Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 13

‘ஆலயத்தைப் பற்றி விளக்கிச் சொல்’

‘ஆலயத்தைப் பற்றி விளக்கிச் சொல்’

எசேக்கியேல் 43:10

முக்கியக் குறிப்பு: மகிமையான ஆலயத்தைப் பற்றிய தரிசனத்தின் அர்த்தம்

1-3. (அ) பிரமாண்டமான ஒரு ஆலய வளாகத்தைப் பார்த்தது எசேக்கியேலுக்கு ஏன் ஆறுதலாக இருந்திருக்கும்? (ஆரம்பப் படம்.) (ஆ) இந்த அதிகாரத்தில் நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்?

எசேக்கியேலுக்கு இப்போது 50 வயது. கடந்த 25 வருஷங்களைச் சிறையிருப்பில் செலவிட்டதைப் பற்றி யோசித்துப் பார்க்கிறார். எருசலேம் ஆலயம் பல வருஷங்களாகப் பாழாய்க் கிடக்கிறது. ஒருவேளை எருசலேம் ஆலயத்தில் ஒரு குருவாகச் சேவை செய்யலாம் என்று அவர் கனவு கண்டிருக்கலாம். ஆனால், அந்தக் கனவெல்லாம் நனவாகாது என்பதை இப்போது அவர் புரிந்துகொள்கிறார். சிறையிருப்பின் காலம் முடிவதற்கு இன்னும் சுமார் 56 வருஷங்கள் காத்திருக்க வேண்டும். அதனால், யெகோவாவின் மக்கள் தாய்நாட்டுக்குத் திரும்பிப் போய் ஆலயத்தைத் திரும்பக் கட்டும் காலம்வரைக்கும் தான் உயிரோடு இருப்பதற்கு வாய்ப்பில்லை என்பதை அவர் புரிந்துகொள்கிறார். (எரே. 25:11) இதையெல்லாம் நினைத்து அவர் சோர்ந்துபோகிறாரா?

2 உண்மையுள்ள எசேக்கியேல்மீது யெகோவாவுக்கு ரொம்ப அன்பு இருந்ததால், இந்தச் சமயம் பார்த்து, நுணுக்கமான விவரங்களைக் கொண்ட ஒரு தரிசனத்தை அவருக்குக் காட்டுகிறார். அந்தத் தரிசனம் எசேக்கியேலுக்கு ரொம்பவே ஆறுதலையும் நம்பிக்கையையும் தந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அந்தத் தரிசனத்தில் அவர் தன்னுடைய தாய்நாட்டுக்குக் கொண்டுபோகப்படுகிறார். மிகவும் உயரமான ஒரு மலைமீது நிறுத்தப்படுகிறார். அங்கே “ஒரு மனுஷரை” பார்க்கிறார். அவருடைய உடல், “செம்பினால் செய்யப்பட்டதைப் போல இருந்தது.” அவர் ஒரு தேவதூதர். பிரமாண்டமான ஒரு ஆலய வளாகம் முழுவதையும் எசேக்கியேலுக்கு அவர் சுற்றிக்காட்டுகிறார். (எசேக்கியேல் 40:1-4-ஐ வாசியுங்கள்.) எல்லாமே நிஜத்தில் நடப்பதுபோல் அவருக்குத் தெரிகிறது. இந்த அனுபவம் எசேக்கியேலின் விசுவாசத்தைப் பலப்படுத்தியிருக்கும், அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கும், கொஞ்சம் குழம்பிப்போகவும் வைத்திருக்கும். அந்த ஆலயத்தில் பார்க்கிற நிறைய விஷயங்கள் அவருக்குப் பழக்கப்பட்ட விஷயங்களாக இருக்கின்றன. ஆனால் அந்த ஆலயம், எருசலேமில் இருந்த ஆலயத்தைவிட ரொம்பவே வித்தியாசமாக இருக்கிறது.

3 ஆர்வத்தைத் தூண்டும் இந்தத் தரிசனம் எசேக்கியேல் புத்தகத்தின் கடைசி ஒன்பது அதிகாரங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. முதலாவதாக, இந்தத் தரிசனத்தை ஆராய்ந்து, அதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யும்போது நமக்கு எப்படிப்பட்ட மனப்பான்மை இருக்க வேண்டுமென்று பார்க்கலாம். அடுத்ததாக, பல நூற்றாண்டுகளுக்குப் பின் அப்போஸ்தலன் பவுல் விளக்கிச் சொன்ன மாபெரும் ஆன்மீக ஆலயத்தைத்தான் எசேக்கியேல் பார்த்தாரா என்பதை ஆராயலாம். கடைசியாக, அந்தத் தரிசனம் எசேக்கியேலுக்கும் அவரோடு சிறைபிடிக்கப்பட்டிருந்த யூதர்களுக்கும் எதைத் தெரியப்படுத்தியது என்பதைப் பார்க்கலாம்.

