Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 58

கடவுளுக்கு உண்மையாக இருங்கள்

கடவுளுக்கு உண்மையாக இருங்கள்

யெகோவாவைவிட்டுத் தங்களைப் பிரிக்க எதையும் அல்லது யாரையும் அனுமதிக்கக் கூடாது என்பதில் உண்மைக் கிறிஸ்தவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். நீங்களும் அதேபோல் உறுதியாக இருப்பீர்கள்! நீங்கள் அப்படி இருப்பதை யெகோவா ரொம்ப மதிக்கிறார். (1 நாளாகமம் 28:9-ஐ வாசியுங்கள்.) என்ன சூழ்நிலைகளில் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம்? ஆனாலும் நீங்கள் எப்படி உண்மையாக இருக்கலாம்?

1. மற்றவர்கள் எப்படி நம்மை யெகோவாவிடமிருந்து பிரித்துவிடலாம்?

சிலர் நம்மை யெகோவாவிடமிருந்து பிரிக்க முயற்சி செய்வார்கள். யார் அந்த விஷமிகள்? சத்தியத்தைவிட்டு விலகிப்போன சிலர் விசுவாசதுரோகிகளாக மாறி, நம் விசுவாசத்தையும் கெடுக்கப் பார்க்கிறார்கள். அதற்காகக் கடவுளுடைய அமைப்பைப் பற்றிப் பொய்களைப் பரப்புகிறார்கள். சில மதத் தலைவர்களும் நம்மைப் பற்றிப் பொய்யான தகவல்களைப் பரப்பி, சபையில் இருக்கும் அப்பாவியான ஆட்களை யெகோவாவிடமிருந்து பிரிக்க முயற்சி செய்கிறார்கள். இப்படிப்பட்ட எதிரிகளிடம் வாதாடுவதும், அவர்களுடைய புத்தகங்களையோ வலைப்பதிவுகளையோ (blogs) வெப்சைட்டுகளையோ அலசுவதும், அவர்களுடைய வீடியோக்களைப் பார்ப்பதும் ஆபத்தானது! யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்கிறவர்களைத் திசைதிருப்ப முயற்சி செய்கிறவர்களைப் பற்றி இயேசு இப்படிச் சொன்னார்: “அவர்களை விடுங்கள். அவர்கள் குருட்டு வழிகாட்டிகள். குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இரண்டு பேருமே குழியில்தான் விழுவார்கள்.”மத்தேயு 15:14.

நமக்குத் தெரிந்த யாராவது இனியும் யெகோவாவின் சாட்சியாக இருக்க விரும்பாமல் அமைப்பைவிட்டுப் போய்விடலாம். அதுவும், நமக்கு நெருக்கமான யாராவது அப்படிப் போகும்போது நம் மனம் உடைந்துபோய்விடலாம். ‘யார் வேணும்னு நீயே முடிவு பண்ணிக்கோ, நானா? யெகோவாவா?’ என்று அவர் சொல்லலாம். ஆனால், நாம் யெகோவாவுக்குத்தான் உண்மையாக இருக்க வேண்டும்! (மத்தேயு 10:37) அதனால், யெகோவாவின் கட்டளைப்படி, அப்படிப்பட்ட ஆட்களோடு பழகுவதை நாம் விட்டுவிட வேண்டும்.—1 கொரிந்தியர் 5:11-ஐ வாசியுங்கள்.

2. நம் தீர்மானங்கள் எப்படி நம்மை யெகோவாவிடமிருந்து பிரித்துவிடலாம்?

நமக்கு யெகோவாமேல் அன்பு இருப்பதால் பொய் மதத்தோடு சம்பந்தப்பட்ட எல்லா விஷயத்திலிருந்தும் விலகியிருக்கிறோம். நாம் செய்யும் வேலையும், நாம் சேர்ந்திருக்கும் அமைப்புகளும், நாம் செய்யும் மற்ற எந்த விஷயங்களும் பொய் மதத்தோடு சம்பந்தப்படாதபடி பார்த்துக்கொள்கிறோம். “என் மக்களே, . . . [மகா பாபிலோனைவிட்டு] வெளியே வாருங்கள்” என்று யெகோவா நம்மை எச்சரிக்கிறார்.—வெளிப்படுத்துதல் 18:2, 4.

ஆராய்ந்து பார்க்கலாம்!

யெகோவாவிடமிருந்து உங்களைப் பிரிப்பதற்கு எப்படி மற்றவர்களை அனுமதிக்காமல் இருக்கலாம்? மகா பாபிலோனைவிட்டு வெளியே வருவதன் மூலம் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதை நீங்கள் எப்படிக் காட்டலாம்? பார்க்கலாம்.

3. போலி போதகர்கள் ஜாக்கிரதை!

யெகோவாவின் அமைப்பைப் பற்றி ஏதாவது தப்பான விஷயங்களை நாம் கேள்விப்படும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும்? நீதிமொழிகள் 14:15-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • நாம் கேள்விப்படுகிற எல்லாவற்றையுமே ஏன் நம்பிவிடக் கூடாது?

2 யோவான் 10-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • விசுவாசதுரோகிகளோடு நாம் பழகலாமா?

  • விசுவாசதுரோகிகளோடு நாம் நேரடியாகப் பழகாவிட்டாலும் அவர்களுடைய போதனைகளோடு நமக்கு எப்படித் தொடர்பு ஏற்படலாம்?

  • யெகோவாவைப் பற்றியும் அவருடைய அமைப்பைப் பற்றியும் மற்றவர்கள் தவறாகப் பேசுவதை நாம் காதுகொடுத்துக் கேட்டால் யெகோவாவுக்கு எப்படி இருக்கும்?

