Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 11

ஒழுக்க விஷயங்களில் புடமிடப்படுதல்​—⁠கடவுளைப் போல பரிசுத்தமாக இருப்பது

ஒழுக்க விஷயங்களில் புடமிடப்படுதல்​—⁠கடவுளைப் போல பரிசுத்தமாக இருப்பது

அதிகாரத்தின் முக்கியக் குறிப்பு

ஒழுக்க நெறிகளை ராஜாதன் மக்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார்

யெகோவாவின் பெரிய ஆன்மீக ஆலயத்தின் வெளிப்பிரகாரத்துக்குப் போகும் வாசலுக்குள் நுழைவதாகக் கற்பனை செய்துபாருங்கள்

1. எசேக்கியேல் பார்த்த என்ன விஷயம் நம்மை பிரமித்துப்போகச் செய்கிறது?

 2,500 வருஷங்களுக்கு முன்பு எசேக்கியேல் தீர்க்கதரிசிக்குக் கிடைத்த அனுபவம் உங்களுக்கும் கிடைத்தால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்? இதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்: ஒரு பிரமாண்டமான, மிகவும் பிரகாசமான ஆலயத்துக்குள் நீங்கள் போகிறீர்கள். பலம்படைத்த ஒரு தேவதூதர் பிரமிப்பூட்டும் அந்த ஆலயத்தை உங்களுக்குச் சுற்றிக்காட்டப் போகிறார். அந்த ஆலயத்துக்கு மூன்று வெளிவாசல்கள் இருக்கின்றன. நீங்கள் ஏழு படிக்கட்டுகள் ஏறிப்போய் அதன் ஒரு வாசலை அடைகிறீர்கள். ஆலயத்தின் வாசலுக்குள் நுழைந்ததுமே பிரமித்துப்போகிறீர்கள். அந்த நுழைவு மண்டபம் சுமார் 100 அடி உயரத்துக்கு இருக்கிறது. அதன் இரண்டு பக்கங்களிலும் காவல் அறைகளைப் பார்க்கிறீர்கள். அங்கிருக்கும் தூண்களில் பேரீச்ச மரத்தின் வடிவம் இருப்பதைக் கவனிக்கிறீர்கள்.—எசே. 40:1-4, 10, 14, 16, 22; 41:20.

2. (அ) எசேக்கியேல் பார்த்த தரிசனம் எதைக் குறிக்கிறது? (அடிக்குறிப்பையும் பாருங்கள்.) (ஆ) நுழைவு மண்டபத்தின் அம்சங்களிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

2 தரிசனத்தில் எசேக்கியேல் பார்த்தது ஒரு ஆன்மீக ஆலயம். அதைப் பற்றி தன்னுடைய தீர்க்கதரிசனப் புத்தகத்தில், 40 முதல் 48 அதிகாரங்களில் விலாவாரியாக எழுதியிருக்கிறார். அந்த ஆலயம், தூய வணக்கத்துக்காக யெகோவா செய்திருக்கும் ஏற்பாட்டைக் குறிக்கிறது. ஆலயத்தின் ஒவ்வொரு அம்சமும், இந்தக் கடைசி நாட்களில் நாம் கடவுளுக்குச் செலுத்தும் வணக்கத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. a ஆலயத்தின் நுழைவு மண்டபங்கள் எதைக் குறிக்கின்றன? தூய வணக்கத்துக்காக யெகோவா செய்திருக்கும் ஏற்பாட்டுக்குள் வருகிறவர்கள் அவருடைய உயர்ந்த நெறிமுறைகளின்படி வாழ வேண்டும் என்பதைக் குறிக்கின்றன. அந்தப் பேரீச்ச மரத்தின் உருவங்கள்கூட இதேபோன்ற ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. நீதிநேர்மையைக் குறிக்க பேரீச்ச மரங்கள் என்ற வார்த்தையைச் சிலசமயம் பைபிள் பயன்படுத்தியிருக்கிறது. (சங். 92:12) காவல் அறைகள் எதைக் குறிக்கின்றன? கடவுளுடைய நெறிமுறைகளை மதிக்காதவர்கள், வாழ்வுக்கு வழிகாட்டும் இந்த அழகான நுழைவாசல் வழியாகப் போக அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதைக் குறிக்கின்றன.—எசே. 44:9.

3. கிறிஸ்துவைப் பின்பற்றியவர்கள் ஏன் தொடர்ந்து சுத்திகரிக்கப்பட வேண்டியிருந்தது?

3 எசேக்கியேல் பார்த்த தரிசனம் எப்படி நிறைவேறியிருக்கிறது? 1914 முதல் 1919-ன் ஆரம்பம்வரை, கிறிஸ்து மூலமாக யெகோவா தன்னுடைய மக்களை விசேஷ விதத்தில் புடமிட்டார். அதைப் பற்றி இந்தப் புத்தகத்தின் 2-ஆம் அதிகாரத்தில் பார்த்தோம். புடமிடும் வேலை அந்தக் காலப்பகுதியோடு முடிந்துவிட்டதா? இல்லை. கடந்த நூறு வருஷங்களாகவே, கிறிஸ்து தன்னைப் பின்பற்றுகிறவர்களைத் தொடர்ந்து புடமிட்டுவருகிறார். இதன் மூலம் யெகோவாவின் பரிசுத்தமான ஒழுக்க நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க அவர்களுக்கு உதவுகிறார். அவர்களை ஏன் தொடர்ந்து புடமிட வேண்டியிருக்கிறது? ஏனென்றால், ஒழுக்க விஷயத்தில் சீரழிந்து கிடக்கும் உலகத்திலிருந்துதான் அவர்களை கிறிஸ்து கூட்டிச்சேர்த்திருக்கிறார். அதுமட்டுமல்ல, ஒழுக்கக்கேடு என்னும் சேற்றுக்குள் அவர்களைத் திரும்பவும் தள்ள சாத்தான் முயற்சி செய்துகொண்டே இருக்கிறான். (2 பேதுரு 2:20-22-ஐ வாசியுங்கள்.) என்ன மூன்று விஷயங்களில் உண்மைக் கிறிஸ்தவர்கள் படிப்படியாகப் புடமிடப்பட்டிருக்கிறார்கள் என்று இப்போது பார்க்கலாம். முதலில், ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எப்படிப் புடமிடப்பட்டிருக்கிறார்கள் என்று பார்க்கலாம். அடுத்ததாக, சபையைச் சுத்தமாக வைக்க என்ன முக்கியமான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்றும் கடைசியில், குடும்ப ஏற்பாடு சம்பந்தமாக என்ன விஷயங்கள் தெளிவாக்கப்பட்டுள்ளன என்றும் பார்க்கலாம்.