புரிந்துகொள்ளுதலில் மாற்றம்—ஏன் தேவை?

4. ஆலயம் சம்பந்தமான தரிசனத்தை முன்பு எப்படிப் புரிந்துகொண்டோம்? இப்போது நம் புரிந்துகொள்ளுதலில் என்ன மாற்றம் தேவைப்படுகிறது?

4 அப்போஸ்தலன் பவுல், கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எபிரெயர்களுக்கு எழுதிய கடிதத்தில் யெகோவாவின் மாபெரும் ஆன்மீக ஆலயத்தைப் பற்றிக் குறிப்பிட்டார். இந்த ஆலயமும், எசேக்கியேல் பார்த்த ஆலயமும் ஒன்றுதான் என்று நம்முடைய பிரசுரங்கள் முன்பு விளக்கின. * வழிபாட்டுக் கூடாரத்தைப் பற்றி பவுல் கொடுத்த விளக்கத்தைப் பயன்படுத்தி, எசேக்கியேல் பார்த்த ஆலயத்தின் பல அம்சங்களுக்கு அடையாள அர்த்தத்தைக் கொடுப்பது நியாயமாகத் தெரிந்தது. ஆனால், ஜெபம் செய்து ஆராய்ந்தபோதும் ஆழமாக யோசித்துப் பார்த்தபோதும் ஆலயத்தைப் பற்றி எசேக்கியேல் பார்த்த தரிசனத்துக்கு எளிமையான ஒரு விளக்கம் தேவைப்படுவது தெரியவந்தது.

5, 6. (அ) வழிபாட்டுக் கூடாரத்தின் சில அம்சங்களைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் என்ன சொன்னார்? வழிபாட்டுக் கூடாரத்தைப் பற்றி விளக்கும்போது பவுல் எப்படி மனத்தாழ்மையைக் காட்டினார்? (ஆ) ஆலயத்தைப் பற்றிய எசேக்கியேலின் தரிசனம் சம்பந்தமாகவும் இதேபோன்ற மனப்பான்மையை நாம் எப்படிக் காட்டலாம்?

5 தரிசனத்தில் எசேக்கியேல் பார்த்த ஆலயத்தின் ஒவ்வொரு அம்சத்துக்கும் அடையாள அர்த்தம் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்காமல் இருப்பது ஞானமானது. ஏன்? அதற்கு ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். வழிபாட்டுக் கூடாரத்தையும் ஆன்மீக ஆலயத்தையும் பற்றி பவுல் விளக்கியபோது, வழிபாட்டு கூடாரத்தைப் பற்றிய சில விவரங்களைக் குறிப்பிட்டார். உதாரணத்துக்கு, தங்கத் தூபக்கரண்டி, ஒப்பந்தப் பெட்டியின் மூடி, மன்னா வைக்கப்பட்ட தங்க ஜாடி போன்றவை வழிபாட்டுக் கூடாரத்தில் இருந்ததாகக் குறிப்பிட்டார். இவை ஒவ்வொன்றுக்கும் ஏதாவது அடையாள அர்த்தம் இருப்பதாக அவர் சொன்னாரா? அப்படிச் சொல்லும்படி கடவுளுடைய சக்தி அவரைத் தூண்டவில்லை. அதற்குப் பதிலாக, “இவற்றைப் பற்றி விவரமாகப் பேச இப்போது நேரம் இல்லை” என்றே அவர் எழுதினார். (எபி. 9:4, 5) பவுல், கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலின்படி நடக்கவும் மனத்தாழ்மையோடு யெகோவாவுக்காகக் காத்திருக்கவும் தயாராக இருந்தார்.—எபி. 9:8.

6 ஆலயத்தைப் பற்றிய எசேக்கியேலின் தரிசனத்தைப் படிக்கும்போது நமக்கும் இதே மனப்பான்மைதான் தேவை. இந்தத் தரிசனத்திலும் ஏகப்பட்ட விவரங்கள் இருக்கின்றன. இவற்றைப் பற்றிய கூடுதல் விளக்கங்களைத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டால், யெகோவா அதை விளக்கும்வரை மனத்தாழ்மையோடு காத்திருப்பதுதான் நல்லது. (மீகா 7:7-ஐ வாசியுங்கள்.) அப்படியானால், இந்தத் தரிசனத்தைப் பற்றி யெகோவாவின் சக்தி கூடுதலான எந்த விளக்கத்தையும் தரவில்லை என்ற முடிவுக்கு நாம் வர வேண்டுமா? வேண்டியதில்லை.

எசேக்கியேல் மாபெரும் ஆன்மீக ஆலயத்தைத்தான் பார்த்தாரா?

