Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

யெகோவாவின் சாட்சிகள் இரத்தத்திலுள்ள சிறுசிறு கூறுகளை ஏற்றுக்கொள்வார்களா?

இது ஜூன் 15, 2000 இதழிலிருந்து எடுக்கப்பட்டது.

இந்தக் கேள்விக்கு நேரடியான பதில், யெகோவாவின் சாட்சிகள் இரத்தத்தை ஏற்றிக்கொள்வதில்லை என்பதே. இரத்தத்தைக் குறித்த கடவுளுடைய சட்டம், மாறிவரும் கருத்துக்களுக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்ளக் கூடியதல்ல என அவர்கள் உறுதியாய் நம்புகிறார்கள். இன்று இரத்தத்தை நான்கு முக்கியப் பாகங்களாகவும் (primary components) அந்த பாகங்களை மேலும் சிறுசிறு கூறுகளாகவும் (fractions) பிரிக்க முடிகிறது. இதன் விளைவாக இன்னும் சில கேள்விகள் எழும்புகின்றன. இதை ஏற்பதா என தீர்மானிப்பதில், மருத்துவ நன்மைகளையும் ஆபத்துக்களையும் மாத்திரமே ஒரு கிறிஸ்தவர் யோசித்துக்கொண்டிருக்கக் கூடாது. பைபிள் இதைப் பற்றி என்ன சொல்கிறது என்பதையும் சர்வ வல்லமையுள்ள தேவனோடு அவருக்கிருக்கும் உறவை இது எப்படி பாதிக்கும் என்பதையும் யோசிப்பதே மிக முக்கியம்.

இந்த முக்கியக் குறிப்புகளில் குழப்பம் எதுவுமில்லை. இதைப் புரிந்துகொள்ள, பைபிள், சரித்திரம், மருத்துவம் சார்ந்த விஷயங்கள் சிலவற்றை சிந்திப்போம்.

இரத்தம் மிக விசேஷமானது என யெகோவா தேவன் நம் மூதாதையாகிய நோவாவிடம் சொன்னார். (ஆதியாகமம் 9:3, 4) அதன் பிறகு, இஸ்ரவேலருக்கு கடவுள் கொடுத்த சட்டம் இரத்தத்தின் பரிசுத்தத்தன்மையை வலியுறுத்திக் காட்டியது: “இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்களுக்குள் தங்கும் அந்நியர்களிலும் எவனாகிலும் இரத்தம் என்னப்பட்டதைப் புசித்தால், இரத்தத்தைப் புசித்த அவனுக்கு விரோதமாக நான் என் முகத்தைத் திருப்[புவேன்].” கடவுளுடைய இந்த சட்டத்தை இஸ்ரவேலர்களில் யாராவது ஒருவர் மீறினாலும் அவர் மற்றவர்களையும் கெடுக்க வாய்ப்பிருந்தது. எனவேதான் “அவன் தன் ஜனத்தில் இராதபடிக்கு அவனை அறுப்புண்டு போகப் பண்ணுவேன்” என கடவுள் சொன்னார். (லேவியராகமம் 17:10) பிற்காலத்தில் எருசலேமில் கூடிய அப்போஸ்தலர்களும் மூப்பர்களும், ‘இரத்தத்திற்கு விலகியிருக்க’ வேண்டுமென கட்டளையிட்டனர். ஒழுக்கக்கேட்டிலிருந்தும் விக்கிரகாராதனையிலிருந்தும் விலகியிருப்பது எந்தளவுக்கு முக்கியமோ அந்தளவுக்கு இதுவும் முக்கியம்.​—அப்போஸ்தலர் 15:28, 29.

“விலகியிருத்தல்” என்பது அப்போது எதை அர்த்தப்படுத்தியது? கிறிஸ்தவர்கள் இரத்தத்தை அப்படியே குடிக்கவும் இல்லை, உறைந்து போன பின் சாப்பிடவும் இல்லை. முழுமையாக இரத்தம் நீக்கப்படாத மிருகத்தின் மாம்சத்தைக்கூட அவர்கள் சாப்பிடவில்லை. இரத்தங்கலந்த சாஸேஜ் உட்பட, இரத்தம் சேர்த்து சமைக்கப்பட்ட எந்த உணவையுமே அவர்கள் தொடவில்லை. இவற்றில் ஏதாவது ஒரு விதத்தில் இரத்தத்தை சாப்பிட்டிருந்தாலும் அவர்கள் கடவுளுடைய சட்டத்தை மீறியிருப்பார்கள்.​—1 சாமுவேல் 14:32, 33.

