Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏதேன் தோட்டம் உண்மையில் இருந்ததா?

ஏதேன் தோட்டம் உண்மையில் இருந்ததா?

ஏதேன் தோட்டம் உண்மையில் இருந்ததா?

ஏதேன் தோட்டத்தில் ஆதாம் ஏவாள் வாழ்ந்த கதை உங்களுக்குத் தெரியுமா? உலகத்தில் நிறைய பேருக்கு அது தெரியும். நீங்களும் அதைத் தெரிந்துகொள்ளலாம். பைபிளில் ஆதியாகமம் 1:6-3:24-ல் அது கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கதையின் சுருக்கம் இதுதான்:

யெகோவா * தேவன் மனிதனை மண்ணிலிருந்து உருவாக்கி, அவனுக்கு ஆதாம் என்று பெயர் வைத்தார். ஏதேன் என்ற இடத்திலிருந்த ஒரு தோட்டத்தில் அவனைக் குடிவைத்தார். கடவுள்தான் அந்தத் தோட்டத்தை அமைத்தார். அங்கே நிறைய தண்ணீர் பாய்ந்தோடியது. மரங்களில் பழங்கள் காய்த்துக் குலுங்கின. அந்தத் தோட்டத்தின் நடுவில் ‘நன்மை தீமை அறிவதற்கான மரம்’ இருந்தது. அந்த மரத்தின் பழத்தை சாப்பிடக் கூடாது என்று கடவுள் சொன்னார். அப்படிச் சாப்பிட்டால் செத்துப்போய்விடுவார்கள் என்றும் சொன்னார். ஆதாமுடைய ஒரு விலா எலும்பை எடுத்து முதல் மனுஷியான ஏவாளைக் கடவுள் படைத்தார். அவளை ஆதாமுக்குத் துணையாகக் கொடுத்தார். தோட்டத்தைக் கவனித்துக்கொள்ளும் வேலையை அவர்களுக்குக் கொடுத்தார். அதோடு, பிள்ளைகளைப் பெற்று பூமியை நிரப்பும்படி சொன்னார்.

ஏவாள் தனியாக இருந்தபோது ஒரு பாம்பு அவளிடம் பேசியது. கடவுள் சாப்பிடக் கூடாதென்று சொல்லியிருந்த பழத்தைச் சாப்பிடச் சொல்லி அது ஆசைகாட்டியது. கடவுள் பொய் சொன்னதாகவும், அந்தப் பழத்தைச் சாப்பிட்டால் அவள் கடவுளைப்போல் ஆகிவிடுவாள் என்றும் சொன்னது. அவள் அதை நம்பி அந்தப் பழத்தைச் சாப்பிட்டுவிட்டாள். பிறகு, ஆதாமும் அதைச் சாப்பிட்டான். இப்படி, அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள். அதனால், ஆதாம் ஏவாளுக்கும் அந்தப் பாம்புக்கும் யெகோவா தண்டனைத் தீர்ப்பைக் கொடுத்தார். ஆதாமையும் ஏவாளையும் அந்தத் தோட்டத்திலிருந்து துரத்திவிட்டு, அதன் வாசலில் இரண்டு தேவதூதர்களைக் காவலுக்கு நிறுத்தினார்.

பைபிளில் ஆதியாகமப் புத்தகத்தில் சொல்லப்பட்ட எல்லாமே உண்மை என்றுதான் ஒருகாலத்தில் பல அறிஞர்கள் நம்பினார்கள். ஆனால் இன்று நிறைய பேர், அதெல்லாம் உண்மைதானா என்று சந்தேகப்படுகிறார்கள். அதற்கு என்ன காரணம்? நான்கு காரணங்களை இப்போது பார்க்கலாம்.

1. ஏதேன் தோட்டம் இருந்தது நிஜமா?

