Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஈடிணையற்ற நம் சூரிய குடும்பம் எப்படி வந்தது

ஈடிணையற்ற நம் சூரிய குடும்பம் எப்படி வந்தது

ஈடிணையற்ற நம் சூரிய குடும்பம்​—எப்படி வந்தது

இப்பிரபஞ்சத்தில் நம் சூரிய குடும்பம் ஈடிணையின்றி இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. சுருள் வடிவ பால்வீதி மண்டலத்தின் இரு கிளைகளுக்கு இடையே நம் சூரிய குடும்பம் அமைந்துள்ளது; இது விண்மீன்கள் மிகக்குறைவாக உள்ள ஒரு பகுதியாகும். இரவில் நாம் பார்க்கிற விண்மீன்களில் பெரும்பாலானவை வெகு தொலைவில் இருக்கின்றன. அதனால்தான் பெரிய தொலைநோக்கி வழியாகப் பார்க்கையில் அவை வெறும் ஒளிப்புள்ளிகளாகத் தெரிகின்றன. நம் சூரிய குடும்பம் அப்படிப்பட்ட இடத்தில்தான் அமைந்திருக்க வேண்டுமா?

விண்மீன்கள் அடர்ந்த பால்வீதி மண்டலத்தின் மையத்திற்கு அருகே நம் சூரிய குடும்பம் அமைந்திருந்தால் விண்மீன்களின் தீய விளைவுகளால் நாம் பாதிக்கப்படுவோம். உதாரணமாக, பூமியின் சுற்றுப்பாதை ஒழுங்கற்றதாகி விடலாம்; அதனால் மனித வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்படலாம். அதோடு வாயு மேகங்கள் (gas clouds) வழியாக பூமி கடந்துசெல்கையில் அதிக வெப்பமடையலாம், வெடிக்கும் இயல்புள்ள விண்மீன்களால் தாக்கப்படலாம், ஆபத்தான கதிர்வீச்சுத்தன்மை கொண்ட விண் பொருள்களாலும் தீங்கு ஏற்படலாம். ஆகையால், இத்தகைய பாதிப்புகளையும் ஆபத்துகளையும் தவிர்ப்பதற்காகவே நட்சத்திர மண்டலத்தில் கனகச்சிதமான இடத்தில் நம் சூரிய குடும்பம் குடிகொண்டுள்ளது.

நமது தேவைகளை முழுமையாக நிறைவுசெய்யும் ஒரு விண்மீனே சூரியன். அது தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது, காலங்காலமாக நீடித்துநிற்கிறது, அது மிகப் பெரியதுமல்ல, மிக வெப்பமானதுமல்ல. நம் நட்சத்திர மண்டலத்திலுள்ள பெரும்பாலான விண்மீன்கள் சூரியனைவிட மிகச் சிறியவை; பூமியைப் போன்ற ஒரு கோளில் உயிர்வாழ்வதற்கு ஏற்ற அளவில் வெளிச்சத்தையும் வெப்பத்தையும் அவை தருவதில்லை. அதுமட்டுமல்ல, அநேக விண்மீன்கள் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பிற விண்மீன்களின் ஈர்ப்புவிசை காரணமாக ஒன்றையொன்று சுற்றிவருகின்றன. சூரியனோ அத்தகைய ஒரு விண்மீன் அல்ல, அது ஒரு தனிக்காட்டு ராஜா. இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட சூரியன்களின் ஈர்ப்புவிசை இருக்குமானால் நம் சூரிய குடும்பம் நிலையற்றதாய் இருக்கக்கூடும்.

