Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கேள்வி 1

உயிர் எப்படித் தோன்றியது?

உயிர் எப்படித் தோன்றியது?

நீங்கள் சிறுபிள்ளையாக இருந்தபோது உங்களுடைய அப்பா அம்மாவிடம், “குழந்தை எப்படிப் பிறக்கிறது” என்று கேட்டு அவர்களை வியப்படைய வைத்திருக்கிறீர்களா? அப்போது, அவர்கள் எப்படிப் பிரதிபலித்தார்கள்? உங்களுடைய வயதை மனதில் வைத்து அல்லது அவர்களுடைய சுபாவத்தைப் பொறுத்து, அவர்கள் ஒருவேளை பதில் சொல்லாமல் மழுப்பியிருக்கலாம்; அல்லது, அப்போதைக்கு ஏதோவொரு பதிலைச் சொல்லி சமாளித்திருக்கலாம், அல்லது ஏதாவது கதை சொல்லியிருக்கலாம். ஆனால், அதெல்லாம் பொய் என்று பிற்பாடு உங்களுக்குத் தெரிய வந்திருக்கலாம். இருந்தாலும், குழந்தைகள் வளர்ந்து, கல்யாணம் செய்துகொள்வதற்கு முன்பு என்றாவது ஒருநாள் குழந்தை பிறப்பைப் பற்றி தெரிந்துகொள்வது அவசியம்.

குழந்தை எப்படிப் பிறக்கிறது என்ற கேள்விக்குப் பதில் சொல்ல பெற்றோர் பலர் தயங்குவதைப் போலவே, ‘உயிர் எப்படி வந்தது?’ என்ற மிக அடிப்படை கேள்விக்குப் பதிலளிக்க விஞ்ஞானிகள் சிலரும் தயங்குவதாகத் தெரிகிறது. ஆனால், இந்தக் கேள்விக்குத் தகுந்த பதில் முக்கியம், ஏனென்றால் உயிரைப் பற்றிய ஒருவருடைய கண்ணோட்டத்தையே அது மாற்றலாம். அப்படியானால், உயிர் எப்படித் தோன்றியது?

கருவுற்ற மனித உயிரணு, சுமார் 800 மடங்கு பெரிதாக்கப்பட்டுள்ளது

விஞ்ஞானிகள் பலர் என்ன சொல்கிறார்கள்? கோடானுகோடி ஆண்டுகளுக்கு முன்பு, அலை ஏற்றத்தால் நிரம்பி வழிந்த பழங்கால குளத்தின் ஓரத்தில், அல்லது கடலின் ஆழத்தில், உயிர் தோன்றியதென பரிணாமத்தை நம்புகிற பலர் கூறுகிறார்கள். இதுபோன்ற ஓர் இடத்தில், நீர்க்குமிழிகள் வடிவில் ரசாயனங்கள் தானாகவே ஒன்றிணைந்து சிக்கலான மூலக்கூறுகளை உண்டாக்கின, பின்பு அவை பன்மடங்கில் பெருகின என்று அவர்கள் நினைக்கிறார்கள். இந்தச் “சாதாரண” மூல செல்களிலிருந்தே (ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செல்களிலிருந்தே) பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களும் தற்செயலாய்த் தோன்றியதாக அவர்கள் நம்புகிறார்கள்.

ஆனால், பரிணாமத்தை நம்புகிற வேறுசில பிரபல விஞ்ஞானிகளோ இதை ஒத்துக்கொள்வதில்லை. முதல் செல்களோ அவற்றின் முக்கிய கூட்டுப்பொருட்களோ விண்வெளியிலிருந்து பூமிக்கு வந்திருக்கலாம் என அவர்கள் ஊகிக்கிறார்கள். ஏன்? எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் உயிரற்ற மூலக்கூறுகளிலிருந்து உயிர் தற்செயலாய் உருவாக முடியும் என்பதை அவர்களால் நிரூபிக்க முடியவில்லை. உயிர் எப்படித் தோன்றியது என்பதன் பேரில் நிலவும் இந்தக் குழப்பத்தை 2008-ல் உயிரியல் பேராசிரியர் அலெக்ஸான்டிரே மெய்னஸ் எடுத்துக்காட்டினார். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக “செய்யப்பட்ட பரிசோதனைகளில், மூலக்கூறு கலவையிலிருந்து பூமியில் உயிர் தானாகவே தோன்றியது என்ற ஊகத்தை நிரூபிப்பதற்கு எந்த அத்தாட்சியும் கிடைக்கவில்லை; அறிவியலில் ஏற்பட்டுள்ள வியத்தகு வளர்ச்சியும்கூட இந்த முடிவுக்கு வழிநடத்துவதில்லை”1 என அந்தப் பேராசிரியர் குறிப்பிட்டார்.

