Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 18

கடவுளுக்கு என்னை அர்ப்பணித்து, ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமா?

கடவுளுக்கு என்னை அர்ப்பணித்து, ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமா?

1. இந்தப் புத்தகத்தை நன்றாகப் படித்த பிறகு நீங்கள் என்ன யோசிக்கலாம்?

நீங்கள் பைபிளிலுள்ள நிறைய உண்மைகளைப் பற்றி இந்தப் புத்தகத்திலிருந்து கற்றுக்கொண்டீர்கள். உதாரணத்துக்கு, கடவுள் வாக்குக் கொடுத்திருக்கும் முடிவில்லாத வாழ்வு, இறந்தவர்களின் நிலைமை, உயிர்த்தெழுதல் நம்பிக்கை போன்ற விஷயங்களைத் தெரிந்துகொண்டீர்கள். (பிரசங்கி 9:5; லூக்கா 23:43; யோவான் 5:28, 29; வெளிப்படுத்துதல் 21:3, 4) நீங்கள் யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்குப் போகவும் ஆரம்பித்திருக்கலாம். அவர்கள்தான் சரியான வழியில் கடவுளை வணங்குகிறார்கள் என்பதை நீங்கள் நம்ப ஆரம்பித்திருக்கலாம். (யோவான் 13:35) யெகோவாவோடு நீங்கள் நெருங்கிய பந்தத்தை வளர்க்க ஆரம்பித்திருக்கலாம். அவருக்குச் சேவை செய்ய வேண்டுமென்று நீங்கள் முடிவு எடுத்திருக்கலாம். அதனால், ‘கடவுளுக்குச் சேவை செய்ய இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று நீங்கள் யோசிக்கலாம்.

2. ஒரு எத்தியோப்பிய அதிகாரி ஏன் ஞானஸ்நானம் எடுக்க விரும்பினார்?

2 இயேசுவின் காலத்தில் வாழ்ந்த ஒரு எத்தியோப்பிய அதிகாரியும் அப்படித்தான் யோசித்தார். இயேசு உயிரோடு எழுப்பப்பட்ட கொஞ்சக் காலத்தில், இயேசுவின் சீஷராகிய பிலிப்பு அவரிடம் பிரசங்கித்தார். இயேசுதான் மேசியா என்பதை அவருக்கு வசனங்களிலிருந்து காட்டினார். கற்றுக்கொண்ட விஷயங்கள் அந்த எத்தியோப்பிய அதிகாரியின் மனதைத் தொட்டதால் அவர் உடனே, “இதோ, இங்கே தண்ணீர் இருக்கிறது! ஞானஸ்நானம் எடுக்க இனி எனக்கு என்ன தடை?” என்று கேட்டார்.—அப்போஸ்தலர் 8:26-36.

3. (அ) இயேசு தன் சீஷர்களுக்கு என்ன கட்டளை கொடுத்தார்? (ஆ) ஒருவர் எப்படிப்பட்ட ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்?

3 நீங்கள் யெகோவாவுக்குச் சேவை செய்ய விரும்பினால் ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமென்று பைபிள் தெளிவாகச் சொல்கிறது. இயேசு தன் சீஷர்களிடம், “எல்லா தேசத்தாரையும் சீஷர்களாக்கி, . . . [அவர்களுக்கு] ஞானஸ்நானம் கொடுங்கள்” என்று சொன்னார். (மத்தேயு 28:19) இயேசுவும் ஞானஸ்நானம் எடுப்பதன் மூலம் எல்லாருக்கும் ஒரு முன்மாதிரி வைத்தார். அவர் ஞானஸ்நானம் எடுத்தபோது அவருடைய தலையில் தண்ணீர் தெளிக்கப்படவில்லை, ஆனால் அவர் தண்ணீருக்குள் அமிழ்த்தி எடுக்கப்பட்டார். (மத்தேயு 3:16) இன்றும் ஒருவர் ஞானஸ்நானம் எடுக்கும்போது, தண்ணீருக்குள் அமிழ்த்தி எடுக்கப்பட வேண்டும்.

