Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 94

சீஷர்களுக்குக் கடவுளுடைய சக்தி கிடைக்கிறது

சீஷர்களுக்குக் கடவுளுடைய சக்தி கிடைக்கிறது

இயேசு பரலோகத்துக்குப் போய் பத்து நாட்களுக்குப் பிறகு, அவருடைய சீஷர்களுக்குக் கடவுளுடைய சக்தி கிடைத்தது. அது கி.பி. 33-ஆம் வருஷம், பெந்தெகொஸ்தே பண்டிகை நாள். அந்தப் பண்டிகைக்காக மக்கள் நிறைய இடங்களிலிருந்து எருசலேமுக்கு வந்திருந்தார்கள். இயேசுவின் சீஷர்களில் சுமார் 120 பேர் ஒரு வீட்டின் மாடி அறையில் கூடியிருந்தார்கள். திடீரென்று, ஒரு அதிசயம் நடந்தது! நெருப்பு போன்ற ஒன்று சீஷர்கள் ஒவ்வொருவரின் தலைக்கு மேல் வந்து நின்றது. அவர்கள் எல்லாரும் வேறு வேறு மொழிகளில் பேச ஆரம்பித்தார்கள். புயல் அடிப்பது போல பயங்கரமான சத்தம் அந்த வீடு முழுவதும் கேட்டது.

மற்ற நாடுகளிலிருந்து எருசலேமுக்கு வந்திருந்த ஆட்கள் அந்தச் சத்தத்தைக் கேட்டார்கள். என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக அந்த வீட்டுக்கு ஓடி வந்தார்கள். அந்தச் சீஷர்கள் வேறு வேறு மொழிகளில் பேசுவதைக் கேட்டு ரொம்ப ஆச்சரியப்பட்டார்கள். ‘இவர்கள் கலிலேயாவைச் சேர்ந்த ஆட்கள்தானே? இவர்களால் எப்படி நம்முடைய மொழிகளில் பேச முடிகிறது?’ என்று அவர்கள் பேசிக்கொண்டார்கள்.

பிறகு, பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும் அந்த மக்கள்முன் வந்து நின்றார்கள். இயேசு எப்படிக் கொல்லப்பட்டார் என்பதையும், யெகோவா அவரை மறுபடியும் உயிரோடு எழுப்பினார் என்பதையும் பேதுரு அவர்களிடம் சொன்னார். பிறகு, ‘இப்போது இயேசு பரலோகத்தில் கடவுளுடைய வலது பக்கத்தில் இருக்கிறார். அவர் சொன்னபடியே, கடவுளுடைய சக்தியை இப்போது கொடுத்திருக்கிறார். அதனால்தான் இந்த அற்புதங்களை நீங்கள் பார்த்தீர்கள், கேட்டீர்கள்’ என்று பேதுரு சொன்னார்.

பேதுரு சொன்ன விஷயங்கள் அவர்களுடைய மனதைத் தொட்டதால், “நாங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள். அப்போது அவர், ‘உங்கள் பாவங்களை விட்டுவிட்டு திருந்துங்கள். இயேசுவின் பெயரில் ஞானஸ்நானம் எடுங்கள். அப்போது, கடவுளுடைய சக்தி என்ற பரிசு உங்களுக்கும் கிடைக்கும்’ என்று சொன்னார். அன்றைக்கு, கிட்டத்தட்ட 3,000 பேர் ஞானஸ்நானம் எடுத்தார்கள். அன்றுமுதல், எருசலேமில் சீஷர்களின் எண்ணிக்கை கடகடவென்று அதிகமானது. கடவுளுடைய சக்தியின் உதவியால், நிறைய சபைகளை அப்போஸ்தலர்கள் ஆரம்பித்தார்கள். இயேசு கட்டளையிட்ட எல்லா விஷயங்களையும் சீஷர்களுக்கு அங்கே சொல்லிக்கொடுத்தார்கள்.

“இயேசுதான் எஜமான் என்று உங்களுடைய வாயினால் எல்லாருக்கும் சொல்லி, அவரைக் கடவுள் உயிரோடு எழுப்பினார் என உங்களுடைய இதயத்தில் விசுவாசித்தால் உங்களுக்கு மீட்பு கிடைக்கும்.”—ரோமர் 10:9