ஒழுக்க விஷயங்களில் படிப்படியாகப் புடமிடப்படுவது

4, 5. பல காலமாகவே சாத்தான் என்ன தந்திரத்தைப் பயன்படுத்தியிருக்கிறான்? அவன் எந்தளவுக்கு வெற்றிப் பெற்றிருக்கிறான்?

4 யெகோவாவின் மக்கள் ஒழுக்கமாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்ள எப்போதும் கவனமாக இருந்திருக்கிறார்கள். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தெளிவான அறிவுரைகளை உடனடியாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.

5 ஒழுக்கக்கேடு. கணவன்-மனைவிக்குள் மட்டுமே உடலுறவு இருக்க வேண்டும் என்பதற்காக அதை மதிப்புமிக்க பரிசாக யெகோவா கொடுத்திருக்கிறார். அது சுத்தமாகவும் கண்ணியமாகவும் இருக்க வேண்டும். அதைத் தவறாகப் பயன்படுத்தத் தூண்டுவதன் மூலம் சாத்தான் அதை அசுத்தப்படுத்தியிருக்கிறான். யெகோவாவின் மக்கள் ஒழுக்கக்கேடு என்னும் கண்ணியில் சிக்கி, கடவுளுடைய தயவை இழக்க வேண்டும் என்று அவன் விரும்புகிறான். பிலேயாம் காலத்தில் இந்தத் தந்திரத்தை அவன் வெற்றிகரமாகப் பயன்படுத்தினான். நாம் வாழும் இந்தக் கடைசி நாட்களில் இதுவரை இல்லாதளவுக்கு இதைப் பயன்படுத்திவருகிறான்.—எண். 25:1-3, 9; வெளி. 2:14.

6. காவற்கோபுரத்தில் என்ன உறுதிமொழி பிரசுரிக்கப்பட்டது, அது எப்படிப் பயன்படுத்தப்பட்டது, அது ஏன் காலப்போக்கில் இல்லாமல் போனது? (அடிக்குறிப்பையும் பாருங்கள்.)

6 சாத்தானின் கண்ணியில் சிக்காமல் இருப்பதற்கு, ஜூன் 15, 1908, காவற்கோபுரத்தில் ஒரு உறுதிமொழி பிரசுரிக்கப்பட்டிருந்தது. “எதிர்பாலாரிடம் பொது இடங்களில் எப்படி நடந்துகொள்வேனோ அப்படித்தான் அவர்களோடு தனிமையில் இருக்கும்போதும் நடந்துகொள்வேன். இதை நான் எல்லா சமயங்களிலும் கடைப்பிடிப்பேன்” என்று அந்த உறுதிமொழியில் குறிப்பிடப்பட்டிருந்தது. b அந்த உறுதிமொழியை எடுக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லையென்றாலும், நிறைய பேர் அந்த உறுதிமொழியை எடுத்ததோடு, காவற்கோபுரத்தில் பிரசுரிப்பதற்காக தங்களுடைய பெயர்களைச் சமர்ப்பித்தார்கள். அந்தச் சமயத்தில் அப்படி உறுதிமொழி எடுப்பது நிறைய பேருக்குப் பயனுள்ளதாக இருந்தாலும், போகப் போக அது ஒரு சம்பிரதாயமாக ஆகிவிட்டது. அதனால், அந்த உறுதிமொழி எடுக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் போனது. ஆனாலும், அந்த உறுதிமொழியில் உட்பட்டிருந்த உயர்ந்த ஒழுக்க நியமங்கள் எப்போதும் கடைப்பிடிக்கப்பட்டன.

7. 1935-ல், கடவுளுடைய மக்கள் மத்தியில் இருந்த என்ன பிரச்சினையைப் பற்றி காவற்கோபுரம் சொன்னது, ஆனால் என்ன வலியுறுத்தப்பட்டது?

7 சாத்தானின் தாக்குதல் இன்னும் தீவிரமாகிக்கொண்டே போனது. மார்ச் 1, 1935, காவற்கோபுரம், கடவுளுடைய மக்கள் மத்தியில் அதிகமாக வளர்ந்துகொண்டிருந்த ஒரு பிரச்சினையைப் பற்றி வெளிப்படையாகச் சொன்னது. ஊழியத்தில் ஈடுபட்டாலே போதும், யெகோவாவின் ஒழுக்க நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சிலர் நினைத்தார்கள். அந்த காவற்கோபுரம் குறிப்பாக இப்படிச் சொன்னது: “ஊழியத்தில் ஈடுபட்டால் மட்டும் போதும் என்று நாம் நினைக்கக் கூடாது. யெகோவாவின் சாட்சிகள் யெகோவாவுக்குப் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். அதனால், யெகோவாவையும் அவருடைய அரசாங்கத்தையும் சரியான விதத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.” அந்தக் கட்டுரை, திருமணம் மற்றும் ஒழுக்க நெறிகள் பற்றிய தெளிவான ஆலோசனையும் கொடுத்தது. கடவுளுடைய மக்கள் ‘பாலியல் முறைகேட்டிலிருந்து விலகி ஓட’ அது உதவியாக இருந்தது.—1 கொ. 6:18.

8. பாலியல் ஒழுக்கக்கேட்டைக் குறிக்கிற கிரேக்க வார்த்தைக்கான சரியான விளக்கம் காவற்கோபுரத்தில் ஏன் அடிக்கடி கொடுக்கப்பட்டிருக்கிறது?