ஏதேன் தோட்டம் இருந்ததாக ஏன் சிலர் நம்புவதில்லை? தத்துவங்கள் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். கடவுள் அமைத்த தோட்டம் இன்னமும் எங்கேயோ இருக்கிறது என்றுதான் பல நூற்றாண்டுகளாக சர்ச் தலைவர்கள் நம்பிக்கொண்டு இருந்தார்கள். அதன் பிறகு, ப்ளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற கிரேக்க தத்துவஞானிகளின் கருத்துகளை சர்ச் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தது. பூமியில் இருக்கும் எதுவுமே பரிபூரணமாக இருக்க முடியாது, பரலோகத்தில்தான் எல்லாமே பரிபூரணமாக இருக்கும் என்று அந்தத் தத்துவஞானிகள் சொன்னார்கள். அதனால், ஆரம்பத்திலிருந்த தோட்டமும் பரலோகத்துக்குப் பக்கத்தில்தான் இருந்திருக்க வேண்டுமென்று சொன்னார்கள். * இந்தச் சீர்கெட்ட பூமியின் பாதிப்பு இல்லாத ஒரு இடத்தில், அதாவது ரொம்ப ரொம்ப உயரமான ஒரு மலையின் உச்சியில், அந்தத் தோட்டம் இருந்ததாகச் சிலர் சொன்னார்கள். இன்னும் சிலர், அது வட துருவத்திலோ தென் துருவத்திலோ இருந்ததாகச் சொன்னார்கள். மற்றவர்கள், அது நிலவிலோ நிலவுக்குப் பக்கத்திலோ இருந்ததாகச் சொன்னார்கள். இதுபோல் பல கருத்துகள் இருந்ததால், ஏதேன் தோட்டம் நிஜமான இடம் இல்லை என்று மக்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஏதேன் தோட்டம் அமைந்திருந்த இடத்தைப் பற்றி பைபிள் சொல்வதை நம்பவே முடியாது என்றும், அதனால் ஏதேன் தோட்டம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்றும் இன்று சில அறிஞர்கள் சொல்கிறார்கள்.

ஆனால் பைபிள், ஏதேன் தோட்டத்தைப் பற்றிய நிறைய விவரங்களைத் தருகிறது. ஆதியாகமம் 2:8-14-ஐப் பாருங்கள். ஏதேன் என்ற இடத்தின் கிழக்குப் பகுதியில் அந்தத் தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தில் ஒரு ஆறு பாய்ந்தோடியது. அது நான்கு ஆறுகளாகப் பிரிந்தது. அந்த ஒவ்வொன்றின் பெயரையும் பைபிள் சொல்கிறது. அவை எந்தத் திசையில் ஓடின என்றும் சுருக்கமாகச் சொல்கிறது. இந்த விவரங்களை வைத்து ஏதேன் தோட்டம் அமைந்திருந்த இடத்தைக் கண்டுபிடிக்க பைபிள் நிபுணர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள், ஆனால் அவர்களால் முடியவில்லை. அதற்காக, ஏதேன் தோட்டம் என்ற ஒன்று இல்லவே இல்லை என சொல்ல முடியுமா?

இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: ஏதேன் தோட்டத்தில் அந்தச் சம்பவங்களெல்லாம் நடந்து கிட்டத்தட்ட 6000 வருஷங்கள் ஆகிவிட்டன. இவ்வளவு காலமாக நிறைய விஷயங்கள் மாறியிருக்கும். உதாரணத்துக்கு, அந்த ஆறுகள் பாய்ந்தோடும் திசை மாறியிருக்கும். அதோடு, அந்தப் பகுதி நிறைய நிலநடுக்கங்கள் ஏற்படும் பகுதியாக இருப்பதால் அதன் நில அமைப்பும் மாறியிருக்கும். நோவா காலத்தில் வந்த பெருவெள்ளத்தினாலும் அங்கே நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். * அதனால், ஏதேன் தோட்டம் எங்கே அமைந்திருந்தது என்பதை நம்மால் துல்லியமாகச் சொல்ல முடியாது. அந்தத் தோட்டத்தைப் பற்றி மோசே எழுதியபோது அந்தத் தோட்டமே இல்லை என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

ஆனால், ஏதேன் தோட்டத்தைப் பற்றிய சில விவரங்கள் நமக்குத் தெரியும். அது நிஜமான ஒரு இடம் என்று ஆதியாகமப் புத்தகம் சொல்கிறது. ஏதேனில் ஓடிய நான்கு ஆறுகளில் இரண்டு, அதாவது யூப்ரடிஸ் மற்றும் டைகிரீஸ் (இதெக்கேல்), இன்றுவரை ஓடுகின்றன. அவை உருவாகும் இடங்களும் பக்கத்துப் பக்கத்தில்தான் இருக்கின்றன. அந்த ஆறுகள் எந்த இடங்கள் வழியாக ஓடின என்றும், அங்கே என்ன இயற்கை வளங்கள் கிடைத்தன என்றும் பைபிள் சொல்கிறது. அன்றிருந்த இஸ்ரவேலர்களுக்கு இந்த விவரங்கள் நன்றாகப் புரிந்திருக்கும்.