அத்தாட்சி என்ன காட்டுகிறது? குழந்தை எப்படிப் பிறக்கிறது என்ற கேள்விக்கான பதில் சர்ச்சைக்கு இடமின்றி தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இருக்கும் ஓர் உயிரிலிருந்துதான் மற்றொரு உயிர் தோன்ற முடியும். அப்படியிருக்கும்போது, கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மட்டும் இந்த அடிப்படை விதி மாறியிருக்குமா? உயிரற்ற ரசாயனங்களிலிருந்து உயிர் தானாகவே தோன்ற முடியுமா? அப்படி நிகழ்வதற்கு ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா?

ஒரு செல் உயிர்வாழ குறைந்தது மூன்று சிக்கலான மூலக்கூறுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், அதாவது DNA (டிஆக்ஸி ரைபோ நியூக்ளிக் அமிலம்), RNA (ரைபோ நியூக்ளிக் அமிலம்) மற்றும் புரோட்டீன்கள் (புரதங்கள்) ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். உயிரற்ற ரசாயன கலவையிலிருந்து முழு வளர்ச்சிபெற்ற உயிர்ச் செல் தற்செயலாய்த் தோன்றியது என இன்றுள்ள அநேக விஞ்ஞானிகள் சொல்ல மாட்டார்கள். அப்படியென்றால், RNA அல்லது புரோட்டீன்கள் தற்செயலாகத் தோன்றுவதற்கு ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா? *

ஸ்டான்லி மில்லர், 1953

உயிர் தற்செயலாகத் தோன்றியிருக்கலாம் என்று அநேக விஞ்ஞானிகள் நம்புவதற்கு காரணம் 1953-ல் செய்யப்பட்ட ஒரு சோதனையே. அந்த வருடத்தில் ஸ்டான்லி எல். மில்லர் சில அமினோ அமிலங்களை, அதாவது புரோட்டீன்களை உருவாக்குவதற்குத் தேவையான அடிப்படை ரசாயனக் கூறுகளை, உண்டாக்கினார். பழங்காலத்தில் பூமியின் விண்வெளியில் இருந்ததாக ஊகிக்கப்பட்ட வாயுக் கலவைக்குள் மின்சாரத்தைச் செலுத்தி இவற்றை உண்டாக்கினார். அதன் பிறகு அமினோ அமிலங்கள் விண்கல் ஒன்றில் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தக் கண்டுபிடிப்புகளை வைத்து உயிரின் எல்லா அடிப்படைக் கூறுகளும் சுலபமாயும் தற்செயலாயும் வந்திருக்கும் என்று சொல்லிவிட முடியுமா?

நியு யார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராபர்ட் ஷப்பைரோ என்ற ஓய்வுபெற்ற வேதியியல் பேராசிரியர் கூறுவதாவது: “மில்லர் செய்ததைப் போன்ற பரிசோதனைகளின் மூலம் உயிரின் எல்லா அடிப்படைக் கூறுகளையும் உண்டாக்க முடியும்... அவை விண்கற்களிலும் இருக்கின்றன... என்று சில எழுத்தாளர்கள் நினைத்துக்கொண்டார்கள். ஆனால், இது உண்மை இல்லை.”2 *

