Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிற்சேர்க்கை

சபைநீக்கம் செய்யப்பட்டவரை எப்படி நடத்த வேண்டும்?

சபைநீக்கம் செய்யப்பட்டவரை எப்படி நடத்த வேண்டும்?

நம்முடைய குடும்பத்தாரோ நெருங்கிய நண்பரோ ஏதாவது பாவம் செய்துவிடலாம்; அவர் மனம் திருந்தாவிட்டால் சபையிலிருந்து நீக்கப்படலாம். அப்போது வேதனையில் நம் மனம் துடியாய் துடிக்கலாம். ஆனாலும், இவ்விஷயத்தில் பைபிள் சொல்கிறபடி நடக்கும்போது, கடவுள்மீது அன்பு வைத்திருக்கிறோம் என்பதையும், அவருடைய ஏற்பாட்டை மதித்து நடக்கிறோம் என்பதையும் காட்டுகிறோம். * இது சம்பந்தமாக சில கேள்விகளை இப்போது நாம் சிந்திக்கலாம்.

சபைநீக்கம் செய்யப்பட்டவரை எப்படி நடத்த வேண்டும்? “சகோதரன் என்று அழைக்கப்படுகிற எவனும் பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவனாகவோ பேராசைப்படுகிறவனாகவோ சிலை வழிபாட்டில் ஈடுபடுகிறவனாகவோ சபித்துப் பேசுகிறவனாகவோ குடிகாரனாகவோ கொள்ளையடிக்கிறவனாகவோ இருந்தால், அப்படிப்பட்டவனோடு பழகுவதை விட்டுவிட வேண்டும். . . . அப்படிப்பட்டவனோடு சேர்ந்து நீங்கள் சாப்பிடவும் கூடாது” என பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 5:11) ‘கிறிஸ்துவின் போதனையில் நிலைத்திருக்காதவர்களை’ பற்றி குறிப்பிடுகையில், “அவனை ஒருபோதும் உங்களுடைய வீட்டுக்குள் சேர்க்காதீர்கள், அவனுக்கு வாழ்த்தும் சொல்லாதீர்கள். அப்படி அவனுக்கு வாழ்த்துச் சொல்கிற ஒருவன் அவனுடைய பொல்லாத செயல்களுக்கு உடந்தையாக இருக்கிறான்” என்றும் பைபிள் சொல்கிறது. (2 யோவான் 9-11) ஆகவே, ஆன்மீக விஷயமாய் இருந்தாலும் சரி வேறெந்த விஷயமாய் இருந்தாலும் சரி, சபைநீக்கம் செய்யப்பட்டவரோடு எவ்வித தொடர்பும் நாம் வைத்துக்கொள்வதில்லை. இதைக் குறித்து, ஆங்கில காவற்கோபுரம், செப்டம்பர் 15, 1981 பக்கம் 25-ல் இவ்வாறு சொல்கிறது: “ஒருவரிடம் ‘ஹலோ’ என்று சொல்வது உரையாடலுக்கு அல்லது நட்புக்கு வழிநடத்தும் ஆரம்பப் படி. ஆகவே, சபைநீக்கம் செய்யப்பட்ட ஒருவருக்கு நாம் ‘ஹலோ’ சொல்ல விரும்புவோமா?”

அவரோடு வைத்திருக்கும் சகவாசத்தை அடியோடு நிறுத்திவிட வேண்டுமா? ஆம், நிறுத்திவிட வேண்டும்; அதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக, நாம் அப்படிச் செய்யும்போது கடவுளுக்கும் அவருடைய வார்த்தைக்கும் விசுவாசமாய் இருப்பதைக் காட்டுகிறோம். நமக்குச் சௌகரியமாக இருந்தால் மட்டுமல்ல, கஷ்டமாக இருந்தாலும்கூட யெகோவாவின் சொல்கேட்டு நடக்கிறோம். அவர்மீது அன்பு வைத்திருப்பதால் அவருடைய எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிகிறோம்; அவர் நியாயமானவர், அன்பானவர் என்றும், நமக்கு மிகவும் பயனளிக்கிற சட்டதிட்டங்களை அளிக்கிறவர் என்றும் நம்புகிறோம். (ஏசாயா 48:17; 1 யோவான் 5:3) இரண்டாவதாக, மனம் திருந்தாத ஒருவரிடமிருந்து விலகியிருப்பதால் ஆன்மீக ரீதியிலும் ஒழுக்க ரீதியிலும் நாம் பாதுகாக்கப்படுகிறோம், சபையிலுள்ள மற்றவர்களும் பாதுகாக்கப்படுகிறார்கள்; அதோடு சபையின் நற்பெயரும் காப்பாற்றப்படுகிறது. (1 கொரிந்தியர் 5:6, 7) மூன்றாவதாக, பைபிள் நியமங்களை நாம் உறுதியாகக் கடைப்பிடிக்கும்போது சபைநீக்கம் செய்யப்பட்டவரும் பயனடையலாம். நீதிவிசாரணைக் குழு எடுத்த தீர்மானத்திற்கு நாம் ஆதரவு காட்டும்போது குற்றம் செய்தவர் திருந்தி வாழ உதவுகிறோம்; அதுவரை மூப்பர்களின் உதவியை அவர் ஏற்றுக்கொள்ளாமல் இருந்தாலும் பிற்பாடு மனம் மாறலாம். பாசமானவர்களும் நேசமானவர்களும் தன்னைவிட்டு ஒதுங்குவதைப் பார்க்கும்போது அவருக்குப் ‘புத்தி வரலாம்’; தான் செய்த குற்றம் எவ்வளவு பெரிது என்பதை உணர்ந்து, யெகோவாவிடம் திரும்பிவர அவர் நடவடிக்கை எடுக்கலாம்.—லூக்கா 15:17.

