Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 4

இயேசு கிறிஸ்து யார்?

இயேசு கிறிஸ்து யார்?

1, 2. (அ) பிரபலமான ஒருவருடைய பெயர் உங்களுக்குத் தெரியும் என்பதற்காக அவரை நன்றாகத் தெரியும் என்று சொல்வீர்களா? விளக்குங்கள். (ஆ) இயேசுவைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

உலகத்தில் பிரபலமானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பிரபலமான ஒருவருடைய பெயர் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அதற்காக, அவரைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும் என்று சொல்வீர்களா? சொல்ல மாட்டீர்கள். ஏனென்றால், உண்மையிலேயே அவர் யார், எப்படிப்பட்டவர் என்ற விவரங்கள் உங்களுக்குத் தெரியாது.

2 இயேசு கிறிஸ்து கிட்டத்தட்ட 2,000 வருஷங்களுக்கு முன்பு வாழ்ந்தவர்; அவரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், இயேசு உண்மையிலேயே எப்படிப்பட்டவராக இருந்தார் என்று நிறைய பேருக்குத் தெரியாது. அவர் ஒரு நல்ல மனிதர் என்று சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலர், அவர் ஒரு தீர்க்கதரிசி என்று சொல்கிறார்கள். வேறு சிலர், அவர்தான் கடவுள் என்று நம்புகிறார்கள். இயேசு யார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?—பின்குறிப்பு 12-ஐப் பாருங்கள்.

3. யெகோவாவையும் இயேசுவையும் பற்றி நீங்கள் தெரிந்துகொள்வது ஏன் முக்கியம்?

3 இயேசு உண்மையில் யார் என்று நீங்கள் தெரிந்துகொள்வது முக்கியம். ஏனென்றால், ‘ஒரே உண்மையான கடவுளையும், அவர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் பற்றித் தெரிந்துகொண்டே இருந்தால் முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்’ என்று பைபிள் சொல்கிறது. (யோவான் 17:3) அதனால், யெகோவாவைப் பற்றி மட்டுமல்லாமல் இயேசுவைப் பற்றியும் நீங்கள் தெரிந்துகொண்டால், பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழ முடியும். (யோவான் 14:6) அதோடு, இப்போது எப்படி வாழ வேண்டும் என்றும், மற்றவர்களை எப்படி நடத்த வேண்டும் என்றும் தெரிந்துகொள்வீர்கள்; ஏனென்றால், இதற்கு இயேசு மிகச் சிறந்த உதாரணமாக இருக்கிறார். (யோவான் 13:34, 35) இந்தப் புத்தகத்தின் முதல் அதிகாரத்தில் நாம் கடவுளைப் பற்றிய உண்மையைக் கற்றுக்கொண்டோம். இப்போது, இயேசுவைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று கற்றுக்கொள்வோம்.

நாங்கள் மேசியாவைக் கண்டுகொண்டோம்

4. “மேசியா” என்ற வார்த்தைக்கும் “கிறிஸ்து” என்ற வார்த்தைக்கும் என்ன அர்த்தம்?

4 இயேசு பிறப்பதற்குப் பல வருஷங்களுக்கு முன்பே, மேசியாவை அல்லது கிறிஸ்துவை அனுப்பப்போவதாக யெகோவா பைபிளில் வாக்குறுதி தந்திருந்தார். “மேசியா” என்ற வார்த்தை எபிரெய மொழியிலிருந்தும், “கிறிஸ்து” என்ற வார்த்தை கிரேக்க மொழியிலிருந்தும் வந்திருக்கிறது. இந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்? “தேர்ந்தெடுக்கப்பட்டவர்” என்று அர்த்தம்; அதாவது, ஒரு விசேஷ பொறுப்புக்காகக் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று அர்த்தம். கடவுள் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாவற்றையுமே மேசியா நிறைவேற்றுவார்.

