Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 61

அவர்கள் சிலையை வணங்கவில்லை

அவர்கள் சிலையை வணங்கவில்லை

நேபுகாத்நேச்சார் ராஜா ஒரு சிலையைப் பற்றிய கனவு கண்டு கொஞ்சக் காலத்துக்குப் பிறகு, ஒரு பெரிய தங்கச் சிலையைச் செய்தான். அதை தூரா சமவெளியில் நிறுத்தி வைத்தான். தேசத்தில் இருந்த முக்கியமான ஆட்கள் எல்லாரையும் அங்கே வரச் சொன்னான். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவும் வர வேண்டியிருந்தது. ‘எக்காளம், யாழ், பைங்குழல் போன்ற இசைக் கருவிகளின் சத்தத்தைக் கேட்டதும், நீங்கள் அந்தச் சிலை முன்னால் விழுந்து வணங்க வேண்டும். அப்படி வணங்காத ஆட்களை எரிகிற சூளைக்குள் போட்டுவிடுவேன்’ என்று ராஜா கட்டளை போட்டான். இந்த மூன்று எபிரெய இளைஞர்களும் சிலையை வணங்குவார்களா, அல்லது யெகோவாவை மட்டுமே வணங்குவார்களா?

ராஜா இசைக் கருவிகளை வாசிக்கச் சொன்னான். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவைத் தவிர மற்ற எல்லாரும் அந்தச் சிலையின் முன்னால் விழுந்து வணங்கினார்கள். அதைப் பார்த்த சில ஆட்கள் ராஜாவிடம் போய், ‘அந்த எபிரெய ஆட்கள் மூன்று பேரும் உங்கள் சிலையை வணங்கவில்லை’ என்று சொன்னார்கள். அவர்களை நேபுகாத்நேச்சார் வர வைத்து, ‘அந்தச் சிலையை வணங்க உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கிறேன். நீங்கள் அதை வணங்கவில்லை என்றால், சூளைக்குள் போட்டுவிடுவேன். எந்தக் கடவுளாலும் உங்களை என் கையிலிருந்து காப்பாற்ற முடியாது’ என்று சொன்னான். அதற்கு அவர்கள், ‘ராஜாவே, எங்களுக்கு இன்னொரு வாய்ப்பு வேண்டாம். எங்கள் கடவுளால் எங்களைக் காப்பாற்ற முடியும். அப்படி அவர் காப்பாற்றவில்லை என்றாலும் அந்தச் சிலையை நாங்கள் வணங்க மாட்டோம்’ என்று சொன்னார்கள்.

நேபுகாத்நேச்சாருக்குப் பயங்கர கோபம் வந்தது. அவன் தன் ஆட்களிடம், ‘சூளையை எப்போதையும்விட ஏழு மடங்கு அதிகமாகச் சூடாக்குங்கள்’ என்று சொன்னான். பிறகு தன் வீரர்களிடம், ‘இவர்களைக் கட்டி, உள்ளே போடுங்கள்’ என்றான். அந்த மூன்று எபிரெய இளைஞர்களையும் சூளைக்குள் போட்டார்கள். அந்தச் சூளை ரொம்பச் சூடாக இருந்ததால், அந்த வீரர்கள் அதன் பக்கத்தில் போனவுடன் பொசுங்கிவிட்டார்கள். ஆனால், நேபுகாத்நேச்சார் சூளைக்குள் பார்த்தபோது, அங்கே மூன்று பேருக்குப் பதிலாக நான்கு பேர் நடந்துகொண்டிருந்தார்கள். அவன் பயந்துபோய் தன் அதிகாரிகளிடம், ‘நாம் மூன்று பேரைத் தானே நெருப்பில் போட்டோம்? ஆனால், நான்கு பேர் இருக்கிறார்களே! அவர்களில் ஒருவர் தேவதூதர் மாதிரி இருக்கிறாரே!’ என்று சொன்னான்.

நேபுகாத்நேச்சார் அந்தச் சூளைக்குப் பக்கத்தில் போய், ‘உன்னதமான கடவுளின் ஊழியர்களே, வெளியே வாருங்கள்!’ என்று கூப்பிட்டார். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ எந்தக் காயமும் இல்லாமல் அந்த நெருப்பிலிருந்து வெளியே வந்தார்கள். அவர்களுடைய தோல், முடி, துணி எதுவுமே கருகவில்லை. அவர்கள்மேல் நெருப்பின் வாடைகூட இல்லை.

அப்போது நேபுகாத்நேச்சார், ‘சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவின் கடவுள்தான் பெரியவர். அவர் தன்னுடைய தூதரை அனுப்பி அவர்களைக் காப்பாற்றினார். அவர்களுடைய கடவுளைப் போல வேறு எந்தக் கடவுளும் இல்லை’ என்று சொன்னான்.

என்ன நடந்தாலும் அந்த மூன்று எபிரெயர்களைப் போல நீயும் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பாயா?

“உன் கடவுளாகிய யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும், அவர் ஒருவருக்குத்தான் பரிசுத்த சேவை செய்ய வேண்டும்.” —மத்தேயு 4:10