Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 30

உளவாளிகளை ராகாப் ஒளித்து வைக்கிறாள்

உளவாளிகளை ராகாப் ஒளித்து வைக்கிறாள்

இஸ்ரவேலைச் சேர்ந்த உளவாளிகள், எரிகோ நகரத்துக்குப் போய் ராகாப் என்ற பெண்ணின் வீட்டில் தங்கினார்கள். எரிகோவின் ராஜாவுக்கு இந்த விஷயம் தெரிந்துவிட்டது. அதனால், ராகாபின் வீட்டுக்கு வீரர்களை அனுப்பினான். உடனே, ராகாப் அந்த இரண்டு உளவாளிகளையும் தன்னுடைய வீட்டின் மொட்டைமாடியில் ஒளிந்துகொள்ள சொல்லிவிட்டு, வீரர்களை வேறு பக்கமாக அனுப்பிவிட்டாள். பிறகு அந்த உளவாளிகளிடம், ‘யெகோவா உங்களுக்குத் துணையாக இருக்கிறார் என்றும், நீங்கள் இந்தத் தேசத்தைப் பிடித்துவிடுவீர்கள் என்றும் எனக்குத் தெரியும். அதனால் நான் கண்டிப்பாக உங்களுக்கு உதவி செய்வேன். நீங்கள் என் குடும்பத்தைக் காப்பாற்றுவீர்கள் என்று தயவுசெய்து எனக்குச் சத்தியம் செய்து கொடுங்கள்’ என்று கேட்டாள்.

அதற்கு அந்த உளவாளிகள், ‘உங்கள் வீட்டில் இருக்கிற யாருக்குமே எந்த ஆபத்தும் வராது’ என்று சத்தியம் செய்து கொடுத்தார்கள். அதோடு, ‘உங்கள் வீட்டு ஜன்னலில் ஒரு சிவப்புக் கயிற்றைக் கட்டித் தொங்கவிடுங்கள். அப்போது உங்கள் வீட்டில் இருக்கிற எல்லாரும் காப்பாற்றப்படுவார்கள்’ என்றும் சொன்னார்கள்.

ராகாப் தன்னுடைய வீட்டு ஜன்னலில் ஒரு கயிற்றைக் கட்டி அந்த உளவாளிகளை இறக்கிவிட்டாள். அவர்கள் மலைப்பகுதிக்குப் போய் மூன்று நாட்கள் ஒளிந்துகொண்டார்கள். பிறகு, யோசுவாவிடம் போனார்கள். அதற்குப் பிறகு, இஸ்ரவேலர்கள் யோர்தான் ஆற்றைக் கடந்து அந்தத் தேசத்தைப் பிடிக்கத் தயாரானார்கள். எரிகோதான் அவர்கள் பிடித்த முதல் நகரம். தினமும் அந்த நகரத்தை ஒரு தடவை சுற்றி வர வேண்டும், இப்படி ஆறு நாட்களுக்குச் செய்ய வேண்டும் என்று யெகோவா அவர்களிடம் சொன்னார். ஏழாவது நாளில், அவர்கள் ஏழு தடவை அந்த நகரத்தைச் சுற்றி வந்தார்கள். பிறகு, குருமார்கள் எக்காளங்களை ஊதினார்கள். இஸ்ரவேல் வீரர்கள் பயங்கரமாகக் கத்தினார்கள். உடனே, எரிகோவின் மதில்சுவர் இடிந்து விழுந்தது! ஆனால், மதில்சுவரின் மேல் இருந்த ராகாபின் வீடு மட்டும் இடிந்து விழாமல் அப்படியே இருந்தது. ராகாப் யெகோவாமேல் நம்பிக்கை வைத்ததால், அவளும் அவளுடைய வீட்டில் இருந்தவர்களும் காப்பாற்றப்பட்டார்கள்.

“அதேபோல், ராகாப் என்ற விலைமகளும் தூதுவர்களை உபசரித்து வேறு வழியாக அனுப்பி வைத்தபோது, அவளுடைய செயல்களால்தானே நீதியுள்ளவளாக ஏற்றுக்கொள்ளப்பட்டாள்?”—யாக்கோபு 2:25