4. உங்கள் ஞானஸ்நானம் மற்றவர்களுக்கு எதைக் காட்டும்?

4 நீங்கள் ஞானஸ்நானம் எடுக்கும்போது, கடவுளுடைய நண்பராக இருக்கவும் அவருக்குச் சேவை செய்யவும் ஆசைப்படுகிறீர்கள் என்று மற்றவர்கள் தெரிந்துகொள்வார்கள். (சங்கீதம் 40:7, 8) அதனால் நீங்கள் ஒருவேளை, ‘ஞானஸ்நானம் எடுக்க நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று யோசிக்கலாம்.

அறிவும் விசுவாசமும் தேவை

5. (அ) ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு நீங்கள் முதலாவதாக என்ன செய்ய வேண்டும்? (ஆ) கிறிஸ்தவக் கூட்டங்களுக்குப் போவது ஏன் முக்கியம்?

5 நீங்கள் ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு யெகோவாவையும் இயேசுவையும் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் பைபிளைப் படிப்பதன் மூலம் ஏற்கெனவே இதைச் செய்ய ஆரம்பித்துவிட்டீர்கள். (யோவான் 17:3-ஐ வாசியுங்கள்.) ஆனால், இது மட்டும் போதாது. நீங்கள் யெகோவாவின் விருப்பத்தைப் பற்றிய “திருத்தமான அறிவால் நிரப்பப்பட வேண்டும்” என்று பைபிள் சொல்கிறது. (கொலோசெயர் 1:9) யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்கள், யெகோவாவிடம் நெருங்கிய பந்தத்தை வளர்க்க உங்களுக்கு உதவும். நீங்கள் அந்தக் கூட்டங்களுக்குத் தவறாமல் போக வேண்டியதற்கு அது ஒரு முக்கியமான காரணம்.—எபிரெயர் 10:24, 25.

ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு, பைபிளில் இருக்கும் விஷயங்களை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்

6. நீங்கள் ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு பைபிளை எந்தளவுக்குத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்?

6 ஆனால், நீங்கள் ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு பைபிளில் இருக்கிற எல்லா விஷயங்களையும் தெரிந்துகொள்ள வேண்டுமென்று யெகோவா எதிர்பார்ப்பதில்லை. அதை அந்த எத்தியோப்பிய அதிகாரியிடமும் அவர் எதிர்பார்க்கவில்லை. (அப்போஸ்தலர் 8:30, 31) அதோடு, நாம் கடவுளைப் பற்றி என்றென்றும் கற்றுக்கொண்டே இருப்போம். (பிரசங்கி 3:11) ஆனால், நீங்கள் ஞானஸ்நானம் எடுப்பதற்கு, பைபிளின் அடிப்படை போதனைகளை மட்டுமாவது தெரிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் வேண்டும்.—எபிரெயர் 5:12.

7. பைபிளைப் படித்தது உங்களுக்கு எப்படி உதவியிருக்கிறது?

7 “விசுவாசமில்லாமல் யாரும் கடவுளைப் பிரியப்படுத்தவே முடியாது” என்று பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 11:6) அதனால் நீங்கள் ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு விசுவாசத்தைக் காட்ட வேண்டும். பழங்கால நகரமாகிய கொரிந்துவில் இருந்த சிலர் இயேசுவின் சீஷர்கள் கற்றுக்கொடுத்த விஷயங்களைக் கேட்டதால், “விசுவாசம் வைத்து ஞானஸ்நானம் எடுத்தார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (அப்போஸ்தலர் 18:8) அதேபோல், நீங்கள் பைபிளைப் படித்தது கடவுளுடைய வாக்குறுதிகளில் விசுவாசம் வைக்க உங்களுக்கு உதவியிருக்கிறது. அதோடு, இயேசுவின் பலி நம்மைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுவிக்கும் என்பதில் விசுவாசம் வைக்க உங்களுக்கு உதவியிருக்கிறது.—யோசுவா 23:14; அப்போஸ்தலர் 4:12; 2 தீமோத்தேயு 3:16, 17.

