Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆண்களே, கிறிஸ்துவின் தலைமை ஸ்தானத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கிறீர்களா?

ஆண்களே, கிறிஸ்துவின் தலைமை ஸ்தானத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கிறீர்களா?

ஆண்களே, கிறிஸ்துவின் தலைமை ஸ்தானத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கிறீர்களா?

‘ஒவ்வொரு ஆணுக்கும் கிறிஸ்து தலையாக இருக்கிறார்.’—1 கொ. 11:3.

1. யெகோவா எல்லாவற்றையும் சீராகச் செய்கிற கடவுள் என்பதை எது காட்டுகிறது?

 “எங்கள் கடவுளாகிய யெகோவாவே, நீங்கள் மகிமையையும் மாண்பையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளத் தகுதியானவர்; ஏனென்றால், நீங்களே எல்லாவற்றையும் படைத்தீர்கள், உங்களுடைய சித்தத்தின்படியே அவை உண்டாயின, படைக்கப்பட்டன” என்று வெளிப்படுத்துதல் 4:11 சொல்கிறது. ஆம், யெகோவா படைப்பாளராக இருப்பதால், இந்தச் சர்வலோகத்தின் உன்னத பேரரசராகத் திகழ்கிறார், தம்முடைய படைப்புகள் அனைத்தின் மீதும் அதிகாரமுள்ளவராக இருக்கிறார். அவர் ‘குழப்பத்தின் கடவுளாக இல்லாமல் சமாதானத்தின் கடவுளாக’ இருக்கிறார் என்பதை, தேவதூதர்கள் அடங்கிய தம்முடைய பரலோகக் குடும்பத்தை அவர் ஒழுங்கமைத்திருக்கிற விதத்திலிருந்து தெரிந்துகொள்கிறோம்.—1 கொ. 14:33; ஏசா. 6:1-3; எபி. 12:22, 23.

2, 3. (அ) யெகோவா முதன்முதலாக யாரைப் படைத்தார்? (ஆ) கடவுளும் அவருடைய மகனும் வகிக்கிற ஸ்தானங்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

2 யெகோவா யுகா யுகங்களுக்குத் தனியாகவே இருந்தார், அதன் பின்னரே எல்லாவற்றையும் படைக்கத் தொடங்கினார். “வார்த்தை” என்பவரைத்தான் முதன்முதலாகப் பரலோகத்தில் படைத்தார்; இவர் யெகோவாவின் சார்பில் பேசுபவராகச் செயல்பட்டார். இவர் மூலமாகவே மற்ற எல்லாம் படைக்கப்பட்டன. பிற்பாடு, இவர் பரிபூரண மனிதராகப் பூமிக்கு வந்தபோது இயேசு கிறிஸ்து என அழைக்கப்பட்டார்.யோவான் 1:1-3, 14-ஐ வாசியுங்கள்.

3 கடவுளும் அவருடைய மகனும் வகிக்கிற ஸ்தானங்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “நீங்கள் இவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறேன்: ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண் தலையாக இருக்கிறான்; ஆணுக்குக் கிறிஸ்து தலையாக இருக்கிறார்; கிறிஸ்துவுக்குக் கடவுள் தலையாக இருக்கிறார்.” (1 கொ. 11:3) கிறிஸ்து தம்முடைய தகப்பனின் தலைமை ஸ்தானத்திற்குக் கீழ்ப்பட்டிருக்கிறார். புத்திக்கூர்மையுள்ள படைப்புகள் மத்தியில் சமாதானமும் ஒழுங்கும் நிலவ வேண்டுமானால் தலைமை வகிப்பும் அவசியம், அந்தத் தலைமை வகிப்புக்குக் கட்டுப்பட்டு நடப்பதும் அவசியம். ‘யார் மூலமாக எல்லாம் படைக்கப்பட்டனவோ’ அவரும்கூட கடவுளின் தலைமை ஸ்தானத்திற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியிருக்கிறது.—கொலோ. 1:16.

4, 5. யெகோவாவின் தலைமை ஸ்தானத்தைப் பற்றி இயேசு எப்படி உணர்ந்தார்?

