Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 101

பவுல் ரோமுக்கு அனுப்பப்படுகிறார்

பவுல் ரோமுக்கு அனுப்பப்படுகிறார்

பவுல் தன்னுடைய மூன்றாவது பிரசங்கப் பயணத்தை எருசலேமில் முடித்தார். அங்கே அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் போடப்பட்டார். ராத்திரியில் ஒரு தரிசனத்தில் இயேசு அவரிடம், ‘நீ ரோமுக்குப் போய் அங்கே பிரசங்க வேலை செய்வாய்’ என்று சொன்னார். பவுல் எருசலேமிலிருந்து செசரியாவுக்குக் கொண்டுபோகப்பட்டார். அங்கே இரண்டு வருஷங்கள் சிறையில் இருந்தார். ஆளுநரான பெஸ்து அவரை விசாரணை செய்தபோது, ‘ரோம அரசன் என்னை விசாரிக்க வேண்டும்’ என்று பவுல் சொன்னார். அப்போது பெஸ்து, “ரோம அரசனிடம் நீ மேல்முறையீடு செய்திருக்கிறாய், அதனால் ரோம அரசனிடமே நீ போகலாம்” என்று சொன்னார். ரோமுக்குப் போகிற ஒரு கப்பலில் பவுலை ஏற்றினார்கள். லூக்கா, அரிஸ்தர்க்கு ஆகிய இரண்டு சகோதரர்களும் அவருடன் போனார்கள்.

அப்போது கடலில் பயங்கர புயல் அடித்தது. நிறைய நாட்களாக புயல் அடித்துக்கொண்டே இருந்ததால், செத்து விடுவோம் என்று எல்லாரும் நினைத்தார்கள். ஆனால் பவுல், ‘நண்பர்களே, ஒரு தேவதூதர் என் கனவில் வந்தார். அவர், “பவுலே, பயப்படாதே. நீ ரோமுக்குப் போவாய். உன்னோடு கப்பலில் இருக்கிற எல்லாரும் பத்திரமாக இருப்பார்கள்” என்று சொன்னார். அதனால், தைரியமாக இருங்கள்! நாம் சாக மாட்டோம்’ என்று சொன்னார்.

14 நாட்களுக்குப் புயல் அடித்தது. கடைசியில், ஒரு இடம் கண்ணுக்குத் தெரிந்தது. அது மெலித்தா தீவு. அந்தக் கப்பல் மணலில் சிக்கி, துண்டு துண்டாக உடைந்தது. ஆனால், கப்பலில் இருந்த 276 பேரும் பத்திரமாகக் கரைக்குப் போய்ச்சேர்ந்தார்கள். சிலர் நீந்திப் போனார்கள். மற்றவர்கள் கப்பலின் உடைந்த பாகங்களைப் பிடித்துக்கொண்டு கரைக்குப் போனார்கள். மெலித்தா தீவில் இருந்த மக்கள் அவர்களை நன்றாகக் கவனித்துக்கொண்டார்கள், குளிர்காய்வதற்காக நெருப்பு மூட்டி உதவி செய்தார்கள்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு, படைவீரர்கள் வேறொரு கப்பலில் பவுலை ரோமுக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள். ரோமுக்குப் போனதும் அவரைப் பார்க்க சகோதரர்கள் வந்தார்கள். அவர்களைப் பார்த்தபோது, பவுலுக்குத் தைரியம் கிடைத்தது. அதனால், யெகோவாவுக்கு நன்றி சொன்னார். பவுல் ஒரு கைதியாக இருந்தாலும், ஒரு வாடகை வீட்டில் தங்க அவருக்கு அனுமதி கிடைத்தது. அவரைக் காவல் காக்க ஒரு படைவீரர் அங்கே இருந்தார். பவுல் இரண்டு வருஷங்கள் அந்த வீட்டில் இருந்தார். அவரைப் பார்க்க வந்த மக்களிடம் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் பேசினார். ஆசியா மைனரிலும் யூதேயாவிலும் இருந்த சபைகளுக்குக் கடிதங்களையும் எழுதினார். மற்ற தேசங்களில் நல்ல செய்தியைச் சொல்வதற்கு பவுலை யெகோவா நன்றாகப் பயன்படுத்தினார்.

‘உபத்திரவங்கள், நெருக்கடிகள், கஷ்டங்கள் ஆகியவற்றின்போது நாங்கள் காட்டிய சகிப்புத்தன்மையின் மூலம் எல்லா விதத்திலும் எங்களைக் கடவுளுடைய ஊழியர்களாகச் சிபாரிசு செய்கிறோம்.’—2 கொரிந்தியர் 6:4, 5, 8