Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 6

தரமான பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்க...

தரமான பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்க...

“எல்லாவற்றையும் கடவுளுடைய மகிமைக்காகவே செய்யுங்கள்.” —1 கொரிந்தியர் 10:31.

1, 2. பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

ருசியான ஒரு பழத்தை சாப்பிடுவதற்காகக் கையில் எடுக்கிறீர்கள். அதில் ஒரு பாகம் அழுகியிருப்பதைப் பார்க்கிறீர்கள். இப்போது என்ன செய்வீர்கள்? அழுகிய பாகத்தையும் சேர்த்து சாப்பிடுவீர்களா? அல்லது முழுப் பழத்தையும் தூக்கியெறிந்துவிடுவீர்களா? அல்லது அழுகிய பாகத்தை வெட்டி எறிந்துவிட்டு நல்ல பாகத்தை மட்டும் சாப்பிடுவீர்களா?

2 ஒரு விதத்தில் பார்த்தால், பொழுதுபோக்கும் இந்தப் பழத்தைப் போல்தான் இருக்கிறது. சில சமயங்களில் ஏதாவது பொழுதுபோக்கில் ஈடுபடலாமென நினைக்கிறீர்கள், ஆனால் இன்றைக்கு பொழுதுபோக்குகள் பெரும்பாலும் தரங்கெட்டிருப்பதை, சீரழிந்திருப்பதை உணருகிறீர்கள். அப்போது என்ன செய்வீர்கள்? சிலர் இந்த உலகின் பொழுதுபோக்கு எவ்வளவு மோசமாக இருந்தாலும் சரி, அதை அனுபவித்து மகிழ்கிறார்கள். இன்னும் சிலர் தீய செல்வாக்கினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக எல்லாவித பொழுதுபோக்கையும் தவிர்த்துவிடுகிறார்கள். மற்றவர்கள் தீய பொழுதுபோக்கைக் கவனமாகத் தவிர்த்துவிட்டு, ஓரளவு நல்ல பொழுதுபோக்கை அவ்வப்போது அனுபவித்து மகிழ்கிறார்கள். கடவுளுடைய அன்புக்குப் பாத்திரமானவராய் இருக்க நீங்கள் என்ன செய்வீர்கள்?

3. இப்போது நாம் எதைப் பற்றி சிந்திக்கப் போகிறோம்?

3 நம்மில் அநேகர் தீய பொழுதுபோக்கைத் தவிர்த்துவிட்டு, ஓரளவு நல்ல பொழுதுபோக்கை அனுபவிக்கவே விரும்புவோம். இன்னும் சொல்லப்போனால், ஆரோக்கியமான பொழுதுபோக்கை மட்டுமே அனுபவிக்க விரும்புவோம். அப்படியானால், ஒரு பொழுதுபோக்கு தரமானதா இல்லையா என்பதை எப்படித் தீர்மானிப்பதென நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு முன்பு, நாம் தேர்ந்தெடுக்கும் பொழுதுபோக்கு நம் வழிபாட்டை எப்படிப் பாதிக்கும் என்பதைச் சிந்திக்கலாம்.

“எல்லாவற்றையும் கடவுளுடைய மகிமைக்காகவே செய்யுங்கள்”

4. கடவுளுக்கு நம்மை அர்ப்பணித்திருப்பது பொழுதுபோக்கு விஷயத்தில் நம் கண்ணோட்டத்தை எப்படிப் பாதிக்க வேண்டும்?

4 1946-ல் ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவர் ஒருவர் சில காலத்திற்கு முன்பு இவ்வாறு சொன்னார்: “ஞானஸ்நானம் எடுக்கிறவர்களுக்காகக் கொடுக்கப்படும் பேச்சை நான் எப்போதுமே தவறவிட்டதில்லை. ஞானஸ்நானம் எடுப்பவர்களில் நானும் ஒருவன் என்று நினைத்து அந்தப் பேச்சைக் கூர்ந்து கவனிப்பேன்.” அதற்கான காரணத்தை அவரே சொன்னார்: “யெகோவாவுக்கு என்னை அர்ப்பணித்திருக்கிறேன் என்பதை அடிக்கடி எனக்கு நினைப்பூட்டிக்கொண்டதால்தான் இன்றுவரை யெகோவாவுக்கு உண்மையாய் நிலைத்திருக்கிறேன்.” அவர் சொன்னதை நிச்சயம் நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள். வாழ்நாள் முழுவதும் யெகோவாவுக்குச் சேவை செய்வதாக நீங்கள் கொடுத்த வாக்கை அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்ளும்போது, அவருக்கு உண்மையாய் நிலைத்திருக்க தூண்டப்படுவீர்கள். (பிரசங்கி 5:4-ஐ வாசியுங்கள்.) கடவுளுக்கு உங்களை அர்ப்பணித்திருப்பதைக் குறித்து எண்ணிப் பார்த்தால், கிறிஸ்தவ ஊழியத்தின் மீது நீங்கள் சரியான கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ள முடியும்; அதுமட்டுமல்ல, வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும், ஏன், பொழுதுபோக்கு விஷயத்திலும் சரியான கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ள முடியும். அப்போஸ்தலன் பவுல் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு எழுதியபோது இதைத்தான் குறிப்பிட்டார்: “நீங்கள் சாப்பிட்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மகிமைக்காகவே செய்யுங்கள்.”—1 கொரிந்தியர் 10:31.