4 யெகோவாவின் தலைமை ஸ்தானத்திற்குக் கட்டுப்பட்டு நடப்பது பற்றியும், பூமிக்கு வருவது பற்றியும் இயேசு எப்படி உணர்ந்தார்? “கிறிஸ்து இயேசுவுக்கு இருந்த இதே சிந்தை உங்களுக்கும் இருக்கட்டும்; அவர் கடவுளுடைய சாயலில் இருந்தபோதிலும், கடவுளுடைய ஸ்தானத்தைப் பறித்துக்கொள்ளவோ அவருக்குச் சமமாயிருக்கவோ நினைக்கவில்லை; மாறாக, தமக்கிருந்த எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓர் அடிமையைப் போலானார், அவர் ஒரு மனிதரானார். அதுமட்டுமல்ல, அவர் மனிதராக வந்தபோது சாகுமளவுக்கு, ஆம், கழுமரத்தில் சாகுமளவுக்கு, தம்மையே தாழ்த்திக் கீழ்ப்படிதலைக் காட்டினார்” என்று பைபிள் சொல்கிறது.—பிலி. 2:5-8.

5 இயேசு தம்முடைய தகப்பனின் சித்தத்திற்கு எப்போதுமே கட்டுப்பட்டு நடந்தார். “நான் எதையுமே சுயமாகச் செய்ய முடியாது; . . . நான் அளிக்கும் தீர்ப்பு நீதியானது, ஏனென்றால் நான் என்னுடைய சித்தத்தை நாடாமல் என்னை அனுப்பியவருடைய சித்தத்தையே நாடுகிறேன்” என்று அவர் சொன்னார். (யோவா. 5:30) ‘நான் எப்போதும் என் தகப்பனுக்குப் பிரியமான காரியங்களையே செய்கிறேன்’ என்றும் அவர் சொன்னார். (யோவா. 8:29) இறப்பதற்குக் கொஞ்ச நாட்களுக்குமுன், தம் தகப்பனிடம் இவ்வாறு ஜெபம் செய்தார்: “நீங்கள் எனக்குக் கொடுத்த வேலையைச் செய்து முடித்து பூமியில் உங்களை மகிமைப்படுத்தியிருக்கிறேன்.” (யோவா. 17:4) ஆகையால், கடவுளுடைய தலைமை ஸ்தானத்தை ஏற்றுக்கொள்வது இயேசுவுக்குக் கஷ்டமாக இருக்கவில்லை.

தகப்பனுக்குக் கட்டுப்பட்டு நடந்தார், நன்மைகள் பெற்றார்

6. இயேசு என்ன அருமையான குணங்களை வெளிக்காட்டினார்?

6 இயேசு பூமியில் இருந்தபோது அருமையான குணங்களை வெளிக்காட்டினார். தம் தகப்பன்மீது அளவுகடந்த அன்பைக் காட்டினார். “தகப்பன்மீது நான் அன்பு வைத்திருக்கிறேன்” என்று அவரே சொன்னார். (யோவா. 14:31) மக்கள்மீதும் அவர் அளவுகடந்த அன்பைக் காட்டினார். (மத்தேயு 22:35-40-ஐ வாசியுங்கள்.) அவர் யாரிடமும் கடுமையாக நடந்துகொள்ளவில்லை, யாரையும் அடக்கி ஆளவில்லை; மாறாக, கருணையோடும் கரிசனையோடும் நடந்துகொண்டார். “உழைத்துக் களைத்துப் போனவர்களே, பெருஞ்சுமை சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்குப் புத்துணர்ச்சி அளிப்பேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கிறேன்; அதனால் என் நுகத்தை உங்கள்மீது ஏற்றுக்கொண்டு என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்; அப்போது, உங்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். ஏனென்றால், என்னுடைய நுகம் மென்மையாகவும் என்னுடைய சுமை லேசாகவும் இருக்கிறது” என்று அவர் சொன்னார். (மத். 11:28-30) செம்மறியாடு போன்ற மக்ககளில் பெரியோர் சிறியோர் என எல்லாருமே, குறிப்பாக மற்றவர்களால் அடக்கி ஒடுக்கப்பட்ட எல்லாருமே, இயேசுவின் இனிய சுபாவத்தினாலும் தெம்பளிக்கும் செய்தியினாலும் மிகுந்த ஆறுதலைப் பெற்றார்கள்.