7, 8. (அ) நமக்குக் கிடைத்த புதிய புரிந்துகொள்ளுதல் என்ன? (ஆ) பவுல் விளக்கிய ஆன்மீக ஆலயத்துக்கும் எசேக்கியேல் பார்த்த ஆலயத்துக்கும் என்ன வித்தியாசம் இருந்தது?

7 ஏற்கெனவே சொல்லப்பட்டதுபோல், கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எபிரெயர்களுக்கு எழுதிய கடிதத்தில் பவுல் குறிப்பிட்டிருந்த யெகோவாவின் மாபெரும் ஆன்மீக ஆலயமும், எசேக்கியேல் பார்த்த ஆலயமும் ஒன்றுதான் என்று நம்முடைய பிரசுரங்கள் பல வருஷங்களாக விளக்கிவந்தன. ஆனால், கூடுதலாக ஆராய்ச்சி செய்த பிறகு, மாபெரும் ஆன்மீக ஆலயத்தை எசேக்கியேல் பார்த்திருக்க மாட்டார் என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம். எதை வைத்து அப்படிச் சொல்கிறோம்?

8 முதலாவதாக, மாபெரும் ஆன்மீக ஆலயத்தைப் பற்றி கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் பவுல் கொடுத்த விளக்கத்தோடு எசேக்கியேல் பார்த்த ஆலயம் ஒத்துப்போவதில்லை. இதைக் கொஞ்சம் கவனியுங்கள்: மோசேயின் காலத்திலிருந்த வழிபாட்டுக் கூடாரம், மிகப் பெரிய ஒரு விஷயத்துக்கு நிழலாகவும் அடையாளமாகவும் இருந்தது என்பதை அப்போஸ்தலன் பவுல் தெளிவாக விளக்கினார். சாலொமோன் மற்றும் செருபாபேல் கட்டிய ஆலயங்களில் (இவை இரண்டிலும் ஒரே விதமான அடிப்படை அம்சங்கள் இருந்தன) இருந்தது போலவே வழிபாட்டுக் கூடாரத்திலும் “மகா பரிசுத்த அறை” இருந்தது. பவுல் அந்த அறையை, “கையால் செய்யப்பட்ட . . . மகா பரிசுத்த அறை” என்றும், அது நிஜம் அல்ல, ‘நிஜத்தின் சாயல்’ என்றும் விளக்கினார். அப்படியானால், நிஜம் எது? யெகோவா குடியிருக்கிற ‘பரலோகம்தான்’ நிஜம் என்று அவர் விளக்கினார். (எபி. 9:3, 24) உண்மையிலேயே எசேக்கியேல் தன்னுடைய தரிசனத்தில் பரலோகத்தைத்தான் பார்த்தாரா? இல்லை. அவர் பரலோகத்தில் இருக்கிற விஷயங்களைப் பார்த்ததாக அவருடைய தரிசனத்தில் எந்தத் தகவலும் இல்லை. *

9, 10. பலிகள் செலுத்தும் விஷயத்தில், எசேக்கியேல் பார்த்த ஆலயத்துக்கும் பவுல் விளக்கிய மாபெரும் ஆன்மீக ஆலயத்துக்கும் என்ன வித்தியாசம் இருந்தது?

9 எசேக்கியேல் பார்த்த தரிசனத்துக்கும் பவுல் கொடுத்த விளக்கத்துக்கும் இன்னொரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. அது பலிகள் சம்பந்தப்பட்டது. பலிகள் செலுத்துவது சம்பந்தமாக மக்களுக்கும், தலைவர்களுக்கும், குருமார்களுக்கும் விலாவாரியான அறிவுரைகள் கொடுக்கப்பட்டதை எசேக்கியேல் தன்னுடைய தரிசனத்தில் பார்த்தார். அவர்கள் தங்களுடைய பாவங்களுக்காகப் பலிகள் செலுத்த வேண்டியிருந்தது. சமாதான பலிகளையும் செலுத்த வேண்டியிருந்தது. அதை ஒருவேளை, ஆலயத்தின் சாப்பாட்டு அறையில் அவர்கள் சாப்பிட்டிருக்கலாம். (எசே. 43:18, 19; 44:11, 15, 27; 45:15-20, 22-25) அப்படிப்பட்ட பலிகள் மாபெரும் ஆன்மீக ஆலயத்தில் செலுத்தப்படுகின்றனவா?