8 கிரேக்க வேதாகமத்தில் பாலியல் ஒழுக்கக்கேட்டைக் குறிக்க போர்னியா என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. சமீப வருஷங்களில், இந்த வார்த்தைக்கான சரியான விளக்கம் காவற்கோபுரத்தில் அடிக்கடி கொடுக்கப்பட்டிருக்கிறது. போர்னியா என்ற வார்த்தை உடலுறவை மட்டுமே அர்த்தப்படுத்தாது, ஒழுக்கக்கேடான நிறைய செயல்களை அர்த்தப்படுத்துகிறது. பொதுவாக, விபச்சார விடுதிகளில் செய்யப்படுகிற இழிவான எல்லா செயல்களையும் குறிக்கிறது. இந்த உலகத்தில் நிறைய பேர் வக்கிரமான பாலியல் ஆசைகளுக்கு அடிமைகளாகி இருக்கிறார்கள். ஆனால், கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் இதிலிருந்து பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள்.எபேசியர் 4:17-19-ஐ வாசியுங்கள்.

9, 10. (அ) 1935-ல் ஒழுக்கம் சம்பந்தப்பட்ட என்ன பிரச்சினையைப் பற்றி காவற்கோபுரம் குறிப்பிட்டது? (ஆ) குடிப்பதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

9 குடிவெறி. மார்ச் 1, 1935, காவற்கோபுரம் ஒழுக்கம் சம்பந்தப்பட்ட மற்றொரு பிரச்சினையைக் குறிப்பிட்டது: “சிலர் [மதுபானம்] குடித்துவிட்டு ஊழியத்திலும் சபைப் பொறுப்புகளிலும் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. குடிப்பதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? கடவுளுக்குச் செய்யும் சேவையைப் பாதிக்குமளவுக்கு ஒருவர் குடிப்பது சரியாக இருக்குமா?”

10 குடிப்பதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று அந்தக் கட்டுரை விளக்கியது. ஒயினையோ மற்ற மதுபானங்களையோ அளவாகக் குடிப்பதைத் தவறு என்று பைபிள் சொல்வதில்லை. ஆனால், குடித்துவெறிப்பதை பைபிள் வன்மையாகக் கண்டிக்கிறது. (சங். 104:14, 15; 1 கொ. 6:9, 10) குடிபோதையில் பரிசுத்த சேவை செய்வது தவறு என்று பல காலத்துக்கு முன்பிருந்தே ஒரு பைபிள் சம்பவத்தின் மூலம் கடவுளுடைய ஊழியர்களுக்குச் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. ஆரோனுடைய மகன்கள் கடவுள் ஏற்றுக்கொள்ளாத விதத்தில் பலிபீடத்தின்மேல் தூபம் காட்டியதால் யெகோவா அவர்களைக் கொன்றுபோட்டார். இந்தச் சம்பவத்துக்குப் பின், குருமார்களுக்கு யெகோவா ஒரு கட்டளை கொடுத்தார். அதாவது, பரிசுத்த சேவையில் ஈடுபடுவதற்கு முன்பு குருமார்கள் மது அருந்தக் கூடாது என்ற கட்டளையைக் கொடுத்தார். ஆரோனுடைய மகன்கள் கொல்லப்பட்டதற்கான காரணம் இதிலிருந்து தெரியவருகிறது. (லேவி. 10:1, 2, 8-11) இந்தக் கட்டளையில் உட்பட்டிருக்கும் நியமத்தின்படி, இன்று கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் குடித்துவிட்டு பரிசுத்த சேவை செய்வது கிடையாது.

11. குடிவெறியைப் பற்றிக் கடவுளுடைய மக்களுக்குக் கொடுக்கப்பட்ட கூடுதல் விளக்கம் எப்படிப் பயனுள்ளதாக இருந்திருக்கிறது?

11 சமீப காலத்தில், கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களுக்குக் குடிவெறியைப் பற்றி, அதாவது அளவுக்குமீறி குடித்து மதுபானத்துக்கு அடிமையாவதைப் பற்றி, கூடுதல் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்ற சமயத்தில் கொடுக்கப்பட்ட பைபிள் ஆலோசனைகள் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட்டு, திரும்பவும் ஒழுக்கமாக வாழ நிறைய பேருக்கு உதவியிருக்கின்றன. இன்னும் நிறைய பேருக்கு, குடிக்கும் விஷயத்தில் சமநிலையோடு இருக்க இந்த பைபிள் ஆலோசனைகள் உதவியிருக்கின்றன. அதனால், மது அருந்தும் விஷயத்தில் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. குடிப்பழக்கத்தினால் ஒருவர் தன் மதிப்பு மரியாதையை இழந்துவிடுவார், குடும்பத்தையும் இழந்துவிடுவார். எல்லாவற்றுக்கும் மேலாக யெகோவாவின் தூய வணக்கத்தில் ஈடுபடும் மாபெரும் பாக்கியத்தையும் இழந்துவிடுவார். அதனால், யாருமே குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிவிடக் கூடாது.

“நம் எஜமான் புகைபிடிப்பதையோ அசுத்தமான ஏதோ ஒன்றை வாயில் போட்டிருப்பதையோ நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாது.” —சி. டி. ரஸல்

12. கடைசி நாட்கள் ஆரம்பிப்பதற்கு முன்பே, கிறிஸ்துவின் ஊழியர்கள் புகையிலையைப் பயன்படுத்துவதைப் பற்றி என்ன நினைத்தார்கள்?

