Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கண்ணால் காண்பதே மெய்

கண்ணால் காண்பதே மெய்

கண்ணால் காண்பதே மெய்

“‘எதையுமே பார்த்தால்தான் நம்புவோம்’ என்ற கொள்கை உடையோர் கடவுள், எதிர்காலம் போன்ற விஷயங்களில் உண்மைகளைத் தெரிந்துகொள்ளவே முடியாது என்று நினைக்கிறார்கள். . . . அப்படியே தெரிந்துகொண்டாலும் இப்போதைக்கு அதற்கு வாய்ப்பில்லை என்று நினைக்கிறார்கள்.”​—⁠தத்துவஞானியான பர்ட்ரன்ட் ரஸல், 1953.

இப்படிப்பட்ட கொள்கை உடையவர்களைப் பற்றி விலங்கியல் வல்லுநரான தாமஸ் ஹக்ஸிலி விவரித்தார். 1825-ஆம் ஆண்டில் பிறந்த இவர் சார்லஸ் டார்வின் வாழ்ந்த அதே காலப்பகுதியில் வாழ்ந்தார். பரிணாமக் கொள்கையின் தீவிர ஆதரவாளராகவும் இருந்தார். “. . . மனிதர்மீது அன்பும் அக்கறையும் உள்ள” ஒரு கடவுள் இருக்கிறார் என்பதற்குத் தனக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என அவர் 1863-ல் எழுதினார்.

இன்று, இப்படிப்பட்ட பிரபலமான ஆட்களின் கருத்துகளை ஒத்துக்கொள்ளும் அநேகர், ‘எதையும் நாங்கள் பார்த்தால்தான் நம்புவோம்’ என்று சொல்கிறார்கள். ஒரு நபர் அல்லது ஒரு பொருள் இருப்பதை எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் நம்புகிறவர் ‘சுத்த ஏமாளி’ என இவர்கள் சொல்லலாம்.

கடவுள் இருக்கிறார் என்பதை நாம் கண்மூடித்தனமாக நம்ப வேண்டுமென்று பைபிள் சொல்கிறதா? இல்லவே இல்லை. ஆதாரம் இல்லாத விஷயங்கள்மீது நம்பிக்கை வைப்பது முட்டாள்தனம் என்று பைபிள் தெரிவிக்கிறது. “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்” என்று அது குறிப்பிடுகிறது.​—நீதிமொழிகள் 14:15.

அப்படியென்றால், கடவுள்மீது நம்பிக்கை வைப்பதைப்பற்றி என்ன சொல்லலாம்? முதலில், கடவுள் உண்மையிலேயே இருக்கிறார் என்பதற்கான ஆதாரங்களை நாம் சிந்திப்போம். அப்போதுதான் அவருக்கு நம்மீது அன்பும் அக்கறையும் இருக்கிறது என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடியும்.

கடவுளுடைய குணங்களுக்கு மெளன சாட்சி

அத்தேனே பட்டணத்தில் வாழ்ந்த அறிஞர்களிடம் பேசுகையில், ‘உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கினவர்’ கடவுளே என்று பவுல் தெரிவித்தார்; இவர் ஒரு பைபிள் எழுத்தாளர். சந்தேகவாதிகளாக இருந்த அவர்களிடம், மனிதர்மீது கடவுளுக்கு அக்கறை இருக்கிறது, உண்மையில் “அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்ல” என்றெல்லாம் பவுல் சொன்னார்.​—அப்போஸ்தலர் 17:24-27.

கடவுள் இருக்கிறார் என்றும் மனிதர்மீது அவருக்கு அக்கறை இருக்கிறது என்றும் பவுல் உறுதியாக நம்பக் காரணம் என்ன? ரோம் நகரில் வசித்த கிறிஸ்தவர்களுக்கு எழுதுகையில் இதற்கான ஒரு காரணத்தை பவுல் தெரியப்படுத்தினார். “கண்ணுக்குப் புலப்படா அவருடைய பண்புகள் . . . உலகப் படைப்பு முதல் அவருடைய செயல்களில் மனக்கண்களுக்கு தெளிவாய்த் தெரிகின்றன” என்று அவர் சொன்னார்.​—⁠ரோமர் [உரோமையர்] 1:20, பொது மொழிபெயர்ப்பு.

கடவுளுடைய படைப்புகளில் பளிச்சிடுகிற அவருடைய மூன்று குணங்களை உதாரணங்களோடு பின்வரும் கட்டுரைகள் விளக்கும். அவற்றைச் சிந்திக்கும்போது, ‘கடவுளுடைய இந்தக் குணங்களைப் பற்றி கற்றுக்கொண்டதால் நான் எப்படிப் பயனடைகிறேன்?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். (w08 5/1)

[பக்கம் 3-ன் சிறு குறிப்பு]

கடவுள் இருக்கிறார் என்பதை நாம் கண்மூடித்தனமாக நம்ப வேண்டுமென்று பைபிள் சொல்வதில்லை