தரிசனத்தில் எசேக்கியேல் பார்த்த ஆலயம், மாபெரும் ஆன்மீக ஆலயம் அல்ல

10 அதற்கு, எளிமையான தெளிவான பதிலை பவுல் கொடுக்கிறார். அவர் இப்படி விளக்குகிறார்: “நிறைய நன்மைகளைச் செய்திருக்கிற தலைமைக் குருவான கிறிஸ்து, கையால் செய்யப்பட்ட பூமிக்குரிய கூடாரத்துக்குள் போகவில்லை; அதைவிட பரிபூரணமான பெரிய கூடாரத்துக்குள் போயிருக்கிறார். வெள்ளாடுகள், இளம் காளைகள் ஆகியவற்றின் இரத்தத்தை எடுத்துக்கொண்டு போகவில்லை. அதற்குப் பதிலாக, தன்னுடைய சொந்த இரத்தத்தை எடுத்துக்கொண்டு எல்லா காலத்துக்கும் ஒரே தடவையாக மகா பரிசுத்த அறைக்குள் போய், நமக்காக நிரந்தர விடுதலை வாங்கித் தந்திருக்கிறார்.” (எபி. 9:11, 12) அப்படியானால், மாபெரும் ஆன்மீக ஆலயத்தில் எல்லா காலத்துக்குமாக ஒரேவொரு பலி செலுத்தப்பட்டது. அதுதான், மிகப் பெரிய தலைமைக் குருவான இயேசு கிறிஸ்து செலுத்திய மீட்புப் பலி. ஆனால், எசேக்கியேல் பார்த்த ஆலயத்தில் நிறைய வெள்ளாடுகளும் காளைகளும் பலி செலுத்தப்பட்டிருந்ததால் அந்த ஆலயம், மாபெரும் ஆன்மீக ஆலயம் அல்ல என்ற முடிவுக்கு நம்மால் வர முடிகிறது.

11. எசேக்கியேலின் காலத்தில், மாபெரும் ஆன்மீக ஆலயத்தைப் பற்றிய உண்மைகளைக் கடவுள் தெரியப்படுத்துவதற்கான நேரம் ஏன் வரவில்லை?

11 மாபெரும் ஆன்மீக ஆலயத்தை எசேக்கியேல் பார்த்திருக்க மாட்டார் என்பதற்கான இரண்டாவது காரணம் இதுதான்: கடவுள், அந்த ஆன்மீக ஆலயத்தைப் பற்றிய உண்மைகளைத் தெரியப்படுத்துவதற்கான நேரம் அப்போது வரவில்லை. எசேக்கியேல் பார்த்த தரிசனம், பாபிலோனில் சிறைபிடிக்கப்பட்டிருந்த யூதர்களுக்குத்தான் முதலில் சொல்லப்பட்டது என்பதை மனதில் வையுங்கள். அவர்கள் திருச்சட்டத்தின் கீழ் இருந்தார்கள். அதனால், சிறையிருப்பின் காலம் முடிந்த பிறகு, அவர்கள் எருசலேமுக்குத் திரும்பி வந்து ஆலயத்தையும் அதன் பலிபீடத்தையும் கட்ட வேண்டியிருந்தது; இதன்மூலம், தூய வணக்கம் சம்பந்தமாகத் திருச்சட்டம் சொன்னதையெல்லாம் நிறைவேற்ற வேண்டியிருந்தது. இப்படி, கிட்டத்தட்ட 600 வருஷங்களுக்கு அவர்கள் பலிகளைச் செலுத்தினார்கள். ஆனால், ஆன்மீக ஆலயத்தில் தலைமைக் குரு தன்னுடைய உயிரையே பலியாகக் கொடுத்த பிறகு மற்ற எல்லா பலிகளும் முடிவுக்கு வந்தன. ஒருவேளை யூதர்களிடம் ஆன்மீக ஆலயத்தைப் பற்றி எசேக்கியேல் சொல்லியிருந்தால், அது அவர்களை எப்படிப் பாதித்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். அந்தத் தரிசனத்தின் அர்த்தத்தை அவர்களால் புரிந்துகொள்ள முடிந்திருக்குமா? மோசேயின் திருச்சட்டத்துக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று நினைத்திருப்பார்களா அல்லது அதற்குக் கீழ்ப்படியக் கூடாது என்று நினைத்திருப்பார்களா? யெகோவா எப்போதும் போல, சரியான சமயத்தில்தான் உண்மைகளை வெளிப்படுத்துகிறார். அதுவும் தன்னுடைய மக்கள் அவற்றைப் புரிந்துகொள்ள தயாராக இருக்கும் சமயத்தில்தான் வெளிப்படுத்துகிறார்.