பைபிள் உண்மைகளை மற்றவர்களிடம் சொல்லுங்கள்

8. கற்றுக்கொள்ளும் விஷயங்களை மற்றவர்களிடம் சொல்ல எது உங்களைத் தூண்டும்?

8 நீங்கள் பைபிள் விஷயங்களை அதிகமாகக் கற்றுக்கொண்டு, உங்கள் வாழ்க்கைக்கு அது எப்படி உதவுகிறது என்று பார்க்கும்போது, உங்கள் விசுவாசம் பலமாகும். நீங்கள் கற்றுக்கொள்ளும் விஷயங்களை மற்றவர்களிடம் சொல்ல ஆசைப்படுவீர்கள். (எரேமியா 20:9; 2 கொரிந்தியர் 4:13) ஆனால், அவற்றை நீங்கள் யாரிடமெல்லாம் சொல்லலாம்?

உங்களுக்கு இருக்கும் விசுவாசம், நீங்கள் நம்புகிற விஷயங்களை மற்றவர்களுக்குச் சொல்ல உங்களைத் தூண்ட வேண்டும்

9, 10. (அ) கற்றுக்கொள்ளும் விஷயங்களை நீங்கள் யாரிடம் சொல்ல ஆரம்பிக்கலாம்? (ஆ) சபையோடு சேர்ந்து ஊழியம் செய்ய ஆசைப்பட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

9 கற்றுக்கொள்ளும் விஷயங்களை உங்கள் குடும்பத்தாரிடம், நண்பர்களிடம், அக்கம்பக்கத்தில் இருக்கிறவர்களிடம், அல்லது உங்களோடு வேலை செய்கிறவர்களிடம் சொல்ல நீங்கள் விரும்பலாம். அது பாராட்ட வேண்டிய விஷயம், ஆனால் எப்போதுமே கனிவோடும் அன்போடும் பேசுங்கள். அப்படிச் செய்தால், சீக்கிரத்தில் சபையோடு சேர்ந்து ஊழியம் செய்ய உங்களால் முடியும். அதற்கு நீங்கள் தயாராகிவிட்டதாக நினைத்தால், உங்களுக்கு பைபிளைக் கற்றுக்கொடுக்கும் யெகோவாவின் சாட்சியிடம் சொல்லுங்கள். அதற்கு நீங்கள் தயாராகிவிட்டதாக அவரும் நினைத்தால்... அதுவும், பைபிள் சொல்கிறபடி நீங்கள் வாழ்ந்துவந்தால்... சபையில் இருக்கிற இரண்டு மூப்பர்கள் உங்கள் இரண்டு பேரையும் சந்தித்துப் பேசுவார்கள்.

10 அந்த மூப்பர்கள் எதற்காக உங்களைச் சந்தித்துப் பேசுவார்கள்? பைபிளின் அடிப்படை போதனைகளை நீங்கள் புரிந்து வைத்திருக்கிறீர்களா, அவற்றை நம்புகிறீர்களா, அன்றாட வாழ்க்கையில் பைபிள் சொல்கிறபடி நடக்கிறீர்களா, யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஆக உண்மையிலேயே விரும்புகிறீர்களா என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள அவர்கள் உங்களிடம் பேசுவார்கள். மூப்பர்கள் உங்களை மட்டுமல்லாமல், சபையிலுள்ள எல்லாரையும் அக்கறையோடு கவனித்துக்கொள்கிறார்கள். அதனால் அவர்களிடம் பேசுவதற்குப் பயப்படாதீர்கள். (அப்போஸ்தலர் 20:28; 1 பேதுரு 5:2, 3) உங்களிடம் பேசிய பிறகு, நீங்கள் சபையோடு சேர்ந்து ஊழியம் செய்யலாமா என்று அவர்கள் சொல்வார்கள்.