5. இயேசுதான் மேசியா என்று அவருடைய சீஷர்கள் நம்பினார்களா?

5 கடவுள் அனுப்பப்போவதாகச் சொன்ன மேசியா இயேசுதான் என்பதை அவருடைய சீஷர்கள் உறுதியாக நம்பினார்கள். (யோவான் 1:41) உதாரணத்துக்கு, இயேசுவிடம் சீமோன் பேதுரு, “நீங்கள் கிறிஸ்து” என்று சொன்னார். (மத்தேயு 16:16) இயேசுதான் மேசியா என்பதை நாமும் ஏன் நம்பலாம்?

6. மேசியாவை அடையாளம் கண்டுகொள்ள யெகோவா எப்படிக் கடவுள்பக்தியுள்ள ஜனங்களுக்கு உதவினார்?

6 இயேசு பிறப்பதற்குப் பல வருஷங்களுக்கு முன்பே, அவரைப் பற்றிய நிறைய விவரங்களைக் கடவுளுடைய தீர்க்கதரிசிகள் எழுதியிருந்தார்கள். மேசியாவை அடையாளம் கண்டுகொள்ள அந்த விவரங்கள் உதவின. எப்படி? முன்பின் தெரியாத ஒருவரைக் கூட்டமாக இருக்கிற பஸ் ஸ்டாண்டிலிருந்து கூட்டிக்கொண்டு வரும்படி ஒருவர் உங்களிடம் சொல்வதாக வைத்துக்கொள்ளுங்கள். அந்த நபரைப் பற்றி சில விவரங்களை உங்களுக்கு யாராவது சொல்லியிருந்தால் நீங்கள் அவரைச் சுலபமாகக் கண்டுபிடிக்க முடியும். அதேபோல், மேசியா என்ன செய்வார், அவருக்கு என்ன நடக்கும் போன்ற விவரங்களை யெகோவா தன்னுடைய தீர்க்கதரிசிகள் மூலமாக நமக்குச் சொல்லியிருக்கிறார். அந்த எல்லா தீர்க்கதரிசனங்களும் நிறைவேறியதைப் பார்க்கும்போது, இயேசுதான் அந்த மேசியா என்பதைக் கடவுள்பக்தியுள்ள ஜனங்களால் தெரிந்துகொள்ள முடியும்.

7. இயேசுதான் மேசியா என்பதை நிரூபிக்கும் இரண்டு தீர்க்கதரிசனங்களைப் பற்றிச் சொல்லுங்கள்.

7 இயேசுவைப் பற்றிச் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்களில் இரண்டை இப்போது பார்க்கலாம். முதலாவதாக, இயேசு பிறப்பதற்கு 700 வருஷங்களுக்கு முன்பே, பெத்லகேம் என்ற சிறிய ஊரில்தான் மேசியா பிறப்பார் என்று மீகா சொல்லியிருந்தார். (மீகா 5:2) அங்கேதான் இயேசு பிறந்தார்! (மத்தேயு 2:1, 3-9) இரண்டாவதாக, கி.பி. 29-ம் வருஷத்தில்தான் மேசியா தோன்றுவார் என்று தானியேல் சொல்லியிருந்தார். (தானியேல் 9:25) இந்த இரண்டு தீர்க்கதரிசனங்களும் இன்னும் பல தீர்க்கதரிசனங்களும், இயேசுதான் மேசியா என்பதைத் தெளிவாக நிரூபிக்கின்றன.—பின்குறிப்பு 13-ஐப் பாருங்கள்.

இயேசு ஞானஸ்நானம் எடுத்தபோது மேசியாவாக அல்லது கிறிஸ்துவாக ஆனார்

8, 9. இயேசு ஞானஸ்நானம் எடுத்தபோது நடந்த சம்பவங்கள் அவர்தான் மேசியா என்பதை எப்படி நிரூபிக்கின்றன?