12-14. எசேக்கியேல் பார்த்த ஆலயத்துக்கும் பவுல் விளக்கிய ஆன்மீக ஆலயத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? (“வெவ்வேறு ஆலயங்கள், வெவ்வேறு பாடங்கள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

12 அப்படியென்றால், தரிசனத்தில் எசேக்கியேல் பார்த்த ஆலயத்துக்கும் பவுல் விளக்கிய ஆன்மீக ஆலயத்துக்கும் என்ன சம்பந்தம்? எசேக்கியேல் பார்த்த ஆலயத்தை அடிப்படையாக வைத்து பவுல் ஆன்மீக ஆலயத்தைப் பற்றி விளக்கவில்லை என்பதை மனதில் வையுங்கள். அதற்குப் பதிலாக, மோசேயின் காலத்தில் இருந்த வழிபாட்டுக் கூடாரத்தை அடிப்படையாக வைத்தே அவர் விளக்கினார். பவுல் குறிப்பிட்டிருந்த சில அம்சங்கள் சாலொமோன் மற்றும் செருபாபேல் கட்டிய ஆலயங்களிலும், தரிசனத்தில் எசேக்கியேல் பார்த்த ஆலயத்திலும் இருந்தது உண்மைதான். ஆனால், எசேக்கியேலும் பவுலும் வெவ்வேறு விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதினார்கள். * இருந்தாலும், அவர்கள் எழுதிய விஷயங்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டிருக்கின்றன. எப்படி?

13 வணக்கத்துக்காக யெகோவா செய்திருக்கும் ஏற்பாட்டைப் பற்றி பவுலின் பதிவு காட்டுகிறது. வணக்கத்துக்கான யெகோவாவின் நெறிமுறைகளைப் பற்றி எசேக்கியேலின் பதிவு காட்டுகிறது. தூய வணக்கத்துக்காக யெகோவா செய்திருக்கும் ஏற்பாட்டைப் பற்றி நாம் புரிந்துகொள்வதற்காக, ஆன்மீக ஆலயத்திலுள்ள சில விஷயங்களின் அர்த்தத்தை பவுல் தெரியப்படுத்துகிறார். உதாரணத்துக்கு தலைமைக் குரு, பலிகள், பலிபீடம், மகா பரிசுத்த அறை போன்ற அம்சங்களைப் பற்றி விளக்குகிறார். ஆனால், தூய வணக்கத்துக்கான யெகோவாவின் உயர்ந்த நெறிமுறைகளை வலியுறுத்துவதற்காக, ஆலயத்தைப் பற்றிய விலாவாரியான விளக்கத்தை எசேக்கியேலின் தரிசனம் தருகிறது. அந்த விளக்கம், யெகோவாவின் நெறிமுறைகளைப் பற்றிய நிறைய பாடங்களை நம் மனதிலும் இதயத்திலும் பதிய வைக்கிறது.

14 இந்தப் புதிய விளக்கத்திலிருந்து நாம் எப்படி நன்மை அடையலாம்? அதைத் தெரிந்துகொள்வதற்கு, பூர்வ காலத்தில் இருந்த உண்மையுள்ள யூதர்களுக்கு அந்தத் தரிசனம் எப்படிப் பிரயோஜனமாக இருந்திருக்கும் என்பதை முதலில் பார்க்கலாம்.

சிறைபிடிக்கப்பட்ட யூதர்கள் அந்தத் தரிசனத்திலிருந்து எதைத் தெரிந்துகொண்டார்கள்?

15. (அ) எசேக்கியேல் பார்த்த தரிசனம் எதைப் பற்றிச் சொல்கிறது? (ஆ) எசேக்கியேல் 8-ஆம் அதிகாரத்துக்கும் எசேக்கியேல் 40-48 அதிகாரங்களுக்கும் என்ன வித்தியாசத்தை நாம் பார்க்கிறோம்?

15 இந்தக் கேள்விக்கு பைபிள் தரும் பதிலைத் தெரிந்துகொள்வதற்கு, அதனோடு சம்பந்தப்பட்ட மூன்று கேள்விகளை இப்போது பார்க்கலாம். அந்தத் தரிசனத்தின் அர்த்தத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள அவை நமக்கு உதவும். முதல் கேள்வி: அந்தத் தரிசனம் எதைப் பற்றிச் சொல்கிறது? சுருக்கமாகச் சொன்னால், தூய வணக்கம் திரும்பவும் நிலைநாட்டப்படுவதைப் பற்றிச் சொல்கிறது. இந்த விஷயம், எசேக்கியேலுக்கு நிச்சயம் தெளிவாகப் புரிந்திருக்கும். எருசலேம் ஆலயத்தில் நடந்த மோசமான விஷயங்களைப் பற்றி யெகோவா தத்ரூபமாக விளக்கியதை எசேக்கியேல் ஏற்கெனவே பதிவு செய்திருந்தார். அதை எசேக்கியேல் புத்தகத்தின் 8-ஆம் அதிகாரத்தில் பார்க்கலாம். அதேசமயத்தில் எசேக்கியேல் 40-48 அதிகாரங்களில் இருக்கிற முற்றிலும் வித்தியாசமான விஷயங்களை எழுதுவதில் அவர் நிச்சயம் சந்தோஷப்பட்டிருப்பார். ஏனென்றால், இந்த அதிகாரங்களில் தூய வணக்கம் சீர்கெட்டுப்போனதைப் பற்றி அல்ல, அது சரியான விதத்தில் செலுத்தப்படுவதைப் பார்க்கிறோம். திருச்சட்டத்தில் தூய வணக்கம் எப்படிச் செலுத்தப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்ததோ, அப்படிச் செலுத்தப்படுவதைப் பார்க்கிறோம்.

