பிற்சேர்க்கை
சுய இன்பப் பழக்கத்தை விட்டொழித்தல்
சுய இன்பப் பழக்கம் கடவுளுக்கு அருவருப்பானது; அது சுயநலத்தைத் தூண்டிவிடுகிறது, மனதைக் கெடுக்கிறது. * இப்பழக்கம் உள்ளவர் காலப்போக்கில் மற்றவர்களைப் போகப்பொருளாகவே பார்ப்பார், அதாவது காம வேட்கையைத் தீர்த்துக்கொள்வதற்கான பொருளாகவே பார்ப்பார். அவரைப் பொறுத்தவரை, உடலுறவு என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலுள்ள அன்பின் வெளிக்காட்டாக இருப்பதில்லை; மாறாக, தற்காலிக இன்பம் தருகிற, காம உணர்ச்சிகளைத் தணிப்பதற்கான ஒரு செயலாக மட்டுமே இருக்கிறது. ஆனால், இந்தப் பழக்கம் காம உணர்ச்சிகளை தற்காலிகமாகவே தணிக்கும். சொல்லப்போனால், சுய இன்பப் பழக்கம் “பாலியல் முறைகேடு, அசுத்தமான நடத்தை, கட்டுக்கடங்காத காமப்பசி” ஆகியவற்றை தூண்டிவிடவே செய்கிறது, உடலுறுப்புகளை மரத்துப்போகச் செய்வதில்லை.—கொலோசெயர் 3:5.
“அன்புக் கண்மணிகளே, . . . உடலிலிருந்தும் உள்ளத்திலிருந்தும் எல்லா கறைகளையும் நீக்கி நம்மைச் சுத்தப்படுத்திக்கொள்வோமாக. கடவுளுக்குப் பயந்து நடந்து பரிசுத்தத்தன்மையை முழுமையாய்க் காட்டுவோமாக” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (2 கொரிந்தியர் 7:1) இந்த அறிவுரையின்படி நடப்பது உங்களுக்குக் கஷ்டமாக இருந்தால் மனமொடிந்து போகாதீர்கள். ‘மன்னிப்பதற்கும்’ உதவி செய்வதற்கும் யெகோவா எப்போதும் ‘தயாராக இருக்கிறார்.’ (சங்கீதம் 86:5; லூக்கா 11:9-13) உங்கள் மனமே உங்களைக் குற்றப்படுத்துவதும், இப்பழக்கத்திலிருந்து விடுபட நீங்கள் விடாமுயற்சி எடுப்பதும்—அப்படியும் எப்போதாவது அந்தப் பழக்கத்தில் மீண்டும் விழுந்தாலும்கூட—உங்களுக்கு நல்ல மனப்பான்மை இருப்பதைக் காட்டுகிறது. “கடவுள் நம் இதயத்தைவிட உயர்ந்தவராக இருக்கிறார், எல்லாவற்றையும் தெரிந்தவராகவும் இருக்கிறார்” என்பதை மனதில் வையுங்கள். (1 யோவான் 3:20) கடவுள் நம் பாவங்களை மட்டுமே பார்ப்பதில்லை; நாம் எப்படிப்பட்ட நபராக இருக்கிறோம் என்பதையும் பார்க்கிறார். அவர் நம்மை நன்கு அறிந்திருப்பதால், இரக்கத்திற்காக நாம் உருக்கமாக மன்றாடும்போது அனுதாபத்தோடு கேட்கிறார். ஆகவே, விடாமல் அவரிடம் ஜெபம் செய்யுங்கள்; பிரச்சினையில் மாட்டிக்கொண்ட ஒரு பிள்ளை எப்படித் தன் அப்பாவிடம் போய் உதவி கேட்குமோ அப்படியே கடவுளிடம் உதவி கேட்டு மனத்தாழ்மையாகவும் ஊக்கமாகவும் ஜெபம் செய்யுங்கள். அப்போது, யெகோவா உங்களுக்குச் சுத்தமான மனசாட்சியைக் கொடுப்பார். (சங்கீதம் 51:1-12, 17; ஏசாயா 1:18) ஆனால், உங்கள் ஜெபங்களுக்கு இசைவாக நீங்கள் செயல்படவும் வேண்டும். உதாரணத்திற்கு, எல்லா விதமான ஆபாசத்தையும் கெட்ட சகவாசத்தையும் விட்டொழிக்க வேண்டும். *
சுய இன்பப் பழக்கத்தை விட்டுவிடுவது உங்களுக்குப் போராட்டமாக இருந்தால், கிறிஸ்தவ பெற்றோரிடமோ ஆன்மீக முதிர்ச்சியும் கரிசனையும் உள்ள நண்பரிடமோ அதைப் பற்றி பேசுங்கள்.^ பாரா. 1 சுய இன்பப் பழக்கம் என்பது பாலுறுப்புகளை தடவி விடுவதை அல்லது தேய்ப்பதைக் குறிக்கிறது; பொதுவாக, உச்சக்கட்ட பரவசநிலையை அது ஏற்படுத்துகிறது.
^ பாரா. 2 அநேகர் தங்கள் வீட்டிலுள்ள கம்ப்யூட்டரை எல்லாரும் புழங்கும் இடத்தில் வைக்கிறார்கள்; ஆபாசத்தைப் பார்க்காதிருப்பதற்கு இது ஒரு நடைமுறை வழி. இன்னும் சிலர், தேவையில்லாத தகவல்களை அகற்றிவிடும் கம்ப்யூட்டர் புரோகிராம்களை வாங்குகிறார்கள். என்றாலும், எந்த புரோகிராமும் முழுமையாக நம்புவதற்கில்லை.
^ பாரா. 1 சுய இன்பப் பழக்கத்தை விட்டொழிப்பதற்கான நடைமுறை ஆலோசனைகளுக்கு, விழித்தெழு! நவம்பர் 2006 இதழில், “இளைஞர் கேட்கின்றனர் . . . இந்தப் பழக்கத்தை முறியடிப்பது எப்படி?” என்ற கட்டுரையையும், இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் புத்தகம், தொகுதி 1-ல் பக்கங்கள் 205-211-ஐயும் காண்க.