Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 09

ஜெபம்​—கடவுளிடம் நெருங்க வழி

ஜெபம்​—கடவுளிடம் நெருங்க வழி

வாழ்க்கையில் முடிவுகள் எடுக்க உங்களுக்கு உதவி தேவைப்படுகிறதா? உங்கள் மனதில் இருக்கிற கேள்விகளுக்குப் பதில் தேடுகிறீர்களா? ஆறுதலுக்காக ஏங்குகிறீர்களா? யெகோவாவிடம் நெருங்கிப் போக ஆசைப்படுகிறீர்களா? இதற்கெல்லாம் ஜெபம் உதவும். அப்படியென்றால், எப்படி ஜெபம் பண்ண வேண்டும்? எல்லாருடைய ஜெபத்தையும் கடவுள் கேட்பாரா? உங்கள் ஜெபத்தை அவர் கேட்க வேண்டுமென்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? பார்க்கலாம்.

1. நாம் யாரிடம் ஜெபம் செய்ய வேண்டும்? எதைப் பற்றி ஜெபம் செய்யலாம்?

“பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே . . .” என்று ஜெபம் செய்யும்படி இயேசு சொன்னார். (மத்தேயு 6:9) அதனால், நாம் யெகோவாவிடம்தான் ஜெபம் செய்ய வேண்டும். இயேசுவே அவரிடம்தான் ஜெபம் செய்தார். நாம் யெகோவாவிடம் பேசப் பேச, அவரோடு இருக்கிற நட்பு பலமாகும்.

“கடவுளுடைய விருப்பத்துக்கு ஏற்றபடி நாம் எதைக் கேட்டாலும், அவர் காதுகொடுத்துக் கேட்கிறார்.” (1 யோவான் 5:14) அப்படியென்றால், கடவுளுடைய விருப்பத்துக்கு எதிராக இல்லாத எந்த விஷயத்துக்காகவும் நாம் ஜெபம் பண்ணலாம். இதற்கு இயேசு சில உதாரணங்களைக் கொடுத்தார். (மத்தேயு 6:9-13-ஐ வாசியுங்கள்.) நம் கவலைகளைப் பற்றி மட்டும் நாம் ஜெபம் செய்யாமல், கடவுள் செய்த உதவிகளுக்கு நன்றியும் சொல்ல வேண்டும். மற்றவர்களுக்கு உதவும்படியும் கேட்க வேண்டும்.

2. நாம் எப்படி ஜெபம் செய்ய வேண்டும்?

“இதயத்தில் இருப்பதையெல்லாம் [கடவுள்முன்] ஊற்றிவிடுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 62:8) அதனால், நாம் மனம் திறந்து ஜெபம் பண்ண வேண்டும். நாம் வாய்விட்டும் ஜெபம் செய்யலாம், மனதுக்குள்ளும் ஜெபம் செய்யலாம். எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், மரியாதையான எந்த நிலையிலும் ஜெபம் பண்ணலாம்.

3. கடவுள் நம் ஜெபத்துக்கு எப்படிப் பதில் கொடுக்கிறார்?

நிறைய வழிகளில் அவர் பதில் கொடுக்கிறார். உதாரணத்துக்கு, நம் மனதில் இருக்கிற கேள்விகளுக்கு பைபிளில் பதில் கண்டுபிடிக்க உதவுகிறார். பைபிள், “அனுபவம் இல்லாதவனை ஞானியாக்குகிறது.” (சங்கீதம் 19:7, அடிக்குறிப்பு; யாக்கோபு 1:5-ஐ வாசியுங்கள்.) பிரச்சினைகளில் நாம் சிக்கித் தவிக்கும்போது அவர் நமக்கு மனநிம்மதி தருகிறார். தன் ஊழியர்கள் மூலமாகக்கூட உதவுகிறார்.

ஆராய்ந்து பார்க்கலாம்!

கடவுளுக்குப் பிடித்த மாதிரி நீங்கள் எப்படி ஜெபம் பண்ணலாம் என்று இப்போது பார்க்கலாம். ஜெபம் செய்வதால் உங்களுக்கு என்ன நன்மை என்றும் பார்க்கலாம்.

4. யெகோவா கேட்கும் ஜெபங்கள்

கடவுள் நம் ஜெபத்தைக் கேட்க வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? வீடியோவைப் பாருங்கள்.

நம் ஜெபத்தைக் கேட்க யெகோவா விரும்புகிறார். சங்கீதம் 65:2-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • ‘ஜெபத்தைக் கேட்கிறவர்’ உங்களுடைய ஜெபத்தைக் கேட்க விரும்புகிறார் என்று நினைக்கிறீர்களா? ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?

கடவுள் நம் ஜெபத்தைக் கேட்க வேண்டுமென்றால் அவருக்குப் பிடித்த மாதிரி நாம் வாழ வேண்டும். மீகா 3:4-யும் 1 பேதுரு 3:12-யும் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • கடவுள் நம் ஜெபத்தைக் கேட்க வேண்டுமென்றால் நாம் என்ன செய்யக் கூடாது?

போர் நடக்கும்போது இரண்டு பக்கத்தில் இருப்பவர்களும் வெற்றிக்காக ஜெபம் பண்ணலாம். அவர்களுடைய ஜெபங்களைக் கடவுள் கேட்பாரா?