பூர்வகால மக்களில் பெரும்பாலானோர், எதைப் பற்றியுமே கவலைப்படாமல் இரத்தத்தை தாராளமாக சாப்பிட்டார்களென (இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த) டெர்ட்டுல்லியனின் எழுத்துக்கள் காட்டுகின்றன. கிறிஸ்தவர்கள் இரத்தம் குடித்தனர் என்ற பொய்க் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையில், பழங்குடியினரே ஒப்பந்தங்களை உறுதிப்படுத்துவதற்கு இரத்தத்தைக் குடித்தார்கள் என அவர் குறிப்பிட்டார். அதேபோல, “வட்டரங்குகளில் எல்லாருக்கும் முன்பாக குற்றவாளிகளை கொல்லும் நிகழ்ச்சி நடந்தபோது, இரத்த வெறியர் [சிலர்] தங்களுக்கு இருக்கும் வலிப்புநோய் குணமாவதற்காக . . . குற்றவாளிகளின் இரத்தத்தை அப்படியே பிடித்து குடித்தனர்” என்றும் சொன்னார்.

கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை (மருத்துவ காரணங்களுக்காக ரோமர்களில் சிலர் அப்படி செய்திருந்தாலும்) அது தவறே. எனவேதான் கிறிஸ்தவர்கள், “மிருகங்களின் இரத்தத்தைக்கூட உணவில் சேர்த்துக்கொள்வதில்லை” என டெர்ட்டுல்லியன் எழுதினார். உண்மைக் கிறிஸ்தவர்களின் உத்தமத்தன்மையை சோதிக்க, ரோமர்கள் இரத்தம் கலந்த உணவை கொடுத்தனர். ஆகவே டெர்ட்டுல்லியன் இவ்வாறு தொடர்ந்து எழுதினார்: “[கிறிஸ்தவர்கள்], மிருகங்களின் இரத்தத்தையே அடியோடு வெறுத்து ஒதுக்குவது உங்களுக்கு நன்கு தெரிந்திருந்தும் மனித இரத்தத்தைக் குடிக்கும் வெறியர்கள் என அவர்களை நினைப்பது நியாயமானதா என்று நீங்களே சொல்லுங்கள்.”

மருத்துவர்களின் ஆலோசனைப்படி இரத்தம் ஏற்றிக்கொள்வது சர்வ வல்லமையுள்ள கடவுளுடைய சட்டங்களை மீறுவதாக இருக்குமென இன்று அநேகர் நினைப்பதில்லை. யெகோவாவின் சாட்சிகளாகிய நாம் உயிர் வாழவே விரும்புகிறோம், என்றாலும் இரத்தத்தைக் குறித்த யெகோவாவின் சட்டத்திற்கு கீழ்ப்படிய கடமைப்பட்டிருக்கிறோம். இப்போதிருக்கும் மருத்துவ சிகிச்சையின் கண்ணோட்டத்தில், இது எதை அர்த்தப்படுத்துகிறது?

