Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 70

இயேசு பிறந்ததைத் தேவதூதர்கள் அறிவிக்கிறார்கள்

இயேசு பிறந்ததைத் தேவதூதர்கள் அறிவிக்கிறார்கள்

யூதர்கள் எல்லாரும் தங்களுடைய சொந்த ஊருக்குப் போய் தங்கள் பெயரைப் பதிவு செய்ய வேண்டும் என்று ரோமப் பேரரசின் ராஜாவான அகஸ்து கட்டளை போட்டான். யோசேப்பின் சொந்த ஊர் பெத்லகேம். அதனால், யோசேப்பும் மரியாளும் அந்த ஊருக்குக் கிளம்பினார்கள். அது மரியாளுக்குக் குழந்தை பிறக்கப் போகிற சமயம்.

பெத்லகேமுக்கு வந்தபோது, அவர்கள் தங்குவதற்கு ஒரு தொழுவத்தில்தான் இடம் கிடைத்தது. அங்கே மரியாள் தன்னுடைய மகன் இயேசுவைப் பெற்றெடுத்தாள். அவள் அந்தக் குழந்தையை மெல்லிய துணிகளில் சுற்றி, மிருகங்களுக்குத் தீனி வைக்கிற தொட்டியில் மெதுவாகப் படுக்க வைத்தாள்.

பெத்லகேமுக்குப் பக்கத்தில், சில மேய்ப்பர்கள் ராத்திரி நேரத்தில் தங்கள் மந்தையைக் கவனித்துக்கொண்டு வெளியே தங்கியிருந்தார்கள். திடீரென்று, ஒரு தேவதூதர் அவர்கள் முன்னால் வந்து நின்றார். அந்த மேய்ப்பர்களைச் சுற்றி யெகோவாவின் ஒளி பிரகாசித்தது. அவர்கள் ரொம்பப் பயந்துபோனார்கள். ஆனால் தேவதூதர், ‘பயப்படாதீர்கள், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்ல வந்திருக்கிறேன். மேசியா இன்று பெத்லகேமில் பிறந்திருக்கிறார்’ என்று சொன்னார். உடனே, நிறைய தேவதூதர்கள் வானத்தில் தோன்றி, ‘பரலோகத்தில் இருக்கிற கடவுளுக்குப் புகழ் சேரட்டும், பூமியில் சமாதானம் உண்டாகட்டும்’ என்று சொன்னார்கள். பிறகு, அவர்கள் மறைந்துவிட்டார்கள். மேய்ப்பர்கள் என்ன செய்தார்கள்?

‘வாருங்கள், உடனே பெத்லகேமுக்குப் போகலாம்’ என்று சொல்லிக்கொண்டார்கள். அவர்கள் வேகமாக அங்கிருந்து கிளம்பிப் போய், ஒரு தொழுவத்தில் யோசேப்பையும் மரியாளையும் குழந்தையையும் பார்த்தார்கள்.

அந்த மேய்ப்பர்களிடம் தேவதூதர் சொன்ன விஷயங்களைக் கேள்விப்பட்ட எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள். தேவதூதர் சொன்ன வார்த்தைகளைப் பற்றி மரியாள் நன்றாக யோசித்துப் பார்த்தாள். அவற்றை மறக்கவே இல்லை. மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளைக் கவனித்துக்கொள்வதற்காகத் திரும்பிப் போனார்கள். தாங்கள் கேட்டதையும் பார்த்ததையும் நினைத்து யெகோவாவுக்கு நன்றி சொன்னார்கள்.

“நான் கடவுளிடமிருந்து இங்கே வந்திருக்கிறேன். நான் சுயமாக வரவில்லை, அவர்தான் என்னை இங்கே அனுப்பினார்.”—யோவான் 8:42