16. ஆலயத்தைப் பற்றி எசேக்கியேல் பார்த்த தரிசனம், ஏசாயா முன்னறிவித்த விஷயத்தை எப்படி உறுதிப்படுத்தியது?

16 தூய வணக்கம் மீண்டும் அதற்குரிய இடத்தில் நிலைநாட்டப்படுவதற்கு, அது உயர்த்தப்பட வேண்டும். எசேக்கியேல் இதை எழுதுவதற்கு சுமார் நூறு வருஷங்களுக்கு முன்பே, கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டு ஏசாயா தீர்க்கதரிசி இப்படி எழுதினார்: “கடைசி நாட்களில் . . . யெகோவாவின் ஆலயம் இருக்கிற மலை எல்லா மலைகளுக்கும் மேலாக உறுதியாய் நிலைநிறுத்தப்படும். எல்லா குன்றுகளுக்கும் மேலாக அது உயர்த்தப்படும்.” (ஏசா. 2:2) தூய வணக்கம் திரும்ப நிலைநாட்டப்பட்டு, உயர்த்தப்படும் என்று ஏசாயா முன்னறிவித்தார். அது எல்லா மலைகளுக்கும் மேலாக நிலைநாட்டப்படுவதுபோல் இருக்கும். யெகோவாவின் ஆலயம் எங்கு இருந்ததை தரிசனத்தில் எசேக்கியேல் பார்த்தார்? அது “மிகவும் உயரமான ஒரு மலைமேல்” இருந்தது. (எசே. 40:2) தூய வணக்கம் திரும்பவும் நிலைநாட்டப்படும் என்பதை அது உறுதிப்படுத்தியது.

எசேக்கியேல் பார்த்த ஆலயம், மிகவும் உயரமான ஒரு இடத்தில் இருந்தது (பாரா 16)

17. எசேக்கியேல் 40-48 அதிகாரங்களில் உள்ள விஷயங்களைச் சுருக்கமாகச் சொல்லுங்கள்.

17 எசேக்கியேல் பார்த்த விஷயங்களையும் கேட்ட விஷயங்களையும் பற்றி 40-48 அதிகாரங்களிலிருந்து இப்போது சுருக்கமாகப் பார்க்கலாம். ஆலயத்தின் நுழைவாசல்களையும், சுவரையும், பிரகாரங்களையும், பரிசுத்த இடத்தையும் ஒரு தேவதூதர் அளந்ததை எசேக்கியேல் பார்த்தார். (எசே. 40–42) அதற்குப் பிறகு சிலிர்க்க வைக்கும் ஒரு விஷயம் நடந்தது. யெகோவா மகிமையோடு அந்த ஆலயத்துக்கு வந்தார்! தங்களுடைய இஷ்டப்படி நடந்த மக்களையும், குருமார்களையும், தலைவர்களையும் யெகோவா கண்டித்தார்; அவர்களுக்கு ஆலோசனைகளையும் கொடுத்தார். (எசே. 43:1-12; 44:10-31; 45:9-12) ஒரு ஆறு, ஆலயத்திலிருந்து ஓடியதை எசேக்கியேல் பார்த்தார். அது சவக் கடலில் கலந்தபோது வாழ்வையும் ஆசீர்வாதங்களையும் தந்தது. (எசே. 47:1-12) தேசம் சரிசமமாகப் பிரிக்கப்பட்டிருந்ததையும், அந்தத் தேசத்தின் நடுவில் யெகோவாவின் ஆலயம் இருந்ததையும் அவர் பார்த்தார். (எசே. 45:1-8; 47:13–48:35) இந்த விஷயங்கள் எதைக் காட்டுகின்றன? தூய வணக்கம் திரும்பவும் நிலைநாட்டப்படும்... அது எல்லாவற்றுக்கும் மேலாக உயர்த்தப்படும்... என்று யெகோவா தன்னுடைய மக்களுக்கு உறுதிப்படுத்தியதைத் தெளிவாகக் காட்டுகின்றன. யெகோவாவின் ஆலயத்தில் அவருடைய பிரசன்னம் இருக்கும். அந்த ஆலயத்திலிருந்து வரும் ஆசீர்வாதங்களால், தாய்நாட்டுக்குத் திரும்பியவர்கள் குணமடைவார்கள், வாழ்வு பெறுவார்கள், நிம்மதியாக இருப்பார்கள்.