இரண்டாம் உலகப் போருக்கு பின் இரத்தம் ஏற்றுதல் எங்கும் பிரபலமானது. ஆனால் அது கடவுளுடைய சட்டத்திற்கு முரணானது என யெகோவாவின் சாட்சிகள் நம்பினர், இப்போதும் அப்படித்தான் நம்புகின்றனர். இருந்தாலும், மருத்துவத்துறையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்று, இரத்தம் பெரும்பாலும் அப்படியே ஏற்றப்படுவதில்லை. மாறாக, (1சிவப்பணுக்கள்; (2வெள்ளையணுக்கள்; (3பிளேட்லெட்டுகள்; (4திரவப் பகுதியாகிய பிளாஸ்மா (சீரம்) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று ஏற்றப்படுகிறது. நோயாளியின் நிலைக்கேற்ப, சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், பிளேட்லெட்டுகள் அல்லது பிளாஸ்மா போன்றவற்றை ஏற்றுக் கொள்ளும்படி மருத்துவர்கள் சொல்லலாம். இவ்விதமாக, இரத்தத்தின் முக்கிய பாகங்களில் ஏதாவதொன்று மட்டுமே ஏற்றப்படுகிறது. இவ்வாறு ஒரே பாட்டில் இரத்தம் அநேக நோயாளிகளுக்கு பயன்படுகிறது. இரத்தத்தை அப்படியே ஏற்றிக்கொள்வதாக இருந்தாலும்சரி, அதன் நான்கு முக்கிய பாகங்களில் ஏதாவது ஒன்றை ஏற்றிக்கொள்வதாக இருந்தாலும்சரி, இது கடவுளுடைய சட்டத்தை மீறுவதாகவே யெகோவாவின் சாட்சிகள் கருதுகின்றனர். பைபிளின் இந்தக் கட்டளைக்கு கீழ்ப்படிவதால் அவர்கள் பல ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கின்றனர். இரத்தம் மூலம் தொற்றும் எய்ட்ஸ், ஹெபடைட்டிஸ் போன்ற வியாதிகளிலிருந்தும் அவர்கள் பாதுகாக்கப்படுகின்றனர்.

இரத்தம் முக்கிய பாகங்களாக மட்டுமல்ல, இன்னும் சிறுசிறு கூறுகளாகவும் பிரிக்கப்படுகிறது. எனவே, இவ்வாறு பிரிக்கப்படும் சிறு கூறுகளைப் பற்றி இப்போது கேள்வி எழும்புகிறது. இந்த சிறு கூறுகள் எதற்கு பயன்படுகின்றன, இதைப் பற்றி தீர்மானம் எடுக்கையில் கிறிஸ்தவர்கள் எதை கவனத்தில் வைக்க வேண்டும்?

இரத்தத்தில் பல நுண்மையான பொருட்கள் உள்ளன. 90 சதவீதம் நீர் இருக்கும் பிளாஸ்மாவிலும் எண்ணற்ற ஹார்மோன்கள், கனிம உப்புகள், என்ஸைம்கள், தாதுக்கள் மற்றும் சர்க்கரை உட்பட்ட சத்துப் பொருள்கள் உள்ளன. அதோடு, அல்ப்யூமின், இரத்தத்தை உறைய வைக்கும் வஸ்துகள், நோய் எதிர்ப்பு பொருட்கள் (antibodies) போன்ற புரதப் பொருட்களும் பிளாஸ்மாவில் உள்ளன. மருத்துவ வல்லுநர்கள் பிளாஸ்மாவிலுள்ள புரதப் பொருட்கள் பலவற்றைப் பிரித்தெடுத்து பயன்படுத்துகின்றனர். உதாரணமாக, இரத்தத்தை உறைய வைக்கும் வஸ்துவை (clotting factor VIII) எடுத்துக்கொள்ளுங்கள். இரத்த ஒழுக்கு நோய் உள்ளவர்களுக்கு இது கொடுக்கப்படுகிறது. குறிப்பிட்ட சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, காமா குளோபுலின் (gamma globulin) ஊசிமருந்துகளை ஏற்றும்படி மருத்துவர்கள் சொல்லலாம். இந்த நோய்க்கான எதிர்ப்பு சக்தி உடையவர்களின் இரத்தத்திலுள்ள பிளாஸ்மாவிலிருந்து இது எடுக்கப்படுகிறது. பிளாஸ்மாவில் உள்ள மற்ற புரதப் பொருட்களும் மருந்தாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இரத்தத்தின் முக்கிய பாகமாகிய பிளாஸ்மா எப்படி சிறுசிறு கூறுகளாக பிரித்து எடுக்கப்படுகிறது என்பதை மேலே குறிப்பிட்ட உதாரணம் விளக்குகிறது. *

