Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘கோடை காலமும் மாரி காலமும் ஒழிவதில்லை’

‘கோடை காலமும் மாரி காலமும் ஒழிவதில்லை’

யெகோவாவுடைய படைப்பின் மகத்துவம்

‘கோடை காலமும் மாரி காலமும் ஒழிவதில்லை’

தகிக்கும் சூரியன் பாலைவனத்தை சுட்டுப் பொசுக்குகிறது. பூமியின் மற்ற பகுதிகளிலோ, கடும் குளிர்காலத்திற்குப் பிறகு கதகதப்பூட்டுகிறது. ஆம், சீதோஷண நிலைகளும் பருவ காலங்களும் மாறுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று சூரிய வெப்பமாகும்.

பூமியெங்கும் பல்வேறு பருவ காலங்கள் உண்டாகின்றன. ஆனால் அவை உங்களை எப்படி பாதிக்கின்றன? மரங்கள் துளிர்க்க ஆரம்பித்து, மலர்கள் பூத்துக் குலுங்குவதை காணும்போது புத்துணர்ச்சியூட்டும் வசந்தத்தின் வருகையை அறிந்து ஆனந்தம் அடைகிறீர்களா? கோடை காலத்தின் சுகமான அந்திப் பொழுதுகளைப் பற்றி எப்படி உணருகிறீர்கள்? இலைகளில் வண்ண ஜாலங்களை ஏற்படுத்தி அடியெடுத்து வைக்கும் இலையுதிர் காலத்தைக் கண்டு பூரித்துப் போகிறீர்களா? பனி போர்த்திய கானகத்தைப் பார்க்கையில் அது உங்கள் மனதிற்கு இதமளிக்கிறதா?

இந்தப் பருவ காலங்கள் எப்படி ஏற்படுகின்றன? ரத்தினச் சுருக்கமாக சொன்னால், பூமி சாய்ந்திருப்பதாலே ஏற்படுகின்றன. சூரியனை பூமி சுற்றி வரும் பாதையோடு ஒப்பிடுகையில், அது சுமார் 23.5 டிகிரி சாய்ந்த நிலையில் அதன் அச்சில் சுழல்கிறது. பூமியின் அச்சு மட்டும் சாய்ந்திருக்காவிட்டால் பருவ காலங்களே இருக்காது. எப்போதும் ஒரே விதமான சீதோஷண நிலைதான் இருக்கும். இது தாவரங்களையும் பயிர் விளைச்சலின் சுழற்சியையும் பாதிக்கும்.

மாறி வரும் பருவ காலங்களில் கடவுளின் கைவண்ணத்தை ஒருவர் காண முடியும். பொருத்தமாகவே சங்கீதக்காரன் இவ்வாறு யெகோவா தேவனிடம் சொன்னார்: ‘பூமியின் எல்லைகளையெல்லாம் திட்டப் பண்ணினீர்; கோடை காலத்தையும் மாரி காலத்தையும் உண்டாக்கினீர்.’​—⁠சங்கீதம் 74:17. *

பூமியிலிருந்து பார்க்கும் ஒருவரது கண்ணோட்டத்தில், சூரிய, சந்திர, நட்சத்திரங்கள் உண்மையில் பருவ காலங்களை தவறாமல் அடையாளம் காட்டுபவையாக உள்ளன. நமது சூரிய மண்டலத்தைக் கடவுள் படைக்கையில் இவ்வாறு கட்டளையிட்டார்: “வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் [பருவ] காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது.” (ஆதியாகமம் 1:14) பூமி அதன் சுற்றுப் பாதையில் வருடத்திற்கு ஒருமுறை பயணிக்கிறது; அப்போது குறிப்பிட்ட இரண்டு இடங்களைக் கடக்கையில், நிலநடுக்கோட்டு பகுதியில் சூரியன் தலைக்கு நேராக உச்சியில் பிரகாசிக்கிறது. இந்த நிகழ்வுகள் சம இரவுபகல் (equinoxes) என அழைக்கப்படுகின்றன; அநேக நாடுகளில் வசந்த காலத்தின் தொடக்கத்தையும் இலையுதிர் காலத்தின் தொடக்கத்தையும் இவை குறித்துக் காட்டுகின்றன. இந்த சம இரவுபகலின்போது பூமியெங்கும் பகல் பொழுதும் இராப் பொழுதும் கிட்டத்தட்ட சமமாக இருக்கின்றன.

பருவ காலங்கள் மாறி மாறி ஏற்படுவதற்கு காரணம் வானவியல் இயக்கங்கள் மட்டுமே அல்ல. உயிர் வாழ்வதற்கு உதவும் சிக்கலான அமைப்பில் பருவ காலங்கள், சீதோஷணநிலை, வானிலை ஆகியவை பின்னிப் பிணைந்திருக்கின்றன. பயிர் தொழிலையும் உணவுப் பொருட்கள் விளைவிப்பதையும் பற்றி நன்கு அறிந்திருந்த அநேகர் ஆசியா மைனரில் இருந்தார்கள்; அவர்களிடம் கிறிஸ்தவ அப்போஸ்தலர் பவுலும் அவருடைய தோழரான பர்னபாவும் பேசுகையில், கடவுள்தாமே “வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்”புகிறார் என குறிப்பிட்டார்கள்.​—⁠அப்போஸ்தலர் 14:14-17.

