Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 36

யெப்தா செய்த சத்தியம்

யெப்தா செய்த சத்தியம்

இஸ்ரவேலர்கள் மறுபடியும் யெகோவாவை விட்டுவிட்டு பொய் கடவுள்களை வணங்க ஆரம்பித்தார்கள். ஆனால், அம்மோனியர்கள் இஸ்ரவேலர்களைத் தாக்கி, அவர்களோடு சண்டை போட்டபோது, அந்தப் பொய் கடவுள்கள் இஸ்ரவேலர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. பல வருஷங்களாக இஸ்ரவேலர்கள் கஷ்டப்பட்டார்கள். கடைசியில் அவர்கள் யெகோவாவிடம், ‘நாங்கள் தப்பு செய்துவிட்டோம். எதிரிகளிடமிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்’ என்று சொன்னார்கள். இஸ்ரவேலர்கள் தங்களிடம் இருந்த சிலைகளை அழித்துவிட்டு, மறுபடியும் யெகோவாவை வணங்க ஆரம்பித்தார்கள். அதனால், அவர்களுடைய கஷ்டத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று யெகோவா நினைத்தார்.

இஸ்ரவேலர்களுக்குத் தலைவராக இருந்து, அம்மோனியர்களோடு போர் செய்ய யெப்தா என்ற வீரனைக் கடவுள் தேர்ந்தெடுத்தார். அவர் யெகோவாவிடம், ‘இந்தப் போரில் ஜெயிப்பதற்கு நீங்கள் உதவி செய்தால், நான் வீட்டுக்குத் திரும்பி வரும்போது, என்னைப் பார்க்க என் வீட்டிலிருந்து முதலில் யார் வந்தாலும் அவரை உங்களுக்கே தந்துவிடுகிறேன்’ என்று சத்தியம் செய்தார். அவர் ஜெபத்தில் கேட்டபடியே, போரில் ஜெயிக்க யெகோவா அவருக்கு உதவி செய்தார்.

யெப்தா தன்னுடைய வீட்டுக்குத் திரும்பி வந்தபோது அவரைப் பார்க்க முதலில் வந்தது யார் தெரியுமா? அவருடைய ஒரே மகள்தான்! அவள் கஞ்சிராவைத் தட்டிக்கொண்டே நடனம் ஆடிக்கொண்டு வந்தாள். இப்போது யெப்தா என்ன செய்வார்? கடவுளுக்குச் செய்த சத்தியத்தை அவர் நினைத்து பார்த்து, ‘ஐயோ, என் மகளே! என் மனதைச் சுக்குநூறாக்கி விட்டாயே! நான் யெகோவாவிடம் ஒரு சத்தியம் செய்திருக்கிறேன். அதைக் காப்பாற்ற வேண்டுமென்றால், சீலோவில் இருக்கிற வழிபாட்டுக் கூடாரத்தில் சேவை செய்வதற்கு உன்னை நான் அனுப்ப வேண்டும்!’ என்று சொன்னார். அதற்கு அவள், ‘அப்பா, நீங்கள் யெகோவாவுக்குச் சத்தியம் செய்து கொடுத்திருந்தால், அதைக் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். நான் என் தோழிகளோடு மலைகளுக்குப் போய் இரண்டு மாதங்கள் அங்கே தங்குவதற்கு அனுமதி கொடுங்கள். அதற்குப் பிறகு நான் சீலோவுக்குப் போகிறேன்’ என்று சொன்னாள். யெப்தாவின் மகள் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் வழிபாட்டுக் கூடாரத்தில் கடவுளுக்கு உண்மையாகச் சேவை செய்தாள். ஒவ்வொரு வருஷமும், அவளுடைய தோழிகள் அவளைப் பார்க்க சீலோவுக்குப் போனார்கள்.

“என்மேல் காட்டும் பாசத்தைவிட தன் மகனிடமோ மகளிடமோ அதிக பாசம் காட்டுகிறவன் எனக்குச் சீஷனாக இருக்க முடியாது.”—மத்தேயு 10:37