4. ஒருவர் பாவம் செய்யும்போது நீங்கள் கடவுளுக்கு உண்மையாக இருங்கள்

சபையில் இருக்கும் யாராவது செய்த பெரிய பாவம் நமக்குத் தெரியவரும்போது நமக்கு என்ன கடமை இருக்கிறது? இஸ்ரவேலர்களுக்குக் கடவுள் கொடுத்த சட்டத்தில் இருக்கும் ஒரு நியமத்தை இப்போது பார்க்கலாம். லேவியராகமம் 5:1-ஐப் படியுங்கள்.

இந்த வசனம் சொல்வதுபோல், ஒருவர் செய்த பெரிய பாவம் நமக்குத் தெரியவந்தால் அதைப் பற்றி நாம் மூப்பர்களிடம் சொல்ல வேண்டும். ஆனால் அதற்குமுன், தவறு செய்தவரையே மூப்பர்களிடம் போய் சொல்லச் சொல்வது நல்லது. ஒருவேளை அவர் சொல்லாவிட்டால், யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதற்காக நாமே மூப்பர்களிடம் சொல்ல வேண்டும். அப்படிச் செய்வது கீழே குறிப்பிட்டிருப்பவர்கள்மேல் நாம் மாறாத அன்பு வைத்திருப்பதை எப்படிக் காட்டும்:

  • யெகோவாமேல்

  • பாவம் செய்தவர்மேல்

  • சபையில் இருக்கும் மற்றவர்கள்மேல்

சபையில் இருக்கும் ஒருவர் தவறான பாதையில் போகும்போது, அவருக்கு உதவி செய்யுங்கள்!

5. மகா பாபிலோனைவிட்டு விலகியிருங்கள்

லூக்கா 4:8-ஐயும் வெளிப்படுத்துதல் 18:4, 5-ஐயும் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • ஏதாவது ஒரு பொய் மதத்தின் உறுப்பினர் பட்டியலில் இன்னும் என் பெயர் இருக்கிறதா?

  • பொய் மதத்தோடு சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு அமைப்பில் நான் இருக்கிறேனா?

  • நான் செய்யும் வேலை எந்த விதத்திலாவது பொய் மதத்தை ஆதரிக்கிறதா?

  • என் வாழ்க்கையில் வேறு ஏதாவது விஷயத்தில் நான் பொய் மதத்திலிருந்து விலக வேண்டியிருக்கிறதா?

  • இதில் ஏதாவது ஒரு கேள்விக்கு ‘ஆம்’ என்று நான் பதில் சொன்னால், என்ன மாற்றங்களை நான் செய்ய வேண்டும்?

எல்லா சந்தர்ப்பத்திலும், நீங்கள் எடுக்கும் முடிவு உங்களுக்கு சுத்தமான மனசாட்சியைத் தர வேண்டும், யெகோவாவுக்கு நீங்கள் உண்மையாக இருப்பதைக் காட்ட வேண்டும்.

ஒரு மதத்தின் பெயரில் செய்யப்படும் தொண்டு சேவைக்கு நீங்கள் நன்கொடை கொடுப்பீர்களா?

சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “யெகோவாவின் சாட்சிகள பத்தி விசுவாசதுரோகிகள் என்ன சொல்றாங்கனு தெரிஞ்சுகிட்டாதானே நாம அப்படி இல்லனு அவங்ககிட்ட நிரூபிக்க முடியும்!”

  • இப்படி நினைப்பது சரியா? ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?

சுருக்கம்

யெகோவாவுக்கு நாம் உண்மையாக இருக்க வேண்டுமென்றால், அவருக்கு உண்மையாக இல்லாதவர்களோடு பழகக் கூடாது. அதோடு, பொய் மதத்திலிருந்து முழுமையாக விலகிவிட வேண்டும்.

ஞாபகம் வருகிறதா?

  • விசுவாசதுரோகிகள் சொல்வதை நாம் ஏன் கேட்கவோ படிக்கவோ பார்க்கவோ கூடாது?

  • இனியும் யெகோவாவின் சாட்சியாக இருக்க விரும்பாதவர்களிடம் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

  • பொய் மதத்திலிருந்து வெளியே வர வேண்டுமென்ற எச்சரிக்கைக்கு நாம் எப்படிக் கீழ்ப்படியலாம்?

குறிக்கோள்

அலசிப் பாருங்கள்

யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி மற்றவர்கள் பொய்களைப் பரப்பும்போது நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று தெரிந்துகொள்ளுங்கள்.

“எல்லா உண்மைகளும் உங்களுக்குத் தெரியுமா?” (காவற்கோபுரம், ஆகஸ்ட் 2018)

எந்த அமைப்புகள் அல்லது நாம் செய்யும் என்ன செயல்கள் மகா பாபிலோனை ஆதரிக்கின்றன என்று நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?

“‘கடைசி நாட்களின்’ கடைசிக் கட்டத்தில் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்!” (காவற்கோபுரம், அக்டோபர் 2019, பாராக்கள் 16-18)

நம் விசுவாசத்தைப் பலவீனமாக்க சில எதிரிகள் என்ன செய்திருக்கிறார்கள்?

ஏமாற்றுக்காரர்கள் ஜாக்கிரதை! (9:26)

பொய் மதத்திலிருந்து விலகிய ஒரு ஷின்டோ மதகுருவைப் பற்றி, “சின்ன வயதிலிருந்தே நான் கடவுளைத் தேடிக்கொண்டு இருந்தேன்” என்ற அனுபவத்தில் படித்துப் பாருங்கள்.

“பைபிள்—ஆளையே மாற்றும் சக்தி படைத்தது” (ஆன்லைன் கட்டுரை)