12 புகையிலை பயன்படுத்துவது. கடைசி நாட்கள் ஆரம்பிப்பதற்கு முன்பே, கிறிஸ்துவின் ஊழியர்கள் புகையிலை பயன்படுத்துவதைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள். பல வருஷங்களுக்கு முன்பு சார்ல்ஸ் கேப்பன் என்ற வயதான சகோதரர், தன்னுடைய 13 வயதில் சார்ல்ஸ் டேஸ் ரஸலைச் சந்தித்ததைப் பற்றிச் சொன்னார். அவரும் அவருடைய மூன்று சகோதரர்களும் பென்ஸில்வேனியாவில், அலிகென்னி என்ற இடத்திலுள்ள பைபிள் ஹவுஸின் படிக்கட்டில் உட்கார்ந்துகொண்டிருந்தார்கள். ரஸல் அவர்களைக் கடந்துபோனபோது, “பசங்களா, புகைபிடிக்கிறீர்களா? எனக்குப் புகையிலை வாடை வருகிறது” என்று சொன்னார். அதற்கு அவர்கள், ‘நாங்கள் புகைபிடிக்கவில்லை’ என்று சொன்னார்கள். புகைபிடிப்பது தவறு என்று ரஸல் நினைத்ததை அவர்கள் நிச்சயம் புரிந்திருப்பார்கள். ஆகஸ்ட் 1, 1895, காவற்கோபுரத்தில் 2 கொரிந்தியர் 7:1-ஐப் பற்றி சகோதரர் ரஸல் இப்படிச் சொன்னார்: “ஒரு கிறிஸ்தவர் எந்த விதத்திலாவது புகையிலையைப் பயன்படுத்தினால் அது எப்படிக் கடவுளுக்கு மகிமை சேர்க்கும்? அந்த நபருக்கு அது எப்படிப் பிரயோஜனமாக இருக்கும்? இதெல்லாம் எனக்குப் புரியவே இல்லை. . . . நம் எஜமான் புகைபிடிப்பதையோ அசுத்தமான ஏதோ ஒன்றை வாயில் போட்டிருப்பதையோ நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாது.”

13. ஒழுக்க விஷயத்தில் 1973-ல் கூடுதலான என்ன விளக்கம் கொடுக்கப்பட்டது?

13 1935-ல் வெளிவந்த காவற்கோபுரம் புகையிலையை அசுத்தமான ஒன்று என குறிப்பிட்டது. அதோடு, புகைபிடிக்கிறவர்களோ புகையிலை மெல்லுகிறவர்களோ பெத்தேல் குடும்பத்தின் அங்கத்தினர்களாக இருக்க முடியாது என்றும் கடவுளுடைய அமைப்பின் பிரதிநிதியாக, பயனியர் ஊழியத்திலோ பயண சேவையிலோ ஈடுபட முடியாது என்றும் குறிப்பிட்டது. 1973-ல் இன்னும் கூடுதலான விளக்கம் கொடுக்கப்பட்டது. மரணத்தை விளைவிக்கிற, அசுத்தமான, அன்பற்ற இந்தப் பழக்கத்தில் ஒரு யெகோவாவின் சாட்சி தொடர்ந்து ஈடுபட்டால் அவர் சபையின் அங்கத்தினராக இருக்க முடியாது என்று ஜூன் 1, காவற்கோபுரம் சொன்னது. புகையிலை பயன்படுத்துவதை நிறுத்தாதவர்களைச் சபைநீக்கம் செய்ய வேண்டியிருந்தது. c தன்னைப் பின்பற்றியவர்களைப் புடமிடுவதற்கு கிறிஸ்து எடுத்த மற்றொரு முக்கியமான படிதான் இது.

14. இரத்தம் சம்பந்தமாகக் கடவுள் என்ன கட்டளை கொடுத்திருக்கிறார், இரத்தம் ஏற்றுவது எப்படிச் சர்வசாதாரணமாக ஆனது?

14 இரத்தத்தைத் தவறாகப் பயன்படுத்துவது. நோவா காலத்தில், இரத்தத்தைச் சாப்பிடுவது தவறு என்று கடவுள் சொல்லியிருந்தார். இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்த திருச்சட்டத்தில், இரத்தத்தைப் பயன்படுத்துவது தவறு என்று மறுபடியும் அவர் வலியுறுத்தினார். அதேபோல், ‘இரத்தத்துக்கு விலகியிருக்க வேண்டும்’ என்று கிறிஸ்தவச் சபைக்கும் அவர் சொன்னார். (அப். 15:20, 29; ஆதி. 9:4; லேவி. 7:26) நம் காலத்தில், நிறைய பேரை இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் போக வைப்பதற்கு சாத்தான் ஒரு வழியைக் கண்டுபிடித்திருக்கிறான். அதுதான் இரத்தம் ஏற்றுவது. 19-ஆம் நூற்றாண்டில் இரத்தம் ஏற்றுவதைப் பற்றி மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார்கள். எத்தனை இரத்த குரூப்புகள் இருக்கின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, இரத்தம் ஏற்றும் பழக்கம் அதிகமானது. 1937-ல் இரத்த வங்கிகளில் இரத்தம் சேகரித்து வைக்கப்பட்டது. இரத்தம் ஏற்றும் பழக்கம் இன்னும் தீவிரமடைவதற்கு இரண்டாம் உலகப் போர் காரணமாக இருந்தது. சீக்கிரத்திலேயே, இரத்தம் ஏற்றுவது உலகம் முழுவதும் சர்வசாதாரணமாகிவிட்டது.

15, 16. (அ) இரத்தம் ஏற்றிக்கொள்வது சம்பந்தமாக யெகோவாவின் சாட்சிகள் என்ன செய்யத் தீர்மானமாக இருந்தார்கள்? (ஆ) இரத்தம் ஏற்றிக்கொள்வது மற்றும் இரத்தமில்லா சிகிச்சை சம்பந்தமாக கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களுக்கு என்ன உதவி கிடைத்திருக்கிறது? இதனால் என்ன பலன் கிடைத்தது?

15 1944-ன் ஆரம்பத்தில், இரத்தம் ஏற்றிக்கொள்வது இரத்தத்தைச் சாப்பிடுவதற்குச் சமம் என்று காவற்கோபுரம் சொன்னது. அடுத்த வருஷத்தில், இரத்தம் ஏற்றிக்கொள்வது பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பது தெளிவாக்கப்பட்டது. 1951-க்குள் இரத்தம் சம்பந்தமான சில கேள்விகளும் பதில்களும் அடங்கிய ஒரு பட்டியல் பிரசுரிக்கப்பட்டது. கடவுளுடைய மக்கள் மருத்துவர்களிடம் பேசுவதற்கு அது உதவியாக இருந்தது. உலகம் முழுவதும் இருந்த உண்மைக் கிறிஸ்தவர்கள் கேலி கிண்டல், எதிர்ப்பு, துன்புறுத்தல் மத்தியிலும் இரத்தம் ஏற்றிக்கொள்ள முடியாது என்று தைரியமாகச் சொல்ல ஆரம்பித்தார்கள். இந்த எதிர்ப்புகளைச் சமாளிக்க கிறிஸ்து தன்னுடைய அமைப்பின் மூலமாக மக்களுக்கு உதவினார். அதனால், இரத்தம் ஏற்றுவது சம்பந்தமாக நன்கு ஆராய்ச்சி செய்யப்பட்ட, தெளிவான விவரங்கள் அடங்கிய சிற்றேடுகளையும் கட்டுரைகளையும் அமைப்பு வெளியிட்டது.