ஆலயத்தைப் பற்றி எசேக்கியேல் பார்த்த தரிசனம், தூய வணக்கத்தை யெகோவா எப்படித் திரும்பவும் நிலைநாட்டுவார் என்பதைத் தத்ரூபமாகக் காட்டியது (பாரா 17)

18. ஆலயத்தைப் பற்றி எசேக்கியேல் பார்த்த தரிசனத்தைச் சொல்லர்த்தமாக எடுத்துக்கொள்ள வேண்டியிருந்ததா? விளக்குங்கள்.

18 இரண்டாவது கேள்வி: இந்தத் தரிசனத்தில் சொல்லப்பட்ட விஷயங்களைச் சொல்லர்த்தமாக எடுத்துக்கொள்ள வேண்டியிருந்ததா? இல்லை. இது, எசேக்கியேலுக்கும் சிறைபிடிக்கப்பட்டிருந்த மற்ற யூதர்களுக்கும் சட்டென புரிந்திருக்கும். ஏன் அப்படிச் சொல்கிறோம்? அந்த ஆலயம் “மிகவும் உயரமான ஒரு மலைமேல்” இருந்ததை எசேக்கியேல் பார்த்தார் என்பதை ஏற்கெனவே கவனித்தோம். இந்த விஷயம், ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தோடு நன்றாக ஒத்துப்போனாலும், நிஜமான ஆலயம் இருந்த இடத்தோடு அது ஒத்துப்போகவில்லை. சாலொமோன் கட்டிய ஆலயம் எருசலேமிலுள்ள மோரியா மலையில் இருந்தது. அந்த மலையில்தான் அது திரும்பவும் கட்டப்படவிருந்தது. ஆனால், அது ‘மிகவும் உயரமான ஒரு மலையாக’ இருந்ததா? இல்லை. சொல்லப்போனால், மோரியா மலையைச் சுற்றிலுமுள்ள மலைகள், அதே உயரத்தில் இருந்தன அல்லது அதைவிட உயரமாக இருந்தன. அதுமட்டுமல்ல, எசேக்கியேல் பார்த்த ஆலய வளாகமும் ரொம்பப் பெரியதாக இருந்தது. மதிலால் சூழப்பட்டிருந்த அந்த ஆலய வளாகத்தின் சுற்றளவு, மோரியா மலையுச்சியின் சுற்றளவைவிட ரொம்பவே பெரியது. அதனால், அந்த ஆலயம் மோரியா மலையில் இருந்ததென்று சொல்ல முடியாது. சொல்லப்போனால், சாலொமோனின் காலத்திலிருந்த எருசலேம் நகரத்தின் சுற்றளவைவிட அது பெரியதாக இருந்தது. அதோடு, பரிசுத்த இடத்திலிருந்து நிஜமாகவே ஒரு ஆறு பாய்ந்தோடி சவக் கடலில் கலக்கும் என்றும் அந்தக் கடலிலுள்ள தண்ணீரை அது நல்ல தண்ணீராக மாற்றும் என்றும் சிறைபிடிக்கப்பட்ட யூதர்கள் நிச்சயம் நினைத்திருக்க மாட்டார்கள். கடைசியாக, அந்தக் கோத்திரங்களுக்கு இடையில் இருந்த எல்லைக்கோடுகள் நேராக இருப்பதாக தரிசனம் சொல்கிறது. ஆனால், வாக்குக் கொடுக்கப்பட்ட தேசமோ ஒரு மலைப்பிரதேசமாக இருந்தது. ஒரு மலைப்பிரதேசத்தில் எல்லைக்கோடுகள் நேராக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. அப்படியானால், அந்தத் தரிசனத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களைச் சொல்லர்த்தமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

19-21. மக்களை எப்படி உணர வைப்பதற்காக எசேக்கியேலுக்கு அந்தத் தரிசனத்தை யெகோவா கொடுத்தார்? அது ஏன் அவர்களை அப்படி உணர வைத்திருக்கலாம்?

19 மூன்றாவது கேள்வி: இந்தத் தரிசனம், எசேக்கியேலோடு இருந்த மக்களை எப்படி உணர வைத்திருக்க வேண்டும்? தூய வணக்கம் சம்பந்தமாக யெகோவா கொடுத்திருக்கிற உயர்ந்த நெறிமுறைகளை மக்கள் ஆழமாக யோசித்துப் பார்த்தபோது, அது அவர்களை வெட்கப்பட வைத்திருக்க வேண்டும். எசேக்கியேலிடம் யெகோவா, ‘ஆலயத்தைப் பற்றி இஸ்ரவேல் ஜனங்களிடம் விளக்கிச் சொல்’ என்று சொன்னார். ‘அதன் வடிவமைப்பை இஸ்ரவேலர்கள் ஆராய்ந்து பார்க்குமளவுக்கு’ அந்த ஆலயத்தைப் பற்றிய எல்லா விஷயங்களையும் விளக்க வேண்டியிருந்தது. அந்த ஆலயத்தைப் பற்றி மக்கள் ஏன் ஆழ்ந்து யோசிக்க வேண்டியிருந்தது? நாம் ஏற்கெனவே பார்த்தது போல, அதைக் கட்டுவதற்காக அல்ல, ஆனால் யெகோவா சொன்னபடி ‘தாங்கள் செய்த அக்கிரமத்தையெல்லாம் நினைத்து அவர்கள் வெட்கப்படுவதற்காக’ அப்படி யோசிக்க வேண்டியிருந்தது.எசேக்கியேல் 43:10-12-ஐ வாசியுங்கள்.