இப்போது RNA மூலக்கூறை எடுத்துக்கொள்ளுங்கள். அது நியூக்ளியோடைடுகள் என அழைக்கப்படும் சிறுசிறு மூலக்கூறுகளால் ஆனது. இந்த நியூக்ளியோடைடு அமினோ அமிலத்திலிருந்து மாறுபட்ட ஒரு மூலக்கூறு, அதேசமயத்தில் அதைவிட சற்றே சிக்கலானது. “எந்த வகை நியூக்ளியோடைடுகளும் மின்சாரத்தைச் செலுத்தியதன் மூலம் ஆய்வுக்கூடத்தில் உண்டாக்கப்பட்டதாகவோ விண்கற்களில் இருந்ததாகவோ இதுவரை அறிக்கை செய்யப்படவில்லை”3 என்று ஷப்பைரோ சொல்கிறார். * அதோடு, தன்னையே இரட்டிப்பாக்கும் RNA மூலக்கூறு அடிப்படை ரசாயன கூறுகள் நிறைந்த ஒரு குளத்திலிருந்து எதேச்சையாக உண்டாவதற்கான வாய்ப்பு “வெகு வெகு அரிது; அப்படியே இந்தப் பிரபஞ்சத்தில் தப்பித்தவறி உண்டானால்கூட அது ஏதோ அதிர்ஷ்டவசமானது என்றே சொல்ல வேண்டும்”4 என்று ஷப்பைரோ மேலும் கூறுகிறார்.

புரோட்டீன்கள் உருவாக RNA (1) தேவை, அதேசமயம் RNA உருவாவதற்கு புரோட்டீன்கள் (2) தேவை. அவற்றில் ஒன்றுகூட தற்செயலாக உருவாக வாய்ப்பில்லாதபோது அவை இரண்டும் எப்படித் தற்செயலாக உருவாக முடியும்? ரைபோசோம்களை (3) பற்றி 2-ஆம் பாகம் அலசும்.

புரோட்டீன் மூலக்கூறுகளைப் பற்றி என்ன சொல்லலாம்? அமினோ அமிலங்களை மிகத் துல்லியமான வரிசைக் கிரமத்தில் ஒன்றிணைப்பதன் மூலம் புரோட்டீன் மூலக்கூறுகளை உண்டாக்க முடியும்; இதற்கு குறைந்தபட்சம் 50 அமினோ அமிலங்களிலிருந்து அதிகபட்சம் பல்லாயிரம் அமினோ அமிலங்கள்வரை தேவைப்படும். ஒரு “சாதாரண” செல்லில் உள்ள சராசரி புரோட்டீனில் 200 அமினோ அமிலங்கள் உள்ளன. அத்தகைய செல்களில்கூட புரோட்டீன்கள் ஆயிரக்கணக்கான வகையில் இருக்கின்றன. 100 அமினோ அமிலங்களைக் கொண்ட ஒரேவொரு புரோட்டீன்கூட எதேச்சையாக இந்தப் பூமியில் உருவாவதற்கு கோடி... கோடி... வாய்ப்புகளில் ஒரு வாய்ப்புக்கூட அரிதுதான்.

ஓர் ஆய்வுக்கூடத்தில் சிக்கலான மூலக்கூறுகளை உருவாக்க திறம்பட்ட ஒரு விஞ்ஞானி தேவை என்றால், செல்லிலுள்ள மிக மிகச் சிக்கலான மூலக்கூறுகள் மட்டும் தானாகத் தோன்றியிருக்க முடியுமா?