7, 8. இரத்தப்போக்கினால் அவதிப்பட்ட ஒரு பெண் திருச்சட்டத்தின்படி எவ்வாறு கருதப்பட்டாள், ஆனால் இயேசு அவளிடம் எப்படி நடந்துகொண்டார்?

7 பெண்களை இயேசு எப்படி நடத்தினார் எனச் சிந்தித்துப் பாருங்கள். சரித்திரம் முழுவதிலும், ஆண்களில் ஏராளமானோர் பெண்களைப் படுமோசமாக நடத்தியிருக்கிறார்கள். பூர்வ இஸ்ரவேலில் இருந்த மதத் தலைவர்களும்கூட அப்படித்தான் நடத்திவந்தார்கள். இயேசுவோ பெண்களை மரியாதையோடு நடத்தினார். 12 வருடங்களாக இரத்தப்போக்கினால் அவதிப்பட்டுவந்த ஒரு பெண்ணிடம் அவர் நடந்துகொண்ட விதம் அதைத் தெளிவாக்குகிறது. மருத்துவர்கள் அளித்த பல்வேறு சிகிச்சைகளால் “அவள் மிகுந்த வேதனை அடைந்திருந்தாள்.” அதுமட்டுமல்ல, தன்னிடம் இருந்ததையெல்லாம் செலவழித்திருந்தாள். என்றாலும், அவளுடைய “நிலைமை இன்னும் மோசமாகவே ஆகியிருந்தது.” திருச்சட்டத்தின்படி, அவள் தீட்டானவளாகக் கருதப்பட்டாள்; அவளைத் தொடுகிறவர்களும் தீட்டுப்பட்டவர்களாகக் கருதப்பட்டார்கள்.—லேவி. 15:19, 25.

8 நோயாளிகளை இயேசு குணமாக்குகிறாரென அவள் கேள்விப்பட்டபோது, அவரைச் சூழ்ந்திருந்த கூட்டத்தாரோடு சேர்ந்துகொண்டாள்; “அவருடைய மேலங்கியைத் தொட்டாலே போதும், நான் குணமாகிவிடுவேன்” என்று சொல்லிக்கொண்டு, இயேசுவைத் தொட்டாள், உடனடியாகக் குணமானாள். தம்மை அவள் தொட்டது தவறு என்பதை இயேசு அறிந்திருந்தார். என்றாலும், அவளை அவர் திட்டவில்லை. மாறாக, அவளிடம் கருணையோடு நடந்துகொண்டார். வருடக்கணக்காக அவள் எந்தளவு கஷ்டப்பட்டிருப்பாள் என்பதைப் புரிந்துகொண்டார், உதவிக்காக அவள் எந்தளவு பரிதவித்திருப்பாள் என்பதையும் புரிந்துகொண்டார். அதனால் அவளைப் பார்த்து, “மகளே, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியிருக்கிறது. சமாதானமாகப் போ” என்று கரிசனையோடு சொன்னார்.—மாற். 5:25-34.

9. பிள்ளைகள் இயேசுவிடம் வரவிடாதபடி சீடர்கள் தடுத்தபோது, அவர் என்ன செய்தார்?

9 பிள்ளைகள்கூட இயேசுவிடம் சகஜமாகப் பழகினார்கள். ஒருசமயம் மக்கள் தங்களுடைய பிள்ளைகளை அவரிடம் கொண்டுவந்தபோது, சீடர்கள் அவர்களை அதட்டினார்கள்; பிள்ளைகள் அவருக்குத் தொந்தரவாக இருப்பார்களோ என்று நினைத்து ஒருவேளை அவர்கள் அப்படி அதட்டியிருக்கலாம். ஆனால், இயேசு அப்படி நினைக்கவில்லை. அவர் “இதைப் பார்த்துக் கோபமடைந்து, சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள், அவர்களைத் தடுக்காதீர்கள், இப்படிப்பட்டவர்களே கடவுளுடைய அரசாங்கத்தில் இருப்பார்கள்” என்று சீடர்களிடம் சொன்னார். பின்பு, “அந்தச் சிறுபிள்ளைகளைத் தூக்கிக்கொண்டு, அவர்கள்மீது கைகளை வைத்து ஆசீர்வதித்தார்.” அவர்களைத் தொந்தரவாக நினைக்காமல் உண்மையான பிரியத்தோடு ஏற்றுக்கொண்டார்.—மாற். 10:13-16.

