Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 81

மலைப் பிரசங்கம்

மலைப் பிரசங்கம்

இயேசு 12 அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுத்த பிறகு, மலையிலிருந்து இறங்கி வந்தார். அங்கே மக்கள் பெரிய கூட்டமாக கூடியிருந்தார்கள். கலிலேயா, யூதேயா, சீதோன், சீரியா ஆகிய இடங்களிலிருந்தும் யோர்தானுக்கு அக்கரையிலிருந்தும் அவர்கள் வந்திருந்தார்கள். நோயாளிகளையும் பேய்களால் கஷ்டப்படுகிறவர்களையும் கூட்டிக்கொண்டு வந்திருந்தார்கள். அவர்கள் எல்லாரையும் இயேசு குணமாக்கினார். பிறகு, மலையின் ஒரு பக்கத்தில் உட்கார்ந்து அவர்களிடம் பேச ஆரம்பித்தார். யெகோவாவுக்கு நண்பர்களாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று அவர் சொன்னார். நமக்கு யெகோவாவின் வழிநடத்துதல் தேவை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும், அவரிடம் அன்பு காட்ட கற்றுக்கொள்ள வேண்டும். அதேசமயம், மற்றவர்களிடமும் அன்பு காட்ட வேண்டும். இல்லையென்றால், கடவுளிடம் நம்மால் அன்பு காட்ட முடியாது. எல்லாருக்கும் இரக்கம் காட்ட வேண்டும். எதிரிகளுக்கும்கூட இரக்கம் காட்ட வேண்டும். யாரிடமும் பாரபட்சம் காட்டக் கூடாது.

‘நண்பர்களிடம் மட்டும் அன்பு காட்டினால் போதாது. எதிரிகளிடமும் அன்பு காட்ட வேண்டும். மனதார மன்னிக்க வேண்டும். யாராவது உங்கள்மேல் கோபமாக இருந்தால், உடனடியாக அவரிடம் போய் மன்னிப்பு கேட்க வேண்டும். மற்றவர்கள் உங்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதே மாதிரி நீங்கள் அவர்களிடம் நடந்துகொள்ள வேண்டும்’ என்று இயேசு சொன்னார்.

பணம், பொருள் பற்றியும் நல்ல ஆலோசனைகளைக் கொடுத்தார். ‘நிறைய பணம் வைத்திருப்பதைவிட, யெகோவாவின் நண்பராக இருப்பதுதான் ரொம்ப முக்கியம். ஒரு திருடனால் பணத்தைத் திருட முடியும். ஆனால், யெகோவாவுடன் உங்களுக்கு இருக்கிற நட்பை யாராலும் திருட முடியாது. எதைச் சாப்பிடுவது, எதைக் குடிப்பது, எதை உடுத்துவது என்று கவலைப்படுவதை நிறுத்துங்கள். பறவைகளைப் பாருங்கள். அவற்றுக்குத் தேவையான உணவைக் கடவுள் கொடுக்கிறார். கவலைப்படுவதால் உங்களுடைய வாழ்நாளில் ஒருநாளைக்கூட அதிகமாக்க முடியாது. உங்களுக்கு என்ன தேவை என்று யெகோவாவுக்குத் தெரியும் என்பதை மறந்துவிடாதீர்கள்’ என்று இயேசு சொன்னார்.

அந்த மக்கள் இப்படிப்பட்ட பிரசங்கத்தை அதுவரை கேட்டதே இல்லை. அவர்களுடைய மதத் தலைவர்கள் இதையெல்லாம் சொல்லித்தரவில்லை. இயேசு ஏன் மிகப் பெரிய போதகராக இருந்தார் தெரியுமா? ஏனென்றால், யெகோவா தனக்குச் சொல்லித்தந்த விஷயங்களையே அவர் மக்களிடம் சொன்னார்.

“நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கிறேன்; அதனால் என் நுகத்தடியை உங்கள் தோள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்; அப்போது, உங்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும்.”—மத்தேயு 11:29