பரிணாமத்தை ஆதரிக்கிற ஹூபர்ட் பி. யாக்கி என்ற ஆராய்ச்சியாளர் இன்னும் ஒருபடி மேலே சென்று இவ்வாறு சொல்கிறார்: “‘முதன்முதலில் புரோட்டீன் உருவானது,’ பின்பு அதிலிருந்து உயிர் தோன்றியது என்று சொல்லவே முடியாது.”5 ஏனென்றால், புரோட்டீன்கள் உருவாவதற்கு RNA தேவை; அதேசமயத்தில் RNA உருவாவதற்கு புரோட்டீன்கள் தேவை. அப்படியென்றால், புரோட்டீன்களும் RNA மூலக்கூறுகளும் ஒரே இடத்தில், ஒரே சமயத்தில் தற்செயலாய்த் தோன்ற முடியுமா? அதுவும் அப்படி நடப்பதற்கு கொஞ்சம்கூட சாத்தியம் இல்லாதபோது அவ்வாறு தோன்ற முடியுமா? ஒருவேளை அப்படியே தோன்றியிருந்தாலும், அந்த மூலக்கூறுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு ஓர் உயிரியை உருவாக்க முடியுமா? அதுவும் தன்னையே இரட்டிப்பாக்குகிற... எதன்மீதும் சார்ந்திராமல் தானாகவே வாழ்கிற... ஓர் உயிரியை உருவாக்க முடியுமா? “இப்படித் தற்செயலாக நிகழ்வதற்கான வாய்ப்பு (அதாவது, புரோட்டீன்களும் RNA-வும் தானாகவே ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பு) மிக மிகக் குறைவு” என ‘நாஸா’-வின் விண்ணுயிரியல் (Astrobiology) துறையைச் சேர்ந்த டாக்டர் கேரல் கிளெலன்டு சொல்கிறார். * அவர் தொடர்ந்து சொல்வதாவது: “பூமியில் பழம்பெரும் காலத்தில் புரோட்டீன்கள் அல்லது RNA எப்படித் தானாகவே உருவாயின என்பதைப் புரிந்துகொண்டால் போதும், அவை ஒருங்கிணைந்து செயல்பட்டிருக்கும் விதத்தைக் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை, அது எப்படியோ தற்செயலாக நடந்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் பலர் நினைக்கிறார்கள்.” உயிரின் இந்த அடிப்படைக் கூறுகள் தானாக வந்திருக்கலாம் என்ற தற்போதைய கோட்பாடுகளைக் குறித்து கேரல் சொல்கிறார்: “இதெல்லாம் எப்படி நடந்தது என்பதற்கு அந்தக் கோட்பாடுகள் எதுவுமே திருப்தியான விளக்கம் அளிக்கவில்லை.”6

ஓர் ஆய்வுக்கூடத்தில் சிக்கலான மூலக்கூறுகளை உருவாக்க திறம்பட்ட ஒரு விஞ்ஞானி தேவை என்றால், செல்லிலுள்ள மிக மிகச் சிக்கலான மூலக்கூறுகள் மட்டும் தானாகத் தோன்றியிருக்க முடியுமா?

இந்த உண்மைகள் ஏன் முக்கியம்? உயிர் தற்செயலாய்த் தோன்றியதென நம்புகிற ஆராய்ச்சியாளர்கள் எதிர்ப்படும் சவாலைச் சற்று எண்ணிப்பாருங்கள். உயிர்ச் செல்களில் காணப்படும் அமினோ அமிலங்கள் சிலவற்றை அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். கவனமாய்த் திட்டமிட்டு ஒழுங்கமைப்புடன் செய்யப்பட்ட பரிசோதனைகளிலிருந்து அவற்றைவிட சிக்கலான மற்ற மூலக்கூறுகளை அவர்கள் ஆய்வுக்கூடங்களில் உண்டாக்கியிருக்கிறார்கள். இதேபோல், ஒரு “சாதாரண” செல்லை உருவாக்குவதற்குத் தேவையான மற்றெல்லா பாகங்களையும் தயாரித்துவிடலாம் என அவர்கள் நம்புகிறார்கள். இவர்களுடைய நிலைமையை பின்வரும் விஞ்ஞானிக்கு ஒப்பிடலாம்: இவர் இயற்கையில் கிடைக்கிற தனிமங்களை ஸ்டீல், பிளாஸ்டிக், சிலிக்கான், வயர் போன்ற பொருள்களாக மாற்றுகிறார்; பின்னர் அதை வைத்து ஒரு ரோபோட்டை உண்டாக்குகிறார். பின்பு, அந்த ரோபோட் தன்னைப் போலவே பல ரோபோட்டுகளை உருவாக்கும் விதத்தில் அந்த விஞ்ஞானி அதை புரோகிராம் செய்கிறார். அப்படிச் செய்வதன் மூலம் அவர் எதை நிரூபிக்கிறார்? புத்திக்கூர்மையுள்ள ஒருவரால்தான் மலைக்கவைக்கும் ஓர் இயந்திரத்தை உருவாக்க முடியும் என்பதையே நிரூபிக்கிறார்!

