Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 89

இயேசுவைத் தெரியாது என்று பேதுரு சொல்கிறார்

இயேசுவைத் தெரியாது என்று பேதுரு சொல்கிறார்

இயேசு தன் அப்போஸ்தலர்களோடு மாடி அறையில் இருந்த சமயத்தில், ‘இன்று ராத்திரி நீங்கள் எல்லாரும் என்னை விட்டுவிட்டு ஓடிவிடுவீர்கள்’ என்று சொன்னார். அப்போது பேதுரு, ‘இல்லை! மற்ற எல்லாரும் உங்களை விட்டுப் போனாலும், நான் போக மாட்டேன்’ என்று சொன்னார். அப்போது இயேசு, ‘சேவல் கூவுவதற்கு முன்னால், என்னைத் தெரியாது என்று நீ மூன்று தடவை சொல்லிவிடுவாய்’ என்றார்.

படைவீரர்கள் இயேசுவைப் பிடித்து காய்பாவின் வீட்டுக்குக் கொண்டுபோன சமயத்தில், அப்போஸ்தலர்கள் அங்கிருந்து ஓடிவிட்டார்கள். அவர்களில் இரண்டு பேர் மட்டும் கூட்டத்தின் பின்னால் போனார்கள். அந்த இரண்டு பேரில் பேதுருவும் ஒருவர். அவர் காய்பாவின் வீட்டு முற்றத்துக்குப் போய், நெருப்பு பக்கத்தில் குளிர்காய்ந்துகொண்டிருந்தார். அந்த வெளிச்சத்தில், ஒரு வேலைக்காரப் பெண் பேதுருவின் முகத்தைப் பார்த்து, ‘உன்னை எனக்குத் தெரியும்! நீயும் இயேசுவோடு இருந்தாய்!’ என்று சொன்னாள்.

அதற்கு பேதுரு, ‘இல்லை! அது நான் கிடையாது! நீ என்ன சொல்கிறாய் என்றே எனக்குப் புரியவில்லை’ என்று சொன்னார். பிறகு, வாசல் பக்கமாகப் போனார். கொஞ்ச நேரத்திலேயே, இன்னொரு வேலைக்காரப் பெண் அவரைப் பார்த்து, ‘இந்த ஆளும் இயேசுவோடு இருந்தான்!’ என்று அங்கிருந்த ஆட்களிடம் சொன்னாள். அப்போது பேதுரு, ‘இயேசு யார் என்றே எனக்குத் தெரியாது!’ என்று சொன்னார். அப்போது இன்னொருவன், ‘நீயும் அவர்களில் ஒருவன்தான்! இயேசு மாதிரியே நீயும் கலிலேயாவிலிருந்து வந்தவன்தான். உன் பேச்சை வைத்தே தெரிகிறது!’ என்று அவரிடம் சொன்னான். அதற்கு பேதுரு, ‘எனக்கு அவரைத் தெரியாது’ என்று சத்தியம் செய்தார்.

அந்த நிமிஷமே, சேவல் கூவியது. இயேசு தன்னைத் திரும்பிப் பார்ப்பதை பேதுரு பார்த்தார். உடனே, இயேசு சொன்னது அவருக்கு ஞாபகம் வந்தது. அதனால் அவர் வெளியே போய் கதறி அழுதார்.

இதற்குள், இயேசுவை விசாரிப்பதற்காக காய்பாவின் வீட்டுக்குள் நியாயசங்கம் கூடியது. அவரைக் கொல்ல வேண்டும் என்று ஏற்கெனவே முடிவு செய்து விட்டார்கள். இப்போது அதற்கு ஒரு காரணத்தைத் தேடினார்கள். ஆனால், அவரைக் கொல்வதற்கு எந்தக் காரணமும் கிடைக்கவில்லை. கடைசியில், காய்பா இயேசுவிடம், ‘நீ கடவுளுடைய மகனா?’ என்று நேரடியாகக் கேட்டார். அதற்கு இயேசு, ‘ஆமாம்’ என்று சொன்னார். உடனே காய்பா, ‘இனி நமக்கு வேறு எந்த ஆதாரமும் தேவையில்லை. இவன் கடவுளைப் பழித்துவிட்டான்!’ என்று சொன்னார். ‘இவன் சாக வேண்டும்’ என்று நியாயசங்கத்தில் இருந்த எல்லாரும் சொன்னார்கள். அவர்கள் இயேசுவின் கன்னத்தில் அறைந்தார்கள், அவர்மேல் துப்பினார்கள். அவருடைய கண்களைக் கட்டி, அவரை அடித்து, ‘நீ ஒரு தீர்க்கதரிசியாக இருந்தால், உன்னை அடித்தது யார் என்று சொல் பார்க்கலாம்’ என்றார்கள்.

விடிந்த பிறகு, இயேசுவை நியாயசங்கத்துக்குக் கொண்டுபோனார்கள். மறுபடியும் அவரிடம், ‘நீ கடவுளுடைய மகனா?’ என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, ‘நீங்களே அதைச் சொல்லிவிட்டீர்கள்’ என்று சொன்னார். அவர் கடவுளைப் பழித்துப் பேசியதாகச் சொல்லி ரோம ஆளுநரான பொந்தியு பிலாத்துவின் மாளிகைக்கு அவரைக் கொண்டுபோனார்கள். அடுத்து என்ன நடந்தது? நாம் பார்க்கலாம்.

‘நேரம் . . .  வந்துவிட்டது. நீங்கள் ஒவ்வொருவரும் சிதறடிக்கப்பட்டு அவரவருடைய வீட்டுக்குப் போவீர்கள். என்னையோ தனியாக விட்டுவிடுவீர்கள். ஆனாலும், நான் தனியாக இல்லை, என் தகப்பன் என்னோடு இருக்கிறார்.’—யோவான் 16:32