Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீதி தவறாத ஒரு நியாயாதிபதி

நீதி தவறாத ஒரு நியாயாதிபதி

கடவுளிடம் நெருங்கி வாருங்கள்

நீதி தவறாத ஒரு நியாயாதிபதி

ஆதியாகமம் 18:22-32

நியாயம். நேர்மை. நடுநிலைமை. மணிமணியான இந்தப் பண்புகள் உங்கள் மனதைச் சுண்டி இழுக்கின்றன, அல்லவா? மற்றவர்கள் நம்மிடம் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு நம் இரத்தத்திலேயே ஊறிப்போயிருக்கிறது. ஆனால், வருத்தகரமாக இன்றைய உலகில் நியாயம் என்பது எட்டாக் கனியாகவே ஆகிவருகிறது. என்றாலும், நம் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு நியாயாதிபதி இருக்கிறார்; அவர் நம் கடவுளாகிய யெகோவாவே. அவர் அன்றும் இன்றும் என்றும் நீதி தவறாதவர். ஏன் இப்படிச் சொல்லலாம்? ஆதியாகமம் 18:22-32-லுள்ள பதிவிலிருந்து சொல்லலாம்; அதில், யெகோவாவுக்கும் ஆபிரகாமுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் காணப்படுகிறது. a

ஒருமுறை, சோதோம் கொமோரா பட்டணங்களைத் தாம் பார்வையிடப்போவதாக ஆபிரகாமிடம் யெகோவா சொன்னார்; ஆனால், அங்குள்ள நீதிமான்களுக்கு என்ன ஆகுமோ, அதுவும் தன் சகோதரன் மகன் லோத்துவுக்கு என்ன ஆகுமோ என்று ஆபிரகாம் கவலைப்பட்டார். அதனால் அவர் யெகோவாவிடம், “துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ? பட்டணத்துக்குள்ளே ஒரு வேளை ஐம்பது நீதிமான்கள் இருப்பார்கள், அதற்குள் இருக்கும் அந்த ஐம்பது நீதிமான்கள் நிமித்தம் இரட்சியாமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ?” என்று கெஞ்சினார். (வசனங்கள் 23, 24) அந்தப் பட்டணங்களில் வெறும் 50 நீதிமான்கள் இருந்தால்கூட, தாம் அவற்றை அழிக்கப்போவதில்லை என யெகோவா சொன்னார். பின்பு, ஆபிரகாம் 50 என்ற அந்த எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைத்து, பத்து என்ற எண்ணிக்கை வரும்வரை கேட்டு ஐந்து முறை அவ்வாறு கெஞ்சினார். அத்தனை பேர் இருந்தால் தாம் அழிக்கப்போவதில்லை என்றே ஒவ்வொரு முறையும் யெகோவா சொன்னார்.

கடவுளோடு ஆபிரகாம் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தாரா? இல்லவே இல்லை! அது அகம்பாவமிக்கச் செயலாக இருந்திருக்கும். ஆனால், ஆபிரகாம் பேசிய தொனியில் பயபக்தியும் பணிவுமே பளிச்சிட்டன. “தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன்” என்று அவர் தன்னைக் குறிப்பிட்டார். (வசனங்கள் 27, 30-32) யெகோவா நீதி தவறாதவர் என்பதில் ஆபிரகாமுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்ததையே அவருடைய வார்த்தைகள் காண்பித்தன. துன்மார்க்கரோடு நீதிமானையும் சேர்த்து அழிப்பதைக் கடவுளால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்று ஆபிரகாம் சொன்னார்—இதை ஒரு முறை மட்டுமல்ல, இரண்டு முறை சொன்னார். “சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ” என்று அவர் தீர்க்கமாகச் சொன்னார்.—வசனம் 25.

ஆபிரகாம் சொன்ன எல்லாமே சரியாக இருந்ததா? சரியாகவும் இருந்தது, தவறாகவும் இருந்தது. சோதோம் கொமோராவில் குறைந்தது பத்து நீதிமான்களாவது இருப்பார்கள் என்று அவர் நினைத்தது சரியாக இருக்கவில்லை. ஆனால், கடவுள் ‘துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிக்க’ மாட்டார் என்று அவர் சொன்னது நூற்றுக்கு நூறு சரியாக இருந்தது. பொல்லாதவர்கள் நிறைந்த அந்தப் பட்டணங்களைக் கடவுள் பிற்பாடு அழித்தபோது, நீதிமானாகிய லோத்தும் அவரது இரண்டு மகள்களும் தேவதூதர்களுடைய உதவியுடன் உயிர்தப்பினார்கள்.—2 பேதுரு 2:7-9.

இந்தப் பதிவிலிருந்து யெகோவாவைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? அந்தப் பட்டணங்களைத் தாம் பார்வையிடப்போவதாக ஆபிரகாமிடம் யெகோவா தெரிவித்தபோது, உண்மையில் ஆபிரகாமின் வாயினாலேயே அவரது கருத்தைச் சொல்ல வாய்ப்பளித்தார். தம் சிநேகிதனான ஆபிரகாம் மனந்திறந்து தன் கவலைகளையெல்லாம் கொட்டியபோது, பொறுமையுடன் கேட்டார். (ஏசாயா 41:8) யெகோவா தாழ்மையுள்ள கடவுள், தமக்கு ஊழியம் செய்கிற மனிதர்களை மதிக்கிறவர், கௌரவிக்கிறவர் என்பதையெல்லாம் இந்தப் பதிவு எவ்வளவு அழகாக எடுத்துக்காட்டுகிறது! ஆகவே, நீதி தவறாத நியாயாதிபதியான யெகோவாமீது நாம் தாராளமாகவே நம்பிக்கை வைக்கலாம்; ஆம், பூரண நம்பிக்கை வைக்கலாம். (w09 1/1)

[அடிக்குறிப்பு]

a அந்தச் சந்தர்ப்பத்தில், யெகோவா ஒரு தேவதூதரை அனுப்பி மோசேயிடம் பேசினார். மற்றொரு உதாரணத்தை ஆதியாகமம் 16:7-11, 13-ல் பாருங்கள்.

[பக்கம் 14-ன் படம்]

சோதோம் கொமோராவைக் குறித்து யெகோவாவிடம் ஆபிரகாம் மன்றாடினார்