11. சபையோடு சேர்ந்து ஊழியம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பு நீங்கள் மாற்றங்களைச் செய்வது ஏன் ரொம்ப முக்கியம்?

11 சபையோடு சேர்ந்து ஊழியம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பு ஒருவேளை நீங்கள் இன்னும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்று அந்த மூப்பர்கள் சொல்லலாம். அந்த மாற்றங்களைச் செய்வது ஏன் ரொம்ப முக்கியம்? ஏனென்றால், நாம் யெகோவாவைப் பற்றி மற்றவர்களிடம் பேசும்போது, அவருடைய பிரதிநிதிகளாக இருக்கிறோம்; அதனால், அவருக்குப் புகழ் சேர்க்கும் விதத்தில் நாம் வாழ வேண்டும்.—1 கொரிந்தியர் 6:9, 10; கலாத்தியர் 5:19-21.

மனம் திருந்தி, உங்கள் வழியை மாற்றிக்கொள்ளுங்கள்

12. ஏன் எல்லாருமே மனம் திருந்த வேண்டும்?

12 ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு நீங்கள் இன்னும் சில விஷயங்களையும் செய்ய வேண்டும். “மனம் திருந்தி, உங்கள் வழியை மாற்றிக்கொள்ளுங்கள்; அப்போதுதான் உங்களுடைய பாவங்கள் துடைத்தழிக்கப்படும்” என்று அப்போஸ்தலன் பேதுரு சொன்னார். (அப்போஸ்தலர் 3:19) மனம் திருந்துவது என்றால் என்ன? நாம் ஏதாவது தவறு செய்திருந்தால் அதற்காக மனதார வருத்தப்படுவதை அது அர்த்தப்படுத்துகிறது. உதாரணத்துக்கு, நீங்கள் ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழ்ந்திருந்தால், இப்போது மனம் திருந்த வேண்டும். உங்கள் வாழ்நாள் முழுவதும் சரியானதைச் செய்ய முயற்சி எடுத்திருந்தாலும் நீங்கள் மனம் திருந்த வேண்டும். ஏனென்றால், நாம் எல்லாருமே பாவம் செய்கிறோம்; அதனால், கடவுளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.—ரோமர் 3:23; 5:12.

13. ‘வழியை மாற்றிக்கொள்வது’ என்றால் என்ன?

13 செய்த தவறுக்காக நீங்கள் மனம் வருந்தினால் மட்டும் போதுமா? போதாது. “உங்கள் வழியை மாற்றிக்கொள்ளுங்கள்” என்றும் பேதுரு சொன்னார். நீங்கள் முன்பு செய்த தவறான காரியங்களை விட்டுவிட்டு சரியானதைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. உதாரணமாக, முதல் முறையாக நீங்கள் ஒரு இடத்துக்குப் போவதாகக் கற்பனை செய்து பாருங்கள். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு, நீங்கள் தவறான வழியில் போய்க்கொண்டிருப்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். அப்போது என்ன செய்வீர்கள்? உங்கள் வண்டியின் வேகத்தைக் குறைத்து, அதை நிறுத்தி, உங்கள் வழியை மாற்றிக்கொண்டு, சரியான பாதையில் போவீர்கள். அதேபோல், நீங்கள் பைபிளைப் படிக்கும்போது, உங்கள் வாழ்க்கையில் சில விஷயங்களை அல்லது பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளலாம். அப்போது, ‘உங்கள் வழியை மாற்றிக்கொள்ள,’ அதாவது தேவையான மாற்றங்களைச் செய்ய, தயங்காதீர்கள்; சரியானதைச் செய்ய ஆரம்பியுங்கள்.

உங்களையே அர்ப்பணியுங்கள்

யெகோவாவுக்குச் சேவை செய்வதாக அவரிடம் வாக்குக் கொடுத்துவிட்டீர்களா?