10. இயேசுவுக்கு இத்தகைய அருமையான குணங்கள் எப்படி வந்தன?

10 இயேசுவுக்கு இத்தகைய அருமையான குணங்கள் எப்படி வந்தன? மனிதராகப் பிறப்பதற்குமுன், யுகா யுகங்களுக்கு அவர் தம்முடைய பரலோகத் தகப்பனைக் கூர்ந்து கவனித்திருந்தார். (நீதிமொழிகள் 8:22, 23, 30-ஐ வாசியுங்கள்.) யெகோவா தம்முடைய படைப்புகள் எல்லாவற்றின் மீதும் அன்போடு தலைமை வகித்ததை அவர் கவனித்திருந்தார், அதனால் அவரும் அதைப் பின்பற்றினார். தம் தகப்பனுக்குக் கட்டுப்பட்டு நடந்ததால்தான், அவரால் அப்படிப் பின்பற்ற முடிந்தது. யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதில் அவர் இன்பம் கண்டார், யெகோவாவும் தம்முடைய கீழ்ப்படிதலுள்ள மகனை நினைத்து மனங்குளிர்ந்தார். இயேசு பூமியிலிருந்தபோது, தம்முடைய பரலோகத் தகப்பனுடைய அருமையான குணங்களை அச்சுப்பிசகாமல் பின்பற்றினார். பரலோக அரசாங்கத்தின் ராஜாவாக நியமிக்கப்பட்டிருக்கிற அவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம் நமக்கு!

கிறிஸ்துவின் குணங்களைப் பின்பற்றுங்கள்

11. (அ) யாரைப் பின்பற்ற நாம் கடினமாக முயல வேண்டும்? (ஆ) சபையிலுள்ள ஆண்கள் இயேசுவைப் பின்பற்ற ஏன் பெருமுயற்சி எடுக்க வேண்டும்?

11 கிறிஸ்தவ சபையிலுள்ள எல்லாரும், குறிப்பாக ஆண்கள், கிறிஸ்துவின் குணங்களைப் பின்பற்றுவதற்குக் கடினமாக முயன்றுகொண்டே இருக்க வேண்டும். ஏற்கெனவே குறிப்பிட்டபடி, ‘ஒவ்வொரு ஆணுக்கும் கிறிஸ்து தலையாக இருக்கிறார்’ என பைபிள் சொல்கிறது. கிறிஸ்து, தமக்குத் தலைவராக இருக்கிற கடவுளைப் பின்பற்றுவது போலவே கிறிஸ்தவ ஆண்களும் தங்களுக்குத் தலைவராக இருக்கிற கிறிஸ்துவைப் பின்பற்ற பெருமுயற்சி எடுக்க வேண்டும். அப்போஸ்தலன் பவுல் அதைத்தான் செய்தார். “நான் கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றுவதுபோல் நீங்கள் என்னுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்” என்று சக கிறிஸ்தவர்களை அறிவுறுத்தினார். (1 கொ. 11:1) அப்போஸ்தலன் பேதுருவும் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் இவ்விதமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; ஏனென்றால், கிறிஸ்து உங்களுக்காகப் பாடுகள் பட்டு, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றி வரும்படி உங்களுக்கு ஒரு முன்மாதிரியை வைத்துவிட்டுப்போனார்.” (1 பே. 2:21) கிறிஸ்துவைப் பின்பற்றும்படி கூறப்பட்ட அறிவுரை ஆண்களுக்கு மிக முக்கியமானதாய் இருப்பதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. மூப்பர்களாகவும் உதவி ஊழியர்களாகவும் சேவை செய்கிற பாக்கியம் அவர்களுக்குத்தான் இருக்கிறது. யெகோவாவைப் பின்பற்றுவதில் இயேசு எப்படி மகிழ்ச்சி கண்டாரோ அப்படியே கிறிஸ்தவ ஆண்களும் கிறிஸ்துவைப் பின்பற்றி அவருடைய குணங்களை வெளிக்காட்டுவதில் மகிழ்ச்சி காண வேண்டும்.

