Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மகா பாபிலோனிலிருந்து கடவுளுடைய மக்கள் விடுதலை செய்யப்பட்டார்கள் என்பதற்கு 1919-ல் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு மிகப் பெரிய அத்தாட்சியாக இருந்தது

தகவல் பெட்டி 9ஆ

1919 என்று எப்படிச் சொல்கிறோம்?

1919 என்று எப்படிச் சொல்கிறோம்?

கடவுளுடைய மக்கள் 1919-ல்தான் மகா பாபிலோனிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்கள் என்று எதன் அடிப்படையில் சொல்கிறோம்? பைபிள் தீர்க்கதரிசனம் மற்றும் சரித்திரப்பூர்வ உண்மைகளின் அடிப்படையில் சொல்கிறோம்.

இயேசு 1914-ல் ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டார் என்பதை பைபிள் தீர்க்கதரிசனமும் சரித்திரமும் தெளிவாகக் காட்டுகின்றன. அப்போதிலிருந்து சாத்தானுடைய உலகத்தின் கடைசி நாட்கள் ஆரம்பித்துவிட்டன. ராஜாவாக ஆனதும் இயேசு என்ன செய்தார்? பூமியிலுள்ள தன்னுடைய ஊழியர்களை மகா பாபிலோனின் அடிமைத்தனத்திலிருந்து உடனடியாக விடுதலை செய்தாரா? 1914-ல், ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை’ நியமித்து, மிகப் பெரிய அறுவடை வேலையை அவர் ஆரம்பித்தாரா?—மத். 24:45.

இல்லை. ‘நியாயத்தீர்ப்பு கடவுளுடைய வீட்டில் ஆரம்பிக்கும்’ என்று கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் அப்போஸ்தலன் பேதுரு சொன்னது உங்களுக்கு ஞாபகமிருக்கும். (1 பே. 4:17) அதேபோன்ற ஒரு விஷயத்தை மல்கியா தீர்க்கதரிசியும் சொன்னார். யெகோவா தன்னுடைய ஆலயத்துக்கு ‘ஒப்பந்தத்தின் தூதுவரோடு,’ அதாவது தன்னுடைய மகனோடு, வரும் காலத்தைப் பற்றி முன்னறிவித்தார். (மல். 3:1-5) புடமிடப்பட்டு, சோதிக்கப்படும் காலமாக அது இருக்கும். இந்தத் தீர்க்கதரிசனங்களோடு சரித்திரம் ஒத்துப்போகிறதா?

ஆம், நிச்சயமாக! 1914-லிருந்து 1919-ன் ஆரம்பக் காலப்பகுதிவரை, பைபிள் மாணாக்கர்கள் (யெகோவாவின் சாட்சிகள் அந்தக் காலத்தில் அப்படித்தான் அழைக்கப்பட்டார்கள்) புடமிடப்பட்டுச் சோதிக்கப்பட்டார்கள். உதாரணத்துக்கு, கடவுளுடைய மக்கள் எதிர்பார்த்தபடி 1914-ல் இந்த உலகத்துக்கு முடிவு வராததால் அவர்களில் நிறைய பேர் ஏமாற்றம் அடைந்தார்கள். கடவுளுடைய மக்களை மும்முரமாக வழிநடத்தி வந்த சார்ல்ஸ் டி. ரஸல் 1916-ல் இறந்துபோனபோது, அவர்கள் ரொம்பவே விரக்தி அடைந்தார்கள். சகோதரர் ரஸல்மீது அளவுக்கதிகமாக பற்று வைத்திருந்த சிலர், அவருக்குப் பிறகு முன்நின்று வழிநடத்திய சகோதரர் ஜோஸஃப் எஃப். ரதர்ஃபர்ட் எடுத்த முயற்சிகளை எதிர்த்துக்கொண்டே இருந்தார்கள். பிரிவினைகள் ஏற்பட்டதால், 1917-ல் அமைப்பு ஏறக்குறைய பிளவுபட்டது. 1918-ல், கிறிஸ்தவமண்டலக் குருமார்களின் தூண்டுதலால், சகோதரர் ரதர்ஃபர்டும் அவருடைய நண்பர்கள் ஏழு பேரும் விசாரணை செய்யப்பட்டார்கள்... குற்றவாளிகள் எனத் தவறாகத் தீர்ப்பளிக்கப்பட்டார்கள்... சிறையில் போடப்பட்டார்கள். புருக்லினில் இருந்த தலைமை அலுவலகம் மூடப்பட்டது. கடவுளுடைய மக்கள் மகா பாபிலோனிலிருந்து அப்போது விடுதலை பெறவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.

ஆனால், 1919-ல் என்ன நடந்தது? நினைத்துப் பார்க்க முடியாதளவுக்கு நிலைமைகள் வேகமாக மாறின. அந்த வருஷத்தின் ஆரம்பத்தில், சகோதரர் ரதர்ஃபர்டும் அவருடைய நண்பர்களும் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்கள். அவர்கள் உடனடியாக தங்களுடைய வேலையைத் தொடங்கினார்கள். சீக்கிரத்திலேயே, வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு மாநாட்டுக்குத் திட்டம் போடப்பட்டது. தி கோல்டன் ஏஜ் (இப்போது விழித்தெழு!) என்ற பத்திரிகையை வெளியிடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தப் பத்திரிகை, ஊழியத்தில் கொடுப்பதற்காகத் தயாரிக்கப்பட்டது. அதோடு, ஊழியத்தை மும்முரமாகச் செய்ய உதவுவதற்காகவும், அதை ஒழுங்குபடுத்துவதற்காகவும் ஒவ்வொரு சபையிலும் ஒரு கண்காணி நியமிக்கப்பட்டார். அதே வருஷத்தில், பிரசங்க வேலையை ஒழுங்குபடுத்துவதற்கு உதவியாக புலட்டின் (இப்போது, கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்) வெளியிடப்பட்டது.

இதெல்லாம் எதற்கு அத்தாட்சியாக இருந்தது? கிறிஸ்து தன்னுடைய மக்களை மகா பாபிலோனின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்திருந்தார் என்பதற்கும், உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை அவர் நியமித்திருந்தார் என்பதற்கும், அறுவடை வேலை ஆரம்பித்திருந்தது என்பதற்கும் தெளிவான அத்தாட்சியாக இருந்தது. அந்த முக்கியமான வருஷத்திலிருந்து, அதாவது 1919-லிருந்து, அறுவடை வேலை வியக்கவைக்கும் அளவில் முன்னேறிக்கொண்டிருக்கிறது.