Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உண்மையா பொய்யா? இயேசுவைக் குறித்த சத்தியம்

உண்மையா பொய்யா? இயேசுவைக் குறித்த சத்தியம்

உண்மையா பொய்யா? இயேசுவைக் குறித்த சத்தியம்

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பின்வரும் குறிப்புகள் உண்மையா பொய்யா?

இயேசு டிசம்பர் 25-ல் பிறந்தார்.

இயேசு பிறந்த சமயத்தில் மூன்று ஞானிகள் அவரைப் பார்க்கச் சென்றார்கள்.

இயேசுவுக்கு உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை.

இயேசு, கடவுளின் அவதாரம்.

இயேசு ஒரு சிறந்த மனிதர் மட்டுமே அல்ல.

இந்தக் குறிப்புகள் எல்லாமே உண்மை என அநேகர் சொல்வார்கள். மற்றவர்களோ அவை உண்மையா பொய்யா எனத் தெரிந்துகொள்வது கடினம், அது முடியாத விஷயம் என்றும்கூட சொல்லலாம். இயேசுமீது நம்பிக்கை வைப்பதுதான் முக்கியம், இந்தக் கருத்துக்கள் எல்லாம் உண்மையா பொய்யா எனத் தெரிந்துகொள்வது முக்கியமல்ல என அவர்கள் நினைக்கலாம்.

ஆனால், இதையெல்லாம் தெரிந்துகொள்வது முக்கியமென பைபிள் சொல்கிறது. ‘நம் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய திருத்தமான அறிவை’ பெற வேண்டுமென அது நம்மை ஊக்குவிக்கிறது. (2 பேதுரு 1:8) சுவிசேஷப் புத்தகங்களை ஆராய்வதன் மூலம் அந்த அறிவை நாம் பெற முடியும். இயேசுவைப் பற்றிய சத்தியத்தை அப்புத்தகங்கள் தெரிவிக்கின்றன; அதன் மூலம் எது உண்மை எது பொய் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆகவே, மேற்குறிப்பிடப்பட்ட நம்பிக்கைகள் சம்பந்தமாகச் சுவிசேஷப் புத்தகங்கள் என்ன சொல்கின்றன என்பதை இப்போது நாம் பார்க்கலாம்.

நம்பிக்கை: இயேசு டிசம்பர் 25-ல் பிறந்தார்.

உண்மையா?: பொய்.

இயேசு பிறந்த மாதத்தையோ தேதியையோ பற்றி பைபிள் எதுவும் குறிப்பிடுவதில்லை. அப்படியானால், டிசம்பர் 25-ல் அவர் பிறந்தார் என ஏன் சொல்லப்படுகிறது? பிரிட்டானிக்கா சொற்களஞ்சியம் (ஆங்கிலம்) குறிப்பிடுகிறபடி, கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்ட சிலர் “குளிர்கால சங்கிராந்தியைக் குறிக்கிற, அதாவது பகல்வேளை நீண்டிருக்கும் நாட்கள் மீண்டும் துவங்குவதையும் சூரியன் வானில் உயர எழும்பிப் பிரகாசிக்கத் துவங்குவதையும் குறிக்கிற, . . . புறமத ரோமப் பண்டிகையும் இயேசுவின் பிறந்த நாளும் ஒரே தேதியில் இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.” கிறிஸ்மஸ் பண்டிகையின்போது செய்யப்படுகிற காரியங்கள், “குளிர்காலத்தின் மத்திபத்தில் கொண்டாடப்படுகிற வேளாண்மை மற்றும் சூரியன் சம்பந்தமான புறமத சடங்குகளிலிருந்து” வந்தன என்றும் அதே ஆய்வு நூல் குறிப்பிடுகிறது.

மக்கள் டிசம்பர் 25-ஆம் தேதியைத் தம்முடைய பிறந்த நாளாகக் கொண்டாடுவதை இயேசு விரும்புவாரா? இதைச் சற்று சிந்தியுங்கள்: இயேசுவின் பிறந்த நாள் யாருக்கும் தெரியாது. அந்த நாளைக் கொண்டாடும்படி பைபிளில் எங்கும் குறிப்பிடப்படவில்லை; அதோடு, ஆரம்பகால கிறிஸ்தவர்கள் அதைக் கொண்டாடியதற்கு எந்த அத்தாட்சியும் இல்லை. அதற்கு மாறாக, இயேசு இறந்த தேதியை பைபிள் தெள்ளத்தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது; அதோடு, அதை அனுசரிக்கும்படி இயேசு தம் சீடர்களுக்குக் கட்டளையும் கொடுத்தார். a (லூக்கா 22:19) ஆகவே, அவருடைய பிறப்புக்கு அல்ல, அவருடைய தியாக மரணத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கும்படி அவர் விரும்புகிறார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.—மத்தேயு 20:28.