நிலத்திலுள்ள தாவரங்களுக்கும் கடல்களிலுள்ள ஃபைட்டோப்ளாங்க்டன் எனும் நுண்ணிய தாவரங்களுக்கும் ஒளிச்சேர்க்கை எனும் அற்புத நிகழ்வு வாழ்வளிக்கிறது. இதன் காரணமாக, தற்போதைய உணவு சங்கிலியும் உயிரியல் பல்வகைமையின் பின்னலமைப்பும் சிக்கலான வழிகளில் வானிலைக்கும் சீதோஷணத்திற்கும் பிரதிபலிக்கின்றன. இவை எல்லாவற்றிலும் காணப்படும் யெகோவாவின் கைவண்ணத்தைப் பற்றி பவுல் பொருத்தமாகவே இவ்வாறு குறிப்பிட்டார்: “தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்.”​—⁠எபிரெயர் 6:7.

வசந்த காலம் மிதமான தட்பவெப்பத்தையும், நீண்ட பகல் பொழுதையும், அதிக சூரிய வெளிச்சத்தையும், சாதகமான மழையையும் தரும்போது சம்பவிப்பதை சற்று யோசித்துப் பார்த்தீர்கள் என்றால், “ஆசீர்வாதம்” என்ற வார்த்தை புதிய பரிமாணத்தை ஏற்பதை காண்பீர்கள். பூக்கள் மலர்கின்றன, பூச்சிகள் தங்கள் குளிர்கால “வீடுகளிலிருந்து” புறப்பட்டு பயிர்களில் மகரந்த சேர்க்கை நடத்த தயாராகின்றன. இங்கே படத்தில் நீங்கள் காணும் ப்ளூ ஜே (blue jay) போன்ற பறவைகள் தங்கள் வண்ணத்தாலும் இன்னிசையாலும் காட்டிற்கு அழகு சேர்க்கின்றன; இதனால் இயற்கை காட்சி உயிர் பெறுகிறது. வாழ்க்கை சுறுசுறுப்படைகிறது. மரம் செடி கொடிகள் முளைப்பது, மீண்டும் துளிர்ப்பது, வளர்வது என்ற வாழ்க்கை சுழற்சி தொடருகிறது. (உன்னதப்பாட்டு 2:12, 13) இது கோடை கால முடிவில் அல்லது இலையுதிர் காலத்தில் அறுவடைக்கு வழியை தயார்படுத்துகிறது.​—⁠யாத்திராகமம் 23:16.

பூமியை ஸ்தாபித்திருக்கும் நிலையிலும், இரவு பகல், பருவ காலங்கள், விதைப்பு காலம், அறுப்பு காலம் ஆகியவற்றை நமக்குக் கொடுத்திருப்பதிலும் யெகோவாவின் செயல்கள் அற்புதமாய் மிளிருகின்றன. குளிருக்குப் பின் கோடை வரும் என்பதில் நாம் உறுதியாய் இருக்கிறோம். சொல்லப்போனால் கடவுளே இவ்வாறு வாக்குறுதி அளித்தார்: “பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை.”​—⁠ஆதியாகமம் 8:22.

[அடிக்குறிப்பு]

^ பாரா. 6 2004 யெகோவாவின் சாட்சிகளுடைய காலண்டர், ஜூலை/ஆகஸ்ட்டை காண்க.

[பக்கம் 9-ன் பெட்டி/படம்]

உயிர் வாழ உதவும் முக்கிய துணைக்கோள்

காலம் காலமாகவே சந்திரன் ஆட்களின் உணர்ச்சிகளை தூண்டியிருக்கிறது, அவர்களை வியக்க வைத்திருக்கிறது. ஆனால் சந்திரன் எனும் துணைக்கோள் பருவ காலங்களின் மீது செல்வாக்கு செலுத்துவது உங்களுக்கு தெரியுமா? சந்திரன் இருப்பது, பூமியின் சாய்வை, அதாவது அது தன் அச்சில் சாய்ந்த நிலையில் சுழலுவதை நிலைப்படுத்த உதவுகிறது. இது, “பூமியில் உயிர் வாழ தேவையான சூழலை உருவாக்குவதில் முக்கிய பங்கு” வகிக்கிறது என சொல்கிறார் அறிவியல் எழுத்தாளரான ஆன்ட்ரூ ஹில். நம் பூமி அதன் அச்சில் சாய்ந்திருப்பதை நிலைப்படுத்த எந்தப் பெரிய இயற்கை துணைக்கோளும் இல்லாதிருந்தால் தட்பவெப்ப நிலைகள் மிஞ்சிப்போய், ஒருவேளை இந்த பூமி உயிர் வாழ்விற்கே லாயக்கற்றதாக ஆகியிருக்கும். எனவே, வானியல் வல்லுநர்களின் ஒரு குழு இந்த முடிவுக்கு வந்தது: “பூமியின் சீதோஷண நிலையை கட்டுப்படுத்தும் விதத்தில் சந்திரன் செயல்படுவதாக சொல்லலாம்.”​—⁠சங்கீதம் 104:19.

[படத்திற்கான நன்றி]

சந்திரன்: U.S. Fish & Wildlife Service, Washington, D.C./Bart O’Gara

[பக்கம் 9-ன் படம்]

ஒட்டகங்கள், வட ஆப்பிரிக்காவிலும் அரேபிய தீபகற்பத்திலும்