16 1979-ல் மூப்பர்கள் சிலர் மருத்துவமனைகளுக்குப் போய் மருத்துவர்களைச் சந்திக்க ஆரம்பித்தார்கள். நாம் இரத்தம் ஏற்றிக்கொள்ளாமல் இருப்பதற்கான பைபிள் சார்ந்த காரணங்களைப் பற்றியும் இரத்தமில்லா மாற்று சிகிச்சைகளைப் பற்றியும் மருத்துவர்களிடம் விளக்கிச் சொன்னார்கள். 1980-ல், அமெரிக்காவிலுள்ள 39 நகரங்களைச் சேர்ந்த மூப்பர்களுக்கு இது சம்பந்தமாக விசேஷப் பயிற்சி கொடுக்கப்பட்டது. சீக்கிரத்திலேயே, உலகம் முழுவதும் மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுக்களை அமைப்பதற்கு ஆளும் குழு அங்கீகாரம் கொடுத்தது. இதனால், என்ன பலன் கிடைத்திருக்கிறது? இன்று, ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் யெகோவாவின் சாட்சிகளுக்கு ஒத்துழைப்பு தருகிறார்கள். இரத்தமில்லா சிகிச்சையை அளிக்கும்படி நாம் கேட்கும்போது அதை மதித்து சிகிச்சை அளிக்கிறார்கள். இப்போதெல்லாம் நிறைய மருத்துவமனைகளில் இரத்தமில்லா சிகிச்சை அளிக்கப்படுகிறது; இதுதான் மிகச் சிறந்த சிகிச்சை முறை என்றும்கூட சிலர் ஒத்துக்கொள்கிறார்கள். கடவுளுடைய மக்களைக் கறைப்படுத்த சாத்தான் எடுத்திருக்கும் எல்லா முயற்சிகளிலிருந்தும் இயேசு அவர்களைப் பாதுகாத்திருக்கிறார். என்னென்ன வழிகளில் அவர் பாதுகாத்திருக்கிறார் என்பதை நினைத்துப்பார்ப்பது நம்மைச் சிலிர்க்க வைக்கிறது, இல்லையா?எபேசியர் 5:25-27-ஐ வாசியுங்கள்.

இப்போதெல்லாம் நிறைய மருத்துவமனைகளில் இரத்தமில்லா சிகிச்சை அளிக்கப்படுகிறது; இதுதான் மிகச் சிறந்த சிகிச்சை முறை என்றும்கூட சிலர் ஒத்துக்கொள்கிறார்கள்

17. கிறிஸ்து நம்மைத் தொடர்ந்து சுத்திகரித்திருக்கும் விதத்தை நாம் உயர்வாக மதிக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?

17 நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘யெகோவாவின் உயர்ந்த ஒழுக்க நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கு கிறிஸ்து நம்மைத் தொடர்ந்து புடமிட்டிருக்கும் விதத்தை நாம் உயர்வாக மதிக்கிறோமா?’ அப்படி மதித்தால் ஒரு விஷயத்தை நாம் மறந்துவிடக் கூடாது. கடவுளுடைய ஒழுக்க நெறிமுறைகள்மீது நாம் வைத்திருக்கும் மதிப்பைக் கெடுத்து, நம்மை யெகோவாவிடமிருந்தும் இயேசுவிடமிருந்தும் பிரிக்க சாத்தான் விடாமல் முயற்சி செய்துகொண்டே இருக்கிறான். அதனால், இந்த உலகத்தின் ஒழுக்கங்கெட்ட விஷயங்களைப் பற்றி யெகோவாவின் அமைப்பு அன்பான எச்சரிப்புகளையும் நினைப்பூட்டுதல்களையும் தொடர்ந்து கொடுத்துவருகிறது. அந்த ஆலோசனைகளைக் கேட்பதற்கும், ஏற்றுக்கொள்வதற்கும், அவற்றுக்குக் கீழ்ப்படிவதற்கும் நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.—நீதி. 19:20.

ஒழுக்க விஷயத்தில் சபையைப் பாதுகாத்தல்

18. கடவுளுடைய நெறிமுறைகளை வேண்டுமென்றே மீறுகிறவர்கள் சம்பந்தமாக எசேக்கியேல் பார்த்த தரிசனத்திலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்?

18 ஒழுக்க விஷயத்தில் கிறிஸ்தவச் சபையைச் சுத்தமாக வைக்க என்னென்ன செய்யப்பட்டன என்று இப்போது பார்க்கலாம். வருத்தகரமாக, யெகோவாவின் நெறிமுறைகளை ஏற்றுக்கொண்டு அவருக்குத் தங்களை அர்ப்பணிக்கிற எல்லாருமே உண்மையாக நிலைத்திருப்பதில்லை. யெகோவாவுக்கு உண்மையாக இருந்த சிலர், காலப்போக்கில் அவருடைய நெறிமுறைகளை வேண்டுமென்றே மீறியிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை என்ன செய்ய வேண்டும்? ஆன்மீக ஆலயத்தைப் பற்றி எசேக்கியேல் பார்த்த தரிசனத்திலிருந்து இதற்கான பதிலைத் தெரிந்துகொள்ளலாம். அந்தத் தரிசனத்தில் அவர் பார்த்த உயர்ந்த வாசல்களை ஞாபகப்படுத்திப் பாருங்கள். அவற்றின் நுழைவு மண்டபங்களில் காவல் அறைகள் இருந்தன. அங்கிருந்த காவலர்கள் ஆலயத்தைப் பாதுகாத்தார்கள். ‘உள்ளத்தில் விருத்தசேதனம்’ செய்யாதவர்கள் ஆலயத்திற்குள் போகாதபடி அவர்கள் பார்த்துக்கொண்டார்கள். (எசே. 44:9) இதிலிருந்து ஒரு முக்கியமான விஷயத்தை நாம் தெரிந்துகொள்கிறோம். யெகோவாவின் ஒழுக்க நெறிமுறைகளின்படி வாழ முயற்சி செய்கிறவர்களுக்கு மட்டும்தான் அவருக்குத் தூய வணக்கத்தைச் செலுத்துவதற்கும் சக கிறிஸ்தவர்களோடு சேர்ந்து அவரை வணங்குவதற்கும் வாய்ப்பு கிடைக்கும்.

