Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 51

மாவீரரும் குட்டிப் பெண்ணும்

மாவீரரும் குட்டிப் பெண்ணும்

இஸ்ரவேலைச் சேர்ந்த ஒரு குட்டிப் பெண் சீரியா தேசத்தில் இருந்தாள். சீரியா தேசத்து வீரர்கள் அவளை இஸ்ரவேலிலிருந்து பிடித்து வந்திருந்தார்கள். அவள் தன்னுடைய வீட்டையும் குடும்பத்தையும் விட்டு ரொம்பத் தூரத்தில் இருந்தாள். நாகமான் என்ற படைத் தளபதியின் மனைவிக்கு வேலைக்காரியாக ஆனாள். அவளை சுற்றியிருந்தவர்கள் மற்ற கடவுள்களை வணங்கினாலும் அவள் யெகோவாவை வணங்கினாள்.

நாகமானுக்கு மோசமான தோல் வியாதி இருந்தது. அவர் எப்போதும் வலியால் துடித்தார். அந்தக் குட்டிப் பெண் அவருக்கு எப்படியாவது உதவி செய்ய ஆசைப்பட்டாள். அவள் நாகமானின் மனைவியிடம், ‘இஸ்ரவேலில் யெகோவாவின் தீர்க்கதரிசி ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் எலிசா. அவரால் உங்களுடைய கணவரைக் குணப்படுத்த முடியும்’ என்று சொன்னாள்.

அவள் சொன்னதை நாகமானிடம் அவருடைய மனைவி சொன்னாள். தன் வியாதி குணமாவதற்கு நாகமான் எதையும் செய்யத் தயாராக இருந்தார். அதனால், இஸ்ரவேலில் இருந்த எலிசாவின் வீட்டுக்குப் போனார். எலிசா தன்னைப் பெரிய ஆளாக மதித்து வரவேற்க வேண்டும் என்று நாகமான் நினைத்தார். ஆனால், எலிசா நேரில் வந்து பேசாமல், தன்னுடைய வேலைக்காரரை அவரிடம் அனுப்பினார். ‘யோர்தான் ஆற்றுக்குப் போய் ஏழு தடவை முங்கி எழுங்கள். அப்போது உங்கள் வியாதி குணமாகும்’ என்று நாகமானிடம் சொல்லச் சொன்னார்.

நாகமானுக்கு ஒரே ஏமாற்றமாக ஆகிவிட்டது. ‘இந்தத் தீர்க்கதரிசி அவருடைய கடவுளின் பெயரைச் சொல்லி வேண்டுவார், கையை அப்படியும் இப்படியும் அசைத்து குணமாக்குவார் என்றுதானே நினைத்தேன். இவர் என்னை இஸ்ரவேலில் இருக்கிற இந்த ஆற்றுக்குப் போகச் சொல்கிறாரே! இதைவிட நல்ல நல்ல ஆறுகள் சீரியாவில் இருக்கின்றன. நான் அங்கே போகக் கூடாதா?’ என்று சொன்னார். பிறகு, கோபமாக எலிசாவின் வீட்டை விட்டுக் கிளம்பினார்.

அவசரப்படாமல் நிதானமாக யோசித்துப் பார்க்கும்படி நாகமானின் ஆட்கள் அவரிடம் சொன்னார்கள். அவர்கள் அவரிடம், ‘குணமாவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வீர்கள்தானே? இந்தத் தீர்க்கதரிசி சொன்னது ஒரு சாதாரண விஷயம். அவர் சொன்னபடி செய்துதான் பாருங்களேன்’ என்றார்கள். அவர்கள் சொன்னதைக் கேட்டு நாகமான், யோர்தான் ஆற்றுக்குப் போய் ஏழு தடவை முங்கி எழுந்தார். ஏழாவது தடவை முங்கி எழுந்தபோது அவருடைய வியாதி குணமாகிவிட்டது. அவருக்கு ஒரே சந்தோஷம்! அதனால், நன்றி சொல்வதற்காக எலிசாவிடம் போனார். ‘யெகோவாதான் உண்மையான கடவுள் என்று இப்போது புரிந்துகொண்டேன்’ என்று அவரிடம் சொன்னார். நாகமான் குணமாகி வீட்டுக்கு வந்தபோது அந்தக் குட்டிப் பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும்!

“பிள்ளைகளின் வாயினாலும் குழந்தைகளின் வாயினாலும் உங்களுக்குப் புகழ் உண்டாகும்படி செய்தீர்கள்.”—மத்தேயு 21:16