Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 45

ராஜ்யம் பிரிகிறது

ராஜ்யம் பிரிகிறது

சாலொமோன் யெகோவாவை வணங்கிய வரைக்கும், இஸ்ரவேல் தேசத்தில் அமைதி இருந்தது. பிறகு, சாலொமோன் மற்ற நாடுகளைச் சேர்ந்த நிறைய பெண்களைக் கல்யாணம் செய்தார். அவர்கள் சிலைகளை வணங்கினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக, சாலொமோன் மாறிவிட்டார். அவரும் சிலைகளை வணங்க ஆரம்பித்தார். அதைப் பார்த்து யெகோவாவுக்குக் கோபம் வந்தது. அதனால் அவர் சாலொமோனிடம், ‘இஸ்ரவேல் ராஜ்யத்தை உன் வாரிசுகள் கையிலிருந்து பிடுங்கிவிடுவேன். அதை இரண்டாகப் பிரித்து, பெரிய பகுதியை உன்னிடம் வேலை செய்கிற ஒருவனுக்குக் கொடுப்பேன். சின்ன பகுதியைத்தான் உன்னுடைய வாரிசுகள் ஆட்சி செய்வார்கள்’ என்று சொன்னார்.

தான் சொன்னதை இன்னும் தெளிவாகக் காட்டுவதற்காக யெகோவா வேறொரு காரியத்தையும் செய்தார். ஒருநாள், சாலொமோனிடம் வேலை செய்த யெரொபெயாம் வழியில் போய்க்கொண்டிருந்தபோது அகியா தீர்க்கதரிசியைப் பார்த்தார். அகியா தன்னுடைய அங்கியை 12 துண்டுகளாகக் கிழித்தார். பிறகு யெரொபெயாமிடம், ‘யெகோவா இஸ்ரவேல் ராஜ்யத்தை சாலொமோனுடைய வாரிசுகளின் கையிலிருந்து பிடுங்கி, இரண்டாகப் பிரிப்பார். இதில் 10 துண்டுகளை நீ எடுத்துக்கொள். ஏனென்றால், நீதான் 10 கோத்திரங்களுக்கு ராஜாவாக இருப்பாய்’ என்று சொன்னார். சாலொமோன் ராஜா அதைக் கேள்விப்பட்டதும், யெரொபெயாமைக் கொல்ல நினைத்தார். அதனால், யெரொபெயாம் எகிப்துக்கு ஓடிப்போனார். சாலொமோன் இறந்த பிறகு, அவருடைய மகன் ரெகொபெயாம் ராஜாவாக ஆனார். அதனால், யெரொபெயாம் பயம் இல்லாமல் இஸ்ரவேலுக்குத் திரும்பி வந்தார்.

இஸ்ரவேலின் பெரியோர்கள் ரெகொபெயாமிடம், ‘நீங்கள் மக்களிடம் அன்பாக நடந்துகொண்டால், அவர்கள் உங்களுக்கு உண்மையாக இருப்பார்கள்’ என்று சொன்னார்கள். ஆனால், ரெகொபெயாமின் இளம் நண்பர்கள் அவரிடம், ‘மக்களுக்கு இரக்கம் காட்டாதீர்கள். அவர்களை நன்றாக வேலை வாங்குங்கள்’ என்று சொன்னார்கள். ரெகொபெயாம் தன்னுடைய நண்பர்களின் பேச்சைக் கேட்டு, மக்களிடம் இரக்கம் இல்லாமல் நடந்துகொண்டார். அதனால், அவர்கள் அவரை எதிர்த்தார்கள். யெரொபெயாமை பத்துக் கோத்திரத்துக்கு ராஜாவாக ஆக்கினார்கள். அதை இஸ்ரவேல் ராஜ்யம் என்று சொன்னார்கள். மீதியிருந்த இரண்டு கோத்திரங்களை யூதா ராஜ்யம் என்று சொன்னார்கள். யூதா ராஜ்யத்தைச் சேர்ந்த மக்கள் ரெகொபெயாமுக்கு உண்மையாக இருந்தார்கள். இப்படி, இஸ்ரவேலின் 12 கோத்திரங்கள் இரண்டாகப் பிரிந்தன.

தன்னுடைய மக்கள் கடவுளை வணங்குவதற்காக எருசலேமுக்குப் போவது யெரொபெயாமுக்குப் பிடிக்கவில்லை. ஏன் தெரியுமா? எருசலேம் ரெகொபெயாமின் ராஜ்யத்தில் இருந்தது. அங்கே போனால் அவர்கள் ரெகொபெயாமின் பக்கம் சேர்ந்துவிடுவார்களோ என்று பயந்தார். அதனால், அவர் இரண்டு தங்கக் கன்றுக்குட்டிகளைச் செய்தார். ‘எருசலேம் ரொம்பத் தூரத்தில் இருப்பதால், இங்கேயே கடவுளை வணங்குங்கள்’ என்று மக்களிடம் சொன்னார். மக்கள் தங்கக் கன்றுக்குட்டிகளை வணங்க ஆரம்பித்தார்கள். மறுபடியும் யெகோவாவை மறந்துவிட்டார்கள்.

“விசுவாசிகளாக இல்லாதவர்களோடு பிணைக்கப்படாதீர்கள். நீதிக்கும் அநீதிக்கும் என்ன உறவு இருக்கிறது? . . . விசுவாசியாக இருப்பவனுக்கும் விசுவாசியாக இல்லாதவனுக்கும் என்ன பொருத்தம் இருக்கிறது?”—2 கொரிந்தியர் 6:14, 15