இராட்சத வெளிப்புறக் கோள்கள் பொருத்தமான இடத்தில் அமைந்திருப்பதும்கூட நம் சூரிய குடும்பத்தைத் தனிச்சிறப்புள்ளதாக்குகிறது. இவை ஏறக்குறைய வட்டப்பாதையில் சுற்றிவருகின்றன; இவற்றின் ஈர்ப்புவிசையால் பூமியைப் போன்ற உட்புறக் கோள்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படுவதில்லை. * மாறாக, இந்த வெளிப்புறக் கோள்களோ ஆபத்தான விண் பொருள்களை இழுத்து வேறு பக்கமாய்த் திருப்பிவிடுகின்றன; இவ்வாறு செய்வதன் மூலம், இக்கோள்களுக்கு இவை பாதுகாப்பு அளிக்கின்றன. “வியாழனைப் போன்ற இராட்சத வாயு கோள்கள் நமக்கு [பூமிக்கு] அப்பால் இருப்பதாலேயே குறுங்கோள்களும் வால் விண்மீன்களும் நம்மைப் பெருமளவில் தாக்குவதில்லை” என விஞ்ஞானிகளான பீட்டர் டி. வார்ட் மற்றும் டானல்ட் பிரௌன்லி எழுதிய அரிய பூமி​—⁠பிரபஞ்சத்தில் வேறெங்கும் சிக்கலான உயிர் இல்லாதிருக்கக் காரணம் என்ற ஆங்கில புத்தகத்தில் விளக்குகிறார்கள். இராட்சத கோள்களையுடைய பிற சூரிய குடும்பங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றிலுள்ள இராட்சத கோள்களின் சுற்றுப்பாதை பூமியைப் போன்ற சிறிய கோள்களுக்கு ஆபத்து விளைவிப்பவையாய் இருக்கின்றன.

சந்திரனின் பங்கு

சந்திரன் தொன்றுதொட்டே மனிதரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பல கவிஞர்களும் பாடகர்களும் அதனைப் போற்றிப் பாடியிருக்கின்றனர். உதாரணமாக, சந்திரன் “என்றென்றைக்கும் உறுதியாயும், ஆகாயமண்டலத்துச் சாட்சியைப்போல் உண்மையாயும்” இருப்பதாக முற்கால எபிரெய கவிஞர் ஒருவர் வர்ணித்தார்.​—சங்கீதம் 89:37.

பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு சந்திரன் வகிக்கிற முக்கியப் பங்குகளில் ஒன்று என்னவெனில், அதன் ஈர்ப்புவிசையால் கடலில் ஏற்றவற்றங்கள் உண்டாவதாகும். இவை கடல் நீரோட்டத்திற்கு அத்தியாவசியமென கருதப்படுகின்றன; இந்தக் கடல் நீரோட்டம் வானிலைக்கு இன்றியமையாதது.

சந்திரன் வகிக்கிற மற்றொரு முக்கியப் பங்கு என்னவெனில், அதன் ஈர்ப்புவிசையால் பூமி தன் சுற்றுப்பாதையோடு ஒப்பிட அதன் சாய்வான அச்சிலிருந்து மாறாமல் இருப்பதாகும். சந்திரன் மட்டும் இல்லையென்றால் பூமியின் அச்சு ஒருபுறம் சாய்ந்திருப்பது கால ஓட்டத்தில் “சுமார் பூஜ்ஜியத்திலிருந்து 85 [டிகிரி] வரை” தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கலாம் என நேச்சர் என்ற அறிவியல் புத்தகம் கூறுகிறது. பூமியின் அச்சு சாய்வாக இல்லையென்றால், நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! இனிய பருவகாலங்களை அனுபவிக்க முடியாது, போதுமான மழையும் இருக்காது. பூமியின் இந்தச் சாய்வுநிலை, நாம் வாழ முடியாதளவுக்கு மிதமிஞ்சிய குளிரும் வெப்பமும் ஏற்படாதபடி தடுக்கிறது. “ஒப்பற்ற கோளான சந்திரன் இருப்பதாலேயே சீரான சீதோஷ்ணத்தை நாம் அனுபவிக்கிறோம்” என உறுதியாகக் கூறுகிறார் வான் வல்லுநர் ஸாக் லாஸ்கர். பூமியின் அருகிலுள்ள சந்திரன் பெரிதாக இருப்பதாலேயே, அதாவது இராட்சதக் கோள்களின் சந்திரன்களோடு ஒப்பிட பெரிதாக இருப்பதாலேயே பூமி நிலையாக இருக்கிறது.

