Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 96

சவுலை இயேசு தேர்ந்தெடுக்கிறார்

சவுலை இயேசு தேர்ந்தெடுக்கிறார்

சவுல் ஒரு ரோமக் குடிமகன். அவர் தர்சு நகரத்தில் பிறந்தவர். அவர் யூதர்களின் திருச்சட்டத்தைக் கரைத்துக் குடித்த பரிசேயர். கிறிஸ்தவர்களை அவருக்குப் பிடிக்கவே பிடிக்காது. அதனால் கிறிஸ்தவ ஆண்களையும் பெண்களையும் அவர்களுடைய வீடுகளிலிருந்து இழுத்துக்கொண்டு போய், சிறையில் தள்ளினார். இயேசுவின் சீஷரான ஸ்தேவானைக் கொலைவெறி பிடித்த கும்பல் கல்லால் அடித்து கொன்றபோதுகூட சவுல் அங்கே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்.

எருசலேமில் இருந்த கிறிஸ்தவர்களைக் கைது செய்த பிறகும் சவுல் திருப்தியாகவில்லை. தமஸ்குவில் இருந்தவர்களையும் பிடிக்க நினைத்தார். அதற்காகத் தமஸ்குவுக்குப் போக தலைமைக் குருவிடம் அனுமதி கேட்டார். தமஸ்குவுக்குப் பக்கத்தில் சவுல் போய்க்கொண்டிருந்தபோது, திடீரென்று பயங்கரமான வெளிச்சம் அவரைச் சுற்றிப் பிரகாசித்தது. அவர் தரையில் விழுந்தார். அப்போது ஒரு குரல், ‘சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்?’ என்று கேட்டது. அதற்கு சவுல், ‘நீங்கள் யார்?’ என்று கேட்டார். அப்போது, ‘நான்தான் இயேசு. நீ தமஸ்குவுக்குப் போ. நீ என்ன செய்ய வேண்டும் என்று அங்கே ஒருவர் உன்னிடம் சொல்வார்’ என்று பதில் வந்தது. அந்த நிமிஷமே, சவுலுக்குக் கண் தெரியாமல் போனது. அதனால், அவருடைய கையைப் பிடித்து நகரத்துக்குள் கூட்டிக்கொண்டு போக வேண்டியிருந்தது.

தமஸ்குவில் அனனியா என்ற ஒரு கிறிஸ்தவர் இருந்தார். அவர் கடவுளுக்கு உண்மையாக இருந்தார். இயேசு ஒரு தரிசனத்தில், ‘நீ நேர் தெருவில் இருக்கிற யூதாஸ் வீட்டுக்குப் போ. அங்கே சவுலைப் போய்ப் பார்’ என்று அவரிடம் சொன்னார். அப்போது அனனியா, ‘எஜமானே, அந்த ஆளைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்! அவன் உங்களுடைய சீஷர்களைச் சிறையில் தள்ளுகிறானே!’ என்றார். ஆனால் இயேசு, ‘நீ போய் அவனைப் பார். பல தேசத்து மக்களுக்கு நல்ல செய்தியைச் சொல்ல நான் சவுலைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்’ என்று சொன்னார்.

அனனியா சவுலைப் போய்ப் பார்த்தார். அவரிடம், ‘சவுலே, என் சகோதரனே, உன் கண்களைத் திறப்பதற்காக இயேசு என்னை அனுப்பியிருக்கிறார்’ என்றார். உடனே, சவுலுக்குக் கண் தெரிந்தது. அவர் இயேசுவைப் பற்றிக் கற்றுக்கொண்டு, அவருடைய சீஷரானார். ஞானஸ்நானம் எடுத்து கிறிஸ்தவராக மாறிய பிறகு, மற்ற கிறிஸ்தவர்களோடு சேர்ந்து ஜெபக்கூடங்களில் பிரசங்கிக்க ஆரம்பித்தார். கொஞ்சம் யோசித்துப் பார், இயேசுவைப் பற்றி சவுல் பிரசங்கிப்பதைப் பார்த்தபோது யூதர்களுக்கு எவ்வளவு அதிர்ச்சியாக இருந்திருக்கும்! ‘இயேசுவின் சீஷர்களைத் தேடிப் பிடித்து கொடுமைப்படுத்தியவன் இவன்தானே?’ என்று அவர்கள் பேசிக்கொண்டார்கள்.

மூன்று வருஷங்களுக்கு, தமஸ்குவில் இருந்த மக்களிடம் சவுல் பிரசங்கித்தார். அதனால், யூதர்களுக்கு சவுலைப் பிடிக்கவில்லை. அவரைக் கொல்லத் திட்டம் போட்டார்கள். அந்த விஷயம் சகோதரர்களுக்குத் தெரிந்தவுடன், அங்கிருந்து தப்பிக்க சவுலுக்கு உதவி செய்தார்கள். அவரை ஒரு கூடையில் வைத்து, நகரத்தின் மதில்சுவரில் இருந்த ஜன்னல் வழியாக இறக்கிவிட்டார்கள்.

அவர் எருசலேமுக்கு வந்தபோது, அங்கிருந்த சகோதரர்களோடு சேர்ந்துகொள்ள முயற்சி செய்தார். ஆனால், அவர்கள் சவுலைப் பார்த்து பயந்தார்கள். அப்போது பர்னபா என்ற அன்பான சீஷர், சவுலை அப்போஸ்தலர்களிடம் கூட்டிக்கொண்டு போனார். சவுல் உண்மையிலேயே மாறிவிட்டார் என்று அவர்களை நம்ப வைத்தார். எருசலேமில் இருந்த சபையுடன் சேர்ந்து சவுல் ரொம்ப ஆர்வத்தோடு நல்ல செய்தியைப் பிரசங்கித்தார். இந்த சவுலைத்தான் பிறகு பவுல் என்று எல்லாரும் கூப்பிட்டார்கள்.

“பாவிகளை மீட்பதற்காகக் கிறிஸ்து இயேசு உலகத்துக்கு வந்தார். அந்தப் பாவிகளில் பெரும் பாவி நான்தான்.”—1 தீமோத்தேயு 1:15