5. ரோமர் 12:1-ல் மறைந்துள்ள எச்சரிக்கையைப் புரிந்துகொள்ள லேவியராகமம் 22:18-20 நமக்கு எப்படி உதவுகிறது?

5 வாழ்க்கையில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் யெகோவாவின் வழிபாட்டோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. இதைச் சக கிறிஸ்தவர்களின் மனதில் பதியவைப்பதற்காக வலிமைமிக்க ஒரு வார்த்தையை பவுல் பயன்படுத்தினார். “உங்களுடைய உடலை உயிருள்ளதும் பரிசுத்தமுள்ளதும் கடவுளுக்குப் பிரியமுள்ளதுமான பலியாக அர்ப்பணியுங்கள். சிந்திக்கும் திறனைப் பயன்படுத்தி அவருக்குப் பரிசுத்த சேவை செய்யுங்கள்” என்று அவர்களை உந்துவித்தார். (ரோமர் 12:1) உங்களுடைய உடல் என்று சொல்லும்போது, அதில் உங்கள் மனம், இதயம், பலம் ஆகியவை உட்பட்டிருக்கின்றன. கடவுளுக்குச் சேவை செய்ய இவை அனைத்தையும் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். (மாற்கு 12:30) அப்படி முழுமூச்சோடு செய்யும் சேவையை பவுல் பலிக்கு ஒப்பிட்டுப் பேசுகிறார். பலி என்ற வார்த்தையில் ஓர் எச்சரிக்கை மறைந்துள்ளது. பழுதுள்ள பலியைக் கடவுள் ஏற்றுக்கொள்ள மாட்டாரென திருச்சட்டம் கூறுகிறது. (லேவியராகமம் 22:18-20) அதுபோலவே ஒரு கிறிஸ்தவர் ஆன்மீக அர்த்தத்தில் செலுத்தும் பலி பழுதுள்ளதாய் இருந்தால் கடவுள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார். அப்படியானால், அது எப்படிப் பழுதுள்ளதாகிவிடலாம்?

6, 7. ஒரு கிறிஸ்தவர் தன் உடலை எப்படிக் கறைபடுத்திவிடலாம், அதனால் என்ன விளைவுகள் ஏற்படலாம்?

6 ‘உங்களுடைய உடலை [“உடலுறுப்புகளை,” அடிக்குறிப்பு] . . . பாவத்துக்கு அர்ப்பணிக்காதீர்கள்’ என்று ரோமிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு எழுதிய கடிதத்தில் பவுல் அறிவுரை கூறினார். (ரோமர் 6:12-14) ரோமர் 3:13-18-ல் உடலின் பாவ செயல்களைப் பற்றி பவுல் குறிப்பிட்டிருந்தார். பாவத்தின் பிடியில் உள்ள மனிதர்களைப் பற்றி அதில் வாசிக்கிறோம்: “அவர்கள் வாயைத் திறந்தாலே சாபங்களும் கசப்பான வார்த்தைகளும்தான் வருகின்றன.” “அவர்களுடைய கால்கள் இரத்தத்தைச் சிந்த ஓடுகின்றன.” ஒரு கிறிஸ்தவர் தன் “உடலுறுப்புகளை” இப்படிப்பட்ட பாவச் செயல்களுக்குப் பயன்படுத்தும்போது தன் உடலைக் கறைபடுத்திக்கொள்கிறார். உதாரணமாக, ஒரு கிறிஸ்தவர் வேண்டுமென்றே கீழ்த்தரமான காட்சிகளைப் பார்த்தால், அதாவது ஆபாசக் காட்சிகளை, கொடூரக் காட்சிகளைப் பார்த்தால், தன் கண்களைப் ‘பாவத்திற்கு அர்ப்பணிக்கிறார்.’ அதன் விளைவாக தன் முழு உடலையும் கறைபடுத்திக்கொள்கிறார். அதனால், கடவுளுக்கு அவர் செய்யும் சேவை பரிசுத்தமான பலியாகவோ பிரியமான பலியாகவோ இருப்பதில்லை. (உபாகமம் 15:21; 1 பேதுரு 1:14-16; 2 பேதுரு 3:11) தரங்கெட்ட பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுப்பதால் எவ்வளவு பெரிய இழப்பு!

