Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 57

பிரசங்கிப்பதற்கு எரேமியாவை யெகோவா அனுப்புகிறார்

பிரசங்கிப்பதற்கு எரேமியாவை யெகோவா அனுப்புகிறார்

யெகோவா, யூதா மக்களுக்குத் தீர்க்கதரிசியாக எரேமியாவைத் தேர்ந்தெடுத்தார். மக்களிடம் தன்னுடைய செய்தியைச் சொல்லும்படி எரேமியாவிடம் சொன்னார். அதோடு, கெட்டது செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் சொல்லச் சொன்னார். அதற்கு எரேமியா, ‘யெகோவாவே, நான் சின்னப் பையன், மக்களிடம் எப்படிப் பேச வேண்டும் என்று எனக்குத் தெரியாது’ என்றார். யெகோவா அவரிடம், ‘பயப்படாதே! நீ என்ன பேச வேண்டும் என்று நான் உனக்குச் சொல்லித் தருவேன். நான் உனக்கு உதவி செய்வேன்’ என்றார்.

பிறகு, ஊர்ப் பெரியவர்களை வர வைத்து, அவர்கள் முன்னால் ஒரு மண் ஜாடியை உடைக்கும்படி யெகோவா எரேமியாவிடம் சொன்னார். ‘எருசலேம் இப்படித்தான் நொறுங்கிப் போகும்’ என்று சொல்லச் சொன்னார். யெகோவா சொன்னபடியே எரேமியா செய்தார். அப்போது, அந்த ஊர்ப் பெரியவர்களுக்குப் பயங்கர கோபம் வந்தது. ஆலய குருவான பஸ்கூர் எரேமியாவை அடித்து, அவருடைய கைகளையும் கால்களையும் ஒரு மரச் சட்டத்தில் மாட்டி வைத்தார். ராத்திரி முழுவதும் எரேமியாவால் நகரக்கூட முடியவில்லை. அடுத்த நாள் காலையில் பஸ்கூர் அவரை வெளியே விட்டுவிட்டார். அப்போது எரேமியா, ‘இதற்குமேல் என்னால் தாங்க முடியாது. இனி கடவுளைப் பற்றிப் பேச மாட்டேன்’ என்று சொன்னார். ஆனால் உண்மையில் எரேமியா அப்படிச் செய்தாரா? இல்லை. அதைப் பற்றி நிதானமாக யோசித்த பிறகு, ‘யெகோவாவின் செய்தி எனக்குள் நெருப்புபோல் எரிந்துகொண்டிருக்கிறது. என்னால் அதைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது’ என்று சொன்னார். எரேமியா தொடர்ந்து மக்களை எச்சரித்துவந்தார்.

சில வருஷங்களுக்கு பிறகு, யூதாவை ஒரு புதிய ராஜா ஆட்சி செய்தார். குருமார்களும் பொய்த் தீர்க்கதரிசிகளும் எரேமியாவின் செய்தியை வெறுத்தார்கள். அவர்கள் அதிகாரிகளிடம், ‘எரேமியாவுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்’ என்று சொன்னார்கள். அதற்கு எரேமியா, ‘அப்படியென்றால், நீங்கள் ஒரு அப்பாவியைத்தான் கொல்லப் போகிறீர்கள். யெகோவா சொன்னதைத்தான் நான் சொல்கிறேன். நானாக எதுவும் சொல்லவில்லை’ என்று சொன்னார். அதிகாரிகள் இதைக் கேட்டதும், ‘இவனுக்கு மரண தண்டனை கொடுப்பது சரியல்ல’ என்று சொன்னார்கள்.

கடவுளுடைய செய்தியை எரேமியா சொல்லிக்கொண்டே இருந்தார். அதனால், அதிகாரிகளுக்குப் பயங்கர கோபம் வந்தது. அவர்கள் ராஜாவிடம் போய் எரேமியாவைக் கொல்ல வேண்டும் என்று சொன்னார்கள். அதற்கு ராஜா அவரை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என்று சொன்னார். அவர்கள் எரேமியாவைப் பிடித்து சேறும் சகதியுமாக இருந்த ஒரு ஆழமான கிணற்றில் போட்டார்கள். அவர் அங்கே செத்துவிடுவார் என்று நினைத்தார்கள். அவர் சேற்றுக்குள் மூழ்க ஆரம்பித்தார்.

எபெத்மெலேக் என்ற அரண்மனை அதிகாரி ராஜாவிடம் போய், ‘அதிகாரிகள் எரேமியாவைக் கிணற்றுக்குள் போட்டுவிட்டார்கள். அங்கேயே விட்டுவிட்டால் அவர் செத்துவிடுவாரே’ என்றார். அதற்கு ராஜா, 30 பேரோடு போய் எரேமியாவைக் கிணற்றிலிருந்து தூக்கிவிடும்படி அவரிடம் சொன்னார். என்ன நடந்தாலும் எரேமியாவைப் போல நாமும் கடவுளுடைய செய்தியைச் விடாமல் சொல்ல வேண்டும், இல்லையா?

“நீங்கள் என் சீஷர்களாக இருப்பதால் எல்லா மக்களும் உங்களை வெறுப்பார்கள்; ஆனால், முடிவுவரை சகித்திருப்பவர்தான் மீட்புப் பெறுவார்.”—மத்தேயு 10:22