8 இயேசுதான் மேசியா என்பதை யெகோவா மிகத் தெளிவாகக் காட்டியிருக்கிறார். மேசியா யார் என்பதைத் தெரிந்துகொள்ள, யோவான் ஸ்நானகருக்குக் கடவுள் ஒரு அடையாளத்தைச் சொல்லியிருந்தார். கி.பி. 29-ல் இயேசு யோவானிடம் ஞானஸ்நானம் எடுத்தபோது அந்த அடையாளத்தை யோவான் பார்த்தார். அப்போது என்ன நடந்ததென்று பைபிள் சொல்கிறது: “இயேசு ஞானஸ்நானம் பெற்று தண்ணீருக்குள்ளிருந்து வெளியே வந்தவுடன், வானம் திறக்கப்பட்டது; கடவுளுடைய சக்தி புறாவைப் போல் அவர்மேல் இறங்குவதை யோவான் பார்த்தார். அப்போது, ‘இவர் என் அன்பு மகன், நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்’ என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.” (மத்தேயு 3:16, 17) யோவான் அந்தக் காட்சியைப் பார்த்தபோதும் கடவுளுடைய குரலைக் கேட்டபோதும், இயேசுதான் மேசியா என்பதைத் தெரிந்துகொண்டார். (யோவான் 1:32-34) அன்று யெகோவா தன்னுடைய சக்தியை இயேசுமேல் பொழிந்தபோதுதான், இயேசு மேசியாவாக ஆனார். அவரைத்தான் கடவுள் தலைவராகவும் ராஜாவாகவும் தேர்ந்தெடுத்திருந்தார்.—ஏசாயா 55:4.

9 பைபிள் தீர்க்கதரிசனங்களும், யெகோவா பேசிய வார்த்தைகளும், இயேசு ஞானஸ்நானம் எடுத்தபோது யெகோவா காட்டிய அடையாளமும் இயேசுதான் மேசியா என்பதை நிரூபிக்கின்றன. ஆனால், இயேசு எங்கிருந்து வந்தார்? அவர் எப்படிப்பட்டவராக இருந்தார்? இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

இயேசு எங்கிருந்து வந்தார்?

10. இயேசு பூமிக்கு வருவதற்கு முன்பு எங்கே இருந்ததாக பைபிள் சொல்கிறது?

10 இயேசு இந்தப் பூமிக்கு வருவதற்கு ரொம்பக் காலத்துக்கு முன்பே பரலோகத்தில் வாழ்ந்தார் என்று பைபிள் சொல்கிறது. “எண்ணிலடங்காத வருஷங்களுக்கு முன்பிருந்தே” மேசியா வாழ்ந்ததாக மீகா சொன்னார். (மீகா 5:2) பூமியில் மனிதனாகப் பிறப்பதற்கு முன்பு பரலோகத்தில் வாழ்ந்ததாக இயேசுவே பல முறை சொன்னார். (யோவான் 3:13; 6:38, 62; 17:4, 5 ஆகிய வசனங்களை வாசியுங்கள்.) பூமிக்கு வருவதற்கு முன்பே இயேசுவுக்கு யெகோவாவோடு நெருங்கிய பந்தம் இருந்தது.

11. இயேசு ஏன் யெகோவாவுக்கு மிக மிக விசேஷமானவராக இருக்கிறார்?

11 இயேசு யெகோவாவுக்கு மிக மிக விசேஷமானவர். ஏன்? முதலாவதாக, வேறு எதைப் படைப்பதற்கு முன்பும், வேறு யாரைப் படைப்பதற்கு முன்பும் இயேசுவைத்தான் யெகோவா படைத்தார். அதனால் இயேசு, ‘படைப்புகளிலேயே முதல் படைப்பாக இருக்கிறார்’ என்று பைபிள் சொல்கிறது. * (கொலோசெயர் 1:15) இரண்டாவதாக, இயேசுவை மட்டும்தான் யெகோவா நேரடியாகப் படைத்தார். அதனால், இயேசு ‘கடவுளுடைய ஒரே மகன்’ என்று சொல்லப்படுகிறார். (யோவான் 3:16) மூன்றாவதாக, இயேசுவின் மூலமாகத்தான் யெகோவா மற்ற எல்லாவற்றையுமே படைத்தார். (கொலோசெயர் 1:16) நான்காவதாக, இயேசுவின் மூலமாகத்தான் தேவதூதர்களிடமும் மனிதர்களிடமும் யெகோவா தன்னுடைய செய்திகளையும் அறிவுரைகளையும் தெரிவித்தார். அதனால் இயேசு “வார்த்தை” என்று அழைக்கப்படுகிறார்.—யோவான் 1:14.