கட்டுக்கதைகளிலும் கற்பனைக் கதைகளிலும் இதுபோன்ற விவரங்கள் இருக்குமா? “ஒரு காலத்தில், ஒரு ஊரில்” என்றெல்லாம்தான் கற்பனைக் கதைகளில் வரும். ஆனால், சரித்திரப் பதிவுகளில் துல்லியமான விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். ஏதேன் தோட்டத்தைப் பற்றிய பைபிள் பதிவும் அப்படிப்பட்ட விவரங்களைத்தான் தருகிறது.

2. ஆதாமை மண்ணிலிருந்தும், ஏவாளை ஆதாமின் விலா எலும்பிலிருந்தும் கடவுள் படைத்தார் என்பதை நம்ப முடியுமா?

மண்ணில் இருக்கும் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன் போன்ற பல தனிமங்கள் மனித உடலிலும் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால், அந்தத் தனிமங்களெல்லாம் சேர்ந்து ஒரு மனிதனாக உருவானது எப்படி?

உயிர் தானாக உருவானது என்று நிறைய விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ரொம்பவும் எளிமையான உயிர் வகைகளிலிருந்து ரொம்பவும் சிக்கலான உயிர் வகைகள் படிப்படியாக உருவானதாகவும், அதற்கு லட்சக்கணக்கான வருஷங்கள் எடுத்ததாகவும் சொல்கிறார்கள். ஆனால், “எளிமை” என்ற வார்த்தையை அவர்கள் சொல்வதே சரியானது கிடையாது. ஏனென்றால், எல்லா உயிரினங்களுக்கும், சொல்லப்போனால் நுண்ணோக்கியில் தெரியும் ஒற்றை செல் உயிரிகளுக்கும்கூட, ரொம்பவே சிக்கலான வடிவமைப்புதான் இருக்கிறது. ஒரு உயிரினம் தானாக உருவானது என்பதற்கோ, தானாக உருவாக முடியும் என்பதற்கோ எந்த விதமான அத்தாட்சியும் கிடையாது. உண்மையில், நம்மைவிடப் பல மடங்கு அறிவுள்ள ஒருவர்தான் எல்லா உயிரினங்களையும் உருவாக்கியிருக்கிறார் என்பதற்குப் பலமான அத்தாட்சி இருக்கிறது. *ரோமர் 1:20.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: நீங்கள் இனிமையான ஓர் இசையைக் கேட்டு மயங்குகிறீர்கள்… ஓர் அழகான ஓவியத்தைப் பார்த்து ரசிக்கிறீர்கள்… சிக்கலான ஒரு இயந்திரத்தைப் பார்த்து ஆச்சரியப்படுகிறீர்கள்… இந்த இசையும் ஓவியமும் இயந்திரமும் தானாகவே வந்துவிட்டது என்று சொல்வீர்களா? கண்டிப்பாகச் சொல்ல மாட்டீர்கள்! மனிதன் உருவாக்கிய இதெல்லாம் அதிசயமானதுதான், ஆனால் இவை எல்லாவற்றையும்விடப் பல மடங்கு அதிசயமானதுதான் மனிதனின் உடலமைப்பு. அப்படியிருக்கும்போது, அது எப்படித் தானாக வந்திருக்க முடியும்? அதோடு, பூமியில் எத்தனையோ உயிரினங்கள் இருந்தாலும் மனிதர்களால் மட்டும்தான் இசையையும், கலைவேலைப்பாடுகளையும், தொழில்நுட்பத்தையும் உருவாக்க முடிகிறது. ஏனென்றால், மனிதர்கள் மட்டும்தான் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டதாக ஆதியாகமப் புத்தகம் சொல்கிறது. (ஆதியாகமம் 1:26) கடவுளுடைய சாயலில் இருக்கும் மனிதனாலேயே இதையெல்லாம் உருவாக்க முடிகிறது என்றால், கடவுளால் இன்னும் எவ்வளவு பெரிய விஷயங்களை உருவாக்க முடியும்!