14. நீங்கள் எப்படி உங்களையே கடவுளுக்கு அர்ப்பணிப்பீர்கள்?

14 ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு நீங்கள் இன்னொரு முக்கியமான விஷயத்தைச் செய்ய வேண்டும். அதாவது, உங்களையே யெகோவாவுக்கு அர்ப்பணிக்க வேண்டும். ஜெபத்தில் யெகோவாவிடம் நீங்கள் ஒரு வாக்குக் கொடுக்க வேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. அதாவது, யெகோவாவை மட்டுமே வணங்கப்போவதாகவும், உங்கள் வாழ்க்கையில் அவருடைய விருப்பத்துக்கே முதலிடம் தரப்போவதாகவும் அவரிடம் வாக்குக் கொடுக்க வேண்டும்.—உபாகமம் 6:15.

15, 16. கடவுளுக்குத் தன்னை அர்ப்பணிக்க எது ஒருவரைத் தூண்டுகிறது?

15 யெகோவாவை மட்டுமே வணங்குவதாக நீங்கள் வாக்குக் கொடுப்பதை எதற்கு ஒப்பிடலாம்? நீங்கள் நேசிக்கும் ஒருவரோடு காலமெல்லாம் வாழப்போவதாக வாக்குக் கொடுப்பதற்கு ஒப்பிடலாம். ஒரு ஆணும் பெண்ணும் பழக ஆரம்பிப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அந்த ஆண் அந்தப் பெண்ணை நன்றாகத் தெரிந்துகொள்ளும்போது அவளை நேசிக்கிறார். அவளைக் கல்யாணம் செய்துகொள்ள விரும்புகிறார். அவளை நேசிப்பதால் அந்த மிகப் பெரிய பொறுப்பை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்.

16 அதேபோல், நீங்கள் யெகோவாவைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ளும்போது அவரை நேசிக்க ஆரம்பிக்கிறீர்கள். அவருக்கு முழுமூச்சோடு சேவை செய்ய விரும்புகிறீர்கள். இது, அவருக்குச் சேவை செய்யப்போவதாக அவரிடம் வாக்குக் கொடுக்க உங்களைத் தூண்டுகிறது. இயேசுவைப் பின்பற்ற விரும்புகிற ஒவ்வொருவரும் ‘தன்னையே துறக்க’ வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (மாற்கு 8:34) இதன் அர்த்தம் என்ன? உங்கள் வாழ்க்கையில் யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதற்கே முதலிடம் தர வேண்டும் என்பதுதான் இதன் அர்த்தம். நம்முடைய ஆசைகளையும் லட்சியங்களையும்விட யெகோவாவின் விருப்பம்தான் ரொம்ப முக்கியம்.1 பேதுரு 4:2-ஐ வாசியுங்கள்.

வாக்குத் தவறிவிடுவீர்களோ என்று பயப்படாதீர்கள்

17. சிலர் ஏன் தங்களை யெகோவாவுக்கு அர்ப்பணிப்பதில்லை?

17 கடவுளுக்குச் சேவை செய்யப்போவதாகக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போய்விடுமோ என்று சிலர் பயப்படுகிறார்கள். அதனால், தங்களை யெகோவாவுக்கு அர்ப்பணிக்காமல் இருந்துவிடுகிறார்கள். யெகோவாவுக்கு ஏமாற்றம் அளிக்க அவர்கள் விரும்புவதில்லை. அவருக்குத் தங்களை அர்ப்பணிக்காவிட்டால் வாழ்க்கையில் என்ன செய்தாலும் அவர் கண்டுகொள்ள மாட்டார் என்றுகூட அவர்கள் நினைக்கலாம்.

18. யெகோவாவுக்கு ஏமாற்றம் அளித்துவிடுவோமோ என்ற பயத்தை விட்டொழிக்க எது உங்களுக்கு உதவும்?