7 ஆம், கிறிஸ்தவர்களாகிய நாம் மோசமான பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுத்தால் மோசமான விளைவுகளைச் சந்திப்போம். எனவே, நாம் தேர்ந்தெடுக்கும் பொழுதுபோக்கு கடவுளுக்கு நாம் செலுத்தும் பலியின் மதிப்பைக் கூட்ட வேண்டும், பலியைக் கறைபடுத்திவிடக்கூடாது. சரி, ஒரு பொழுதுபோக்கு தரமானதா இல்லையா என்பதை நாம் எப்படித் தீர்மானிப்பதென இப்போது சிந்திக்கலாம்.

“பொல்லாததை அடியோடு வெறுத்துவிடுங்கள்”

8, 9. (அ) பொழுதுபோக்கை எப்படி இரண்டு வகையாகப் பிரிக்கலாம்? (ஆ) என்ன வகையான பொழுதுபோக்கை நாம் தவிர்க்கிறோம், ஏன்?

8 பொதுவாக, பொழுதுபோக்கை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, கிறிஸ்தவர்கள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டியது. மற்றொன்று, நல்லதா கெட்டதா என அவர்களாகவே தீர்மானிக்க வேண்டியது. இப்போது முதல் வகை பொழுதுபோக்கைப் பற்றி, அதாவது கிறிஸ்தவர்கள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டிய பொழுதுபோக்கைப் பற்றி, சிந்திக்கலாம்.

9 சில வகை பொழுதுபோக்குகள், பைபிள் நேரடியாகக் கண்டனம் செய்கிறவற்றை சித்தரிப்பதாக முதல் அதிகாரத்தில் படித்தோம். உதாரணத்திற்கு, சில வெப் சைட்டுகள், சினிமாக்கள், டிவி நிகழ்ச்சிகள், இசை போன்றவற்றில் கொடூரமான, ஆபாசமான, பேய்த்தனமான விஷயங்கள் நிறைந்திருக்கின்றன; அவை அருவருப்பான செயல்களையும் ஒழுக்கயீனமான பழக்கங்களையும் ஊக்குவிக்கின்றன. இப்படிப்பட்ட கீழ்த்தரமான பொழுதுபோக்குகள் பைபிள் நியமங்களுக்கு அல்லது சட்டங்களுக்கு முரணான பழக்கவழக்கங்களை நல்லது போல் காட்டுவதால் உண்மைக் கிறிஸ்தவர்கள் இவற்றை அறவே ஒதுக்கித்தள்ள வேண்டும். (அப்போஸ்தலர் 15:28, 29; 1 கொரிந்தியர் 6:9, 10; வெளிப்படுத்துதல் 21:8) இதுபோன்ற ஆரோக்கியமற்ற பொழுதுபோக்குகளைத் தவிர்க்கும்போது, நீங்கள் ‘பொல்லாததை அடியோடு வெறுக்கிறீர்கள்’ என்பதையும் எப்போதும் ‘கெட்டதைவிட்டு விலகுகிறீர்கள்’ என்பதையும் யெகோவாவுக்குத் தெரியப்படுத்துகிறீர்கள். அதோடு, உங்கள் விசுவாசம் ‘வெளிவேஷமில்லாதது’ என நிரூபிக்கிறீர்கள்.—ரோமர் 12:9; சங்கீதம் 34:14; 1 தீமோத்தேயு 1:5.

10. பொழுதுபோக்கைப் பற்றி சிலர் எப்படி நியாயம் கற்பிக்கிறார்கள், அது ஏன் ஆபத்தானது?