அப்படியென்றால், மனிதனுடைய ஒரு விலா எலும்பை எடுத்து ஒரு பெண்ணை உருவாக்குவது கடவுளுக்கு ஒரு பெரிய விஷயமே கிடையாது. * பெண்ணை வேறு விதத்திலும்கூட கடவுளால் உருவாக்கியிருக்க முடியும். ஆனால், இந்த விதத்தில் உருவாக்கியதற்கு ஒரு அழகான அர்த்தம் இருந்தது. ஆணும் பெண்ணும் கல்யாணம் செய்துகொண்டு, ‘ஒரே உடலாக’ இருக்க வேண்டுமென்று கடவுள் விரும்பினார். (ஆதியாகமம் 2:24) அவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசையாக இருந்து, நெருக்கமான பந்தத்தை அனுபவிக்கும் விதத்தில் கடவுள் அவர்களைப் படைத்தது, அவர் எவ்வளவு அன்பானவர், ஞானமுள்ளவர் என்பதைக் காட்டுகிறது, இல்லையா?

ஒரே மனித ஜோடியிலிருந்துதான் எல்லா மனிதர்களும் வந்ததாக நிறைய நிபுணர்கள்கூட நம்புகிறார்கள். அப்படியென்றால், படைப்பைப் பற்றி பைபிள் சொல்வதை நாம் தாராளமாக நம்பலாம்.

3. நன்மை தீமை அறிவதற்கான மரத்தையும் வாழ்வுக்கான மரத்தையும் பற்றி பைபிள் சொல்வது வெறும் கதைதான்.

அந்த மரங்களுக்கு ஏதோ விசேஷ சக்தி இருந்ததாக ஆதியாகமப் புத்தகம் சொல்வதில்லை. ஆனால், அந்த இரண்டு மரங்களும் இரண்டு முக்கியமான விஷயங்களுக்கு அடையாளமாக இருந்தன.

இதைப் புரிந்துகொள்வதற்கு ஒரு உதாரணத்தை எடுத்துக்கொள்ளலாம். ஒருவர்மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப்படுகிறது என்றால், அவர் நீதிமன்றத்தில் இருக்கும் சுவர்களையும் பொருள்களையும் அவமதித்ததாக அர்த்தமா? இல்லை! அந்த நீதிமன்றம் எதற்கு அடையாளமாக இருக்கிறதோ அதைத்தான், அதாவது நீதித்துறையைத்தான், அவர் அவமதித்ததாக அர்த்தம். அதேபோல், ஒருவருடைய சிம்மாசனம் அல்லது கிரீடம் பறிபோய்விட்டது என்று சொன்னால், அவருடைய அதிகாரம் பறிபோய்விட்டது என்றுதான் அர்த்தம்.

அப்படியென்றால், அந்த இரண்டு மரங்கள் எதற்கு அடையாளமாக இருந்தன? இதைப் பற்றிப் பலர் பல விதமாகச் சொல்கிறார்கள். ஆனால், உண்மை எளிமையானது, அதைத் தெரிந்துகொள்வது ரொம்ப முக்கியமானது. நன்மை தீமை அறிவதற்கான மரம், கடவுளுக்கு மட்டுமே இருக்கும் ஒரு உரிமைக்கு அடையாளமாக இருந்தது. அதாவது, நல்லது எது கெட்டது எது என்று தீர்மானிக்கும் உரிமைக்கு அடையாளமாக இருந்தது. (எரேமியா 10:23) ஆதாம் ஏவாள் அந்த மரத்தின் பழத்தைச் சாப்பிட்டபோது தங்களுக்கு உரிமை இல்லாத ஒன்றைச் செய்தார்கள். அதனால்தான் அது ஒரு பெரிய குற்றமாக இருந்தது! வாழ்வுக்கான மரம், கடவுளைத் தவிர வேறு யாரும் கொடுக்க முடியாத ஓர் அன்பளிப்புக்கு, அதாவது முடிவில்லாத வாழ்வுக்கு, அடையாளமாக இருந்தது.—ரோமர் 6:23.

4. ஒரு பாம்பு பேசுவதெல்லாம் நம்புகிற மாதிரி இல்லை.

பாம்பு பேசியதைப் பற்றிப் படிக்கும்போது முதலில் நமக்குக் குழப்பமாக இருக்கலாம். ஆனால், பைபிளின் மற்ற பகுதிகளைப் படிக்கும்போது ஏதேன் தோட்டத்தில் உண்மையிலேயே என்ன நடந்ததென்று புரிந்துகொள்ள முடியும்.