பிளாஸ்மாவை எப்படி பல்வேறு கூறுகளாக பிரிக்க முடியுமோ, அது போலவே இரத்தத்தின் மற்ற முக்கிய பாகங்களையும் (சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், பிளேட்லெட்டுகள்) பிரிக்கலாம். உதாரணமாக, இன்டர்ஃபெரான் (interferons), இன்டர்லூகின் (interleukins) போன்ற நோய் எதிர்ப்புப் பொருட்கள் வெள்ளை அணுக்களிலிருந்து பெறப்படுகின்றன. வைரஸால் தொற்றும் சில நோய்களுக்கும் கேன்ஸருக்கும் இவை மருந்தாக பயன்படுத்தப்படுகின்றன. காயங்களை ஆற்றும் மருந்தொன்று பிளேட்லெட்டுகளிலிருந்து எடுக்கப்படுகிறது. இதுபோல இன்னும் பல மருந்துகள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இவை (ஆரம்ப கட்டத்திலாவது) இரத்தத்தின் முக்கியக் கூறுகளில் இருந்தே எடுக்கப்படுகின்றன. இந்த மருந்துகளைக் கொண்டு அளிக்கப்படும் சிகிச்சைகளில் இரத்தத்தின் முக்கிய பாகங்கள் ஏற்றப்படுவதில்லை; ஆனால் அவற்றின் சிறு கூறுகளே பயன்படுத்தப்படுகின்றன. ஆகவே, மருத்துவ காரணங்களுக்காக கிறிஸ்தவர்கள் இவற்றை ஏற்றுக்கொள்ளலாமா? ஏற்றுக்கொள்ளலாமா, கூடாதா என்பதை எங்களால் உறுதியாக சொல்ல முடியாது. இப்படிப்பட்ட நுணுக்கமான விவரங்களை பைபிள் தருவதில்லை. எனவே, கடவுளின் முன்னிலையில், பைபிளின் நியமங்களால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியின் அடிப்படையில் தீர்மானத்தை எடுப்பது ஒவ்வொரு கிறிஸ்தவருடைய பொறுப்பாகும்.

இரத்தத்திலிருந்து எடுக்கப்பட்ட எதையுமே (குறுகியகால நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுக்கும் சிறுசிறு கூறுகளாக இருந்தாலும்கூட) சிலர் ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுகின்றனர். ‘இரத்தத்திற்கு விலகியிருக்க’ வேண்டும் என்கிற கடவுளின் கட்டளையை அவர்கள் அப்படித்தான் புரிந்துகொள்கின்றனர். மிருகத்திலிருந்து வெளிவரும் இரத்தத்தை “தரையிலே ஊற்றிவிட வேண்டும்” என இஸ்ரவேலருக்கு கடவுள் கொடுத்த சட்டம் இதையே அர்த்தப்படுத்துவதாக அவர்கள் நம்புகின்றனர். (உபாகமம் 12:22-24) இது ஏன் பொருத்தமானதாக இருக்கிறது? காமா குளோபுலின், இரத்தத்தை உறைய வைக்கும் காரணிகள் போன்றவற்றை தயாரிப்பதற்கு முதலாவது இரத்தத்தை சேமித்து வைக்க வேண்டும். பிறகு சிறுசிறு பாகங்களாக பிரிக்க வேண்டும். எனவே, இரத்தத்தை அல்லது அதன் நான்கு முக்கிய பாகங்களை எப்படி மறுத்து விடுகிறார்களோ, அப்படியே இந்த மருந்துகளையும் கிறிஸ்தவர்கள் சிலர் மறுத்து விடுகின்றனர். அவர்களுடைய உள்ளப்பூர்வமான, மனசாட்சிபூர்வமான நிலைநிற்கைக்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டும்.

ஆனால், மற்ற கிறிஸ்தவர்கள் வித்தியாசமாக தீர்மானிக்கிறார்கள். இரத்தத்தை அல்லது சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், பிளேட்லெட்டுகள், பிளாஸ்மா போன்ற இரத்தத்தின் பாகங்களை ஏற்றிக்கொள்ள அவர்களும் மறுக்கின்றனர். இருந்தாலும், இந்த முக்கிய பாகங்களின் சிறுசிறு கூறுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளால் தங்களுக்கு சிகிச்சையளிக்கும்படி டாக்டரிடம் சொல்கிறார்கள். இதிலும் பலர் வித்தியாசமான தீர்மானங்களை எடுக்கலாம். காமா குளோபுலினை ஏற்றிக்கொள்ள ஒரு கிறிஸ்தவர் சம்மதிக்கலாம். ஆனால், சிவப்பு அணுக்களிலிருந்தோ அல்லது வெள்ளை அணுக்களிலிருந்தோ எடுக்கப்பட்டவற்றை ஏற்றிக்கொள்ள ஒருவேளை மறுக்கலாம். மொத்தத்தில், இரத்தத்தின் சிறுசிறு கூறுகளை ஏற்றுக்கொள்ள சில கிறிஸ்தவர்கள் ஏன் சம்மதிக்கின்றனர்?

