12:6, 14 சுட்டிக்காட்டுகிறது. ஆக, “ஏழு காலங்கள்” என்பது அதுபோல இரண்டு மடங்காக, அதாவது 2,520 நாட்களாக, இருக்க வேண்டும். ஆனால், புறஜாதியார் கடவுளுடைய அரசாட்சியை ‘மிதிப்பது’ எருசலேமின் வீழ்ச்சிக்குப் பிறகு, வெறும் 2,520 நாட்களில் நின்றுவிடவில்லை. அப்படியானால், இந்தத் தீர்க்கதரிசனம் அதைவிட அதிகமான காலத்தை உட்படுத்துவது தெளிவாக இருக்கிறது. எண்ணாகமம் 14:34 மற்றும் எசேக்கியேல் 4:6-ன் அடிப்படையில், ‘ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு வருஷமாக’ எடுத்துக்கொண்டால், “ஏழு காலங்கள்” என்பது 2,520 வருடங்கள் ஆகும்.

பொ.ச.மு. 607 அக்டோபரில், பாபிலோனியரால் எருசலேம் வீழ்த்தப்பட்டு, தாவீதின் வம்சாவளியில் வந்த ராஜா சிங்காசனத்திலிருந்து நீக்கப்பட்டபோது அந்த 2,520 வருட காலப்பகுதி ஆரம்பமானது. அக்டோபர் 1914-ல் அது முடிவுற்றது. அந்தச் சமயத்தில்தான், “புறஜாதியாரின் காலம்” நிறைவேறியது, அதோடு இயேசு கிறிஸ்து பரலோகத்தில் ராஜாவாக அமர்த்தப்பட்டார். *சங்கீதம் 2:1-6; தானியேல் 7:13, 14.

இயேசு பரலோக ராஜாவாக ‘வந்திருக்கும்’ காலத்தில் பரபரப்பூட்டுகிற உலகச் சம்பவங்கள், அதாவது போர்கள், பஞ்சங்கள், பூமியதிர்ச்சிகள், கொள்ளை நோய்கள் ஆகியவை அவர் முன்னறிவித்தபடியே நடந்து வந்திருக்கின்றன. (மத்தேயு 24:3-8; லூக்கா 21:11) கடவுளுடைய பரலோக ராஜ்யம் 1914-ல்தான் பிறந்தது என்பதற்கும் அவ்வருடத்தில்தான் இந்தப் பொல்லாத உலகிற்கு ‘கடைசி நாட்கள்’ ஆரம்பமாயின என்பதற்கும் அத்தகைய சம்பவங்கள் அதிகாரப்பூர்வ அத்தாட்சிகளை அளிக்கின்றன.—2 தீமோத்தேயு 3:1-5.

^ பாரா. 4 பொ.ச.மு. அக்டோபர் 607-லிருந்து பொ.ச.மு. 1 அக்டோபர் வரை 606 வருடங்கள் ஆகின்றன. பூஜ்ய வருடம் என்று ஒன்றில்லை என்பதால், பொ.ச.மு. 1 அக்டோபரிலிருந்து பொ.ச. 1914 அக்டோபர் வரை 1,914 வருடங்கள் ஆகின்றன. 606 வருடங்களையும் 1,914 வருடங்களையும் கூட்டினால், 2,520 வருடங்கள் நமக்குக் கிடைக்கின்றன. பொ.ச.மு. 607-ல் எருசலேமின் வீழ்ச்சி பற்றிய தகவல்களுக்கு, வேதாகமத்தின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில் “க்ரொனாலஜி” (காலக்கணிப்பு முறை) என்ற தலைப்பையும் வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது என்ற புத்தகத்தில் 285-ம் பக்கத்தையும் காண்க. இவ்விரண்டு புத்தகங்களும் யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டவை.