10 ஆனால், ஒழுக்கங்கெட்ட நடத்தையைச் சித்தரிக்கும் பொழுதுபோக்குகளைப் பார்ப்பதில் எந்தத் தீங்குமில்லை எனச் சிலர் நினைக்கலாம். ‘டிவியிலோ சினிமாவிலோ பார்ப்பதையெல்லாம் நான் ஒருபோதும் செய்ய மாட்டேன்’ என்று அவர்கள் நியாயம் கற்பிக்கலாம். ஆனால், இது ஆபத்தானது, வஞ்சகமானது. (எரேமியா 17:9-ஐ வாசியுங்கள்.) யெகோவா கண்டனம் செய்பவற்றை நாம் ரசித்துப் பார்த்தால் ‘பொல்லாததை அடியோடு வெறுக்கிறோம்’ என்று சொல்ல முடியுமா? கெட்ட காரியங்களை நாம் திரும்பத் திரும்பப் பார்த்தால் நம் உணர்ச்சிகள் மழுங்கிவிடும். (சங்கீதம் 119:70; 1 தீமோத்தேயு 4:1, 2) இத்தகைய பழக்கம் நம்முடைய நடத்தையை மட்டுமல்ல பிறருடைய தவறான நடத்தையைப் பற்றிய நம் கண்ணோட்டத்தையும் பாதிக்கும்.

11. பொழுதுபோக்கு விஷயத்தில், கலாத்தியர் 6:7-ல் குறிப்பிடப்பட்டிருப்பது உண்மை என்று எப்படிச் சொல்லலாம்?

11 உண்மையிலேயே இது அநேகரைப் பாதித்திருக்கிறது. சில கிறிஸ்தவர்கள் மோசமான காட்சிகளைப் பழக்கமாய்ப் பார்த்து வந்ததால் ஒழுக்கங்கெட்ட செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். “ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்வான்” என்பதை அவர்கள் அனுபவப்பட்டுதான் புரிந்திருக்கிறார்கள். (கலாத்தியர் 6:7) ஆனால், இந்தப் பரிதாபமான நிலையை அவர்கள் தவிர்த்திருக்கலாம். உங்கள் மனதில் நல்ல விஷயங்களைக் கவனமாக விதைத்தால், நல்ல பலன்களைச் சந்தோஷமாய் அறுவடை செய்வீர்கள்.—“ நான் எப்படிப்பட்ட பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?” என்ற தலைப்பிலுள்ள பெட்டியைப் பக்கம் 77-ல் காண்க.

பைபிள் நியமங்களின் அடிப்படையில் சொந்தத் தீர்மானங்கள் எடுப்பது

12. பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்க கலாத்தியர் 6:5 நமக்கு எப்படி உதவுகிறது, அதேசமயம் சொந்தத் தீர்மானம் எடுக்க நமக்கு எது வழிகாட்டியாக இருக்கிறது?

12 இப்போது இரண்டாவது வகை பொழுதுபோக்கைப் பற்றி சிந்திக்கலாம், அதாவது பைபிள் நேரடியாகக் கண்டனம் செய்யாத அல்லது நல்லதா கெட்டதா என்று நேரடியாகச் சொல்லாத பொழுதுபோக்கைப் பற்றி சிந்திக்கலாம். இப்படிப்பட்ட பொழுதுபோக்கைப் பொறுத்தவரை, எது ஆரோக்கியமானது என்பதை ஒரு கிறிஸ்தவர் சொந்தமாகத் தீர்மானிக்க வேண்டும். (கலாத்தியர் 6:5-ஐ வாசியுங்கள்.) இருந்தாலும், இந்த விஷயத்தில் பைபிள் நமக்கு வழிகாட்டியாய் இருக்கிறது. பைபிள் நியமங்கள் யெகோவாவின் சிந்தையைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகின்றன. அவற்றை நாம் கவனமாய் ஆராய்ந்தால் எல்லா விஷயங்களிலும், ஏன், பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்திலும் “யெகோவாவின் விருப்பம் என்னவென்று” புரிந்துகொள்ள முடியும்.—எபேசியர் 5:17.

13. யெகோவாவுக்குப் பிரியமில்லாத பொழுதுபோக்கைத் தவிர்க்க எது நம்மைத் தூண்டும்?