19, 20. (அ) மோசமான தவறு செய்தவர்களை விசாரணை செய்யும் விஷயத்தில் தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு கிறிஸ்து எப்படி உதவியிருக்கிறார்? (ஆ) மனம் திருந்தாதவர்களைச் சபைநீக்கம் செய்வதற்கான மூன்று காரணங்கள் என்ன?

19 காவற்கோபுர பத்திரிகை 1892-ல் இப்படிச் சொன்னது: “கிறிஸ்து எல்லாருக்காகவும் தன்னையே மீட்புவிலையாக [சரிசமமான விலையாக] கொடுத்தார் என்பதை நேரடியாகவோ மறைமுகமாகவோ மறுக்கிறவர்களை (கிறிஸ்தவர்களை) சபைநீக்கம் செய்வது நம் கடமை.” (2 யோவான் 10-ஐ வாசியுங்கள்.) ஒருவர் தொடர்ந்து தவறான நடத்தையில் ஈடுபட்டால் அது சபைக்கு ஆபத்தானது என்று 1904-ல் புதிய சிருஷ்டிப்பு என்ற ஆங்கிலப் புத்தகம் சொன்னது. அப்போதெல்லாம் ஒருவர் மோசமான தவறு செய்திருந்தால் முழு சபையும் “சர்ச் [சபை] நடத்தும் விசாரணையில்” ஈடுபட்டது. ஆனால், அப்படிப்பட்ட விசாரணைகள் அபூர்வமாகத்தான் நடந்தன. 1944-ல், பொறுப்பில் இருக்கும் சகோதரர்கள்தான் அப்படிப்பட்ட விசாரணைகளைச் செய்ய வேண்டும் என்று காவற்கோபுரம் சொன்னது. 1952-ல், பைபிள் அடிப்படையில் எப்படி நீதி விசாரணை செய்வது என்று காவற்கோபுரத்தில் சொல்லப்பட்டது. சபையைச் சுத்தமாக வைப்பதற்காகவே மனம் திருந்தாதவர்கள் சபைநீக்கம் செய்யப்படுகிறார்கள் என்று அது குறிப்பிட்டது.

20 அதைத் தொடர்ந்து வந்த வருஷங்களில், மோசமான தவறு செய்தவர்களை விசாரிப்பது சம்பந்தமாக, கூடுதல் விஷயங்களை கிறிஸ்து தன் அமைப்புக்குத் தெளிவுபடுத்தினார். யெகோவா எதிர்பார்க்கும் விதத்தில், நீதியோடும் கருணையோடும் விசாரணை செய்ய மூப்பர்களுக்குச் சிறந்த பயிற்சி கொடுக்கப்படுகிறது. இன்று, மனம் திருந்தாத ஒருவரைச் சபைநீக்கம் செய்வதற்கு குறைந்தபட்சம் மூன்று காரணங்கள் இருக்கின்றன. (1) யெகோவாவின் பெயருக்குக் களங்கம் ஏற்படாமல் இருக்கவும், (2) மோசமான பாவத்தின் பாதிப்புகளிலிருந்து சபையைப் பாதுகாக்கவும், (3) தவறு செய்தவர் மனம் திருந்தவும் சபைநீக்கம் செய்யப்படுகிறது.

21. சபைநீக்கம் செய்யும் ஏற்பாட்டினால் கடவுளுடைய மக்கள் எப்படிப் பயனடைந்திருக்கிறார்கள்?

21 சபைநீக்கம் செய்யும் ஏற்பாட்டினால் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களுக்குக் கிடைத்திருக்கும் நன்மைகளை உங்களால் பார்க்க முடிகிறதா? இஸ்ரவேலர்கள் காலத்தில், தவறு செய்த சிலரைப் பார்த்து நிறைய பேர் கெட்டுப்போனார்கள். சிலசமயத்தில், யெகோவாவை நேசித்தவர்களையும் சரியானதைச் செய்ய விரும்பியவர்களையும்விட கெட்டதைச் செய்தவர்கள்தான் அதிகமாக இருந்தார்கள். அதனால், இஸ்ரவேலர்கள் எல்லாரும் பாதிக்கப்பட்டார்கள். அவர்கள் அடிக்கடி யெகோவாவின் பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியதால் அவருடைய ஆசீர்வாதத்தை இழந்தார்கள். (எரே. 7:23-28) இன்று, ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டுமே யெகோவாவைச் சேவிப்பதில்லை. பல தேசங்களைச் சேர்ந்த மக்கள் அவருக்குக் கீழ்ப்படிந்து அவரைச் சேவிக்கிறார்கள். அவர்களில் மனம் திருந்தாமல் தொடர்ந்து பாவம் செய்கிறவர்கள் சபைநீக்கம் செய்யப்படுகிறார்கள். அவர்கள் சாத்தானின் ஒரு கருவியாக இருந்து சபையின் சுத்தத்தைக் கெடுக்க அனுமதிக்கப்படுவதில்லை. இதன் மூலம், அவர்களால் சபைக்கு அதிக பாதிப்பு வராமல் பார்த்துக்கொள்ள முடிகிறது. அதனால், சபையாக யெகோவாவின் ஆசீர்வாதம் நமக்கு இருக்கிறது. “உன்னைத் தாக்குவதற்காக உருவாக்கப்படுகிற எந்த ஆயுதமும் ஒன்றுமில்லாமல் போகும்” என்று யெகோவாவே வாக்குக் கொடுத்திருக்கிறார். (ஏசா. 54:17) நீதி விசாரணை செய்யும் மிக முக்கியமான பொறுப்பைப் பெற்றுள்ள மூப்பர்களுக்கு நாம் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறோமா?