பூமியின் இயற்கைத் துணைக் கோளான சந்திரனால் விளைகிற இன்னுமொரு பயனும் உண்டு. பழங்கால நூலாகிய பைபிளின் ஆதியாகம புத்தகத்தை எழுதியவர் குறிப்பிட்டபடி, இது இரவில் ஒளி தருகிறது.​—ஆதியாகமம் 1:16.

தற்செயலாக வந்ததா, வடிவமைக்கப்பட்டதா?

பூமியில் ஜீவராசிகள் வெறுமனே வாழ்வதோடு மட்டுமின்றி, வாழ்க்கையில் இன்பம் காணும் விதத்திலும் பல காரியங்கள் இப்பூமியில் ஒருசேர நடைபெறுகின்றன; இதெல்லாம் எப்படி வந்திருக்கும்? இரண்டு வித்தியாசமான பதில்களே இருக்க முடியும். ஒன்று, உயிர்கள் எல்லாம் தற்செயலாக தானாகவே வந்திருக்க வேண்டும்; இன்னொன்று, இவற்றையெல்லாம் வடிவமைத்துப் படைத்த புத்திக்கூர்மையுள்ள ஒருவர் இருக்க வேண்டும்.

நம் பிரபஞ்சம் ஒரு படைப்பாளரால், சர்வவல்லமையுள்ள கடவுளால் உண்டாக்கப்பட்டதென ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பரிசுத்த பைபிள் குறிப்பிட்டது. அது உண்மையென்றால், நம் சூரிய குடும்பத்திலுள்ள அம்சங்கள் எல்லாம் தற்செயலாக நிகழ்ந்திருக்க முடியாது, ஆனால் ஒரு நோக்கத்தோடு வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். அவற்றை வடிவமைத்துப் படைத்தவர், பூமியில் ஜீவராசிகளை வாழவைப்பதற்கு தாம் அடுத்தடுத்து என்னென்ன செய்தார் என்பதைப் பற்றிய ஓர் அறிக்கையைக் கொடுத்துள்ளார் எனச் சொல்லலாம். சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பே அதை அவர் கொடுத்திருக்கிறபோதிலும், இப்பிரபஞ்சத்தில் நிகழ்ந்தவற்றைப் பற்றி அதில் குறிப்பிட்டுள்ள விவரங்கள், உண்மையில் என்ன நிகழ்ந்திருக்குமென விஞ்ஞானிகள் நம்புகிறார்களோ அவற்றோடு ஒத்திருக்கின்றன என்பதை அறிவது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இந்த அறிக்கை பைபிளில் ஆதியாகம புத்தகத்தில் பதிவாகி உள்ளது. அது என்ன சொல்கிறது என்பதைக் கவனியுங்கள்.

படைப்பு பற்றிய ஆதியாகம பதிவு

“ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.” (ஆதியாகமம் 1:1) பைபிளின் இந்த ஆரம்ப வார்த்தைகள், நாம் வாழும் பூமி உட்பட நமது முழு சூரிய குடும்பமும் படைக்கப்பட்டதைப் பற்றியும் கோடானுகோடி நட்சத்திர மண்டலங்களிலுள்ள விண்மீன்கள் படைக்கப்பட்டதைப் பற்றியும் குறிப்பிடுகின்றன. பைபிள் சொல்கிறபடி, ஒரு சமயத்தில் பூமியின் மேற்பரப்பு ‘ஒழுங்கில்லாமலும் வெறுமையாயும்’ இருந்தது. கண்டங்களும் நிலங்களும் இருக்கவில்லை. அடுத்ததாக ஆதியாகமப் பதிவு சொல்வது, ஒரு கோளில் உயிர்கள் வாழ்வதற்கு மிக முக்கியமாக இருக்க வேண்டிய ஒன்றைப் பற்றி விஞ்ஞானிகள் சொல்வதோடு ஒத்திருக்கிறது. அதுதான் ஏராளமான தண்ணீர். கடவுளுடைய ஆவி ‘ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தது’ என அது சொல்கிறது.​—ஆதியாகமம் 1:2.