13 உண்மைதான், கிறிஸ்தவர்கள் எல்லாரிடமும் பகுத்தறிவு ஒரே அளவில் இல்லை. (பிலிப்பியர் 1:9) அதோடு, பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில், ஒவ்வொருவருடைய ரசனையும் வேறுபடுகிறது. ஆகவே, எல்லா கிறிஸ்தவர்களும் ஒரே மாதிரியான தீர்மானம் எடுப்பார்களென எதிர்பார்க்க முடியாது. ஆனால், நம்முடைய மனதிலும் இதயத்திலும் யெகோவாவுடைய நியமங்கள் நிறைந்திருந்தால் அவருக்குப் பிரியமில்லாத பொழுதுபோக்கைத் தவிர்ப்பதில் கவனமாக இருப்போம்.—சங்கீதம் 119:11, 129; 1 பேதுரு 2:16.

14. (அ) பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் கருத்தில்கொள்ள வேண்டிய அம்சம் என்ன? (ஆ) ஆன்மீகக் காரியங்களுக்கு நாம் எப்படி முதலிடம் கொடுக்கலாம்?

14 பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் கருத்தில்கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான அம்சம்: நேரம். நீங்கள் பார்க்கும் படம் அல்லது கேட்கும் பாடல் நீங்கள் எதைச் சரியென நினைக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது; ஆனால், அதற்காக நீங்கள் செலவிடும் நேரமோ வாழ்க்கையில் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. பார்க்கப்போனால், கிறிஸ்தவர்களுக்கு ஆன்மீகக் காரியங்களே அதிமுக்கியம். (மத்தேயு 6:33-ஐ வாசியுங்கள்.) அப்படியானால், ஆன்மீகக் காரியங்களுக்கு நீங்கள் எப்படி முதலிடம் கொடுக்கலாம்? “நீங்கள் ஞானமில்லாதவர்களாக நடக்காமல், ஞானமுள்ளவர்களாக நடப்பதற்கு அதிக கவனம் செலுத்துங்கள். உங்கள் நேரத்தை மிக நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் கூறினார். (எபேசியர் 5:15, 16) பொழுதுபோக்குக்காக இவ்வளவு நேரம்தான் செலவிட வேண்டும் என்று நீங்கள் நிர்ணயித்துவிட்டால் ‘மிக முக்கியமான காரியங்களுக்கு,’ அதாவது ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவும் காரியங்களுக்கு, செலவிட உங்களுக்கு அதிக நேரம் கிடைக்கும்.—பிலிப்பியர் 1:10.

15. பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கும்போது மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது ஏன் நல்லது?

15 பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கும்போது மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. எப்படி? பழத்தைப் பற்றிய உதாரணத்தை மறுபடியும் சிந்தித்துப் பாருங்கள். அழுகிய பாகத்தை தெரியாத்தனமாகச் சாப்பிட்டு விடக்கூடாது என்பதற்காக அந்தப் பாகத்தை மட்டுமல்ல அதைச் சுற்றியுள்ள பாகத்தையும் சேர்த்தே வெட்டிவிடுவீர்கள். அதுபோலவே, பொழுதுபோக்கு விஷயத்திலும் பைபிள் நியமங்களுக்கு முரணாக இருப்பதை மட்டுமல்லாமல், ஆட்சேபணைக்குரிய பொழுதுபோக்குகளையும் ஆன்மீக நலனுக்குக் கெடுதல் விளைவிப்பதைப் போலத் தோன்றுகிற பொழுதுபோக்குகளையும் ஞானமுள்ள கிறிஸ்தவர் தவிர்த்துவிடுகிறார். (நீதிமொழிகள் 4:25-27) கடவுளுடைய வார்த்தையிலுள்ள அறிவுரையைக் கவனமாகப் பின்பற்றினால் நீங்களும் அவ்வாறே செய்ய முடியும்.

‘சுத்தமானவற்றையே யோசித்துக்கொண்டிருங்கள்’

பொழுதுபோக்கு விஷயத்தில் கடவுளுடைய நியமங்களைப் பின்பற்றினால் ஆன்மீக ரீதியில் நமக்குப் பாதுகாப்பு

16. (அ) ஒழுக்க விஷயத்தில் நமக்கு யெகோவாவின் கண்ணோட்டம் இருக்கிறது என்பதை எப்படிக் காட்டலாம்? (ஆ) பைபிள் நியமங்களைப் பின்பற்றுவதே உங்கள் வாழ்க்கை முறையாக இருக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