பிளாஸ்மா புரதச் சத்துக்கள் (சிறுசிறு கூறுகள்) கருவுற்றிருக்கும் தாயின் இரத்தத்திலிருந்து கர்ப்பப்பையில் இருக்கும் சேயின் இரத்த அமைப்பிற்கு செல்கிறது என 1990, ஜூன் 1, ஆங்கில காவற்கோபுரத்தில் வெளிவந்த “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” பகுதி குறிப்பிட்டது. எனவே, தாய் தன்னுடைய சிசுவிற்கு இம்யூனோகுளோபுலின்களை (immunoglobulins) கடத்துகிறாள். இது மிக முக்கியமான நோய் எதிர்ப்புச் சக்தியை குழந்தைக்கு கொடுக்கிறது. ஆனால், கருவின் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் ஆயுள் முடிகையில் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் அவற்றின் பகுதி மாற்றப்படுகிறது. அதில் ஒரு பகுதி பிலிருபினாக (bilirubin) ஆகிறது. இது நச்சுக்கொடி வழியாக தாயின் உடலுக்குள் சென்று, பின் கழிவாக வெளியேறுகிறது. இந்த விதத்தில் இரத்தத்தின் சிறுசிறு கூறுகள் இயற்கையாகவே ஒரு நபருடைய உடலிலிருந்து இன்னொருவருக்கு கடத்தப்படுவதால் பிளாஸ்மாவிலிருந்தோ இரத்த அணுக்களிலிருந்தோ எடுக்கப்பட்ட சிறுசிறு கூறுகளை ஏற்றிக்கொள்ளலாம் என சில கிறிஸ்தவர்கள் தீர்மானிக்கலாம்.

ஒவ்வொருவருடைய கருத்துக்களும் மனசாட்சியின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகளும் வித்தியாசப்படுவதால், இது முக்கியத்துவமற்ற விஷயமாகிவிடுகிறதா? இல்லவே இல்லை. இது மிகவும் முக்கியமான விஷயம். என்றாலும், அடிப்படை நியமம் மிகத் தெளிவாக உள்ளது. இரத்தத்தையோ, இரத்தத்தின் முக்கிய பாகங்களையோ யெகோவாவின் சாட்சிகள் ஏற்றிக்கொள்வதில்லை என்பதை இந்தக் கட்டுரை தெளிவாக காட்டுகிறது. ‘விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், வேசித்தனத்திற்கும் விலகியிருக்க வேண்டுமென’ பைபிள் கிறிஸ்தவர்களுக்கு சொல்கிறது. (அப்போஸ்தலர் 15:28) ஆனால், இந்த முக்கிய பாகங்களின் சிறுசிறு கூறுகள் எதையாவது ஏற்றிக்கொள்ளலாமா என்ற விஷயத்தில், ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஜெபசிந்தையோடும், பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட தன் மனசாட்சியின் அடிப்படையிலும் தீர ஆலோசித்து தீர்மானம் எடுக்க வேண்டும்.