12, 13. தங்கள் மந்தையிலுள்ள ஆடுகளிடம் மூப்பர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

12 கிறிஸ்தவ சபையிலுள்ள மூப்பர்கள் கிறிஸ்துவைப் போலவே நடப்பதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும். மூப்பர்களுக்கு பேதுரு இந்த அறிவுரையைக் கொடுத்தார்: “உங்கள் பொறுப்பிலுள்ள கடவுளுடைய மந்தையைக் கட்டாயத்தினால் இல்லாமல் மனப்பூர்வமாகவும், கேவலமான ஆதாயத்திற்காக இல்லாமல் ஆர்வமாகவும் மேய்த்துவாருங்கள்; கடவுளுடைய சொத்தாக இருக்கிற மந்தையின் மீது ஆதிக்கம் செலுத்தாமல், மந்தைக்கு முன்மாதிரிகளாக இருங்கள்.” (1 பே. 5:1-3) எனவே, மூப்பர்கள் சர்வாதிகாரிகளாக, அடக்கி ஆளுபவர்களாக, கொடுங்கோலர்களாக இருக்கக் கூடாது. கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றி, தங்கள் மந்தையிலுள்ள ஆடுகளிடம் அன்போடு, கரிசனையோடு, தாழ்மையோடு, கருணையோடு நடப்பதற்கு முயற்சியெடுக்க வேண்டும்.

13 சபையை முன்நின்று நடத்துகிற ஆண்கள் தாங்கள் அபூரணர் என்பதை எப்போதும் மனதில் வைத்துச் செயல்பட வேண்டும். (ரோ. 3:23) இயேசுவைப் பற்றிக் கற்றுக்கொள்வதற்கும், அவரைப் போலவே அன்பு காட்டுவதற்கும் ஆர்வமாக இருக்க வேண்டும். கடவுளும் கிறிஸ்துவும் மக்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதை ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்து, அப்படியே செய்யக் கடும் முயற்சியெடுக்க வேண்டும். பேதுரு இவ்வாறும் அறிவுறுத்துகிறார்: “நீங்கள் . . . எல்லாருமே ஒருவருக்கொருவர் மனத்தாழ்மையோடு நடந்துகொள்ளுங்கள். ஏனென்றால், கர்வமுள்ளவர்களைக் கடவுள் எதிர்க்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ அளவற்ற கருணையை அருளுகிறார்.”—1 பே. 5:5.

14. மூப்பர்கள் மற்றவர்களுக்கு எந்தளவு மதிப்புக் காட்ட வேண்டும்?

14 கடவுளுடைய மந்தையை முன்நின்று நடத்துகிற ஆண்கள் முத்தான குணங்களை வெளிக்காட்ட வேண்டும். “ஒருவருக்கொருவர் சகோதர அன்பையும் கனிவான பாசத்தையும் காட்டுங்கள்; ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுப்பதில் முந்திக்கொள்ளுங்கள்” என்று ரோமர் 12:10 சொல்கிறது. எனவே, மூப்பர்களும் உதவி ஊழியர்களும் மற்றவர்களுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும். ‘எதையும் பகைமையினாலோ வறட்டு கௌரவத்தினாலோ செய்யாமல், மனத்தாழ்மையினால் செய்ய வேண்டும்; மற்றவர்களைத் தங்களைவிட மேலானவர்களாகக் கருத வேண்டும்’ என்று எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் கொடுக்கப்பட்ட அறிவுரையை அவர்களும் பின்பற்ற வேண்டும். (பிலி. 2:3) ஆம், முன்நின்று நடத்துகிறவர்கள், மற்றவர்களை மேலானவர்களாகக் கருதுவது அவசியம். அவ்வாறு கருதுவதன் மூலம், பவுலின் பின்வரும் ஆலோசனைக்குக் கீழ்ப்படிவதை அவர்கள் காட்டுகிறார்கள்: ‘விசுவாசத்தில் பலமுள்ளவர்களாகிய நாம் பலவீனர்களுடைய பலவீனங்களைத் தாங்கிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்; நமக்கே பிரியமாக நடக்கக் கூடாது. நாம் ஒவ்வொருவரும் சக மனிதர்களுக்கு நன்மை உண்டாகும்படி, அதாவது அவர்களைப் பலப்படுத்தும்படி, அவர்களுக்குப் பிரியமாக நடக்க வேண்டும். கிறிஸ்துவும் தமக்கே பிரியமாக நடக்கவில்லை.’—ரோ. 15:1-3.