நம்பிக்கை: இயேசு பிறந்த சமயத்தில் மூன்று ஞானிகள் (அல்லது, சில பாரம்பரியங்கள் சொல்கிறபடி ராஜாக்கள்) அவரைப் பார்க்கச் சென்றார்கள்.

உண்மையா?: பொய்.

குழந்தை இயேசு தீவனத்தொட்டியில் கிடத்தப்பட்டிருப்பதையும் மூன்று ஞானிகள் பரிசுகளோடு சுற்றி நிற்பதையும் சித்தரிக்கிற ஓவியங்களையோ காட்சிகளையோ நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், அவற்றில் சித்தரிக்கப்பட்டிருப்பவை உண்மையல்ல, பொய்.

கிழக்கிலிருந்து வந்தவர்கள் குழந்தை இயேசுவுக்கு மரியாதை செலுத்தினார்கள் என்பது வாஸ்தவம்தான். ஆனால், அவர்கள் உண்மையில் சோதிடர்களாக இருந்தார்கள். (மத்தேயு 2:1) அவர்கள் இயேசுவை ஒரு தீவனத்தொட்டியிலா பார்த்தார்கள்? இல்லை, அவரை வீட்டில் பார்த்தார்கள். அப்படியானால், இயேசு பிறந்து சில மாதங்களுக்குப் பிறகே அவர்கள் சென்றிருந்தார்கள் எனத் தெரிகிறது.—மத்தேயு 2:9-11.

அவர்கள் எத்தனை பேர் சென்றிருந்தார்கள், இரண்டு பேரா, மூன்று பேரா, முப்பது பேரா? அதையும் பைபிள் சொல்வதில்லை. அவருக்கு மூன்று அன்பளிப்புகள் கொடுக்கப்பட்டதாலேயே மூன்று பேர் வந்ததாகக் காலங்காலமாகச் சொல்லப்பட்டு வந்திருக்கலாம். b (மத்தேயு 2:11) அந்த ஞானிகள் ஒவ்வொருவரும் மனிதகுலத்தின் ஒவ்வொரு இனத்தைப் பிரதிநிதித்துவம் செய்வதாகச் சிலர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், அந்தக் கருத்து பைபிளில் காணப்படுவதில்லை. மாறாக, ஒரு சுவிசேஷக் குறிப்புரை சொல்கிறபடி, இந்தப் பொய், “எட்டாம் நூற்றாண்டு சரித்திராசிரியரின் தத்ரூபமான கற்பனையே ஆகும்.”

நம்பிக்கை: இயேசுவுக்கு உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை.

உண்மையா?: பொய்.

இயேசுவுக்கு உடன் பிறந்தவர்கள் இருந்தார்களென சுவிசேஷங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. லூக்காவின் சுவிசேஷம் இயேசுவை மரியாளின் ‘முதல் மகன்’ என குறிப்பிடுகிறது; இது, மரியாளுக்கு வேறு பிள்ளைகள் இருந்ததைச் சுட்டிக்காட்டுகிறது. c (லூக்கா 2:7) நாசரேத் நகரிலிருந்த சிலர் இயேசுவை விசேஷமானவராகப் பார்க்காமல் அவருடைய உடன் பிறந்தவர்களைப் போலவே பார்த்ததாக மாற்கு சுவிசேஷம் குறிப்பிடுகிறது. அவர்கள், “இவன் . . . யாக்கோபு, யோசே, யூதாஸ், சீமோன் என்பவர்களுடைய சகோதரன் அல்லவா? இவனுடைய சகோதரிகளும் நம்முடன் இருக்கிறார்கள் அல்லவா?” என்று கேட்டார்கள்.—மாற்கு 6:3; மத்தேயு 12:46; யோவான் 7:5.

சுவிசேஷங்கள் என்ன சொன்னாலும், இயேசுவுக்கு உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை என அநேக இறையியலாளர்கள் நம்பி வருகிறார்கள். அவருடைய சகோதர சகோதரிகளாகக் குறிப்பிடப்படுகிறவர்கள் உண்மையில் அவருடைய பெற்றோரின் உடன் பிறந்தவர்களுடைய பிள்ளைகளே என சிலர் கருத்துத் தெரிவிக்கிறார்கள். d இவர்கள் மரியாளின் கணவருக்கு ஏற்கெனவே இருந்த பிள்ளைகளென இன்னும் சிலர் ஊகிக்கிறார்கள். ஆனால் இதைச் சிந்தியுங்கள்: மரியாளுக்கு இயேசு தவிர வேறு பிள்ளைகள் யாரும் இல்லையென்றால், அந்த நாசரேத் நகரத்தார் அப்படிக் கேட்டிருப்பார்களா? மாறாக, அவர்களில் சிலர் மரியாள் ஒவ்வொரு முறை கர்ப்பிணியாக இருந்ததையும் கண்கூடாகப் பார்த்திருக்கலாம். மரியாளுக்குப் பிறந்த பல பிள்ளைகளில் ஒருவர்தான் இயேசு என்பதை அவர்கள் நேரில் கண்டிருந்தார்கள்.