பாம்பு பேசியதாகச் சொல்லப்படுவதைப் புரிந்துகொள்வது அன்று இருந்த இஸ்ரவேலர்களுக்குக் கஷ்டமாக இருந்திருக்காது. ஏனென்றால், இதேபோன்ற மற்ற சம்பவங்களைப் பற்றி அவர்களுக்குத் தெரிந்திருந்தது. உதாரணத்துக்கு, ஒரு தேவதூதர் பிலேயாமின் கழுதையைப் பேச வைத்ததைப் பற்றி மோசே எழுதியிருந்தார். அதனால், மிருகங்கள் பேசுவதுபோல் தேவதூதர்களால் செய்ய முடியும் என்பது இஸ்ரவேலர்களுக்குத் தெரிந்திருந்தது.—எண்ணாகமம் 22:26-31; 2 பேதுரு 2:15, 16.

கடவுளுடைய எதிரிகளான கெட்ட தேவதூதர்களாலும்கூட இதுபோன்ற அற்புதங்களைச் செய்ய முடியுமா? மோசேயைப் போலவே எகிப்திலிருந்த மந்திரவாதிகளும் சில அற்புதங்களைச் செய்ததாக பைபிள் சொல்கிறது. உதாரணத்துக்கு, அவர்கள் ஒரு கோலைப் பாம்பாக மாற்றினார்கள். அந்த அற்புதத்தைச் செய்யும் சக்தியை அவர்களுக்குக் கொடுத்தது கெட்ட தேவதூதர்கள்தான்.—யாத்திராகமம் 7:8-12.

இதையெல்லாம் எழுதிய மோசேதான் பைபிளில் இருக்கும் யோபு புத்தகத்தையும் எழுதியதாகத் தெரிகிறது. கடவுளுடைய முக்கிய எதிரியான சாத்தானைப் பற்றி அந்தப் புத்தகத்தில் நிறைய தெரிந்துகொள்கிறோம். கடவுளுடைய மக்கள் அவருக்கு எப்போதும் கீழ்ப்படிவார்களா என்று அவன் கேள்வி எழுப்பியதைப் பற்றி அதில் சொல்லப்பட்டிருக்கிறது. (யோபு 1:6-11; 2:4, 5) அதனால், ஏவாளைக் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல்போக வைப்பதற்காக சாத்தான்தான் பாம்பைப் பயன்படுத்திப் பேசியிருப்பான் என்று அன்றிருந்த இஸ்ரவேலர்கள் நினைத்திருப்பார்களா? அதற்கு வாய்ப்பு இருக்கிறது.

உண்மையிலேயே சாத்தான்தான் பாம்பைப் பயன்படுத்திப் பேசியிருப்பானா? அவன் “பொய்யனும் பொய்க்குத் தகப்பனுமாக இருக்கிறான்” என்று இயேசு சொன்னார். (யோவான் 8:44) ‘பொய்க்குத் தகப்பன்தான்’ முதல்முதலில் பொய் சொல்லியிருப்பான், இல்லையா? ஏவாளிடம் பாம்பு சொன்னதுதான் முதல் பொய். ஒரு மரத்தின் பழத்தைச் சாப்பிட்டால் அவர்கள் செத்துப்போய்விடுவார்கள் என்று கடவுள் சொல்லியிருந்தும் பாம்பு அதற்கு நேர்மாறாகச் சொன்னது. “நீங்கள் கண்டிப்பாகச் செத்துப்போக மாட்டீர்கள்” என்று சொன்னது. (ஆதியாகமம் 3:4) அந்தப் பாம்புக்குப் பின்னாலிருந்து பேசியது சாத்தான்தான் என்பது இயேசுவுக்கு நன்றாகத் தெரியும். அப்போஸ்தலன் யோவானுக்கு இயேசு வெளிப்படுத்திய விஷயம் இதை உறுதி செய்கிறது. அதில் சாத்தானை ‘பழைய பாம்பு’ என்று அவர் குறிப்பிட்டார்.—வெளிப்படுத்துதல் 1:1; 12:9.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஒரு பொம்மை பேசுவதுபோல் தெரிவதற்காக அதன் பின்னாலிருந்து சில கலைஞர்கள் பேசுகிறார்கள். மனிதர்களாலேயே இப்படிச் செய்ய முடிகிறது என்றால், சக்தியுள்ள ஒரு தேவதூதனால் ஒரு பாம்புக்குப் பின்னாலிருந்து பேசியிருக்க முடியாதா?

மறுக்க முடியாத அத்தாட்சி

ஆதியாகமப் புத்தகத்தில் இருப்பதெல்லாம் உண்மை என்பதற்கு மறுக்க முடியாத அத்தாட்சி இருக்கிறது.