5. நாம் மனம் திறந்து ஜெபம் பண்ண வேண்டும்

சிலர் ஜெபம் பண்ணும்போது சொன்ன வார்த்தைகளையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். ஆனால், நாம் அப்படி ஜெபம் பண்ண வேண்டும் என்றுதான் கடவுள் விரும்புகிறாரா? மத்தேயு 6:7-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • ஜெபம் பண்ணும்போது நீங்கள் எப்படி ‘சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லாமல்’ இருக்கலாம்?

யெகோவாவுக்கு நன்றி சொல்வதற்குத் தினமும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதில் ஏதாவது ஒரு விஷயத்துக்கு நன்றி சொல்லுங்கள். இதேபோல் வாரத்தில் ஏழு நாளும் செய்தால், ஏழு வித்தியாசமான விஷயங்களைப் பற்றி நீங்கள் ஜெபம் பண்ணியிருப்பீர்கள். அப்படிச் செய்யும்போது, சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லாமல் இருக்க முடியும்.

பிள்ளை மனம் திறந்து பேச வேண்டுமென்று அப்பா எதிர்பார்ப்பார். அதேபோல், நாம் மனம் திறந்து பேச வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார்

6. ஜெபம்—கடவுள் கொடுத்திருக்கும் விசேஷமான வாய்ப்பு

ஜெபம் செய்வது நமக்கு எப்படி உதவும்? முக்கியமாக, கஷ்டத்தில் இருக்கும்போது ஜெபம் எப்படி நமக்குப் பலம் தரும்? வீடியோவைப் பாருங்கள்.

நாம் ஜெபம் பண்ணும்போது மனதுக்கு நிம்மதி கிடைக்கும் என்று பைபிள் சொல்கிறது. பிலிப்பியர் 4:6, 7-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • ஜெபம் செய்தால் எப்போதுமே பிரச்சினைகள் சரியாகிவிடும் என்று சொல்ல முடியாதுதான், ஆனாலும் ஜெபம் செய்வது எப்படி உதவும்?

  • என்னென்ன விஷயங்களுக்காக நீங்கள் ஜெபம் செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?

உங்களுக்குத் தெரியுமா?

“ஆமென்” என்றால் “அப்படியே ஆகட்டும்,” அல்லது “நிச்சயமாக நடக்கட்டும்” என்று அர்த்தம். காலம்காலமாகவே கடவுளுடைய மக்கள் ஜெபத்தின் முடிவில் ஆமென் என்று சொல்வது வழக்கமாக இருந்துவருகிறது.​—1 நாளாகமம் 16:36.

7. ஜெபம் பண்ணுவதற்கு நேரம் ஒதுக்குங்கள்

சிலசமயம், ஜெபம் பண்ணுவதற்கு நேரமே கிடைக்காத அளவுக்கு நாம் பிஸியாக இருக்கிறோம். ஜெபம் பண்ணுவது இயேசுவுக்கு எந்தளவு முக்கியமாக இருந்தது? மத்தேயு 14:23-யும் மாற்கு 1:35-யும் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • ஜெபம் பண்ணுவதற்காக இயேசு என்ன செய்தார்?

  • ஜெபம் பண்ணுவதற்காக நீங்கள் எந்த நேரத்தை ஒதுக்கலாம் என்று நினைக்கிறீர்கள்?

சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “மன அமைதிக்காகத்தான் ஜெபம் பண்றோம், அதனால ஒண்ணும் நடக்கப்போறது கிடையாது.”

  • நீங்கள் என்ன சொல்வீர்கள்?

சுருக்கம்

நாம் மனம் திறந்து ஜெபம் பண்ணும்போது கடவுளிடம் நெருங்கிப் போவோம், நமக்கு மன நிம்மதி கிடைக்கும், கடவுளுக்கு பிடித்ததைச் செய்ய நமக்குப் பலமும் கிடைக்கும்.

ஞாபகம் வருகிறதா?

  • நாம் யாரிடம் ஜெபம் பண்ண வேண்டும்?

  • எப்படி ஜெபம் பண்ண வேண்டும்?

  • ஜெபம் பண்ணுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

குறிக்கோள்

அலசிப் பாருங்கள்

ஜெபத்தைப் பற்றிப் பொதுவாகக் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

“ஜெபத்தைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஏழு விஷயங்கள்” (ஆன்லைன் கட்டுரை)

நாம் ஏன் ஜெபம் பண்ண வேண்டும், எப்படி இன்னும் நன்றாக ஜெபம் பண்ணலாம் என்றெல்லாம் தெரிந்துகொள்ளுங்கள்.

“நான் ஏன் ஜெபம் செய்ய வேண்டும்?” (ஆன்லைன் கட்டுரை)

நாம் யாரிடம் ஜெபம் பண்ண வேண்டும் என்பதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

“புனிதர்களிடம் நான் ஜெபம் செய்யலாமா?” (ஆன்லைன் கட்டுரை)

நாம் ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான் அல்லது நேரத்தில்தான் ஜெபம் பண்ண வேண்டுமா? இந்த இசை வீடியோவைப் பாருங்கள்.

எப்போதும் ஜெபம் செய் (1:22)