பகுதி 5
கடவுளுடைய அரசாங்கத்தின் கல்வித் திட்டம்—ராஜாவின் ஊழியர்களுக்குப் பயிற்சி கொடுப்பது
மேடையில் நின்று பேச்சு கொடுப்பவரைப் பார்த்து நீங்கள் புன்னகை பூக்கிறீர்கள். உங்கள் சபையைச் சேர்ந்த அந்த இளம் சகோதரர் முதல் முறையாக மாநாட்டில் பேச்சு கொடுக்கிறார். அதைக் கேட்கும்போது, கடவுளுடைய மக்களுக்குக் கிடைக்கிற பயிற்சியை நினைத்து வியந்துபோகிறீர்கள். அவர் முதன்முதலில் சபையில் பேச்சு கொடுத்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறது. இப்போது அவர் எந்தளவுக்கு முன்னேறியிருக்கிறார் என்று நீங்கள் யோசித்துப் பார்க்கிறீர்கள். அவர் பயனியர் ஊழியப் பள்ளியிலிருந்து பயிற்சி பெற்ற பிறகு சிறந்த முன்னேற்றம் செய்திருக்கிறார். சமீபத்தில்தான் அவரும் அவருடைய மனைவியும் ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளியில் கலந்துகொண்டார்கள். அந்த அருமையான பேச்சின் முடிவில் எல்லாரும் கைதட்டும்போது நீங்கள் சுற்றி எல்லாரையும் பார்க்கிறீர்கள். கூடிவந்திருக்கும் எல்லாருக்கும் அந்தப் பேச்சு எவ்வளவு பிரயோஜனமாக இருந்திருக்கும் என்று யோசிக்கிறீர்கள்.
மக்கள் ‘எல்லாரும் யெகோவாவினால் கற்பிக்கப்பட்டிருக்கும்’ காலத்தைப் பற்றி பைபிள் முன்கூட்டியே சொன்னது. (ஏசா. 54:13) நாம் அந்தக் காலப்பகுதியில்தான் வாழ்கிறோம். நம்முடைய பிரசுரங்கள் மூலமாக மட்டுமல்ல கூட்டங்கள், மாநாடுகள், பலவிதமான பள்ளிகள் மூலமாகவும் பயிற்சி பெறுகிறோம். யெகோவாவின் அமைப்பில் நமக்குக் கிடைக்கிற நியமிப்புகளைச் சிறந்த விதத்தில் செய்ய இவை நம்மைத் தயார்படுத்துகின்றன. கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்துகொண்டிருக்கிறது என்பதற்கு இந்தப் பயிற்சிகள் எல்லாம் எப்படி அத்தாட்சி அளிக்கின்றன என்பதை இந்தப் பகுதியில் பார்ப்போம்.
இந்தப் பகுதியில்
அதிகாரம் 16
வணக்கத்துக்காக ஒன்றுகூடி வருதல்
யெகோவாவை வணங்குவதற்கான கூட்டங்களிலிருந்து நாம் எப்படி நன்கு பயனடையலாம்?
அதிகாரம் 17
கடவுளுடைய அரசாங்கத்தின் ஊழியர்களைப் பயிற்றுவித்தல்
கடவுளுடைய அரசாங்கத்தின் ஊழியர்கள் தங்களுடைய நியமிப்புகளைச் சிறந்த விதத்தில் செய்ய பைபிள் பள்ளிகள் எப்படி உதவியிருக்கின்றன?