எல்லா குடும்பங்களையும் உருவாக்கியவரை மகிமைப்படுத்துவது

22, 23. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு நாம் ஏன் நன்றியுள்ளவர்களாக இருக்கலாம்? ஆனாலும், அவர்கள் சமநிலையோடு இருக்க வேண்டியிருந்தது என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?

22 திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை சம்பந்தமாகவும் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களுக்குச் சில விஷயங்கள் தெளிவாக்கப்பட்டன. கடந்த வருஷங்களில், அந்த விஷயங்கள் எப்படித் தெளிவாக்கப்பட்டன என்று பார்க்கலாம். 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த கடவுளுடைய ஊழியர்களைப் பற்றி வாசிக்கும்போது, அவர்களுடைய சுயதியாக மனப்பான்மை நம் மனதைத் தொடுகிறது. தங்களுடைய வாழ்க்கையில் எல்லாவற்றையும்விட பரிசுத்த சேவைக்கு அவர்கள் முதலிடம் கொடுத்ததற்காக நாம் அதிக நன்றியோடு இருக்கிறோம். அதேசமயத்தில், அவர்கள் சமநிலையோடு இருக்க வேண்டியிருந்தது. எப்படி?

23 ஊழியத்திலோ பயண சேவையிலோ ஈடுபடுவதற்காக சகோதரர்கள் ரொம்ப தூரமான இடங்களுக்குப் போக வேண்டியிருந்தது. பல மாதங்களுக்கு அவர்கள் வீட்டைவிட்டுப் பிரிந்திருக்க வேண்டியிருந்தது. சிலசமயங்களில், திருமணம் செய்யாமல் இருப்பதைப் பற்றி பைபிள் வலியுறுத்தியதைவிட அதிகமாக நம் பிரசுரங்கள் வலியுறுத்தின. ஆனால், திருமண பந்தத்தைப் பலப்படுத்துவது பற்றி அந்தளவுக்குச் சொல்லப்படவில்லை. இன்றும் இதேபோன்ற நிலைமைதான் இருக்கிறதா? இல்லை.

குடும்பத்தைக் கவனிப்பதை விட்டுவிட்டு சபை வேலைகளைக் கவனிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதில்லை

24. திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றி பைபிள் கொடுக்கிற ஆலோசனைகளைச் சரியாகப் புரிந்துகொள்ள கிறிஸ்து தன்னை உண்மையோடு பின்பற்றுகிறவர்களுக்கு எப்படி உதவினார்?

24 இன்று, குடும்பத்தைக் கவனிப்பதை விட்டுவிட்டு சபை வேலைகளைக் கவனிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதில்லை. (1 தீமோத்தேயு 5:8-ஐ வாசியுங்கள்.) அதுமட்டுமல்ல, திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றிய பைபிள் ஆலோசனைகளைச் சரியாகப் புரிந்துகொள்ள கிறிஸ்து தன்னை உண்மையோடு பின்பற்றுகிறவர்களுக்குத் தொடர்ந்து உதவி செய்துவருகிறார். (எபே. 3:14, 15) உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல் என்ற புத்தகம் 1978-ல் வெளியிடப்பட்டது. சுமார் 18 வருஷங்களுக்குப் பிறகு குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அதோடு, கணவனும் மனைவியும் கடைப்பிடிக்க வேண்டிய பைபிள் நியமங்களைப் பற்றிய ஏராளமான கட்டுரைகள் காவற்கோபுரத்தில் வெளிவந்திருக்கின்றன.

25-27. எல்லா வயதிலுள்ள பிள்ளைகளின் தேவைகளுக்கும் எப்படி அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது?

25 பல வருஷங்களாகவே, பிள்ளைகளுடைய தேவைகளுக்கும் அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. யெகோவாவின் அமைப்பு எல்லா வயதிலுள்ள பிள்ளைகளுக்கும் சிறந்த ஆலோசனைகளைக் கொடுத்திருக்கிறது. ஆரம்பத்தில் பிள்ளைகளுக்கு குறைவான உதவிதான் கிடைத்தது. இன்று எக்கச்சக்கமான உதவி பிள்ளைகளுக்குக் கிடைக்கிறது. உதாரணத்துக்கு, 1919-லிருந்து 1921 வரை த கோல்டன் ஏஜ் பத்திரிகையில், “பிள்ளைகளுக்கு பைபிள் படிப்பு” என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகள் வெளிவந்தன. 1920-ல் த கோல்டன் ஏஜ் ஏபிசி என்ற சிற்றேடும், 1941-ல் பிள்ளைகள் என்ற ஆங்கில புத்தகமும் வெளியிடப்பட்டன. 1970-களில், பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல், உன் இளமை—அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல், என்னுடைய பைபிள் கதை புத்தகம் ஆகிய பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. 1982-ல் விழித்தெழு! பத்திரிகையில் “இளைஞர் கேட்கின்றனர்” என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகள் வெளிவர ஆரம்பித்தன. 1989-ல், இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

ஜெர்மனியில் நடந்த மாநாட்டில் என் பைபிள் பாடங்கள் என்ற சிற்றேட்டைச் சந்தோஷத்தோடு பெற்றுக்கொள்கிறார்கள்

26 இன்று, ஆங்கிலத்தில் இளைஞர்கள் கேட்கும் கேள்விகள் என்ற புத்தகத்தின் இரண்டு தொகுதிகள் இருக்கின்றன. jw.org என்ற நம் வெப்சைட்டிலும் இதே தலைப்பில் தொடர் கட்டுரைகள் வந்துகொண்டிருக்கின்றன. பெரிய போதகரிடம் கற்றுக்கொள் என்ற புத்தகமும் நமக்கு இருக்கிறது. பிள்ளைகளுக்காக நம் வெப்சைட்டில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு ‘பைபிள் கார்டுகள்,’ வீடியோக்கள், ‘கதை சொல்லும் படங்கள்’ என்ற பகுதிகள் இருக்கின்றன. அவர்கள் செய்து பார்ப்பதற்கு சில பயிற்சிகளும் இருக்கின்றன. சிறு பிள்ளைகளுக்காகவும் டீனேஜர்களுக்காகவும் ‘பைபிளைப் படியுங்கள், யோசித்துப் பாருங்கள்’ என்ற பகுதி இருக்கிறது. மூன்று அல்லது அதற்கும் குறைவான வயதிலுள்ள பிள்ளைகளுக்கு, ‘என் பைபிள் பாடங்கள்’ என்ற பகுதி இருக்கிறது. கிறிஸ்து பூமியிலிருந்தபோது சின்னப் பிள்ளைகளை அரவணைத்து அன்பு காட்டியது போல இன்றும் அன்பு காட்டுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. (மாற். 10:13-16) சிறு பிள்ளைகள்கூட தாங்கள் முக்கியமானவர்கள் என்பதை உணர வேண்டும் என்றும் அவர்களுக்கும் ஆன்மீக உணவு கிடைக்க வேண்டும் என்றும் கிறிஸ்து விரும்புகிறார்.