16 பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கும்போது, முதலில் யெகோவாவின் கண்ணோட்டம் என்ன என்பதை உண்மைக் கிறிஸ்தவர்கள் சிந்தித்துப் பார்க்கிறார்கள். யெகோவாவின் உணர்ச்சிகளையும் நெறிமுறைகளையும் பைபிள் வெளிப்படுத்துகிறது. உதாரணத்திற்கு, யெகோவா வெறுக்கும் காரியங்களை சாலொமோன் ராஜா பட்டியலிடுகிறார். “பொய் பேசும் நாவு, அப்பாவிகளின் இரத்தத்தைச் சிந்தும் கைகள், சதித்திட்டங்கள் போடுகிற இதயம், கெட்டதைச் செய்ய வேகமாக ஓடுகிற கால்கள்” ஆகியவை அவற்றில் சில. (நீதிமொழிகள் 6:16-19) யெகோவாவின் கண்ணோட்டம் உங்கள்மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்? “யெகோவாவை நேசிக்கிறவர்களே, கெட்ட காரியங்களை வெறுத்துவிடுங்கள்” என்று சங்கீதக்காரன் சொன்னார். (சங்கீதம் 97:10) நீங்கள் தேர்ந்தெடுக்கும் பொழுதுபோக்கு, யெகோவா வெறுப்பதை நீங்களும் வெறுக்கிறீர்கள் என்பதைக் காட்ட வேண்டும். (கலாத்தியர் 5:19-21) இதை மறந்துவிடாதீர்கள்: மற்றவர்களோடு இருக்கும்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைவிட தனியாக இருக்கும்போது என்ன செய்கிறீர்கள் என்பது நீங்கள் உண்மையில் எப்படிப்பட்ட நபரென காட்டும். (சங்கீதம் 11:4; 16:8) ஒழுக்க விஷயத்தில் யெகோவாவின் உணர்ச்சிகளைப் பிரதிபலிக்க வேண்டுமென்ற ஆசை உங்களுக்கு உண்மையிலேயே இருந்தால், எப்போதும் பைபிள் நியமங்களுக்கு இசைவாக தீர்மானம் எடுப்பீர்கள். அது உங்கள் வாழ்க்கை முறையாகவும் ஆகிவிடும்.—2 கொரிந்தியர் 3:18.

17. பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?

17 நீங்கள் தேர்ந்தெடுக்கும் பொழுதுபோக்கு யெகோவாவின் விருப்பத்திற்கு இசைவாக இருக்கிறதா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள வேறென்ன செய்யலாம்? ‘இது என்னையும் கடவுளோடுள்ள என் பந்தத்தையும் எப்படிப் பாதிக்கும்?’ என்று யோசித்துப் பாருங்கள். எடுத்துக்காட்டாக, ஒரு சினிமாவைப் பார்ப்பதா வேண்டாமா என தீர்மானிக்கும் முன்பு ‘இந்த சினிமாவில் வரும் விஷயங்கள் என் மனசாட்சியை எப்படிப் பாதிக்கும்?’ என்று கேட்டுக்கொள்ளுங்கள். பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் எந்த நியமங்கள் உதவும் என்பதை இப்போது சிந்திப்போம்.

18, 19. (அ) நாம் தேர்ந்தெடுக்கும் பொழுதுபோக்கு ஆரோக்கியமானதா என்பதைத் தீர்மானிக்க பிலிப்பியர் 4:8-ல் உள்ள நியமம் எப்படி உதவும்? (ஆ) தரமான பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்க வேறெந்த நியமங்கள் உங்களுக்கு உதவும்? (அடிக்குறிப்பைக் காண்க.)

18 பிலிப்பியர் 4:8-ல் முக்கியமான ஒரு நியமம் உள்ளது. “உண்மையானவை எவையோ, அதிமுக்கியமானவை எவையோ, நீதியானவை எவையோ, சுத்தமானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, மெச்சத்தக்கவை எவையோ, ஒழுக்கமானவை எவையோ, பாராட்டுக்குரியவை எவையோ அவற்றையே யோசித்துக்கொண்டிருங்கள்” என்று அதில் வாசிக்கிறோம். உண்மைதான், இங்கு பவுல் பொழுதுபோக்கைப் பற்றி பேசவில்லை, இதயத்தில் நாம் தியானிக்கிற விஷயங்களைப் பற்றி பேசினார்; அவை கடவுளுக்குப் பிரியமானவையாக இருக்க வேண்டும். (சங்கீதம் 19:14) ஆனால், இந்த வசனத்திலுள்ள நியமத்தைப் பொழுதுபோக்கு விஷயத்திற்கும் பொருத்தலாம். எப்படி?

