Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 90

கொல்கொதாவில் இயேசு இறந்துபோகிறார்

கொல்கொதாவில் இயேசு இறந்துபோகிறார்

முதன்மை குருமார்கள் ஆளுநரின் மாளிகைக்கு இயேசுவைக் கொண்டுபோனார்கள். அப்போது பிலாத்து, ‘இவன் என்ன குற்றம் செய்ததாகச் சொல்கிறீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு அவர்கள், ‘தான் ஒரு ராஜா என்று இவன் சொல்கிறான்’ என்றார்கள். அப்போது பிலாத்து, “நீ யூதர்களுடைய ராஜாவா?” என்று இயேசுவிடம் கேட்டார். அதற்கு இயேசு, “என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமல்ல” என்று சொன்னார்.

பிறகு பிலாத்து, கலிலேயாவை ஆட்சி செய்த ஏரோதுவிடம் இயேசுவை அனுப்பினார். இயேசுவிடம் ஏரோது ஏதாவது குற்றம் கண்டுபிடிக்கிறானா என்று பார்ப்பதற்காகத்தான் அவனிடம் அனுப்பினார். இயேசுவிடம் எந்தக் குற்றத்தையும் ஏரோதுவினால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அவன் இயேசுவை மறுபடியும் பிலாத்துவிடமே அனுப்பினான். பிறகு பிலாத்து மக்களிடம், ‘நானும் சரி, ஏரோதுவும் சரி, இவனிடம் எந்தக் குற்றத்தையும் பார்க்கவில்லை. அதனால், நான் இவனை விடுதலை செய்கிறேன்’ என்று சொன்னார். அப்போது அவர்கள் எல்லாரும், ‘இவனைக் கொல்லுங்கள்! இவனைக் கொல்லுங்கள்!’ என்று சத்தம் போட்டார்கள். படைவீரர்கள் இயேசுவைச் சாட்டையால் அடித்து, அவர்மேல் துப்பினார்கள், அவரை அடித்தார்கள். முள்கிரீடத்தை அவருடைய தலையில் வைத்தார்கள். பிறகு, ‘யூதர்களின் ராஜாவே, வாழ்க!’ என்று கேலி செய்தார்கள். மறுபடியும் பிலாத்து அந்த மக்களிடம், ‘இவன் எந்தத் தப்பும் செய்ததாகத் தெரியவில்லை’ என்று சொன்னார். ஆனால் அவர்கள், “இவனை மரக் கம்பத்தில் அறைந்து கொல்லுங்கள்!” என்று கத்தினார்கள். அதனால், இயேசுவைக் கொல்வதற்கு பிலாத்து விட்டுவிட்டார்.

படைவீரர்கள் இயேசுவை கொல்கொதா என்ற இடத்துக்குக் கொண்டுபோனார்கள். அங்கே அவரை ஒரு கம்பத்தில் வைத்து ஆணி அடித்தார்கள். பிறகு, அதைத் தூக்கி நிறுத்தினார்கள். அப்போது இயேசு, ‘அப்பா, இவர்களை மன்னித்து விடுங்கள். என்ன செய்கிறார்கள் என்றே இவர்களுக்குத் தெரியவில்லை’ என்று ஜெபம் செய்தார். மக்கள் அவரைக் கேலி செய்தார்கள். ‘நீ கடவுளுடைய மகன் என்றால், கம்பத்திலிருந்து இறங்கி வா! உன்னை நீயே காப்பாற்றிக்கொள்!’ என்று சொன்னார்கள்.

இயேசுவுக்குப் பக்கத்திலிருந்த மர கம்பத்தில், தொங்கவிடப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன், “நீங்கள் ஆட்சிக்கு வரும்போது என்னை நினைத்துக்கொள்ளுங்கள்” என்றான். அப்போது இயேசு, “நீ என்னோடு பூஞ்சோலையில் இருப்பாய்” என்று சத்தியம் செய்தார். அன்று மத்தியானம், மூன்று மணி நேரத்துக்கு ஒரே இருட்டாக இருந்தது. அந்தக் கம்பத்துக்குப் பக்கத்தில் இயேசுவின் அம்மா மரியாளும் அவருடைய சீஷர்கள் சிலரும் நின்றுகொண்டிருந்தார்கள். மரியாளைச் சொந்த அம்மா மாதிரி கவனித்துக்கொள்ளும்படி யோவானிடம் இயேசு சொன்னார்.

கடைசியாக, “முடித்துவிட்டேன்!” என்று இயேசு சொன்னார். பிறகு, தலையைச் சாய்த்து இறந்துபோனார். அந்த நொடியே, பயங்கரமான நிலநடுக்கம் வந்தது. ஆலயத்தில், பரிசுத்த அறைக்கும் மகா பரிசுத்த அறைக்கும் இடையில் தொங்கிய கனமான திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது. ஒரு படை அதிகாரி, ‘இவர் உண்மையிலேயே கடவுளுடைய மகன்தான்’ என்றார்.

“கடவுளுடைய வாக்குறுதிகள் எத்தனை இருந்தாலும், அவை அத்தனையும் அவர் மூலமாக ‘ஆம்’ என்றே ஆகியிருக்கின்றன.”—2 கொரிந்தியர் 1:20