மேற்பரப்பிலுள்ள தண்ணீர் திரவநிலையில் இருப்பதற்கு சூரியனிலிருந்து பூமி சரியான தொலைவில் இருக்க வேண்டும். “செவ்வாய் கடுங்குளிரான கிரகம், வெள்ளி படுவெப்பமான கிரகம், பூமியோ மிதமிஞ்சிய குளிரும் வெப்பமுமின்றி சீராக உள்ள கிரகம்” என விண்கோள விஞ்ஞானியான ஆண்ட்ரூ இங்கர்சால் விளக்குகிறார். அவ்வாறே, தாவரங்கள் வளருவதற்குப் போதுமான வெளிச்சம் தேவை. படைப்பின் ஆரம்ப காலப்பகுதியில், தண்ணீரைத் தாங்கிய இருண்ட மேகங்களின் வழியாக சூரிய ஒளி ஊடுருவிச் செல்லும்படி கடவுள் செய்தாரென ஆதியாகமப் பதிவு சொல்வது குறிப்பிடத்தக்கது; ஒரு குழந்தையைச் சுற்றிப் ‘போர்த்துகிற துணி’ போல இந்த மேகங்கள் சமுத்திரத்தை மூடியிருந்தன.​—யோபு 38:4, 9, NW; ஆதியாகமம் 1:3-5.

படைப்பாளர் அடுத்து, ‘ஆகாயவிரிவை’ உண்டாக்கினார் என ஆதியாகம புத்தகம் சொல்கிறது. (ஆதியாகமம் 1:6-8) வாயுக்கள் நிறைந்த இந்த ஆகாயவிரிவே பூமியின் வளிமண்டலம் ஆகும்.

அதன் பிறகு, ஒழுங்கற்று இருந்த பூமியின் மேற்பரப்பை கடவுள் வெட்டாந்தரையாக மாற்றினார் என பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 1:9, 10) இதற்காக அவர் பூமியின் மேலோட்டை வளைத்து நகர்த்தியிருப்பதாகத் தெரிகிறது. அதன் விளைவாக, ஆழமான பள்ளங்கள் ஏற்பட்டு சமுத்திரத்திற்குள்ளிருந்து கண்டங்கள் உயரே எழும்பியிருக்கலாம்.​—சங்கீதம் 104:6-8.

பூமியை உருவாக்கியபோது ஏதோவொரு காலகட்டத்தில் கண்ணுக்குத் தெரியாத கடற்பாசிகளை கடவுள் உண்டாக்கினார். தானாகவே இனவிருத்தி செய்யும் இந்த ஒற்றை செல் உயிரிகள், சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி கார்பன் டை-ஆக்ஸைடை உணவாக மாற்ற ஆரம்பித்தன; அதே சமயத்தில் ஆக்ஸிஜனை வளிமண்டலத்தில் வெளியேற்றின. படைப்பின் மூன்றாவது காலப்பகுதியில் தாவரங்கள் படைக்கப்பட்டன. நிலப்பகுதி தாவரங்களால் மூடப்பட்டபோது இன்னும் அதிகமான ஆக்ஸிஜன் வளிமண்டலத்தில் வெளியேற்றப்பட்டது. இவ்வாறு வளிமண்டலத்தில் ஆக்ஸிஜனின் அளவு அதிகரித்தது; மனிதரும் மிருகங்களும் சுவாசிப்பதன் மூலம் உயிர்வாழ இது உதவியது.​—ஆதியாகமம் 1:11, 12.