18 யெகோவாவின் மேல் உங்களுக்கு இருக்கும் அன்பு, அவருக்கு ஏமாற்றம் அளித்துவிடுவோமோ என்ற பயத்தை விட்டொழிக்க உங்களுக்கு உதவும். அவரை நேசிப்பதால், அவருக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற எல்லா முயற்சியும் எடுப்பீர்கள். (பிரசங்கி 5:4; கொலோசெயர் 1:10) யெகோவாவின் விருப்பத்தைச் செய்வது ரொம்பக் கஷ்டம் என்று நினைக்க மாட்டீர்கள். “நாம் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதுதான் அவர்மீது அன்பு காட்டுவதாகும். அவருடைய கட்டளைகள் பாரமானவை அல்ல” என்று அப்போஸ்தலன் யோவான் எழுதினார்.—1 யோவான் 5:3.

19. யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணிக்க நீங்கள் ஏன் பயப்படக் கூடாது?

19 யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணிக்க நீங்கள் எந்தத் தவறுமே செய்யாத பரிபூரண நபராக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. நம்மால் செய்ய முடியாததை அவர் நம்மிடம் எதிர்பார்ப்பதில்லை. (சங்கீதம் 103:14) சரியானதைச் செய்ய அவர் உங்களுக்கு உதவுவார். (ஏசாயா 41:10) யெகோவாவை முழு இதயத்தோடு நம்புங்கள்; ‘அப்போது, உங்கள் வழியில் இருக்கும் தடைகளையெல்லாம் அவர் நீக்கிவிடுவார்.’—நீதிமொழிகள் 3:5, 6.

மீட்புப் பெற உங்கள் வாயினால் அறிவிக்க வேண்டும்

20. கடவுளுக்கு உங்களை அர்ப்பணித்த பிறகு, அடுத்ததாக என்ன செய்ய வேண்டும்?

20 யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணிக்க நீங்கள் தயாரா? அவருக்கு உங்களை அர்ப்பணித்த பிறகு, அடுத்த படியை எடுக்கத் தயாராக இருப்பீர்கள். அதுதான் ஞானஸ்நானம்.

21, 22. உங்கள் விசுவாசத்தை எப்படி ‘வாயினால் அறிவிப்பீர்கள்’?

21 யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணித்திருப்பதைப் பற்றியும் ஞானஸ்நானம் எடுக்க நீங்கள் விரும்புவதைப் பற்றியும் உங்கள் சபையுடைய மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளரிடம் சொல்லுங்கள். பைபிளின் அடிப்படை போதனைகளை நீங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்களா என்று பார்ப்பதற்கு சில மூப்பர்களை அவர் ஏற்பாடு செய்வார். நீங்கள் ஞானஸ்நானத்துக்குத் தயாராகிவிட்டதாக அவர்கள் நினைத்தால், யெகோவாவின் சாட்சிகளுடைய அடுத்த மாநாட்டில் ஞானஸ்நானம் எடுக்கலாம் என்று உங்களிடம் சொல்வார்கள். மாநாட்டில், ஞானஸ்நானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி ஒரு பேச்சு கொடுக்கப்படும். அந்தப் பேச்சைக் கொடுப்பவர், ஞானஸ்நானம் எடுக்க வந்திருப்பவர்களிடம் கடைசியில் இரண்டு கேள்விகளைக் கேட்பார். அந்தக் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்வதன் மூலம், உங்கள் விசுவாசத்தை ‘வாயினால் அறிவிப்பீர்கள்.’—ரோமர் 10:10.

22 பிறகு, உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்படும். நீங்கள் தண்ணீரில் அமிழ்த்தி எடுக்கப்படுவீர்கள். நீங்கள் ஞானஸ்நானம் எடுக்கும்போது, யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணித்திருப்பதையும், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஆகிவிட்டதையும் எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்.

உங்கள் ஞானஸ்நானம் எதை அடையாளப்படுத்துகிறது?