அப்படியே ஒருவேளை விஞ்ஞானிகள் ஒரு செல்லை உண்டாக்கினால்கூட, உண்மையிலேயே அது ஒரு சாதனையாகத்தான் இருக்கும், ஆனால் அந்த செல் தற்செயலாய்த் தோன்ற முடியுமென அவர்களால் நிரூபிக்க முடியுமா? அவர்கள் எதை நிரூபிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதற்கு முற்றிலும் நேர்மாறான ஒன்றையே நிரூபிப்பார்கள், அல்லவா?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உயிர் ஏற்கெனவே இருக்கும் ஓர் உயிரிலிருந்துதான் தோன்ற முடியும் என்பதையே இதுவரை கிடைத்துள்ள விஞ்ஞானப்பூர்வ அத்தாட்சிகள் அனைத்தும் சுட்டிக்காட்டுகின்றன. “சாதாரண” செல்கூட உயிரற்ற ரசாயனங்களிலிருந்து தற்செயலாய்த் தோன்றியதென ஒருவர் நம்புவதற்கு அசாத்திய நம்பிக்கை வேண்டும்.

உண்மைகளை அலசிப்பார்த்த பின்பும், உயிரற்ற ரசாயனங்களிலிருந்து “சாதாரண” செல் தோன்றியது என்பதை நம்ப நீங்கள் தயாராய் இருக்கிறீர்களா? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன்பு, செல் வடிவமைக்கப்பட்டுள்ள விதத்தை உன்னிப்பாய் கவனியுங்கள். அப்படி உன்னிப்பாய்ப் பார்க்கும்போது, உயிர் எங்கிருந்து தோன்றியது என்பதைக் குறித்து விஞ்ஞானிகள் சிலர் கற்பிக்கிற கோட்பாடுகள் நியாயமாக இருக்கின்றனவா அல்லது குழந்தைகள் எப்படிப் பிறக்கிறார்கள் என்பதற்குப் பெற்றோர்கள் சிலர் சொல்கிற கதைகள் போல் இருக்கின்றனவா என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.

^ பாரா. 8 DNA தானாகவே தோன்றுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றனவா என்பதைப் பற்றி “கட்டளைகள் எங்கிருந்து வந்தன?” என்ற 3-ஆம் பாகத்தில் சிந்திக்கப்படும்.

^ பாரா. 10 உயிர் படைக்கப்பட்டது என்று பேராசிரியர் ஷப்பைரோ நம்புவதில்லை. இதுவரை முழுமையாகப் புரிந்துகொள்ளப்படாத ஏதோவொரு விதத்தில் உயிர் தற்செயலாகத் தோன்றியது என்றே அவர் நம்புகிறார்.

^ பாரா. 11 2009-ல், இங்கிலாந்தில், மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நியூக்ளியோடைடுகள் சிலவற்றை ஆய்வுக்கூடத்தில் உருவாக்கியதாகத் தெரிவித்தார்கள். என்றாலும், ஷப்பைரோ என்ன சொல்கிறார் என்றால், “RNA-வின் உலகத்திற்குள் செல்ல நான் வகுத்திருக்கும் அளவுகோலை [அவர்களுடைய பரிசோதனை முறை] துளியும் எட்டுவதில்லை.”

^ பாரா. 13 உயிர் படைக்கப்பட்டது என்று டாக்டர் கிளெலன்டு நம்புவதில்லை. இதுவரை முழுமையாகப் புரிந்துகொள்ளப்படாத ஏதோவொரு விதத்தில் உயிர் தற்செயலாகத் தோன்றியது என்றே நம்புகிறார்.