எந்த சிகிச்சையாக இருந்தாலும்சரி உடனே குணமானால் போதும் என்று நினைத்து அநேகர் அதை ஏற்றுக்கொள்கின்றனர். அதில் இருக்கும் ஆபத்துக்களை அறிந்திருந்தாலும் அநேகர் அதை ஏற்றுக்கொள்கின்றனர். இரத்தத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை உபயோகிப்பதிலும் இதுவே உண்மை. ஆனால், உண்மைக் கிறிஸ்தவர்கள் உடல்நலத்தைப் பற்றி மட்டுமே யோசிப்பதில்லை. மாறாக, நிதானமாகவும், பரந்த நோக்குநிலையோடும் தீர்மானம் எடுக்க முயலுகின்றனர். சிறந்த மருத்துவ சிகிச்சையை யெகோவாவின் சாட்சிகள் மனதார ஏற்றுக்கொள்கின்றனர். எந்த சிகிச்சையாய் இருந்தாலும்சரி, அதன் நன்மை தீமைகளை தீர யோசிக்கின்றனர். இருந்தாலும், இரத்தத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளைக் குறித்ததில், கடவுள் என்ன சொல்கிறார் என்பதற்கும் ஜீவனைத் தந்த கடவுளோடு தங்களுக்கு இருக்கும் உறவிற்குமே முக்கியத்துவம் தருகின்றனர்.​—சங்கீதம் 36:9.

சங்கீதக்காரனின் அதே நம்பிக்கையை ஒரு கிறிஸ்தவர் வெளிப்படுத்துவது எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதமாய் இருக்கும்! அவர் இவ்வாறு எழுதினார்: “தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார். . . . கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிற மனுஷன் பாக்கியவான்.”​—சங்கீதம் 84:11, 12.

[அடிக்குறிப்பு]

^ பாரா. 13 1978, ஜூன் 15 தேதியிட்ட ஆங்கில காவற்கோபுரத்திலும் 1994, அக்டோபர் 1 தேதியிட்ட காவற்கோபுரத்திலும் வெளிவந்துள்ள “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” என்ற கட்டுரையை பார்க்கவும். உடலில் இரத்த அணுக்களின் உற்பத்தியைத் தூண்டி, அவற்றை அதிகரிக்கும் செயற்கை மருந்துகளை மருந்து கம்பெனிகள் தயாரிக்கின்றன. இவை இரத்தத்திலிருந்து தயாரிக்கப்படுவதில்லை. இரத்தத்தின் கூறுகள் சிலவற்றிற்கு பதிலாக இவற்றை பயன்படுத்தலாம்.

[பக்கம் 31-ன் பெட்டி]

டாக்டரிடம் கேட்க வேண்டிய கேள்விகள்

இரத்தத்திலிருந்து எடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு சிகிச்சையோ ஆபரேஷனோ செய்யப்பட வேண்டுமென்றால், பின்வருமாறு கேளுங்கள்:

ஒரு யெகோவாவின் சாட்சியாக, எந்த சந்தர்ப்பத்திலும் நான் இரத்தம் (இரத்தத்தை அல்லது சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், பிளேட்லெட்டுகள், பிளாஸ்மா போன்ற இரத்தத்தின் பாகங்களை) ஏற்றிக்கொள்ள மாட்டேன் என்பது இந்த சிகிச்சையில் உட்பட்டிருக்கும் எல்லா மருத்துவப் பணியாளர்களுக்கும் தெரியுமா?

கொடுக்கப்படும் மருந்து, இரத்த பிளாஸ்மாவிலிருந்தோ, சிவப்பு அல்லது வெள்ளை அணுக்களிலிருந்தோ, அல்லது பிளேட்லெட்டுகளிலிருந்தோ தயாரிக்கப்பட்டதாக இருந்தால், நீங்கள் கேட்க வேண்டியது:

இரத்தத்தின் நான்கு முக்கிய பாகங்களிலிருந்து இந்த மருந்து தயாரிக்கப்பட்டதா? அப்படியென்றால், அதில் என்னென்ன உள்ளன என்பதை விளக்க முடியுமா?

இரத்தத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த மருந்து எவ்வளவு கொடுக்கப்படும், எந்த முறையில் கொடுக்கப்படும்?

இரத்தத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த மருந்தை எடுத்துக்கொள்ள என் மனசாட்சி ஒப்புக்கொண்டால், இதில் இருக்கும் ஆபத்துக்கள் என்ன?

இரத்தத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த மருந்தை ஏற்றுக்கொள்ள என் மனசாட்சி ஒப்புக்கொள்ளாவிட்டால், வேறு என்ன மாற்று சிகிச்சை இருக்கிறது?

இந்த விஷயங்களைப் பற்றி தீர யோசித்த பிறகு, என்னுடைய தீர்மானத்தை நான் எப்பொழுது உங்களுக்கு தெரிவிக்கலாம்?