12. இயேசுவும் கடவுளும் ஒரே நபர் இல்லை என்று நமக்கு எப்படித் தெரியும்?

12 இயேசுவும் கடவுளும் ஒரே நபர்தான் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் பைபிள் அப்படிச் சொல்வதில்லை. இயேசு படைக்கப்பட்டார் என்றுதான் அது சொல்கிறது. அப்படியென்றால், இயேசுவுக்கு ஒரு ஆரம்பம் இருந்தது. ஆனால், எல்லாவற்றையும் படைத்த யெகோவாவுக்கு ஆரம்பமே இல்லை. (சங்கீதம் 90:2) கடவுளுடைய மகனாகிய இயேசு, கடவுளுக்குச் சமமாக இருக்க வேண்டுமென்று ஒருபோதும் நினைத்ததில்லை. தகப்பன் மகனைவிட பெரியவர் என்று பைபிள் தெளிவாகச் சொல்கிறது. (யோவான் 14:28-ஐ வாசியுங்கள்; 1 கொரிந்தியர் 11:3) யெகோவா மட்டும்தான் “சர்வவல்லமையுள்ள கடவுள்.” (ஆதியாகமம் 17:1) இந்தப் பிரபஞ்சத்தில் அவரைவிட உயர்ந்தவர் அல்லது அவரைவிட சக்தியுள்ளவர் யாருமே இல்லை.—பின்குறிப்பு 14-ஐப் பாருங்கள்.

13. இயேசு “கடவுளுடைய சாயலாக” இருக்கிறார் என்று பைபிள் ஏன் சொல்கிறது?

13 வானமும் பூமியும் படைக்கப்படுவதற்கு முன்பு யெகோவாவும் அவருடைய மகனாகிய இயேசுவும் கோடிக்கணக்கான வருஷங்களாக ஒன்றுசேர்ந்து வேலை செய்தார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் எந்தளவுக்கு நேசித்திருப்பார்கள்! (யோவான் 3:35; 14:31) இயேசு தன்னுடைய தகப்பனின் குணங்களை அப்படியே காட்டியதால், அவர் “கடவுளுடைய சாயலாக” இருக்கிறார் என்று பைபிள் சொல்கிறது.—கொலோசெயர் 1:15.

14. யெகோவாவின் விசேஷமான மகன் எப்படி ஒரு மனிதனாகப் பிறந்தார்?

14 யெகோவாவின் விசேஷமான மகன் பரலோகத்தைவிட்டு இந்தப் பூமிக்கு வந்து ஒரு மனிதனாகப் பிறந்தார். அவரால் எப்படி ஒரு மனிதனாகப் பிறக்க முடிந்தது? யெகோவா பரலோகத்திலிருந்த தன் மகனின் உயிரைப் பூமியிலிருந்த கன்னிப் பெண்ணாகிய மரியாளின் கருப்பைக்கு மாற்றினார். அதனால், இயேசுவுக்கு மனித தகப்பன் தேவைப்படவில்லை. மரியாள் பரிபூரணமான மகனைப் பெற்றெடுத்து, அந்த மகனுக்கு இயேசு என்று பெயர் வைத்தார்.—லூக்கா 1:30-35.

இயேசு எப்படிப்பட்டவர்?

