Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 72

இளம் இயேசு

இளம் இயேசு

யோசேப்பும் மரியாளும் நாசரேத்தில் வாழ்ந்தார்கள். இயேசுவும் அவருக்கு அடுத்து பிறந்த மற்ற மகன்களும் மகள்களும் அவர்களோடு இருந்தார்கள். யோசேப்பு மர வேலை செய்து குடும்பத்தைக் கவனித்துக்கொண்டார். அவர்களுக்கு யெகோவாவைப் பற்றியும் திருச்சட்டத்தில் இருக்கும் விஷயங்களைப் பற்றியும் சொல்லிக்கொடுத்தார். கடவுளை வணங்குவதற்காக அவர்கள் எல்லாரும் ஜெபக்கூடத்துக்குத் தவறாமல் போனார்கள். அதோடு, பஸ்கா பண்டிகையைக் கொண்டாடுவதற்காக ஒவ்வொரு வருஷமும் எருசலேமுக்குப் போனார்கள்.

இயேசுவுக்கு 12 வயது இருந்தபோது, வழக்கம் போல அவருடைய குடும்பத்தார் ரொம்பத் தூரம் பயணம் செய்து எருசலேமுக்குப் போனார்கள். பஸ்கா பண்டிகைக்காக நிறைய பேர் அங்கே வந்திருந்தார்கள். அதனால், ஒரே கூட்டமாக இருந்தது. பண்டிகை முடிந்ததும், யோசேப்பும் மரியாளும் வீட்டுக்குக் கிளம்பினார்கள். தங்களுடன் பயணம் செய்கிறவர்களோடு இயேசு இருப்பார் என்று அவர்கள் நினைத்துக்கொண்டார்கள். ஆனால், தங்கள் சொந்தக்காரர்களுடன் அவர் இருக்கிறாரா என்று தேடியபோதுதான், அவர்களோடு இயேசு இல்லை என்பது தெரியவந்தது.

அதனால், யோசேப்பும் மரியாளும் எருசலேமுக்குத் திரும்பிப் போய், மூன்று நாட்களாக தங்கள் மகனைத் தேடினார்கள். கடைசியில், ஆலயத்துக்குப் போனார்கள். இயேசு அங்கே போதகர்களோடு உட்கார்ந்து, அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டும், புத்திசாலித்தனமான கேள்விகளைக் கேட்டுக்கொண்டும் இருந்தார். அந்தப் போதகர்கள் இயேசுவைப் பார்த்து ரொம்ப ஆச்சரியப்பட்டு, அவரிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்கள். அவர் சொன்ன பதில்களைக் கேட்டு அசந்துபோனார்கள். யெகோவா தந்த திருச்சட்டத்தை அவர் நன்றாகப் புரிந்து வைத்திருந்தார் என்பதை அவர்கள் தெரிந்துகொண்டார்கள்.

இயேசுவைப் பார்க்கும்வரை யோசேப்பும் மரியாளும் ரொம்பக் கவலையாக இருந்தார்கள். அவரைப் பார்த்ததும் மரியாள் அவரிடம், ‘மகனே, நாங்கள் உன்னைத் தேடாத இடமே இல்லை! எங்கே போனாய்?’ என்று கேட்டாள். அதற்கு இயேசு, ‘நான் என்னுடைய அப்பாவின் வீட்டில்தான் இருப்பேன் என்று உங்களுக்குத் தெரியாதா?’ என்று கேட்டார்.

இயேசு தன் அப்பா-அம்மாவோடு நாசரேத்துக்குத் திரும்பிப் போனார். மர வேலை செய்ய இயேசுவுக்கு யோசேப்பு கற்றுக்கொடுத்தார். இளம் வயதில் இயேசு எப்படிப்பட்டவராக இருந்திருப்பார் என்று நீ நினைக்கிறாய்? அவர் வளர வளர, அவருடைய ஞானம் அதிகமானது. கடவுளுக்கும் சரி, மனிதர்களுக்கும் சரி, அவரை ரொம்பப் பிடித்திருந்தது.

“என் கடவுளே, உங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதுதான் எனக்குச் சந்தோஷம். உங்களுடைய சட்டம் என் இதயத்தின் ஆழத்தில் இருக்கிறது.”—சங்கீதம் 40:8