Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 11

விசுவாசத்துக்கு வந்த சோதனை

விசுவாசத்துக்கு வந்த சோதனை

யெகோவாமேல் அன்பு காட்டுவதற்கும் அவர் கொடுத்த வாக்குகளை நம்புவதற்கும் ஆபிரகாம் தன் மகன் ஈசாக்குக்குச் சொல்லிக்கொடுத்தார். ஈசாக்குக்கு கிட்டத்தட்ட 25 வயது இருக்கும்போது, ஆபிரகாமிடம் ரொம்ப கஷ்டமான ஒரு விஷயத்தை யெகோவா செய்யச் சொன்னார். அது என்ன தெரியுமா?

‘மோரியா தேசத்திலிருக்கிற ஒரு மலையில் உன்னுடைய ஒரே மகனைப் பலி கொடு’ என்று ஆபிரகாமிடம் யெகோவா சொன்னார். யெகோவா ஏன் இப்படிச் சொன்னார் என்று ஆபிரகாமுக்குப் புரியவில்லை. ஆனாலும், யெகோவா சொன்னபடி செய்தார்.

அடுத்த நாள் காலையில், ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கையும் இரண்டு வேலைக்காரர்களையும் கூட்டிக்கொண்டு மோரியாவுக்குக் கிளம்பினார். மூன்று நாட்களுக்குப் பிறகு, அந்த மலையைத் தூரத்திலிருந்து அவர்களால் பார்க்க முடிந்தது. ஆபிரகாம் தன் வேலைக்காரர்களிடம், ‘நீங்கள் இங்கேயே இருங்கள். நானும் ஈசாக்கும் பலி கொடுத்துவிட்டு வருகிறோம்’ என்று சொன்னார். பிறகு, ஈசாக்கிடம் விறகுகளைக் கொடுத்து அவற்றைத் தூக்கிக்கொண்டு வரச் சொன்னார். அவர் ஒரு கத்தியை எடுத்துக்கொண்டார். ஈசாக்கு ஆபிரகாமிடம், ‘அப்பா, பலி கொடுப்பதற்கு ஆடு எங்கே?’ என்று கேட்டார். அதற்கு ஆபிரகாம், ‘மகனே, யெகோவா அதைக் கொடுப்பார்’ என்று சொன்னார்.

அவர்கள் அந்த மலைக்குப் போன பிறகு, ஒரு பலிபீடத்தைக் கட்டினார்கள். ஆபிரகாம், ஈசாக்கின் கைகளையும் கால்களையும் கட்டி பலிபீடத்தின் மேல் படுக்க வைத்தார்.

பிறகு, கத்தியை எடுத்தார். அந்த நிமிஷமே யெகோவாவின் தூதர் பரலோகத்திலிருந்து ஆபிரகாமைக் கூப்பிட்டு, ‘ஆபிரகாமே! உன் மகனை ஒன்றும் செய்துவிடாதே! நீ கடவுள்மேல் விசுவாசம் வைத்திருக்கிறாய் என்பதை இப்போது தெரிந்துகொண்டேன். ஏனென்றால், உன் மகனைப் பலி கொடுக்கக்கூட நீ தயாராக இருந்தாய்’ என்று சொன்னார். அப்போது ஆபிரகாம் அங்கே ஒரு செம்மறியாட்டைப் பார்த்தார். அதன் கொம்புகள் ஒரு புதரில் சிக்கியிருந்தன. ஆபிரகாம் உடனடியாக ஈசாக்கின் கட்டுகளை அவிழ்த்துவிட்டு, அந்தச் செம்மறியாட்டைப் பலி கொடுத்தார்.

அந்த நாளிலிருந்து, யெகோவா ஆபிரகாமை தன் நண்பர் என்று சொன்னார். ஏன் தெரியுமா? யெகோவா சொன்னதையெல்லாம் ஆபிரகாம் செய்தார். ஒரு விஷயத்தை யெகோவா ஏன் செய்யச் சொல்கிறார் என்று புரியாத சமயத்தில்கூட அதை அவர் செய்தார்.

யெகோவா ஆபிரகாமிடம், ‘நான் உன்னை ஆசீர்வதிப்பேன். உன் பிள்ளைகளை, அதாவது உன் வம்சத்தை பெருக வைப்பேன்’ என்று மறுபடியும் வாக்குக் கொடுத்தார். ஆபிரகாமுடைய வம்சத்தின் மூலம் நல்ல மக்கள் எல்லாரையும் ஆசீர்வதிக்கப் போவதாகவும் வாக்குக் கொடுத்தார்.

“கடவுள் தன்னுடைய ஒரே மகன்மேல் விசுவாசம் வைக்கிற யாரும் அழிந்துபோகாமல் முடிவில்லாத வாழ்வைப் பெற வேண்டும் என்பதற்காக அவரைத் தந்து, இந்தளவுக்கு உலகத்தின் மேல் அன்பு காட்டினார்.”—யோவான் 3:16