15. நீங்கள் எப்படி யெகோவாவைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும்?

15 பைபிளிலுள்ள மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய புத்தகங்களைப் படித்தால் இயேசுவையும் அவருடைய வாழ்க்கையையும் அவருடைய குணங்களையும் பற்றி நீங்கள் நிறைய கற்றுக்கொள்ள முடியும். அந்த நான்கு புத்தகங்களும் சுவிசேஷங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இயேசு அவருடைய தகப்பனைப் போலவே நடந்துகொள்வதால், அவரைப் பற்றித் தெரிந்துகொள்வது யெகோவாவைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள உங்களுக்கு உதவும். அதனால்தான், “என்னைப் பார்த்தவன் என் தகப்பனையும் பார்த்திருக்கிறான்” என்று இயேசு சொன்னார்.—யோவான் 14:9.

16. இயேசு எதைப் பற்றி முக்கியமாகக் கற்றுக்கொடுத்தார்? யாரிடம் கேட்ட விஷயங்களை அவர் கற்றுக்கொடுத்தார்?

16 நிறைய பேர் இயேசுவை “போதகர்” என்று கூப்பிட்டார்கள். (யோவான் 1:38; 13:13) ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்திதான்’ அவர் கற்றுக்கொடுத்த மிக முக்கியமான விஷயம். கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன? அது பரலோகத்திலிருந்து பூமி முழுவதையும் ஆட்சி செய்யப்போகும் அரசாங்கம்; கடவுளுடைய பேச்சைக் கேட்டு நடக்கிற மக்களுக்கு அது நிறைய ஆசீர்வாதங்களைத் தரும். (மத்தேயு 4:23) யெகோவாவிடம் கேட்ட விஷயங்களைத்தான் இயேசு மக்களுக்குக் கற்றுக்கொடுத்தார். அதனால்தான், “என் போதனை என்னுடையதல்ல, என்னை அனுப்பியவருடையது” என்று அவர் சொன்னார். (யோவான் 7:16) கடவுளுடைய அரசாங்கம் இந்தப் பூமி முழுவதையும் ஆட்சி செய்யும் என்ற நல்ல செய்தியை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார்; இது இயேசுவுக்குத் தெரிந்திருந்தது.

17. இயேசு எந்தெந்த இடங்களில் மக்களுக்குக் கற்றுக்கொடுத்தார்? அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க ஏன் கடினமாக உழைத்தார்?

17 இயேசு எந்தெந்த இடங்களில் மக்களுக்குக் கற்றுக்கொடுத்தார்? எங்கெல்லாம் மக்களைப் பார்த்தாரோ அங்கெல்லாம் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். நாட்டுப்புறங்களிலும், நகரங்களிலும், கிராமங்களிலும், சந்தைவெளிகளிலும், வீடுகளிலும், கடவுளை வணங்குவதற்காக மக்கள் கூடிவந்த இடங்களிலும் அவர் கற்றுக்கொடுத்தார். மக்கள் தன்னைத் தேடிவர வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கவில்லை. அவர்தான் அவர்களைத் தேடிப் போனார். (மாற்கு 6:56; லூக்கா 19:5, 6) இயேசு மக்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்காகக் கடினமாக உழைத்தார்; அதற்காக நிறைய நேரத்தையும் சக்தியையும் செலவழித்தார். ஏன்? ஏனென்றால், அதுதான் கடவுளுடைய விருப்பம் என்று அவருக்குத் தெரியும்; அதுமட்டுமல்ல, அவர் எப்போதுமே தன்னுடைய தகப்பனுக்குக் கீழ்ப்படிந்தார். (யோவான் 8:28, 29) அதோடு, மக்கள்மேல் அவருக்குக் கரிசனை இருந்தது. (மத்தேயு 9:35, 36-ஐ வாசியுங்கள்.) அன்றிருந்த மதத் தலைவர்கள் கடவுளையும் அவருடைய அரசாங்கத்தையும் பற்றிய உண்மைகளை மக்களுக்குக் கற்றுக்கொடுக்கவில்லை. அதனால், முடிந்தவரை எல்லா மக்களுக்கும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைச் சொல்ல அவர் விரும்பினார்.

