Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 33

ரூத்தும் நகோமியும்

ரூத்தும் நகோமியும்

இஸ்ரவேலில் பஞ்சம் வந்தபோது, நகோமி என்ற இஸ்ரவேல் பெண் தன் கணவரோடும் இரண்டு மகன்களோடும் மோவாப் தேசத்துக்குப் போனாள். அங்கே அவளுடைய கணவர் இறந்துபோனார். அவளுடைய மகன்கள் மோவாபைச் சேர்ந்த ரூத், ஒர்பாள் என்ற பெண்களைக் கல்யாணம் செய்தார்கள். கொஞ்ச காலத்துக்குப் பிறகு, அவளுடைய மகன்களும் இறந்துவிட்டார்கள்.

இஸ்ரவேலில் இப்போது பஞ்சம் இல்லை என்று நகோமி கேள்விப்பட்டாள். அதனால், தன்னுடைய ஊருக்கே போக முடிவு செய்தாள். ரூத்தும் ஒர்பாளும் அவளோடு கிளம்பினார்கள். வழியில் நகோமி அவர்களிடம், ‘நீங்கள் என் மகன்களுக்கு நல்ல மனைவிகளாக இருந்தீர்கள். எனக்கு நல்ல மருமகள்களாக இருந்தீர்கள். நீங்கள் மறுபடியும் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதனால், மோவாபில் இருக்கிற உங்கள் வீட்டுக்குப் போங்கள்’ என்றாள். அதற்கு அவர்கள், ‘நாங்கள் உங்கள்மேல் உயிரையே வைத்திருக்கிறோம். உங்களைவிட்டுப் போக மாட்டோம்!’ என்றார்கள். திரும்பிப் போகும்படி நகோமி அவர்களிடம் சொல்லிக்கொண்டே இருந்தாள். கடைசியில், ஒர்பாள் போய்விட்டாள், ஆனால் ரூத் போகவில்லை. அப்போது நகோமி, ‘ஒர்பாள் அவளுடைய மக்களிடமும் கடவுள்களிடமும் திரும்பிப் போகிறாள். நீயும் அவளோடு போ, உன்னுடைய அம்மாவுடைய வீட்டுக்குப் போ’ என்று ரூத்திடம் சொன்னாள். அதற்கு ரூத், ‘நான் உங்களைவிட்டுப் போக மாட்டேன். உங்கள் மக்கள்தான் என் மக்கள். உங்கள் கடவுள்தான் என் கடவுள்’ என்றாள். அப்போது நகோமிக்கு எப்படி இருந்திருக்கும்?

பார்லி அறுவடை ஆரம்பித்தபோது ரூத்தும் நகோமியும் இஸ்ரவேலுக்கு வந்துசேர்ந்தார்கள். ஒருநாள், கதிர்களைப் பொறுக்குவதற்காக போவாஸ் என்பவரின் வயலுக்கு ரூத் போனாள். அவர் ராகாபின் மகன். ரூத் மோவாபைச் சேர்ந்தவள் என்றும், நகோமியை விட்டுப் பிரியாமல் அவள்கூடவே இருக்கிறாள் என்றும் போவாஸ் கேள்விப்பட்டிருந்தார். ரூத் எடுத்துக்கொள்வதற்கு சில கதிர்களைக் கூடுதலாக விட்டுவிடும்படி தன்னுடைய வேலைக்காரர்களிடம் சொன்னார்.

அன்று சாயங்காலம் நகோமி, ‘இன்று யாருடைய வயலில் வேலை செய்தாய்?’ என்று ரூத்திடம் கேட்டாள். அதற்கு ரூத், ‘போவாஸ் என்பவரின் வயலில் வேலை செய்தேன்’ என்றாள். அப்போது நகோமி, ‘அவர் என்னுடைய கணவரின் சொந்தக்காரர். மற்ற பெண்களோடு சேர்ந்து அவருடைய வயலிலேயே வேலை செய். அங்கே உனக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது’ என்று சொன்னாள்.

அறுவடை முடியும்வரை போவாசின் வயலில் ரூத் வேலை செய்தாள். ரூத் நன்றாக வேலை செய்வதையும் ரொம்ப நல்ல பெண்ணாக இருப்பதையும் போவாஸ் கவனித்தார். அந்தக் காலத்தில், ஒருவர் ஆண் பிள்ளைகள் இல்லாமல் இறந்துபோனால், அவருடைய மனைவியை அவருடைய சொந்தக்காரர் கல்யாணம் செய்துகொள்வார். அதனால், ரூத்தை போவாஸ் கல்யாணம் செய்தார். அவர்களுக்கு ஓபேத் என்ற மகன் பிறந்தான். ஓபேத், தாவீது ராஜாவின் தாத்தா. ரூத்துக்கு குழந்தை பிறந்தபோது நகோமியின் நண்பர்கள் சந்தோஷப்பட்டார்கள். அவர்கள் நகோமியிடம், ‘யெகோவா முதலில் உனக்கு ரூத்தைக் கொடுத்தார். அவள் உன்னிடம் ரொம்ப அன்பாக இருந்தாள். இப்போது உனக்கு ஒரு பேரனும் கிடைத்துவிட்டான். யெகோவாவுக்கு புகழ் சேரட்டும்’ என்று சொன்னார்கள்.

“கூடப்பிறந்தவனைவிட பாசமாக ஒட்டிக்கொள்ளும் நண்பனும் உண்டு.”—நீதிமொழிகள் 18:24