19 ‘நான் தேர்ந்தெடுக்கும் சினிமா, வீடியோ கேம்ஸ், இசை, அல்லது மற்ற பொழுதுபோக்குகள் என் மனதை “சுத்தமான” விஷயங்களால் நிரப்புகின்றனவா?’ என்று கேட்டுக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, ஒரு சினிமாவைப் பார்த்த பிறகு எப்படிப்பட்ட காட்சிகள் உங்கள் மனதை ஆக்கிரமிக்கின்றன? இனிமையான, கண்ணியமான, புத்துணர்ச்சியூட்டுகிற காட்சிகள் ஆக்கிரமித்தால், அந்தப் பொழுதுபோக்கு ஆரோக்கியமானது என்று நீங்கள் தெரிந்துகொள்ளலாம். ஒருவேளை ஆபாசமான காட்சிகள் உங்கள் மனதை ஆக்கிரமித்தால், அது ஆரோக்கியமற்ற பொழுதுபோக்கு, தீங்கான பொழுதுபோக்கு என்று தெரிந்துகொள்ளலாம். (மத்தேயு 12:33; மாற்கு 7:20-23) ஏன் அப்படிச் சொல்கிறோம்? ஒழுக்கயீனமான விஷயங்களை நீங்கள் மனதில் அசைபோட்டால் உங்களுக்கு மனசமாதானம் இல்லாமல் போய்விடும். பைபிளின் அடிப்படையில் பயிற்றுவிக்கப்பட்ட உங்கள் மனசாட்சி கறைபட்டுவிடும். கடவுளோடு உங்களுக்கு இருக்கும் பந்தமும் கெட்டுவிடும். (எபேசியர் 5:5; 1 தீமோத்தேயு 1:5, 19) இப்படிப்பட்ட பொழுதுபோக்கு உங்களுக்குத் தீங்கிழைக்கும் என்பதால் அதை அறவே தவிர்த்துவிட உறுதியாய் இருங்கள். * (ரோமர் 12:2) “வீணான காரியங்களைப் பார்க்காதபடி என் கண்களைத் திருப்புங்கள்” என்று யெகோவாவிடம் ஜெபம் செய்த சங்கீதக்காரனைப் போல் நீங்களும் ஜெபம் செய்யுங்கள்.—சங்கீதம் 119:37.

மற்றவர்களுக்குப் பிரயோஜனமானதையே தேடுங்கள்

20, 21. நல்ல பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்க 1 கொரிந்தியர் 10:23, 24 எப்படி உதவுகிறது?

20 தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி தீர்மானம் எடுக்கும்போது நாம் மனதில் வைக்க வேண்டிய ஒரு முக்கியமான நியமத்தை பவுல் குறிப்பிட்டார்: “எல்லாவற்றையும் அனுபவிக்க ஒருவனுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், எல்லாமே பலப்படுத்துவதில்லை. ஒவ்வொருவனும் தனக்குப் பிரயோஜனமானதைத் தேடாமல், மற்றவர்களுக்குப் பிரயோஜனமானதையே தேட வேண்டும்.” (1 கொரிந்தியர் 10:23, 24) நல்ல பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்க இந்த நியமம் எப்படி உதவுகிறது? உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் தேர்ந்தெடுக்கும் பொழுதுபோக்கு மற்றவர்களை எந்த விதத்தில் பாதிக்கும்?’

21 ஒரு குறிப்பிட்ட பொழுதுபோக்கை அனுபவிக்க உங்களுக்கு “அதிகாரம் இருக்கிறது” என்று நீங்கள் நினைப்பதால், அதை அனுபவிப்பதில் எந்தத் தவறுமில்லை என்று உங்கள் மனசாட்சி சொல்லலாம். ஆனால், சக கிறிஸ்தவர்கள் சிலருடைய மனசாட்சி அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது என்பது உங்களுக்குத் தெரிய வந்தால் அந்தப் பொழுதுபோக்கைத் தவிர்த்துவிட நீங்கள் தீர்மானிக்கலாம். ஏனென்றால், பவுல் சொன்னபடி, ‘உங்களுடைய சகோதரர்களுக்கு எதிராக . . . பாவம் செய்ய’ நீங்கள் விரும்புவதில்லை; ஏன், ‘கிறிஸ்துவுக்கு எதிராக பாவம் செய்யவும்’ நீங்கள் விரும்புவதில்லை. உங்கள் சகோதரர்கள் கடவுளுக்கு உண்மையாய் இருக்க நீங்கள் தடைக்கல்லாய் இருந்தால் அவர்களுக்கு எதிராகப் பாவம் செய்கிறீர்கள். அதனால், மற்றவர்களுக்கு “தடைக்கல்லாகிவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்” என்ற புத்திமதியை ஏற்று நடக்கிறீர்கள். (1 கொரிந்தியர் 8:12; 10:32) ஒரு பொழுதுபோக்கை அனுபவிக்க “அதிகாரம்” இருந்தாலும் மற்றவர்களை அது ‘பலப்படுத்தாது’ என்றால் கிறிஸ்தவர்கள் அதைத் தவிர்த்துவிடுகிறார்கள்; இவ்வாறு, கரிசனையோடும் விவேகத்தோடும் பவுல் கொடுத்த அறிவுரைக்குக் கீழ்ப்படிகிறார்கள்.—ரோமர் 14:1; 15:1.