18. இயேசு காட்டிய எந்தக் குணங்கள் உங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது?

18 இயேசுவுக்கு மக்கள்மேல் அன்பும் அக்கறையும் இருந்தது. அவர் கனிவோடு நடந்துகொண்டார், எல்லாரோடும் சகஜமாகப் பேசினார். அதனால், பிள்ளைகள்கூட அவரோடு இருக்க விரும்பினார்கள். (மாற்கு 10:13-16) இயேசு எப்போதுமே நியாயமாக நடந்துகொண்டார். ஊழலையும் அநியாயத்தையும் அவர் வெறுத்தார். (மத்தேயு 21:12, 13) அவர் இந்தப் பூமியில் வாழ்ந்த காலத்தில், பெண்களுக்கு நிறைய உரிமைகள் கொடுக்கப்படவில்லை, அவர்கள் மதிப்புமரியாதையோடு நடத்தப்படவில்லை. ஆனால், இயேசு எப்போதும் அவர்களை மரியாதையோடும் கண்ணியத்தோடும் நடத்தினார். (யோவான் 4:9, 27) இயேசு மிகுந்த மனத்தாழ்மையோடும் நடந்துகொண்டார். உதாரணத்துக்கு, ஒருமுறை அவருடைய அப்போஸ்தலர்களின் பாதங்களைக் கழுவினார். இதைப் பொதுவாக வேலைக்காரர்கள்தான் செய்தார்கள்.—யோவான் 13:2-5, 12-17.

மக்கள் எங்கெல்லாம் இருந்தார்களோ அங்கெல்லாம் இயேசு அவர்களிடம் பிரசங்கித்தார்

19. மக்களுக்கு உண்மையிலேயே என்ன தேவை என்று இயேசுவுக்குத் தெரிந்திருந்ததையும், அவர்களுக்கு உதவி செய்ய அவர் விரும்பியதையும் எந்த உதாரணம் காட்டுகிறது?

19 மக்களுக்கு உண்மையிலேயே என்ன தேவை என்று இயேசுவுக்குத் தெரிந்திருந்தது; அவர்களுக்கு உதவி செய்ய அவர் விரும்பினார். கடவுளுடைய சக்தியால் அவர் மக்களை அற்புதமாகக் குணப்படுத்தியபோது இது தெளிவாகத் தெரிந்தது. (மத்தேயு 14:14) உதாரணத்துக்கு, தொழுநோயாளி ஒருவன் இயேசுவிடம் வந்து, “உங்களுக்கு விருப்பம் இருந்தால், என்னைச் சுத்தமாக்க முடியும்” என்று சொன்னான். அவனுடைய வேதனையையும் வலியையும் பார்த்து இயேசு மனம் உருகினார். அவன்மேல் பரிதாபப்பட்டு, அவனுக்கு உதவி செய்ய விரும்பினார். அதனால், தன் கையை நீட்டி அவனைத் தொட்டு, “எனக்கு விருப்பம் இருக்கிறது, நீ சுத்தமாகு” என்று சொன்னார். உடனே அவன் குணமானான்! (மாற்கு 1:40-42) அப்போது அவனுக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?

எப்போதும் தகப்பனுக்கு உண்மையோடு இருந்தார்

20, 21. கடவுளுக்குக் கீழ்ப்படிவதில் இயேசுதான் மிகச் சிறந்த உதாரணம் என்று எப்படிச் சொல்லலாம்?