23. “பரலோகத் தகப்பனின் பெயரிலும், அவருடைய மகனின் பெயரிலும், அவருடைய சக்தியின் பெயரிலும்” ஞானஸ்நானம் எடுப்பது என்றால் என்ன?

23 “பரலோகத் தகப்பனின் பெயரிலும், அவருடைய மகனின் பெயரிலும், அவருடைய சக்தியின் பெயரிலும்” தன் சீஷர்கள் ஞானஸ்நானம் எடுப்பார்கள் என்று இயேசு சொன்னார். (மத்தேயு 28:19-ஐ வாசியுங்கள்.) இது எதை அர்த்தப்படுத்துகிறது? நீங்கள் யெகோவாவின் அதிகாரத்தையும், அவருடைய நோக்கத்தில் இயேசு வகிக்கும் பங்கையும் ஏற்றுக்கொள்வதை அர்த்தப்படுத்துகிறது; அதோடு, யெகோவா தன் சக்தியைப் பயன்படுத்தி தன் விருப்பத்தை நிறைவேற்றுகிறார் என்பதை ஏற்றுக்கொள்வதையும் அர்த்தப்படுத்துகிறது.—சங்கீதம் 83:18; மத்தேயு 28:18; கலாத்தியர் 5:22, 23; 2 பேதுரு 1:21.

நீங்கள் ஞானஸ்நானம் எடுக்கும்போது, கடவுளுடைய விருப்பத்தைச் செய்ய விரும்புகிறீர்கள் என்பதைக் காட்டுகிறீர்கள்

24, 25. (அ) ஞானஸ்நானம் எதை அடையாளப்படுத்துகிறது? (ஆ) இந்தப் புத்தகத்தின் கடைசி அதிகாரத்தில் நாம் எதைப் பற்றித் தெரிந்துகொள்வோம்?

24 ஞானஸ்நானம் ரொம்ப முக்கியமான ஒன்றை அடையாளப்படுத்துகிறது. நீங்கள் தண்ணீருக்குள் போவது, உங்களுடைய பழைய வாழ்க்கைமுறையைப் பொறுத்தவரை நீங்கள் இறந்துவிட்டதை அடையாளப்படுத்துகிறது. அதாவது, நீங்கள் அதை அடியோடு விட்டுவிட்டதைக் குறிக்கிறது. நீங்கள் தண்ணீருக்குள்ளிருந்து மேலே வருவது, கடவுளுடைய விருப்பத்தைச் செய்ய மறுபடியும் உயிரோடு வருவதை அடையாளப்படுத்துகிறது. அந்தச் சமயத்திலிருந்து நீங்கள் யெகோவாவுக்குச் சேவை செய்வீர்கள் என்பதை அது காட்டுகிறது. நீங்கள் ஒரு மனிதனுக்கோ அமைப்புக்கோ வேலைக்கோ உங்களை அர்ப்பணிக்கவில்லை என்பதை ஞாபகம் வையுங்கள். நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை யெகோவாவுக்கு அர்ப்பணித்திருக்கிறீர்கள்.

25 கடவுளுக்கு உங்களை அர்ப்பணித்திருப்பது, அவரோடு நெருங்கிய நட்பை வளர்க்க உங்களுக்கு உதவும். (சங்கீதம் 25:14) ஆனால், ஒருவர் ஞானஸ்நானம் எடுத்துவிட்டாலே அவருக்கு மீட்பு கிடைத்துவிடும் என்று சொல்ல முடியாது. “பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்களுடைய மீட்புக்காக உழைத்து வாருங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (பிலிப்பியர் 2:12) ஞானஸ்நானம் என்பது மீட்புக்கு வழிநடத்தும் முதல் படிதான். அப்படியென்றால், நீங்கள் எப்போதுமே யெகோவாவிடம் நெருங்கியிருக்க என்ன செய்ய வேண்டும்? இந்தப் புத்தகத்தின் கடைசி அதிகாரம் இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும்.