Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 29

யோசுவாவை யெகோவா தேர்ந்தெடுக்கிறார்

யோசுவாவை யெகோவா தேர்ந்தெடுக்கிறார்

மோசே நிறைய வருஷங்களுக்கு இஸ்ரவேலர்களின் தலைவராக இருந்தார். இப்போது, அவருக்கு ரொம்ப வயதாகிவிட்டது. யெகோவா அவரிடம், ‘நான் வாக்குக் கொடுத்த தேசத்துக்கு இஸ்ரவேலர்களை நீ கூட்டிக்கொண்டு போக மாட்டாய். ஆனால், அந்தத் தேசத்தை நான் உனக்குக் காட்டுவேன்’ என்றார். அப்போது, மக்களைக் கவனித்துக்கொள்ள ஒரு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும்படி யெகோவாவிடம் மோசே கேட்டார். அதற்கு யெகோவா, ‘யோசுவாவிடம் போய், நீதான் புதிய தலைவர் என்று சொல்’ என்றார்.

மோசே இஸ்ரவேலர்களிடம், ‘நான் இன்னும் ரொம்ப நாள் உயிரோடு இருக்க மாட்டேன், உங்களுக்குத் தலைவராக யோசுவாவை யெகோவா தேர்ந்தெடுத்திருக்கிறார். கடவுள் வாக்குக் கொடுத்த தேசத்துக்கு அவர்தான் உங்களைக் கூட்டிக்கொண்டு போவார்’ என்று சொன்னார். பிறகு யோசுவாவிடம், ‘நீ பயப்படாதே, யெகோவா உனக்கு உதவி செய்வார்’ என்று சொல்லி தைரியப்படுத்தினார். அதற்குப் பிறகு, மோசே நேபோ மலை உச்சிக்குப் போனார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்குத் தருவதாகச் சொன்ன தேசத்தை அந்த மலை உச்சியிலிருந்து மோசேக்கு யெகோவா காட்டினார். மோசே 120 வயதில் இறந்துபோனார்.

யெகோவா யோசுவாவிடம், ‘யோர்தான் ஆற்றைக் கடந்து, கானான் தேசத்துக்குப் போ. மோசேக்கு உதவி செய்த மாதிரி உனக்கும் உதவி செய்வேன். நான் கொடுத்த திருச்சட்டத்தை நீ தினமும் வாசிக்க வேண்டும். பயப்படாமல், தைரியமாக இரு. நான் உன்னிடம் சொன்ன எல்லாவற்றையும் செய்’ என்று சொன்னார்.

யோசுவா இரண்டு உளவாளிகளை எரிகோ நகரத்துக்கு அனுப்பினார். அங்கே என்ன நடந்தது என்பதை அடுத்த கதையில் நாம் படிக்கலாம். அந்த உளவாளிகள் திரும்பி வந்து, ‘கானான் தேசத்துக்குப் போக இதுதான் சரியான நேரம்’ என்று சொன்னார்கள். அடுத்த நாள், யோசுவா எல்லாரிடமும் மூட்டைமுடிச்சுகளைக் கட்டிக்கொண்டு கிளம்ப சொன்னார். பிறகு, ஒப்பந்தப் பெட்டியை சுமக்கிற குருமார்களை, முதலில் யோர்தான் ஆற்றுக்குப் போகச் சொன்னார். அந்தச் சமயத்தில், யோர்தான் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், குருமார்கள் அந்த ஆற்றில் கால் வைத்த உடனே, தண்ணீர் ஓடுவது நின்றது, ஆற்றின் தண்ணீர் வடிந்துவிட்டது! குருமார்கள் ஆற்றின் நடுப்பகுதிக்குப் போய் நின்றார்கள். மக்கள் எல்லாரும் அக்கரைக்குப் போய்ச் சேரும்வரை அவர்கள் அங்கேயே நின்றுகொண்டிருந்தார்கள். செங்கடலில் யெகோவா செய்த அற்புதம் அந்த மக்களுக்கு ஞாபகம் வந்திருக்கும், இல்லையா?

நிறைய வருஷங்களுக்குப் பிறகு, கடவுள் வாக்குக் கொடுத்த தேசத்துக்கு இஸ்ரவேலர்கள் வந்தார்கள். அங்கே வீடுகளையும் நகரங்களையும் கட்டினார்கள், பயிர் செய்தார்கள், திராட்சைத் தோட்டங்களையும் பழத் தோட்டங்களையும் அமைத்தார்கள். சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் அங்கே நல்ல நல்ல பொருள்கள் கிடைத்தன. அதனால்தான் அதைப் பாலும் தேனும் ஓடுகிற தேசம் என்றார்கள்.

“யெகோவா எப்போதும் உங்களை வழிநடத்துவார். வறண்ட தேசத்தில்கூட உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார்.”—ஏசாயா 58:11

எண்ணாகமம் 27:12-23; உபாகமம் 31:1-8; 34:1-12; யோசுவா 1:1–3:17