20 கடவுளுக்குக் கீழ்ப்படிவதில் இயேசுதான் மிகச் சிறந்த உதாரணம். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும், எப்படிப்பட்ட எதிர்ப்பின் மத்தியிலும் அவர் தன் தகப்பனுக்கு உண்மையோடு இருந்தார். உதாரணத்துக்கு, சாத்தான் சோதித்தபோது இயேசு பாவம் செய்யவில்லை. (மத்தேயு 4:1-11) அவர்தான் மேசியா என்பதை அவருடைய குடும்பத்திலிருந்த சிலர்கூட நம்பவில்லை. “அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது” என்று சொன்னார்கள். ஆனாலும், இயேசு கடவுளுடைய வேலையைத் தொடர்ந்து செய்துவந்தார். (மாற்கு 3:21) எதிரிகள் கொடூரமாக நடந்துகொண்டபோதும், இயேசு கடவுளுக்கு உண்மையோடு இருந்தார்; அவர்களுக்கு எந்தக் கெடுதலும் செய்ய அவர் நினைக்கவில்லை.—1 பேதுரு 2:21-23.

21 இயேசு கொடூரமான விதத்தில் கொலை செய்யப்பட்டார். மரண வேதனையை அனுபவித்த சமயத்தில்கூட அவர் யெகோவாவுக்கு உண்மையோடு இருந்தார். (பிலிப்பியர் 2:8-ஐ வாசியுங்கள்.) அவர் இறந்துபோன நாளில் எதையெல்லாம் சகிக்க வேண்டியிருந்தது என்பதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். எதிரிகள் அவரைக் கைது செய்தார்கள், அவர் தெய்வ நிந்தனை செய்ததாகச் சிலர் பொய் சாட்சி சொன்னார்கள், நேர்மையில்லாத நீதிபதிகள் அவரைக் கண்டனம் செய்தார்கள், ஆட்கள் அவரைக் கேலி செய்து சிரித்தார்கள், வீரர்கள் அவரைச் சித்திரவதை செய்து மரக்கம்பத்தில் வைத்து ஆணியடித்தார்கள். உயிர்போகும் சமயத்தில் அவர், “முடித்துவிட்டேன்!” என்று சத்தமாகச் சொன்னார். (யோவான் 19:30) இயேசு இறந்து மூன்று நாட்களுக்குப் பிறகு யெகோவா அவரைப் பரலோகத்துக்குரிய உடலில் உயிரோடு எழுப்பினார். (1 பேதுரு 3:18) சில வாரங்களுக்குப் பிறகு இயேசு பரலோகத்துக்குத் திரும்பிப்போய், “கடவுளுடைய வலது பக்கத்தில் உட்கார்ந்தார்.” கடவுள் தன்னை ராஜாவாக்கும்வரை அவர் காத்துக்கொண்டிருந்தார்.—எபிரெயர் 10:12, 13.

22. இயேசு தன்னுடைய தகப்பனுக்கு உண்மையோடு இருந்ததால் நமக்கு என்ன வாய்ப்புக் கிடைத்திருக்கிறது?

22 இயேசு யெகோவாவுக்கு உண்மையோடு இருந்ததால்தான் பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழப்போகிற வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது. நாம் அப்படி வாழ வேண்டும் என்பதுதான் யெகோவாவின் விருப்பம். அடுத்த அதிகாரத்தில், என்றென்றும் வாழப்போகிற வாய்ப்பு நமக்குக் கிடைத்திருப்பதற்கும் இயேசுவின் மரணத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று பார்ப்போம்.

^ பாரா. 11 யெகோவா நம்மைப் படைத்திருப்பதால் நம்முடைய தகப்பன் என்று அழைக்கப்படுகிறார். (ஏசாயா 64:8) இயேசுவை யெகோவா படைத்ததால் இயேசு கடவுளுடைய மகன் என்று அழைக்கப்படுகிறார். தேவதூதர்களும் முதல் மனிதனாகிய ஆதாமும்கூட கடவுளுடைய மகன்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.—யோபு 1:6, அடிக்குறிப்பு; லூக்கா 3:38.