உறவினர் ஒருவர் சபைநீக்கம் செய்யப்பட்டால்? குடும்பத்தாருடன் நமக்குள்ள பாசப்பிணைப்பு யெகோவாவுக்கு நாம் விசுவாசமாய் இருப்பதற்கு ஒரு பெரிய சோதனையாக அமையலாம்; ஆனாலும், நம் உறவினர் சபைநீக்கம் செய்யப்படும்போது நாம் அவரை எப்படி நடத்த வேண்டும்? எல்லா சூழ்நிலைகளையும் நாம் இங்கே விலாவாரியாகச் சிந்திக்க முடியாது; அதனால் இரண்டு சூழ்நிலைகளை மட்டும் கவனிக்கலாம்.

சில சந்தர்ப்பங்களில், சபைநீக்கம் செய்யப்பட்டவர் தன்னுடைய குடும்பத்தாரோடு சேர்ந்து ஒரே வீட்டில் தங்கியிருக்கலாம். அவர் சபையிலிருந்து நீக்கப்பட்ட காரணத்துக்காக குடும்ப உறவு முறிந்துவிடாது; ஆகவே, அவர் எப்போதும்போல் குடும்பத்தில் ஓர் அங்கத்தினராக இருப்பார். ஆனாலும், தன் நடத்தையினால் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் இடையிலிருந்த ஆன்மீகப் பந்தத்தை அவராகவே அறுத்துக்கொண்டதால் அவருடைய குடும்பத்தார் இனிமேல் அவருடன் ஆன்மீக விஷயங்களில் எந்தவித தொடர்பையும் வைத்துக்கொள்ள முடியாது. உதாரணத்திற்கு, குடும்பத்தார் ஒன்றுகூடி பைபிளைப் படிக்கும்போது அவர் அதில் கலந்துகொள்ள முடியாது. என்றாலும், மைனராக இருக்கும் பிள்ளை சபைநீக்கம் செய்யப்பட்டால், அந்தப் பிள்ளைக்கு அறிவுரையையும் புத்திமதியையும் கொடுக்கிற பொறுப்பு இன்னமும் பொற்றோருக்குத்தான் இருக்கிறது. ஆகவே, அன்பான பெற்றோர் தங்கள் பிள்ளைக்கு பைபிள் படிப்பு நடத்தலாம். *நீதிமொழிகள் 6:20-22; 29:17.

சபைநீக்கம் செய்யப்பட்ட சிலர், ஒருவேளை குடும்பத்தாரோடு இல்லாமல் வேறெங்காவது வசிக்கலாம். இருந்தாலும், முக்கியமான குடும்ப விஷயங்களைப் பற்றி அவருடன் பேச வேண்டிய அவசியம் எப்போதாவது ஏற்படலாம்; ஆனால், அவருடன் அடிக்கடி தொடர்புகொள்ளாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். விசுவாசமுள்ள கிறிஸ்தவ குடும்பத்தார், சபைநீக்கம் செய்யப்பட்ட உறவினரைப் பார்த்துப் பேச சாக்குப்போக்குகளைத் தேட மாட்டார்கள். மாறாக, யெகோவாவுக்கும் அவருடைய அமைப்புக்கும் விசுவாசமாக இருப்பதால், சபைநீக்க ஏற்பாட்டை ஆதரிப்பார்கள். தவறு செய்தவர்மீது அவர்கள் அன்பும் அக்கறையும் வைத்திருப்பதால்தான் இவ்வாறு நடந்துகொள்கிறார்கள்; இதன்மூலம், கொடுக்கப்பட்ட தண்டனையிலிருந்து அவர் பயனடைய உதவுகிறார்கள். *எபிரெயர் 12:11.

^ பாரா. 1 இங்கு சிந்திக்கப்படும் பைபிள் நியமங்கள் சபையிலிருந்து தொடர்பறுத்துக் கொண்டவர்களுக்கும் பொருந்தும்.

^ பாரா. 2 பெற்றோருடன் வசிக்கும் மைனர் பிள்ளைகள் சபைநீக்கம் செய்யப்படும்போது என்ன செய்யலாம் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு காவற்கோபுரம், அக்டோபர் 1, 2001 இதழில் பக்கங்கள் 16-17-ஐயும், ஆகஸ்ட் 1, 1989 இதழில் பக்கம் 22-23-ஐயும் காண்க.

^ பாரா. 3 சபைநீக்கம் செய்யப்பட்ட உறவினரை எப்படி நடத்துவது என்பதன் பேரில் பைபிள் அறிவுரைகளைக் கூடுதலாகத் தெரிந்துகொள்வதற்கு காவற்கோபுரம், அக்டோபர் 1, 1988 இதழில் பக்கங்கள் 21-25-ஐயும், நம் ராஜ்ய ஊழியம், ஆகஸ்ட் 2002 பக்கங்கள் 3, 4-ஐயும் காண்க.