27 பிள்ளைகளை ஆபத்திலிருந்து பாதுகாக்கவும் இயேசு விரும்புகிறார். ஏனென்றால், ஒழுக்க விஷயத்தில் இந்த உலகம் படுமோசமாகிக்கொண்டே வருகிறது; அதனால், குழந்தைகளைத் துஷ்பிரயோகம் செய்யும் ஆபத்து அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்தக் கொடூர செயலில் சிக்காதபடி பிள்ளைகளைப் பெற்றோர் பாதுகாப்பதற்கு உதவியாக, தெளிவான நேரடியான விஷயங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. d

28. (அ) ஆலயத்தைப் பற்றி எசேக்கியேல் பார்த்த தரிசனத்தில் விளக்கப்பட்டுள்ளபடி தூய வணக்கத்தில் ஈடுபட முக்கியமாக என்ன செய்ய வேண்டும்? (ஆ) நீங்கள் என்ன செய்யத் தீர்மானமாக இருக்கிறீர்கள்?

28 தன்னைப் பின்பற்றுகிறவர்களை கிறிஸ்து எப்படியெல்லாம் புடமிட்டிருக்கிறார் என்பதை யோசித்துப் பார்க்கும்போது சிலிர்த்துப்போகிறோம், இல்லையா? யெகோவாவின் உயர்ந்த ஒழுக்க நெறிமுறைகளை மதிக்கவும் அதன்படி வாழ்ந்து பயனடையவும் அவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளித்திருக்கிறார். தரிசனத்தில் எசேக்கியேல் பார்த்த அந்த ஆலயத்தை மறுபடியும் உங்கள் நினைவுக்குக் கொண்டுவாருங்கள். அதன் உயர்ந்த நுழைவு மண்டபத்தை ஞாபகப்படுத்திப் பாருங்கள். அது நிஜமான ஒரு ஆலயம் கிடையாது. அது ஒரு ஆன்மீக ஆலயம். அது தூய வணக்கத்துக்காக யெகோவா செய்திருக்கும் ஏற்பாட்டைக் குறிக்கிறது. அந்த ஆன்மீக ஆலயத்தை நீங்கள் நிஜமானதாக கருதுகிறீர்களா? அதில் நுழைவதற்கு வெறுமனே ராஜ்ய மன்றத்துக்குப் போவதோ, பைபிளைப் படிப்பதோ, ஊழியத்துக்குப் போவதோ மட்டும் போதாது. மற்றவர்களால் பார்க்க முடிந்த இந்த விஷயங்களையெல்லாம் வெளிவேஷம் போடுகிற ஒருவரால்கூட செய்ய முடியும். அதற்காக அவர் அந்த ஆன்மீக ஆலயத்தில் நுழைந்துவிட்டார் என்று சொல்ல முடியாது. அதனால், நாம் அவற்றைச் செய்வதோடு யெகோவாவின் உயர்ந்த ஒழுக்க நெறிமுறைகளின்படி வாழ வேண்டும். சரியான மனப்பான்மையோடு தூய வணக்கத்தில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் மிகவும் பரிசுத்தமான அந்த ஆலயத்துக்குள் நுழையவும் அதில் சேவை செய்யவும் முடியும். நமக்குக் கிடைத்த இந்த மாபெரும் பாக்கியத்தை எப்போதும் உயர்வாக மதிக்க வேண்டும். யெகோவாவின் நீதியான நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் அவரைப் போல பரிசுத்தமாக இருக்க நம்மால் முடிந்த எல்லாவற்றையும் எப்போதும் செய்ய வேண்டும்.

a கடவுளுடைய மக்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்புவதைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் ஆன்மீக இஸ்ரவேலர்களிடம் நிறைவேறியதாக 1932-ல் வெளியிடப்பட்ட வின்டிகேஷன் என்ற புத்தகத்தின் 2-ஆம் தொகுதி முதன்முதலாகச் சொன்னது. தூய வணக்கம் திரும்பவும் ஆரம்பிக்கப்படுவதைப் பற்றியே அந்தத் தீர்க்கதரிசனங்கள் சுட்டிக்காட்டின. எசேக்கியேலின் தரிசனத்திலுள்ள ஆலயமும்கூட தூய வணக்கம் திரும்ப ஆரம்பிக்கப்படுவதைப் பற்றிய தீர்க்கதரிசனம்தான் என்றும் அது கடைசி நாட்களில் நிறைவேறும் ஒரு முக்கியமான தீர்க்கதரிசனம் என்றும் மார்ச் 1, 1999, காவற்கோபுரம் சொன்னது.

b அந்த உறுதிமொழியின்படி, ஒரு ஆணும் பெண்ணும் கணவன்-மனைவியாக அல்லது நெருங்கிய குடும்ப அங்கத்தினர்களாக இல்லையென்றால் அவர்கள் இருவரும் ஒரு அறைக்குள் தனியாக இருக்கக் கூடாது. அப்படி ஒருவேளை தனியாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அறையின் கதவைத் திறந்து வைத்திருக்க வேண்டும். பெத்தேலில் சில வருஷங்களுக்கு காலை வழிபாட்டின்போது இந்த உறுதிமொழி தினமும் சொல்லப்பட்டது.

c புகையிலையைப் பயன்படுத்துவது புகைபிடிப்பதையும், புகையிலையை மெல்லுவதையும், அதற்காக புகையிலை தோட்டத்தை வைத்திருப்பதையும் அர்த்தப்படுத்துகிறது.