நம்பிக்கை: இயேசு, கடவுளின் அவதாரம்.

உண்மையா?: பொய்.

கடவுள் மனிதராகப் பூமிக்கு வந்து இயேசுவாக வாழ்ந்தார் என்ற கருத்து, திரித்துவக் கோட்பாட்டிற்கு அடிப்படையாகப் பல காலம் இருந்து வந்திருக்கிறது; ஆனால் இந்தக் கருத்து, இயேசு பூமியில் வாழ்ந்த காலத்தில் இருக்கவில்லை. பிரிட்டானிக்கா சொற்களஞ்சியம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “புதிய ஏற்பாட்டில் திரித்துவம் என்ற வார்த்தையோ அந்தக் கோட்பாட்டிற்கு ஆதாரமோ காணப்படுவதில்லை . . . அநேக சர்ச்சைகளுக்கு இடையே பல நூற்றாண்டு காலமாக அந்தக் கோட்பாடு மெல்ல மெல்ல உருவானது.”

மனித உருவில் வந்த கடவுளே இயேசு என்ற போதனையின் மூலம் மதம் உண்மையில் அவரை இழிவுபடுத்துகிறது. e எப்படி? ஓர் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். தொழிலாளிகள் தங்கள் அதிகாரியிடம் ஏதோவொன்றுக்காக வேண்டுகோள் விடுக்கும்போது அதை அளிக்கும் அதிகாரம் தனக்கில்லையென அவர் சொல்கிறார். அவர் சொல்வது உண்மையென்றால், தன்னுடைய வரையறைகளை அவர் அறிந்து ஞானமாய் நடந்துகொள்கிறார் என்று அர்த்தம். அவர் சொல்வது பொய்யென்றால், அவர் ஏமாற்றுகிறார் என்று அர்த்தம், அதாவது அந்த வேண்டுகோளை வழங்க தனக்கு உரிமை இருந்தும் அதை நிராகரிக்கிறார் என்று அர்த்தம்.

இயேசுவின் சீடர்களில் இருவர் அவரிடம் வந்து தங்களுக்கு உயர்ந்த அந்தஸ்தைக் கொடுக்கும்படி கேட்டபோது அவர் எப்படிப் பதிலளித்தார்? “என்னுடைய வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் உங்களை உட்கார வைக்க எனக்கு அதிகாரம் இல்லை. என் தகப்பன் யாருக்காக அவ்விடங்களைத் தயாராக்கியிருக்கிறாரோ அவர்களுக்கே அவை கிடைக்கும்” என்று சொன்னார். (மத்தேயு 20:23) இயேசு உண்மையிலேயே கடவுளாக இருந்திருந்தால், அவர் பொய் சொன்னதாக அல்லவா ஆகியிருக்கும்? மாறாக, அதிகாரம் படைத்தவருக்கு அடிபணிவதன் மூலம் அவர் மனத்தாழ்மை காட்டுவதில் நல்ல முன்மாதிரி வைத்தார்; தாம் கடவுளுக்குச் சமமானவர் அல்லவென்றும் காட்டினார்.

நம்பிக்கை: இயேசு ஒரு சிறந்த மனிதர் மட்டுமே அல்ல.

உண்மையா?: உண்மை.

இயேசு தாம் சிறந்த மனிதர் மட்டுமே அல்ல என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டார். ‘நான் கடவுளுடைய மகன்’ என்று சொன்னார். (யோவான் 10:36) யார் வேண்டுமானாலும் தன்னைக் கடவுளுடைய மகன் என சொல்லிக்கொள்ளலாம் என்பது உண்மைதான். ஆனால், இயேசு சொன்னது பொய்யாக இருந்திருந்தால், அது அவரை எப்படிப்பட்டவராகப் படம்பிடித்துக் காட்டியிருக்கும்? ஒரு சிறந்த மனிதராக அல்ல, ஏமாற்றுப் பேர்வழியாகவே காட்டியிருக்கும்!