‘மனைவிக்கு மதிப்புக் கொடுங்கள்’

15. ஒரு கணவன் தன்னுடைய மனைவியிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

15 மணமான ஆண்களுக்கு பேதுரு கொடுத்த ஆலோசனையை இப்போது கவனியுங்கள்: ‘கணவர்களே, நீங்களும் உங்கள் மனைவியை நன்கு புரிந்துகொண்டு அவளுடன் வாழுங்கள்; பெண்ணானவள் உங்களைவிடப் பலவீனமாக இருப்பதால் . . . அவளுக்குக் கொடுக்க வேண்டிய மதிப்பைக் கொடுங்கள்.’ (1 பே. 3:7) ஒரு நபருக்கு மதிப்புக் கொடுப்பது என்பது அந்த நபரை உயர்வாய்க் கருதுவதை அர்த்தப்படுத்துகிறது. அப்படி நீங்கள் ஒரு நபருக்கு மதிப்புக் கொடுத்தால், அவருடைய அபிப்பிராயங்களையும் விருப்பங்களையும் தேவைகளையும் கருத்தில்கொள்வீர்கள்; முக்கியமான காரணங்கள் இருந்தால் தவிர, மற்ற சந்தர்ப்பங்களில் அவருக்காக விட்டுக்கொடுத்துவிடுவீர்கள். கணவனும் தன் மனைவியிடம் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும்.

16. மனைவிக்கு மதிப்புக் கொடுப்பது சம்பந்தமாகக் கணவர்களுக்கு பைபிள் என்ன எச்சரிப்பைக் கொடுக்கிறது?

16 மனைவிகளுக்கு மதிப்புக் கொடுக்கும்படி கணவர்களுக்கு அறிவுறுத்திய பிறகு, அப்படி மதிப்புக் கொடுக்காவிட்டால் ‘உங்கள் ஜெபங்கள் கேட்கப்படாது’ என்றும் பேதுரு அவர்களை எச்சரித்தார். (1 பே. 3:7) ஓர் ஆண் தன்னுடைய மனைவியை நடத்துகிற விதத்திற்கு யெகோவா எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது இதிலிருந்து நன்றாகவே தெரிகிறது. மனைவிக்கு மதிப்புக் கொடுக்கத் தவறினால், கணவனுடைய ஜெபங்களை அவர் கேட்பார் என எதிர்பார்க்க முடியாது. ஒரு கணவன் தன் மனைவிக்கு மதிப்புக் கொடுக்கும்போது தன் கணவனுடைய தலைமை ஸ்தானத்திற்குக் கீழ்ப்படிவது அவளுக்குச் சுலபமாக இருக்கும்.

17. மனைவிகள்மீது கணவர்கள் எந்தளவு அன்பு காட்ட வேண்டும்?