பூமி விளைச்சலைத் தருவதற்காக, படைப்பாளர் பல்வகை நுண்ணுயிரிகளை மண்ணில் வாழ வைத்தார். (எரேமியா 51:15, NW) இந்தச் சின்னஞ்சிறிய உயிரிகள், காய்ந்த இலை தழைகளையும் இறந்துபோனவற்றையும் மக்கிப்போகச் செய்து, அடிப்படைக் கூறுகளை மறுசுழற்சி செய்வதன்மூலம் தாவரங்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. மண்ணில் வாழும் சில பிரத்தியேக வகையான பாக்டீரியாக்கள், காற்றிலிருந்து நைட்ரஜனைப் பெற்று தாவரங்களின் வளர்ச்சிக்காக அந்த முக்கியக் கூறை அளிக்கின்றன. ஒரு கைப்பிடியளவு வளமான மண்ணில் 600 கோடி நுண்ணுயிரிகள் இருப்பது நம்மை வியக்க வைக்கிறது.

படைப்பின் நான்காவது காலப்பகுதியில் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் உருவாக்கப்பட்டதைப் பற்றி ஆதியாகமம் 1:14-19 விவரிக்கிறது. இதற்கு முன் விளக்கப்பட்டுள்ள வசனங்களோடு ஒத்துப்பார்க்கையில் இந்த வசனங்கள் முரண்படுவதாகத் தோன்றலாம். ஆனால், ஆதியாகம புத்தகத்தை எழுதிய மோசே, படைப்பின்போது பூமியிலிருந்து ஒருவர் பார்த்திருந்தால் அவருடைய கண்களுக்கு எப்படித் தெரிந்திருக்குமோ, அந்த விதத்தில் இதை எழுதினார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சொல்லப்போனால், அந்தச் சமயத்தில்தான் சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை பூமியிலிருந்து பார்க்க முடிந்தது.

படைப்பின் ஐந்தாவது காலப்பகுதியில் கடல் உயிரினங்கள் தோன்றியதாகவும் ஆறாவது காலப்பகுதியில் நிலவாழ் உயிரினங்களும் மனிதனும் படைக்கப்பட்டதாகவும் ஆதியாகம பதிவு குறிப்பிடுகிறது.​—ஆதியாகமம் 1:20-31.

அனுபவித்து மகிழ்வதற்கே பூமி படைக்கப்பட்டது

ஆதியாகமத்தில் விவரிக்கப்பட்டுள்ள விதமாக பூமியில் உயிரினங்கள் படைக்கப்பட்டிருப்பது, அதை அனுபவித்து மகிழ்வதற்குத்தான் என்பது தெரிகிறது, அல்லவா? பிரகாசமான காலை வேளையில் எழுந்து, சுத்தமான காற்றைச் சுவாசித்து, உயிரோடு இருப்பதைக் குறித்து என்றாவது மகிழ்ச்சி அடைந்திருக்கிறீர்களா? ஒருவேளை, தோட்டத்தை வலம்வந்து மலர்களின் அழகை ரசித்து அவற்றின் நறுமணத்தை முகர்ந்திருப்பீர்கள். அல்லது பழத்தோட்டத்திற்குள்ளே உலாவி சுவைமிக்க பழங்கள் சிலவற்றைப் பறித்திருப்பீர்கள். பின்வருவன எல்லாம் இல்லாவிட்டால் இத்தகைய சந்தோஷத்தை நீங்கள் பெறுவது முடியாத விஷயம்: (1பூமியிலுள்ள ஏராளமான தண்ணீர், (2சூரியனிலிருந்து கிடைக்கும் சரியானளவு வெப்பமும் வெளிச்சமும், (3வாயுக்கள் சரியான அளவில் கலந்துள்ள வளிமண்டலம், (4வளமிக்க நிலம்.

செவ்வாய், வெள்ளி கிரகங்களிலும், நம் சூரிய குடும்பத்திலுள்ள பிற கிரகங்களிலும் இல்லாத இந்த அம்சங்கள் குருட்டாம்போக்கில் வந்தவை அல்ல. பூமியில் வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவிப்பதற்காகவே இவை யாவும் துல்லியமாக அமைக்கப்பட்டுள்ளன. நாம் வாழும் அழகிய இப்பூவுலகம் என்றென்றும் நிலைத்திருப்பதற்காகவே படைப்பாளர் வடிவமைத்திருக்கிறார் எனவும் பைபிள் சொல்கிறது. இதைப் பற்றி அடுத்த கட்டுரையில் வாசிப்போம்.

