Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கேள்வி 10

பைபிள் எப்படி எனக்கு உதவி செய்யும்?

பைபிள் எப்படி எனக்கு உதவி செய்யும்?

ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?

“வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியினால் அருளப்பட்டிருக்கின்றன” என்று பைபிள் சொல்கிறது. (2 தீமோத்தேயு 3:16) இது உண்மையாக இருந்தால், உங்களுக்குத் தேவையான உதவியை பைபிளால் தர முடியும்.

நீங்கள் என்ன செய்வீர்கள்?

இதைக் கற்பனை செய்து பாருங்கள்: ஒரு நாள் ராத்திரி, டேவிட் ஒரு கிராமம் வழியாகப் போய்க்கொண்டிருக்கிறான். ரொம்ப இருட்டாக இருப்பதால், எங்கே இருக்கிறான் என்றே அவனுக்குத் தெரியவில்லை. இடம் மாறி வந்துவிட்டது அப்போதுதான் அவனுக்குப் புரிகிறது. வரும்வழியில், எங்கேயோ ஒரு இடத்தில் அவன் தவறாகத் திரும்பியிருக்க வேண்டும்.

டேவிட் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்?

நன்றாக யோசியுங்கள்!

உங்களுக்கு சில வழிகள் இருக்கின்றன:

  1. யாரிடமாவது வழி கேட்கலாம்.

  2. டார்ச் லைட்டை பயன்படுத்தலாம்.

  3. எப்படியாவது வழியைக் கண்டுபிடித்து விடலாம் என்று நினைத்துக்கொண்டு தொடர்ந்து நடக்கலாம்.

மூன்றாவது வழி நிச்சயம் உதவியாக இருக்காது.

முதல் வழியைவிட இரண்டாவது வழி உதவியாக இருக்கும். நீங்கள் பயணம் செய்யும்போது, டார்ச் லைட் உங்கள் கையில் இருந்தால் பாதை வெளிச்சமாக இருக்கும்.

பைபிளும் அதேபோல் உங்களுக்கு உதவி செய்யும்!

அதிகமாக விற்பனையாகும் இந்தப் புத்தகம்,

  • வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளைச் சமாளிக்க உதவி செய்யும்

  • உங்களைப் பற்றி நீங்களே தெரிந்துகொள்ளவும் சிறந்த நபராக ஆகவும் உதவி செய்யும்

  • என்றென்றும் சிறந்த வாழ்க்கை வாழ உதவி செய்யும்

வாழ்க்கையின் மிக முக்கியமான கேள்விகளுக்குப் பதில்

நாம் பேச ஆரம்பித்த உடனே கேள்விகள் கேட்கிறோம்.

  • வானம் ஏன் நீல நிறத்தில் இருக்கிறது?

  • நட்சத்திரங்கள் ஏன் மினுமினுக்கின்றன?

பிறகு, நம்மைச் சுற்றி இருக்கும் உலகத்தைப் பற்றி கேள்வி கேட்க ஆரம்பிக்கிறோம்.

இந்த எல்லா கேள்விகளுக்கும் பைபிளில் பதில் இருக்கிறது.

பைபிளில் புராணக்கதைகளும், கட்டுக்கதைகளும்தான் இருக்கின்றன என்றும், இந்தக் காலத்துக்கு அது ஒத்துவராது என்றும், அதைப் புரிந்துகொள்வது ரொம்ப கஷ்டம் என்றும் நிறைய பேர் சொல்கிறார்கள். ஆனால், பைபிள்தான் உண்மையிலேயே பிரச்சினையா அல்லது பைபிளைப் பற்றி மற்றவர்கள் சொன்ன விஷயங்கள்தான் பிரச்சினையா? மற்றவர்கள் தவறாகச் சொல்லியிருக்கலாம், இல்லையா?

உதாரணத்துக்கு, கடவுளுடைய கட்டுப்பாட்டில்தான் இந்த உலகம் இருக்கிறது என்று பைபிள் சொல்வதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அது எப்படி உண்மையாக இருக்க முடியும்? இந்த உலகம் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது! எங்கு பார்த்தாலும் வலி, வேதனை, நோய், மரணம், பஞ்சம் மற்றும் பேரழிவுதான் இருக்கின்றன. அன்பான கடவுள் இவை எல்லாவற்றிற்கும் எப்படிக் காரணமாக இருக்க முடியும்?

இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? இந்த உலகம் யாருடைய கையில் இருக்கிறது என்பதைப் பற்றி பைபிள் சொல்கிறது. இதைத் தெரிந்துகொள்ளும்போது நீங்கள் ஒருவேளை ஆச்சரியப்படலாம்!

இந்தச் சிற்றேட்டில் இருக்கும் ஆலோசனைகள் பைபிள் அடிப்படையில் இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். பைபிள் ஒரு நம்பகமான வழிகாட்டி என்று யெகோவாவின் சாட்சிகள் நம்புகிறார்கள். ஏனென்றால், “வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியினால் அருளப்பட்டிருக்கின்றன. அவை கற்பிப்பதற்கும், கடிந்துகொள்வதற்கும், காரியங்களைச் சரிசெய்வதற்கும், பிரயோஜனமுள்ளவையாக இருக்கின்றன.” (2 தீமோத்தேயு 3:16, 17) பழங்கால புத்தகமாக இருந்தாலும், இந்தக் காலத்துக்கும் பிரயோஜனமாக இருக்கிற இந்தப் புத்தகத்தை ஆராய்ச்சி செய்து பாருங்கள்!