17 மனைவியை நேசிப்பது பற்றிக் கடவுளுடைய வார்த்தை கணவர்களுக்கு இவ்வாறு ஆலோசனை கூறுகிறது: “கணவர்களும் தங்கள் சொந்த உடல்மீது அன்பு காட்டுவதுபோல் தங்கள் மனைவிமீதும் அன்பு காட்ட வேண்டும்; . . . ஒருவனும் தன் உடலை வெறுக்க மாட்டான்; ஆனால், அதைப் போஷித்து நெஞ்சார நேசிக்கிறான்; கிறிஸ்துவும் இப்படித்தான் சபையை நேசிக்கிறார். . . . உங்களில் ஒவ்வொருவனும் தன்மீது அன்பு காட்டுவதுபோல், தன் மனைவிமீதும் அன்பு காட்ட வேண்டும்.” (எபே. 5:28, 29, 33) மனைவிகள்மீது கணவர்கள் எந்தளவு அன்பு காட்ட வேண்டும்? “கணவர்களே, சபைக்காகக் கிறிஸ்து தம்மையே அர்ப்பணிக்கும் அளவுக்கு அதன்மீது அன்பு காட்டியதுபோல் நீங்களும் உங்கள் மனைவிமீது தொடர்ந்து அன்பு காட்டுங்கள்” என்று பவுல் எழுதினார். (எபே. 5:25) ஆம், கிறிஸ்து செய்ததைப் போலவே, ஒரு கணவன் தன்னுடைய மனைவிக்காகத் தன் உயிரையே கொடுக்க மனமுள்ளவராக இருக்க வேண்டும். ஒரு கிறிஸ்தவ கணவர் தன் மனைவியைச் சுயநலமற்ற விதத்தில் கனிவாக, கரிசனையாக, கண்ணும் கருத்துமாக நடத்தும்போது, அவருடைய தலைமை ஸ்தானத்திற்கு அவள் சந்தோஷமாகக் கீழ்ப்படிவாள்.

18. மணவாழ்வில் உட்பட்டுள்ள பொறுப்புகளைக் கையாள ஆண்களுக்கு எப்படி உதவி கிடைக்கிறது?

18 கணவர்கள் தங்களுடைய மனைவிகளுக்கு இப்படி மதிப்புக் கொடுக்க வேண்டுமென்று கடவுள் சொல்லும்போது, அவர் அளவுக்குமீறி எதிர்பார்க்கிறாரா? இல்லை, அவர்களால் செய்ய முடியாத ஒன்றை அவர் ஒருபோதும் செய்யச் சொல்ல மாட்டார். மறுபட்சத்தில், இந்தப் பிரபஞ்சத்திலேயே மாபெரும் சக்தியான தம்முடைய பரிசுத்த சக்தியின் உதவியை அளிக்க அவர் தயாராயிருக்கிறார். “பொல்லாதவர்களான நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலுள்ள உங்கள் தகப்பன் தம்மிடம் கேட்கிறவர்களுக்கு தம்முடைய சக்தியை இன்னும் எந்தளவு கொடுப்பார்!” என்று இயேசு சொன்னார். (லூக். 11:13) மற்றவர்களை நடத்துகிற விஷயத்தில், முக்கியமாகத் தங்கள் மனைவிகளை நடத்துகிற விஷயத்தில், கணவர்கள் யெகோவாவின் சக்தியைத் தரும்படி கேட்டு ஜெபிக்கலாம்.அப்போஸ்தலர் 5:32-ஐ வாசியுங்கள்.

19. அடுத்த கட்டுரையில் எதைப் பற்றிச் சிந்திப்போம்?

19 உண்மைதான், கிறிஸ்துவுக்கு எப்படி அடிபணிந்து நடப்பது, அவருடைய தலைமை ஸ்தானத்தை எப்படிப் பின்பற்றுவது என்றெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு ஆண்களுக்கு இருக்கிறது. ஆனால் பெண்களைப் பற்றி, முக்கியமாக மனைவிகளைப் பற்றி என்ன சொல்லலாம்? யெகோவாவின் ஏற்பாட்டில் அவர்களுக்கு இருக்கும் பங்கை அவர்கள் எப்படிக் கருத வேண்டுமென அடுத்த கட்டுரையில் சிந்திப்போம்.

நினைவிருக்கிறதா?

• இயேசுவின் என்ன குணங்களை நாம் பின்பற்ற வேண்டும்?

• கடவுளுடைய மந்தையிலுள்ள ஆடுகளிடம் மூப்பர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?

• ஒரு கணவன் தன்னுடைய மனைவியை எவ்வாறு நடத்த வேண்டும்?

[கேள்விகள்]

[பக்கம் 10-ன் படங்கள்]

மற்றவர்களுக்கு மதிப்புக் கொடுப்பதில் இயேசுவைப் பின்பற்றுங்கள்