இயேசு கிறிஸ்துவை “நம்பகமான, உண்மையான சாட்சி” என்று பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 3:14) பரிபூரண மனிதராக இருந்ததால் அவர் பொய் சொன்னதும் இல்லை, உண்மையைத் திரித்துச் சொன்னதும் இல்லை. அதுமட்டுமல்ல, பூமிக்கு வருவதற்கு ரொம்பக் காலத்துக்கு முன்பே அவர் பரலோகத்தில் வாழ்ந்ததாகச் சொன்னார். அதுவும், ‘உலகம் உண்டாவதற்கு முன்பே’ தன் தகப்பனாகிய யெகோவாவோடு பரலோகத்தில் வாழ்ந்ததாகச் சொன்னார். (யோவான் 17:5) அதனால், பூமியில் மனிதர்கள் படைக்கப்பட்டபோது அவர் ஏற்கெனவே பரலோகத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார். அவரே என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்க்கலாம்.

திருமண ஏற்பாட்டைப் பற்றி இயேசு பேசியபோது, ஆதாமையும் ஏவாளையும் கற்பனைக் கதாபாத்திரங்களாக நினைத்து அவர் பேசவில்லை, நிஜமான ஆட்களாக நினைத்துத்தான் பேசினார். (மத்தேயு 19:3-6) ஆதாம் ஏவாளும் ஏதேன் தோட்டமும் உண்மையே இல்லையென்றால், இயேசு ஏமாந்துவிட்டார் என்று அர்த்தம் அல்லது அவர் பொய் சொன்னார் என்று அர்த்தம். ஆனால், இந்த இரண்டுக்குமே வாய்ப்பு இல்லை! ஏதேன் தோட்டத்தில் நடந்த எல்லாவற்றையும் இயேசு பரலோகத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார். அவர் சொல்வதைவிட நம்பகமான அத்தாட்சி வேறென்ன இருக்க முடியும்!

உண்மையில், ஏதேன் தோட்டத்தைப் பற்றி ஆதியாகமப் புத்தகம் சொல்வதை நாம் நம்பவில்லை என்றால், இயேசு மீதே நமக்கு விசுவாசம் இல்லாததுபோல் ஆகிவிடும். அதுமட்டுமல்ல, பைபிளில் இருக்கும் ரொம்ப முக்கியமான விஷயங்களையும் வாக்குறுதிகளையும் புரிந்துகொள்ள முடியாமல் போய்விடும். எப்படி என்று பார்க்கலாம்.

[அடிக்குறிப்புகள்]

^ பாரா. 3 கடவுளுடைய பெயர் யெகோவா என்று பைபிள் சொல்கிறது.

^ பாரா. 7 பைபிள் அப்படிச் சொல்வதில்லை. கடவுள் படைத்த எல்லாமே பரிபூரணமாக இருந்தது என்றும், பிற்பாடுதான் நிலைமை மாறியது என்றும் பைபிள் சொல்கிறது. (உபாகமம் 32:4, 5) பூமியிலுள்ள எல்லாவற்றையும் யெகோவா படைத்த பிறகு “எல்லாமே மிகவும் நன்றாக இருந்தன” என்று அது சொல்கிறது.–ஆதியாகமம் 1:31.

^ பாரா. 9 அநேகமாக, கடவுள் கொண்டுவந்த பெருவெள்ளம் ஏதேன் தோட்டத்தைத் துடைத்தழித்திருக்கும். இயேசு தோன்றியதற்குக் கிட்டத்தட்ட 600 வருஷங்களுக்கு முன்பே ‘ஏதேனின் மரங்கள்’ இல்லை என்பதை எசேக்கியேல் 31:18 காட்டுகிறது. அதனால், ஏதேன் தோட்டத்தைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தவர்களுக்குத் தோல்விதான் மிஞ்சியது.

^ பாரா. 14 யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்டிருக்கும் உயிரின் தோற்றம்—சிந்திக்க ஐந்து கேள்விகள் என்ற சிறு புத்தகத்தைப் பாருங்கள்.

^ பாரா. 16 மற்ற எலும்புகளுக்கு இல்லாத விசேஷ திறன் விலா எலும்புக்கு இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது, ஒரு விலா எலும்பை எடுத்துவிட்டால் அந்த இடத்தில் புதிதாக ஒரு விலா எலும்பு வளர முடியும் என்று சொல்கிறார்கள்.