மிக நம்பகமான அத்தாட்சியைக் கடவுளே கொடுத்தார். அவர் இயேசுவைக் குறித்து, ‘இவர் என் மகன்’ என்று இருமுறை சொன்னார். (மத்தேயு 3:17; 17:5) இதைச் சற்று யோசித்துப் பாருங்கள்: கடவுளுடைய குரல் ஒரு சில சந்தர்ப்பங்களிலேயே பூமியில் கேட்டதாக பைபிள் தெரிவிக்கிறது; அதிலும் இரண்டு சந்தர்ப்பங்களில் அவர் இயேசுவைத் தம்முடைய மகன் என்று உறுதிப்படுத்தினார்! இது, இயேசு தம்மைக் குறித்துச் சொன்னது உண்மைதான் என்பதற்கு மிகச் சிறந்த அத்தாட்சி.

இயேசுவைப் பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத உண்மைகளை இந்தக் கட்டுரை உங்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறதா? அப்படியென்றால், கடவுளுடைய தூண்டுதலால் எழுதப்பட்ட சுவிசேஷங்களை நீங்கள் ஏன் இன்னும் அதிகமாய் ஆராய்ந்து பார்க்கக்கூடாது? அப்படி ஆராய்வது, உங்களுக்கு மகிழ்ச்சியையும் பலனையும் அளிக்கும். பார்க்கப்போனால், தம்மையும் தம்முடைய தகப்பனையும் பற்றிய உண்மைகளைக் கற்றுக்கொள்வது, ‘முடிவில்லா வாழ்வைத்’ தருமென இயேசுவே சொன்னார்.—யோவான் 17:3. (w10-E  04/01)

[அடிக்குறிப்புகள்]

a யூத நாள்காட்டியின்படி, இயேசு பஸ்கா அன்று, அதாவது நிசான் 14 அன்று, இறந்தார்.—மத்தேயு 26:2.

b வேறு நாட்டிலிருந்து வந்த அவர்கள், “தங்களுடைய பொக்கிஷங்களைத் திறந்து,” தங்கம், சாம்பிராணி, வெள்ளைப்போளம் ஆகியவற்றை இயேசுவுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்கள் என்று மத்தேயு எழுதுகிறார். சீக்கிரத்திலேயே இயேசுவின் குடும்பத்தார் அகதிகளாக ஓட வேண்டிய கட்டாயத்தை எதிர்ப்பட்டதால், எளிமையில் வாழ்ந்த அவர்களுக்கு அந்த விலையுர்ந்த அன்பளிப்புகள் சரியான நேரத்தில் வந்து சேர்ந்தவையாய் இருக்கலாம் என்பது ஆர்வத்திற்குரிய விஷயம்.—மத்தேயு 2:11-15.

c இயேசுவை மரியாள் அற்புதமாய்க் கருத்தரித்தபோதிலும், மற்ற பிள்ளைகளைத் தன்னுடைய கணவர் யோசேப்பின் மூலம் இயல்பாய்க் கருத்தரித்தார்.—மத்தேயு 1:25.

d சுமார் கி.பி. 383-ல் ஜெரோம் ஆணித்தரமாய் சொன்ன இந்தக் கருத்து, மரியாள் தன் வாழ்நாளெல்லாம் கன்னியாகவே இருந்தார் என்று நம்புகிறவர்கள் மத்தியில் பிரபலமானது. ஜெரோம் பிற்பாடு தன் கருத்தையே சந்தேகித்தபோதிலும், அது அநேகரது மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது, கத்தோலிக்க சர்ச்சின் கொள்கையிலும் ஒன்றரக் கலந்துவிட்டது.

e திரித்துவக் கோட்பாட்டைப் பற்றிய விவரமான கலந்தாலோசிப்புக்கு, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா? என்ற சிற்றேட்டைப் பாருங்கள்.

[பக்கம் 14-ன் பெட்டி/படம்]

உங்களைத் திகைக்க வைக்கும் வேறு சில உண்மைகள்

இயேசு எப்படிப்பட்ட மனிதராக இருந்தார்? அவர் பொது மக்களைப் புரிந்துகொள்ள முடியாதளவுக்கு ஒரு துறவி போல், எந்த உணர்ச்சியும் இல்லாமல், யாருடனும் பழகாமல் ஒதுங்கியே இருந்தாரா? அவர் அப்படித்தான் இருந்ததாகச் சிலர் சொல்கிறார்கள். அதனாலேயே இயேசுவைப் பற்றிய பின்வரும் தகவல்களை அறிந்துகொள்ளும்போது திகைத்துப் போகிறார்கள்:

• மகிழ்ச்சி தரும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.—யோவான் 2:1-11.

• மற்றவர்களைப் பாராட்டினார்.—மாற்கு 14:6-9.

• பிள்ளைகளிடம் ஆசையாய்ப் பழகினார்.—மாற்கு 10:13, 14.

• மற்றவர்களுக்கு முன்பாகக் கண்ணீர் வடித்தார்.—யோவான் 11:35.

• இரக்கம் காண்பித்தார்.—மாற்கு 1:40, 41.