[அடிக்குறிப்பு]

^ நம் சூரிய குடும்பத்திலுள்ள புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகிய நான்கு உட்புறக் கோள்களின் மேற்பரப்பு கெட்டியான பாறைப் பொருள்களாலானதால் இவை புவியொத்த கோள்கள் என அழைக்கப்படுகின்றன. வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய இராட்சத வெளிப்புறக் கோள்கள் முக்கியமாக வாயுவினால் ஆனவை.

[பக்கம் 6-ன் பெட்டி]

“பூமி எப்படி தோன்றியது, அதில் உயிரினங்கள் எப்படி வந்தன போன்ற நவீன கருத்துகளை பாமர மக்களுக்கு, அதாவது ஆதியாகம புத்தகம் கொடுக்கப்பட்ட சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும் என வைத்துக் கொள்வோம். இதையே புவியியல் வல்லுநர் என்ற முறையில் சுலபமாகப் புரியும்படி என்னை விளக்கச் சொன்னால், ஆதியாகமம் முதல் அதிகாரம் எப்படி விளக்குகிறதோ அதேபோல்தான் நானும் விளக்கியிருப்பேன். என்னால் அதைவிட நன்றாக விளக்கியிருக்கவே முடியாது.”​—⁠புவியியல் வல்லுநர் வாலஸ் பிரேட்.

[பக்கம் 7-ன் பெட்டி/படம்]

வானியல் ஆராய்ச்சிக்கும் ஏற்ற இடம்

சூரியன் நம் நட்சத்திர மண்டலத்தில் வேறெங்காவது அமைந்திருந்தால், விண்மீன்களை நாம் தெளிவாகப் பார்த்திருக்க முடியாது. த ப்ரிவ்லெஜ்ட் ப்ளானட் என்ற புத்தகம் விளக்குகிறபடி, “எங்கும் ஒளி மயமாகவும் தூசி நிறைந்தும் காணப்படுகிற பகுதிகளுக்கு அப்பால் . . . நம் சூரிய குடும்பம் அமைந்துள்ளது; இதனால் அருகிலுள்ள விண்மீன்களை மட்டுமல்ல, பிரபஞ்சத்தின் தொலைதூர பகுதிகளையும் நம்மால் காண முடிகிறது.”

அதுமட்டுமல்ல, சூரிய கிரகணத்தின்போது சூரியனை மறைக்குமளவுக்கு சந்திரனின் அளவும் பூமியிலிருந்து அதன் தூரமும் துல்லியமாக இருக்கின்றன. இந்த அரிய, மலைக்க வைக்கும் சம்பவங்கள் சூரியனைப் பற்றி ஆராய வான் வல்லுநர்களுக்கு உதவுகின்றன. இத்தகைய ஆராய்ச்சிகள், விண்மீன்கள் மினுமினுப்பது பற்றிய அநேக இரகசியத்தை வெளிப்படுத்த அவர்களுக்கு உதவியிருக்கின்றன.

[பக்கம் 5-ன் படம்]

புவி அச்சின் சாய்வை சீராக வைக்குமளவுக்கு சந்திரன் பெரிதாக இருக்கிறது

[பக்கம் 7-ன் படங்கள்]

எவை பூமியில் உயிர்வாழ்வதை சாத்தியமாக்குகின்றன? அதிலுள்ள ஏராளமான தண்ணீர், சரியானளவு வெளிச்சமும் வெப்பமும், வளிமண்டலம், வளமிக்க நிலம்

[படங்களுக்கான நன்றி]

கோளம்: Based on NASA Photo; கோதுமை: Pictorial Archive (Near Eastern History) Est.