22. மற்றவர்களின் தனிப்பட்ட கருத்தைக் கிறிஸ்தவர்கள் ஏன் மதிக்க வேண்டும்?

22 மற்றவர்களுக்குப் பிரயோஜனமானதை நாடும் விஷயத்தில் இன்னொரு அம்சமும் உள்ளது. சில பொழுதுபோக்கு மட்டும்தான் நல்லது, மற்றெல்லா பொழுதுபோக்கும் கெட்டது என்று ஒரு கிறிஸ்தவரின் மனசாட்சி சொல்லலாம். ஆனால், தன் கருத்தை மற்றவர்கள்மீது அவர் திணிக்கக்கூடாது. அப்படித் திணித்தால், நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டும் அனைவரும் தன் வேகத்துக்கு ஈடுகொடுத்து ஓட்ட வேண்டுமென்று எதிர்பார்க்கும் ஓட்டுநரைப் போல் அவர் இருப்பார். அப்படி எதிர்பார்ப்பது நியாயமாய் இருக்காது. எனவே, இப்படிப்பட்ட மனசாட்சி உள்ள ஒருவர் கிறிஸ்தவ அன்பின் நிமித்தம் பிறருடைய கருத்தை மதிக்க வேண்டும். அதாவது, பொழுதுபோக்கு விஷயத்தில் பிறருக்கு மாறுபட்ட கருத்து இருந்தாலும் அது கிறிஸ்தவ நியமங்களுக்கு இசைவாக இருந்தால் அதை மதிக்க வேண்டும். அப்படி மதித்தால், அவர் ‘நியாயமானவர் என்பது எல்லாருக்கும் தெரியவரும்.’—பிலிப்பியர் 4:5; பிரசங்கி 7:16.

23. நீங்கள் தேர்ந்தெடுக்கும் பொழுதுபோக்கு தரமான பொழுதுபோக்கு என்பதை எப்படி நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்?

23 அப்படியானால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் பொழுதுபோக்கு தரமான பொழுதுபோக்கு என்பதை எப்படி நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்? கடவுளுடைய வார்த்தை நேரடியாகக் கண்டனம் செய்கிற பொழுதுபோக்கை ஒதுக்கித்தள்ளுங்கள்; அதாவது கீழ்த்தரமான, ஒழுக்கயீனமான காரியங்களை அப்பட்டமாகச் சித்தரிக்கிற எல்லாவித பொழுதுபோக்கையும் ஒதுக்கித்தள்ளுங்கள். பைபிள் நேரடியாகக் கண்டனம் செய்யாத பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதா வேண்டாமா என்பதை தெய்வீக நியமங்கள் அடிப்படையில் தீர்மானியுங்கள். உங்கள் மனசாட்சியைக் கறைபடுத்தும் பொழுதுபோக்கைத் தவிருங்கள். மற்றவர்களுடைய, முக்கியமாகச் சக கிறிஸ்தவர்களுடைய, உணர்ச்சிகளைப் புண்படுத்தும் பொழுதுபோக்குகளைத் தவிர்த்துவிட தயங்காதீர்கள். இப்படிச் செய்ய திடத்தீர்மானமாய் இருக்கும்போது கடவுளுக்கு மகிமை சேர்ப்பீர்கள். நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் கடவுளுடைய அன்புக்குப் பாத்திரமானவர்களாய் இருப்பீர்கள்.

^ பாரா. 19 பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்க உதவும் வேறு சில நியமங்கள்: நீதிமொழிகள் 3:31; 13:20; எபேசியர் 5:3, 4; கொலோசெயர் 3:5, 8, 20.