20 இந்தத் தரிசனம், நல்மனமுள்ள மக்களின் இதயத்தைத் தொட்டு, அவர்களை ஏன் வெட்கப்பட வைத்திருக்கலாம்? எசேக்கியேலிடம் கடவுள் சொன்னதைக் கவனியுங்கள்: “மனிதகுமாரனே, யெகோவாவின் ஆலயத்தைப் பற்றிய எல்லா சட்டதிட்டங்களையும் நான் சொல்லும்போது நீ நன்றாகக் கேள், உன்னிப்பாகக் கவனி.” (எசே. 44:5) சட்டதிட்டங்கள் பற்றிச் சொல்லப்பட்டதை எசேக்கியேல் அடிக்கடி கேட்டார். (எசே. 43:11, 12; 44:24; 46:14) யெகோவாவின் நெறிமுறைகளைப் பற்றியும் அவருக்கு அடிக்கடி ஞாபகப்படுத்தப்பட்டது. சரியான எடைக்கல் எது, ஒரு முழத்தின் சரியான நீளம் எது போன்ற விஷயங்கள்கூட அவருக்குச் சொல்லப்பட்டது. (எசே. 40:5; 45:10-12; நீதிமொழிகள் 16:11-ஐ ஒப்பிடுங்கள்.) சொல்லப்போனால், “அளவு,” “அளக்க” போன்றவற்றுக்கான மூல மொழி வார்த்தைகளை இந்தத் தரிசனத்தில் மட்டும் 50-க்கும் அதிகமான தடவை எசேக்கியேல் பயன்படுத்தியிருக்கிறார்.

21 அளவுகள், எடைக்கற்கள், சட்டதிட்டங்கள் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு யெகோவா எதைப் புரிய வைக்க நினைத்தார்? யெகோவா, இந்த முக்கியமான உண்மையைப் புரிய வைக்க விரும்பியதுபோல் தெரிகிறது: தூய வணக்கத்துக்கான நெறிமுறைகளை யெகோவாவினால் மட்டுமே தீர்மானிக்க முடியும். அந்த நெறிமுறைகளுக்குக் கீழ்ப்படியாமல் போனவர்கள் அதை நினைத்து வெட்கப்பட வேண்டும். எந்த விதங்களில் அந்தத் தரிசனம், யூதர்களுக்கு இந்தப் பாடங்களைக் கற்றுத்தந்தது? அடுத்த அதிகாரத்தில் சில குறிப்பிட்ட உதாரணங்களைப் பார்ப்போம். நம் காலத்துக்கு அந்தத் தரிசனம் எப்படிப் பொருந்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள அந்த உதாரணங்கள் உதவும்.

ஆலயத்தைப் பற்றிய தரிசனம், நல்மனமுள்ள ஆட்களை ஏன் வெட்கப்பட வைக்கும்? (பாராக்கள் 19-21)

^ பாரா. 4 ஆன்மீக ஆலயம் என்பது இயேசு கிறிஸ்துவின் மீட்புப் பலியின் அடிப்படையில் தூய வணக்கத்துக்காக யெகோவா செய்திருக்கும் ஏற்பாட்டைக் குறிக்கிறது. அந்த ஏற்பாடு கி.பி. 29-ல் அமலுக்கு வந்தது.

^ பாரா. 8 எசேக்கியேலின் தரிசனம், தானியேலுக்குக் கொடுக்கப்பட்ட தரிசனத்திலிருந்து எப்படி வித்தியாசப்படுகிறது என்பதை தானியேல் 7-ஆம் அதிகாரத்தில் பாருங்கள். அதில் தானியேல், பரலோகக் காட்சியைப் பார்க்கிறார்.—தானி. 7:9, 10, 13, 14.

^ பாரா. 12 உதாரணத்துக்கு, தலைமைக் குருவைப் பற்றியும் வருடாந்தர பாவப் பரிகார நாளில் அவர் செய்யும் சேவையைப் பற்றியும்தான் பவுல் விளக்கினார். (எபி. 2:17; 3:1; 4:14-16; 5:1-10; 7:1-17, 26-28; 8:1-6; 9:6-28) ஆனால், எசேக்கியேல் பார்த்த தரிசனத்தில், தலைமைக் குருவைப் பற்றியோ பாவப் பரிகார நாளைப் பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை.