Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எஜமானரிடமிருந்து மன்னிக்க கற்றுக்கொண்டார்

எஜமானரிடமிருந்து மன்னிக்க கற்றுக்கொண்டார்

இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்

எஜமானரிடமிருந்து மன்னிக்க கற்றுக்கொண்டார்

இயேசுவின் பார்வை தன்மேல் விழுந்த அந்தத் தருணத்தை பேதுருவால் மறக்கவே முடியாது. அந்தக் கணப்பொழுதில் பேதுரு புழுவாய்த் துடித்திருப்பார். இயேசுவின் பார்வையில் வருத்தத்தையோ கோபத்தையோ பேதுரு கண்டாரா? அந்தளவுக்கு நம்மால் ஊடுருவி பார்க்க முடியாது. “இயேசு திரும்பி, பேதுருவைப் பார்த்தார்” என்று மட்டுமே பைபிள் சொல்கிறது. (லூக்கா 22:61) ஆனால், அந்த ஒரே பார்வையில் பேதுரு தன் தவறின் வீரியத்தை உணர்ந்துகொண்டார். இயேசு என்ன சொல்லியிருந்தாரோ அதே காரியத்தை தான் இப்போது செய்திருப்பது பேதுருவுக்கு உரைத்தது. அதுவும் தான் எதைச் செய்ய மாட்டேன் என்று அடித்து சொன்னாரோ அதையே பேதுரு செய்துவிட்டார். ஆம், தன் உயிருக்கு உயிரான எஜமானரை யார் என்றே தெரியாதென சொல்லிவிட்டார். வாழ்க்கையில் வேறெந்த சந்தர்ப்பத்திலும் இந்தளவு சோகத்தில் அவர் ஆழ்ந்திருக்க மாட்டார். தன் வாழ்க்கையில் இந்த நாள், இந்த நொடி வராமலேயே இருந்திருக்கலாம் என பேதுரு நினைத்திருக்கலாம்.

என்றாலும், பேதுருவின் எதிர்காலம் இருண்டு விடவில்லை. பேதுருவுக்கு அபார விசுவாசம் இருந்ததால் தன் தவறைத் திருத்திக்கொள்ளவும் இயேசுவிடமிருந்து தலைசிறந்த ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளவும் வாய்ப்பிருந்தது. ஆம், மன்னிப்பைப் பற்றிய பாடத்தைக் கற்றுக்கொள்ள வாய்ப்பிருந்தது. நாம் ஒவ்வொருவரும் அந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்வது அவசியம். அதற்கு, பேதுரு பயணித்த கரடுமுரடான பாதையைச் சற்று பின்னோக்கிப் பார்க்கலாம்.

இவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம்

சுமார் ஆறு மாதத்திற்கு முன் பேதுரு தன் சொந்த ஊரான கப்பர்நகூமில் இருந்தபோது இயேசுவிடம் வந்து, “எஜமானே, என்னுடைய சகோதரன் எனக்கு விரோதமாகப் பாவம் செய்துவந்தால் எத்தனை தடவை நான் அவனை மன்னிக்க வேண்டும்? ஏழு தடவை வரைக்குமா?” என்று கேட்டார். தான் தாராள மனம் படைத்தவர் என்று பேதுரு நினைத்திருக்கலாம். ஏனென்றால், ஒருவரை மூன்று முறை மன்னித்தாலே போதும் என்று அன்றைய மதத் தலைவர்கள் கற்பித்திருந்தார்கள்! ஆனால் இயேசு, “ஏழு தடவை அல்ல, எழுபத்தேழு தடவை வரை” மன்னிக்க வேண்டும் என்று சொன்னார்.—மத்தேயு 18:21, 22.

அப்படியானால், ஒருவர் செய்யும் தவறுகளை பேதுரு கணக்கு வைக்க வேண்டும் என்று இயேசு அர்த்தப்படுத்தினாரா? இல்லை, அதற்கு பதிலாக 7 முறை என்பதை 77 முறை என்று சொன்னதன் மூலம் மன்னிப்பதற்கு அளவே இல்லை என்பதை எடுத்துக்காட்டினார். அன்று மக்கள் பெரும்பாலோர் கல்நெஞ்சம் படைத்தவர்களாகவும் மன்னிக்க மனமில்லாதவர்களாகவும் இருந்ததால் மற்றவர்களுடைய தவறுகளைக் கணக்கு வைத்து மன்னித்தார்கள். இந்தக் குணம் பேதுருவையும் தொற்றியிருந்ததை இயேசு சுட்டிக்காட்டினார். ஆனால், கடவுளுடைய கண்ணோட்டத்தில் பார்த்தால் மன்னிப்பதற்கு அளவே இல்லை!

இயேசுவிடம் பேதுரு வாதாடவில்லை. ஆனால், இயேசு கற்பித்த பாடம் அவர் மனதை எட்டியதா? மற்றவர்கள் நம்மை மன்னிக்க வேண்டும் என்று ஏங்கும்போதுதான் மன்னிப்பின் அருமையே சிலசமயம் நமக்குப் புரிகிறது. இப்போது நாம் இயேசுவின் மரணத்திற்கு வழிநடத்திய சம்பவங்களை மீண்டும் பார்க்கலாம். அந்த இக்கட்டான தருணங்களில் பேதுருவை அவருடைய எஜமானர் அடிக்கடி மன்னிக்க வேண்டியிருந்தது.

மன்னிப்பு! மன்னிப்பு!! மன்னிப்பு!!!

மனித வரலாற்றில் மறக்க முடியாத நாள் அது. இயேசுவின் வாழ்வில் கடைசி இரவு அது. மனத்தாழ்மை உட்பட, அநேகமநேக விஷயங்களை அப்போஸ்தலர்களுக்கு அவர் கற்பிக்க வேண்டியிருந்தது. அப்போஸ்தலர்களின் பாதங்களைக் கழுவியதன் மூலம் மனத்தாழ்மைக்கு இயேசு இலக்கணமாய் விளங்கினார். ஆம், பொதுவாக வேலைக்காரர்களிலேயே தாழ்வானவர்கள் செய்யும் ஒரு வேலையை இயேசு செய்தார். முதலில், “எஜமானே, நீங்களா என் பாதங்களைக் கழுவப்போகிறீர்கள்?” என்று இயேசுவிடம் பேதுரு கேட்டார். பின்பு தன் பாதங்களை இயேசு கழுவக் கூடாது என்றார். அதற்கு பிற்பாடு, தன் பாதங்களை மட்டுமல்ல, கைகளையும் தலையையும்கூட இயேசு கழுவ வேண்டுமென கேட்டார்! இயேசு பொறுமை இழந்துவிடவில்லை. மாறாக, தாம் எதற்கு அப்படிச் செய்தார் என்பதையும் அது எவ்வளவு முக்கியம் என்பதையும் விளக்கினார்.—யோவான் 13:1-17.

இயேசு சொல்லி கொஞ்ச நேரம்கூட ஆகவில்லை, அதற்குள் தங்களில் யார் பெரியவன் என்று மறுபடியும் அப்போஸ்தலர்கள் மத்தியில் ஒரே சலசலப்பு! மனிதனுக்கே உரிய மோசமான குணத்தை, ஆம் கர்வத்தை, அவர்கள் காட்டியபோது நிச்சயம் பேதுரு அதற்கு விதிவிலக்காக இருந்திருக்க மாட்டார். இருந்தாலும், இயேசு அவர்களை அன்புடன் திருத்தினார், அவர்கள் செய்த நல்ல காரியத்திற்காக—கடைசிவரை தம்முடன் இருந்ததற்காக—அவர்களைப் பாராட்டவும் செய்தார். ஆனால், அவர்கள் எல்லாரும் தம்மை விட்டுவிட்டு ஓடிப்போவார்கள் என்று முன்னுரைத்தார். தனக்கு சாவே வந்தாலும்சரி, கடைசிவரை இயேசுவுடன்தான் இருப்பேன் என்று பேதுரு சொன்னார். ஆனால், சேவல் இரண்டு முறை கூவுவதற்குள் தம்மைத் தெரியாதென பேதுரு மூன்று முறை மறுதலிப்பார் என்று இயேசு தீர்க்கதரிசனம் உரைத்தார். பேதுரு இதை மறுத்தது மட்டுமல்லாமல் மற்ற அப்போஸ்தலர்கள் இயேசுவைவிட்டு ஓடிப்போனாலும் தான் ஓடிப்போக மாட்டேன் என பெருமையாகச் சொன்னார்!மத்தேயு 26:31-35; மாற்கு 14:27-31; லூக்கா 22:24-28.

இந்த முறை இயேசு பொறுமையின் எல்லைக்கே சென்றுவிட்டாரா? சொல்லப்போனால், இப்படிப்பட்ட இக்கட்டான தருணங்களில் எல்லாம் இயேசு தம்முடைய அபூரண அப்போஸ்தலர்களிடம் இருந்த நல்ல குணங்களையே பார்த்தார். பேதுரு தம்மை ஏமாற்றிவிடுவார் என்று தெரிந்திருந்தும், “நீ விசுவாசத்தை விட்டுவிடாதிருக்க வேண்டுமென உனக்காக மன்றாடியிருக்கிறேன்; நீ மனந்திரும்பியதும் உன் சகோதரர்களைப் பலப்படுத்து” என்றார். (லூக்கா 22:32) பேதுரு மனந்திரும்பி மீண்டும் தமக்கு உத்தமமாய் சேவை செய்வார் என்ற நம்பிக்கை இருப்பதை இயேசு தெரிவித்தார். கனிவு காட்டுவதிலும் தாராளமாய் மன்னிப்பதிலும் இயேசு மணிமகுடமாய் திகழ்ந்தார்!

பின்பு, கெத்செமனே தோட்டத்தில், பேதுருவை இயேசு மீண்டும் மீண்டும் திருத்த வேண்டியிருந்தது. தாம் ஜெபம் செய்கையில் விழிப்புடன் இருக்கும்படி பேதுரு, யாக்கோபு, யோவானிடம் இயேசு சொன்னார். மனோரீதியில் இயேசு தாங்கமுடியா வேதனையில் இருந்தார். அந்தச் சமயத்தில் அவருக்கு ஆதரவு தேவைப்பட்டது. ஆனால், பேதுருவும் மற்ற இருவரும் மறுபடியும் மறுபடியும் தூங்கிவிழுந்தார்கள். ஆனால், இயேசு அவர்கள்மீது அனுதாபம் கொண்டு அவர்களை மன்னித்தார். அதனால்தான், “உள்ளம் ஆர்வமாக இருக்கிறது, உடலோ பலவீனமாக இருக்கிறது” என்று சொன்னார்.—மாற்கு 14:32-38.

கொஞ்ச நேரத்திற்குள், வாள்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு, விளக்குகளை ஏந்திக்கொண்டு ஒரு கலகக் கும்பல் தோட்டத்திற்குள் வந்தது. அந்தச் சமயத்தில், ஜாக்கிரதையாகவும் விவேகமாகவும் நடந்துகொள்ள வேண்டியிருந்தது. ஆனால், பேதுரு சட்டென தன் வாளை உருவி தலைமைக் குருவின் அடிமையான மல்குஸின் தலைக்கு நேராக வீசினார், அவனுடைய ஒரு காதை வெட்டிவிட்டார். இயேசு சாந்தமாக பேதுருவைக் கண்டித்து, சேவகனைச் சுகப்படுத்தினார். பின்பு, வன்முறையைக் கைவிடும்படி தம் சீடர்களுக்குச் சொன்னார். இயேசு சொன்ன அந்த வார்த்தைகள்தான் இன்றுவரை அவருடைய சீடர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது. (மத்தேயு 26:47-55; லூக்கா 22:47-51; யோவான் 18:10, 11) பேதுரு ஏற்கெனவே பல முறை தவறு செய்திருந்தார், எஜமானரிடமிருந்து மன்னிப்பும் பெற்றிருந்தார். “நாம் எல்லாரும் பலமுறை தவறு செய்கிறோம்” என்பதை பேதுருவின் உதாரணம் உணர்த்துகிறது. (யாக்கோபு 3:2) நம்மில் யாருக்குத்தான் அன்றாடம் மன்னிப்பு தேவையில்லை? பேதுருவின் தவறுகள் இத்துடன் முடிந்துவிடவில்லை; இன்னும் பயங்கரமான ஒரு தவறைச் செய்தார்.

பேதுரு செய்த மகா தவறு!

தம்மைப் பிடிக்க வந்த கலகக் கும்பலிடம், ‘நீங்கள் என்னைத்தான் பிடிக்க வந்தீர்கள் என்றால், என்னுடைய சீடர்களைப் போக விடுங்கள்’ என்று இயேசு சொன்னார். இயேசுவை அந்தக் கும்பல் பிடித்துச் சென்றபோது பேதுரு ஒன்றும் செய்ய முடியாமல் நிர்க்கதியாய் இருந்தார். பின்பு, மற்ற அப்போஸ்தலர்களைப் போலவே பேதுருவும் இயேசுவை விட்டு ஓடிப்போனார்.

பேதுருவும் யோவானும் மட்டும் நடுவிலேயே நின்றுவிட்டார்கள், ஒருவேளை முன்னாள் தலைமைக் குரு அன்னா வீட்டுக்கு அருகில் நின்றிருக்கலாம். முதலில் இங்குதான் விசாரணைக்கு இயேசு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து அவர் அழைத்துச் செல்லப்பட்டபோது, பேதுருவும் யோவானும் “சற்றுத் தூரத்திலிருந்தபடியே” பின்தொடர்ந்தார்கள். (மத்தேயு 26:58; யோவான் 18:12, 13) அதற்காக, பேதுருவை கோழை என்று சொல்லிவிட முடியாது. பின்தொடர்ந்து செல்லக்கூட ஓரளவு தைரியம் தேவை. ஏனென்றால், அந்தக் கும்பலிடம் ஆயுதங்கள் இருந்தன; அதுமட்டுமல்ல, அவர்களில் ஒருவனை பேதுரு தாக்கியிருந்தார். இருந்தாலும், எஜமானர் கூடவே இருந்து அவருக்காக தன் உயிரையே கொடுக்க தயாராய் இருப்பதாக சொன்ன பேதுரு தன் வாக்கைக் காப்பாற்றவில்லை.—மாற்கு 14:31.

இன்று அநேகர் பேதுருவைப் போல் யார் கண்ணிலும் படாமல், “சற்றுத் தூரத்திலிருந்தபடியே” கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்புகிறார்கள். ஆனால், பேதுருவே பின்னர் எழுதியபடி, கிறிஸ்துவைச் சரியாகப் பின்பற்றுவதற்கு ஒரே வழி: என்ன வந்தாலும் சரி, நம்மால் முடிந்தளவுக்கு அவரை உறுதியாகப் பற்றியிருப்பதுதான், அதாவது எல்லா விஷயங்களிலும் அவரை வழிகாட்டியாக எடுத்துக்கொள்வதுதான்.—1 பேதுரு 2:21.

பதுங்கி பதுங்கி பின்தொடர்ந்த பேதுரு, எருசலேமில் கம்பீரமாய் வீற்றிருந்த ஒரு மாளிகையின் வாயிற்கதவை கடைசியாக வந்தடைந்தார். அது, அதிகாரமும் செல்வமும் படைத்த தலைமைக் குரு காய்பாவின் வீடு. பொதுவாக இதுபோன்ற வீடுகளின் நடுவில் ஒரு பெரிய முற்றமும், அதன் முன்பக்கத்தில் வாயிற்கதவும் இருக்கும். பேதுரு வாயிற்கதவருகே சென்றபோது உள்ளே செல்ல அவர் அனுமதிக்கப்படவில்லை. ஏற்கெனவே உள்ளே சென்றிருந்த யோவான், வாயிற்காவலரிடம் பேசி பேதுருவும் உள்ளே வர அனுமதி வாங்கித் தந்தார். பேதுரு, யோவானுடன் சேர்ந்திருந்ததாகவோ தன் எஜமானர் பக்கத்தில் இருப்பதற்காக வீட்டிற்குள் செல்ல முயற்சி செய்ததாகவோ தெரியவில்லை. பேதுரு முற்றத்திலேயே இருந்துவிட்டார். குளிரான அந்த இரவில் அங்கே தகதகவென்று எரிந்துகொண்டிருந்த நெருப்புக்கு முன்னால் சில அடிமைகளும் வேலைக்காரர்களும் குளிர் காய்ந்துகொண்டிருந்தார்கள். இயேசுவிடம் விசாரணை நடந்துகொண்டிருந்தபோது பொய் சாட்சிகள் உள்ளே போவதையும் வருவதையும் பேதுரு கவனித்துக்கொண்டிருந்தார்.மாற்கு 14:54-57; யோவான் 18:15, 16, 18.

பேதுருவை உள்ளே அனுமதித்த பணிப்பெண்ணால், அந்த நெருப்பு வெளிச்சத்தில் அவருடைய முகத்தை நன்றாகப் பார்க்க முடிந்தது. அவரை அவள் ஏற்கெனவே பார்த்திருந்தாள். “கலிலேயனான இயேசுவோடு நீயும்தானே இருந்தாய்!” என்று சொல்லி அவரை குற்றம்சாட்டினாள். இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத பேதுரு தனக்கு இயேசுவைத் தெரியவே தெரியாது, ஏன், அந்தப் பெண் என்ன சொல்கிறாள் என்றுகூட தனக்குப் புரியவில்லை என்று சொன்னார். அதன்பின் யார் கண்ணிலும் படாமல் இருப்பதற்காக பேதுரு வாயிற்கதவருகே சென்றார்; அப்போது இன்னொரு பெண்ணும் அவரைப் பார்த்து, “இந்த ஆள் நாசரேத்தூர் இயேசுவோடு இருந்தான்” என்று சொன்னாள். அதற்கு பேதுரு, “எனக்கு அந்த மனுஷனைத் தெரியவே தெரியாது!” என்று ஆணையிட்டுச் சொன்னார். (மத்தேயு 26:69-72) ஒருவேளை இரண்டாவது முறையாக பேதுரு மறுதலித்தபின் சேவல் கூவும் சத்தம் அவர் காதில் விழுந்திருக்கலாம்; ஆனால், பல விஷயங்கள் அவர் மனதில் ஓடிக்கொண்டிருந்ததால் இயேசு சில மணிநேரத்திற்கு முன் உரைத்த அந்தத் தீர்க்கதரிசனம் அவர் நினைவுக்கு வராமல் போயிருக்கலாம்.

கொஞ்சம் நேரம் கழிந்த பின், யார் கண்ணிலும் பட்டுவிடக்கூடாது என்ற பயத்தில் பேதுரு அல்லாடிக்கொண்டிருந்த சமயத்தில், முற்றத்தில் நின்றுகொண்டிருந்தவர்களில் சிலர் அவரிடம் வந்தார்கள். அவர்களில் ஒருவர் பேதுரு காயப்படுத்திய மல்குஸின் சொந்தக்காரர். “தோட்டத்தில் நான் உன்னை அவரோடு பார்த்தேனே” என்று அவர் பேதுருவிடம் சொன்னார். இல்லவே இல்லை என்று பேதுரு அடித்துச் சொன்னார். தான் சொல்வது பொய் என்றால் அந்தச் சாபம் தன்மேல் வரட்டும் என்றும்கூட ஆணையிட்டார். அவர் சொன்னதுதான் தாமதம், சேவல் இரண்டாம் முறை கூவியதை பேதுரு கேட்டார்.—யோவான் 18:26, 27; மாற்கு 14:71, 72.

இயேசு அப்போதுதான் பலகணிக்கு வந்து முற்றத்தைப் பார்த்தார். இத்தருணத்தில்தான், ஆரம்பத்தில் சொன்னபடி, இயேசுவின் பார்வை பேதுருமீது விழுந்தது. எஜமானருக்கு அவர் எவ்வளவு பெரிய துரோகம் செய்துவிட்டார் என்று அப்போதுதான் பேதுருவுக்கு உதித்தது. தான் செய்த பாவத்தினால் மனம் சுக்கு நூறாக உடைந்துபோய் பேதுரு முற்றத்தை விட்டு வெளியேறினார். முழு நிலவு மறைந்துகொண்டிருக்க பேதுரு நகரத்தின் வீதியில் உயிர் சுமந்த உடலாய் நடந்துசென்றார். நடந்ததெல்லாம் அவர் கண் முன் அப்படியே விரிந்தது. கண்கள் குளமாயின. துக்கம் தாளாமல் மனங்கசந்து அழுதார்.—மாற்கு 14:72; லூக்கா 22:61, 62.

இதுபோன்ற பெரிய தவறைச் செய்துவிட்ட பின் எந்தவொரு நபரும் தான் செய்த பாவத்திற்கு மன்னிப்பே இல்லை என்றுதான் நினைப்பார். பேதுருவும் அப்படித்தான் நினைத்திருப்பார். ஆனால், அது உண்மையா?

பேதுரு செய்த பாவம் மன்னிக்க முடியாததா?

விடிந்ததிலிருந்து அந்த நாள் முழுவதும் பேதுரு அனுபவித்த வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அன்று மதியம் இயேசு துடிதுடித்து இறந்தபோது பேதுரு எந்தளவு தன்னையே நொந்துகொண்டிருப்பார்! தன் எஜமானரின் வாழ்க்கை அஸ்தமிக்கும் அந்த நாளில் அவருக்கு ஏற்கெனவே இருக்கும் வேதனையோடு தானும் அவருக்கு வேதனையைக் கூட்டிவிட்ட எண்ணம் அவரை உலுக்கியெடுத்திருக்கும். பேதுருவின் துக்கம் அதலபாதாளம் வரை சென்றபோதிலும் அவர் நம்பிக்கை நூல் பிடித்து மீண்டும் எழுந்தார். எப்படிச் சொல்கிறோம்? அவர் விரைவில் தன் சகோதரர்களுடன் சேர்ந்துகொண்டார் என்று பைபிள் பதிவு சொல்கிறது. (லூக்கா 24:33) அந்த இரவு அப்போஸ்தலர்கள் எல்லாருமே இயேசுவை விட்டு ஓடிப்போனதை நினைத்து நிச்சயம் வருந்தியிருப்பார்கள், ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லியிருப்பார்கள்.

பேதுரு எடுத்த ஞானமான தீர்மானங்களில் இப்போது எடுத்த தீர்மானமும் ஒன்று. கடவுளுடைய ஊழியர் ஒருவர் பாவம் செய்தால் அவர் சோகக் கடலில் எந்தளவு மூழ்கிவிடுகிறார் என்பதைவிட அதிலிருந்து நீந்தி கரை சேர எந்தளவு மனவுறுதியுடன் இருக்கிறார் என்பதுதான் முக்கியம். (நீதிமொழிகள் 24:16) பேதுரு எவ்வளவுதான் துக்கத்தில் துவண்டிருந்தாலும் சகோதரர்களுடன் ஒன்றுசேர்ந்ததன் மூலம் உண்மையான விசுவாசத்தைக் காட்டினார். ஒருவர் வேதனையிலோ வருத்தத்திலோ தளர்ந்திருக்கும்போது தனிமையை நாட விரும்பலாம், ஆனால் அது ஆபத்தே! (நீதிமொழிகள் 18:1) சக விசுவாசிகளோடு எப்போதும் சேர்ந்திருந்து ஆன்மீக ரீதியில் மீண்டும் பலத்தைப் பெறுவதுதான் ஞானமானது.எபிரெயர் 10:24, 25.

பேதுரு தன் ஆன்மீக சகோதரர்களுடன் இருந்ததாலேயே இயேசுவின் உடல் கல்லறையில் இல்லை என்ற அதிர்ச்சியான செய்தி அவருக்குக் கிடைத்தது. இயேசு அடக்கம் செய்யப்பட்டு முத்திரை போடப்பட்டிருந்த கல்லறைக்கு பேதுருவும் யோவானும் ஓடினார்கள். யோவான் ஒருவேளை வாலிபராக இருந்ததால் முதலில் வந்து சேர்ந்திருக்கலாம். கல்லறை திறந்திருந்ததைக் கண்டு அவர் தயங்கி நின்றுவிட்டார். ஆனால் பேதுரு அப்படிச் செய்யவில்லை. மூச்சு வாங்க ஓடோடி வந்திருந்தாலும், நேரே கல்லறைக்குள் சென்றார். அது காலியாகக் கிடந்தது!—யோவான் 20:3-9.

இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டதை பேதுரு நம்பினாரா? முதலில் நம்பவில்லை, இயேசு உயிர்த்தெழுப்பப்பட்ட செய்தியை தேவதூதர்களே வந்து தங்களிடம் சொன்னதாக விசுவாசமுள்ள அந்தப் பெண்கள் தெரிவித்தபோதும்கூட அவர் நம்பவில்லை. (லூக்கா 23:55–24:11) ஆனால், பொழுது சாய்ந்தபோதோ பேதுருவின் மனதில் இருந்த சந்தேக ரேகைகளும் வேதனை வடுக்களும் மறைந்துவிட்டன. இயேசு இப்போது சக்திவாய்ந்த தூதராக உயிரோடு இருக்கிறார்! அவர் தம்முடைய எல்லா அப்போஸ்தலர்களுக்கும் காட்சியளித்தார். ஆனால், அதற்கு முன் அவர் ஒன்றை செய்தார். “எஜமானர் உண்மையாகவே உயிர்த்தெழுப்பப்பட்டுவிட்டார்! சீமோனுக்குக் காட்சி அளித்தார்!” என அப்போஸ்தலர்கள் அன்று சொன்னார்கள். (லூக்கா 24:34) குறிப்பிடத்தக்க அந்த நாளில் நடந்த சம்பவங்களைக் குறித்து அப்போஸ்தலன் பவுலும் பின்னர் எழுதினார்: இயேசு, “கேபாவுக்கும், அதன்பின்பு பன்னிரண்டு பேருக்கும் தோன்றினார்.” (1 கொரிந்தியர் 15:5) கேபா, சீமோன் என்பது பேதுருவின் மறுபெயர்களே. ஆகவே, அன்று பேதுரு தனிமையில் இருந்தபோது இயேசு அவருக்குக் காட்சியளித்தார் என்பது இந்தப் பதிவுகளிலிருந்து உறுதியாகிறது.

உணர்ச்சி பொங்கும் அந்தச் சந்திப்பின்போது என்ன நடந்தது என்பது பேதுருவுக்கும் இயேசுவுக்கும் மட்டும்தான் தெரியும், அதைக் குறித்து பைபிள் எதுவும் சொல்வதில்லை. ஆனால், தன் அன்புக்குரிய எஜமானர் மீண்டும் உயிரோடு வந்திருப்பதை பார்க்கவும், தன் மனவேதனையை அவரிடம் கொட்டி மன்னிப்புக் கேட்கவும் தனக்குக் கிடைத்த வாய்ப்பை எண்ணி அவர் எந்தளவு சந்தோஷப்பட்டிருப்பார் என்பதை நம்மால் கற்பனைதான் செய்ய முடியும். இந்த உலகத்தில் வேறெதுவும் வேண்டாம், இயேசு தன்னை மன்னித்தால் போதும் என்றே பேதுரு நினைத்திருப்பார். இயேசு அவரை நிச்சயம் மன்னித்திருப்பார் அதுவும் தாராளமாக மன்னித்திருப்பார் என்பதில் எதாவது சந்தேகம் உண்டா? இன்று பாவமெனும் படுகுழியில் விழும் கிறிஸ்தவர்கள் பேதுருவின் உதாரணத்தை நினைவில் வைக்க வேண்டும். கடவுளால் மன்னிக்க முடியாத அளவுக்கு பெரிய பாவத்தைச் செய்துவிட்டோம் என்று ஒருக்காலும் நாம் நினைக்க கூடாது. ‘தாராளமாய் மன்னிக்கும்’ தகப்பனை இயேசு அப்படியே பிரதிபலித்தார்.ஏசாயா 55:7, NW.

மன்னிப்புக்குக் கூடுதல் அத்தாட்சி

அப்போஸ்தலர்களை கலிலேயாவுக்கு போகும்படி இயேசு சொன்னார்; அங்கு அவர்கள் அவரை மீண்டும் சந்திக்கவிருந்தார்கள். அங்கு சென்றதும் கலிலேயக் கடலில் மீன் பிடிக்க போவதாக பேதுரு சென்னார். மற்றவர்களும் அவரோடுகூட வருவதாகச் சொன்னார்கள். சிறுபிராயத்திலிருந்து அவருக்கு நன்கு பழக்கமான அந்த ஏரிக்கு பேதுரு மீண்டும் வந்தார். படகின் ‘கிரீச்’ ஒலியும், அலைகள் மோதும் சப்தமும், சொரசொரப்பான மீன்பிடி வலைகளும் அவருக்கு ஒன்றும் புதிதல்ல, நன்கு பழக்கப்பட்டதே. இயேசுவின் பூமிக்குரிய ஊழியக்காலம் முடிந்துவிட, வாழ்க்கையில் இனி என்ன செய்ய வேண்டும் என்று பேதுரு அன்றிரவு யோசித்தாரா? திரும்பவும் மீனவ வாழ்க்கைக்கே திரும்பிவிட்டாரா? எதுவாக இருந்தாலும்சரி, அன்றிரவு முழுவதும் அவர்கள் வலையில் ஒரு மீன்கூட சிக்கவில்லை.மத்தேயு 26:32; யோவான் 21:1-3.

விடியற்காலையில் கரையோரமாக இருந்த ஒருவர் அவர்களை படகின் மறுபக்கத்தில் வலையைப் போடும்படி சொன்னார். அப்படி வலை போட்டதில் அவர்களுக்கு 153 மீன்கள் சிக்கின! அந்த நபர் யாரென்று பேதுருவுக்கு தெரிந்துவிட்டது. படகிலிருந்து ஒரே குதி குதித்து, கரைக்கு நீந்தி சென்றார். கரையோரத்தில் இயேசு அவர்களுக்காக மீன் சுட்டுவைத்திருந்தார். இயேசு தம் பார்வையை பேதுருமீது பதித்தார்.

“இவற்றைவிட” நீ என்னை நேசிக்கிறாயா என்று பேதுருவிடம் இயேசு கேட்டார்? இவற்றைவிட என்று சொன்னபோது பெருமளவில் குவிந்திருந்த அந்த மீன்களையே இயேசு சுட்டிகாட்டினார் என்று தெரிகிறது. பேதுருவுக்கு மீன்பிடி தொழில்மீது அதிக நாட்டம் இருந்ததா அல்லது இயேசுவின் மீது அதிக அன்பிருந்ததா? இயேசுவை பேதுரு மூன்று முறை மறுதலித்ததைப் போலவே இப்போது தம் மீதுள்ள அன்பை அனைவர் முன்பும் உறுதிப்படுத்த மூன்று முறை பேதுருவுக்கு இயேசு வாய்ப்பளித்தார். பேதுரு அந்த அன்பை உறுதிப்படுத்தியபோது, அதை எப்படிக் காட்ட வேண்டும் என்று இயேசு தெரிவித்தார். அதாவது, கடவுளுடைய சேவைக்கே முதலிடம் கொடுத்து, தம்முடைய ஆடுகளான உண்மை ஊழியர்களை போஷித்து பராமரிப்பதன் மூலம் அன்பு காட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.யோவான் 21:4-17.

தாமும் தம்முடைய தகப்பனும் பேதுருவை தொடர்ந்து பயன்படுத்துவார்கள் என்று இயேசு அவருக்கு உறுதி அளித்தார். கிறிஸ்துவின் தலைமையின்கீழ் இயங்கும் சபையில் பேதுரு முக்கிய பங்கு வகிக்கவிருந்தார். பேதுருவை இயேசு மன்னித்துவிட்டார் என்பதற்கு இதைவிட பலமான அத்தாட்சி தேவையா? உண்மையில் இயேசுவின் கருணை பேதுருவை உருக வைத்தது, அது அவரை அடியோடு மாற்றிவிட்டது.

பின்பு பல வருடங்களுக்கு பேதுரு தன்னுடைய பொறுப்பை செவ்வென செய்தார். இறப்பதற்கு முந்தின நாள், இயேசு கட்டளையிட்டபடியே பேதுரு தன் சகோதரர்களைப் பலப்படுத்தினார். கிறிஸ்துவின் சீடர்களை போஷித்து பராமரிக்கும் வேலையை பேதுரு அன்புடனும் பொறுமையுடனும் செய்தார். பேதுரு, அதாவது பாறை, என்று சீமோனுக்கு இயேசு வைத்த பெயருக்கு ஏற்ப சபையில் உறுதியான, பலமான, நம்பகமான ஒருவராய் அவர் விளங்கினார். பேதுரு எழுதிய அன்பான இரண்டு கடிதங்களே இதற்கு சான்று. இந்தக் கடிதங்கள் பிற்பாடு மதிப்புவாய்ந்த புத்தகங்களாக பைபிளில் இடம்பிடித்தன. மன்னிப்பைப் பற்றி இயேசுவிடமிருந்து கற்றுக்கொண்ட பாடத்தை பேதுரு ஒருபோதும் மறக்கவில்லை என்பதையும் அந்தக் கடிதங்கள் காட்டுகின்றன.—1 பேதுரு 3:8, 9; 4:8.

நாமும் அந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்வோமாக. கணக்குவழக்கில்லாமல் நாம் செய்யும் பாவங்களுக்காகத் தினமும் கடவுளிடம் மன்னிப்பு கேட்கிறோமா? கடவுள் நம்மை மன்னித்துவிட்டார் என்று உறுதியாக நம்புகிறோமா? நம் பாவங்களை நீக்கும் வல்லமை அவருக்கு இருக்கிறது என்பதை நம்புகிறோமா? நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் நாம் மன்னிக்கிறோமா? அப்படிச் செய்தால் பேதுரு காட்டியதைப் போன்ற விசுவாசத்தை காட்டுவோம்—நம் எஜமானரின் கருணையைக் காட்டுவோம். (w10-E  04/01)

[பக்கம் 22-ன் சிறுகுறிப்பு]

பேதுருவை அவரது எஜமானர் பல முறை மன்னித்திருந்தார். நம்மில் யாருக்குத்தான் அன்றாடம் மன்னிப்பு தேவையில்லை?

[பக்கம் 23-ன் படம்]

“இயேசு திரும்பி, பேதுருவைப் பார்த்தார்”

[பக்கம் 24-ன் படம்]

“எஜமானர் . . . சீமோனுக்குக் காட்சி அளித்தார்!”