Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘கடவுளுடைய சக்தி பிறப்பிக்கிற குணங்களால்’ அவரை மகிமைப்படுத்துங்கள்

‘கடவுளுடைய சக்தி பிறப்பிக்கிற குணங்களால்’ அவரை மகிமைப்படுத்துங்கள்

‘கடவுளுடைய சக்தி பிறப்பிக்கிற குணங்களால்’ அவரை மகிமைப்படுத்துங்கள்

‘நீங்கள் தொடர்ந்து அதிகமாகக் கனி கொடுப்பதால் . . . என் தகப்பன் மகிமைப்படுகிறார்.’ —யோவா. 15:8.

1, 2. (அ) மற்றவர்களை உற்சாகப்படுத்த நமக்கு என்ன வாய்ப்புகள் இருக்கின்றன? (ஆ) யெகோவாவுக்குச் சேவை செய்வதற்கான திறமைகளை மெருகூட்ட அவர் என்ன பரிசைக் கொடுக்கிறார்?

 பின்வரும் இரண்டு சூழ்நிலைகளைக் கவனியுங்கள். ஓர் இளம் சகோதரி கவலையாக இருப்பதை ஒரு முதிர்ந்த சகோதரி கவனிக்கிறார். அவருடன் சேர்ந்து ஊழியம் செய்ய விரும்புவதாகச் சொல்கிறார். ஊழியத்தின்போது, அந்த இளம் சகோதரி தன் மனதை வாட்டுகிற கவலைப் பற்றி அந்தச் சகோதரியிடம் சொல்கிறார். பின்னர் அந்த நாளில் ஜெபம் செய்யும்போது, அந்த முதிர்ந்த சகோதரி காட்டிய அன்புக்கும் அக்கறைக்கும் இந்த இளம் சகோதரி யெகோவாவுக்கு நன்றி தெரிவிக்கிறார்; அதுதான் அப்போது அவருக்குத் தேவைப்பட்டது. இன்னொரு இடத்தில், ஒரு தம்பதியர் அயல் நாட்டில் ஊழியம் செய்துவிட்டு சமீபத்தில்தான் வீடு திரும்பியிருக்கிறார்கள். சகோதரர்கள் கூடிவந்திருந்த ஒரு சமயத்தில், தங்கள் அனுபவங்களை உற்சாகம் பொங்கச் சொல்வதை ஓர் இளம் சகோதரர் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார். சில வருடங்களுக்குப் பிறகு, அயல் நாட்டில் ஊழியம் செய்ய அவர் புறப்படுகையில், அந்தத் தம்பதியரையும் அவர்கள் சொன்னதைக் கேட்டு மிஷனரி ஆக வேண்டுமென்ற ஆசை தனக்குள் பிறந்ததையும் பற்றி நினைத்துப் பார்க்கிறார்.

2 ஒருவேளை இந்தச் சூழ்நிலைகள், உங்கள் வாழ்க்கையை மாற்றிய ஒருவரை அல்லது உங்களைப் பார்த்து வாழ்க்கையை மாற்றிக்கொண்ட ஒருவரை உங்களுக்கு நினைப்பூட்டலாம். பொதுவாக, ஒருமுறை பேசினாலே ஒருவருடைய வாழ்க்கை மாறிவிடாதுதான்; ஆனால், ஒவ்வொரு நாளும் மற்றவர்களை உற்சாகப்படுத்தவும் பலப்படுத்தவும் நமக்கு வாய்ப்புகள் இருக்கின்றன. உங்கள் திறமைகளையும் குணங்களையும் மெருகூட்டி, சகோதர சகோதரிகளுக்கும் கடவுளுக்கும் உங்களை அதிக பயனுள்ளவர்களாக ஆக்கும் ஒன்று இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அப்படியொன்று இருக்கிறது; அதுதான் கடவுளுடைய சக்தி. அதை யெகோவா நமக்குப் பரிசாகக் கொடுக்கிறார். (லூக். 11:13) கடவுளுடைய சக்தி நம்மிடம் செயல்படும்போது, அருமையான குணங்களை அது நமக்குள் பிறப்பிக்கிறது; ஊழியத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் சிறப்பாகச் செய்ய அந்தக் குணங்கள் நமக்கு உதவுகின்றன. அது எப்பேர்ப்பட்ட அருமையான பரிசு!கலாத்தியர் 5:22, 23-ஐ வாசியுங்கள்.

3. (அ) ‘கடவுளுடைய சக்தி பிறப்பிக்கிற குணங்களை’ வளர்த்துக்கொள்வது அவருக்கு எப்படி மகிமை சேர்க்கிறது? (ஆ) என்ன கேள்விகளுக்கான பதில்களை இப்போது சிந்திப்போம்?

3 அந்தச் சக்தி பிறப்பிக்கிற குணங்கள், அதன் ஊற்றுமூலரான யெகோவா தேவனுடைய சுபாவத்தை வெளிப்படுத்துகின்றன. (கொலோ. 3:9, 10) கிறிஸ்தவர்கள் ஏன் கடவுளைப் பின்பற்ற முயற்சி செய்ய வேண்டும் என்பதற்கான முக்கியக் காரணத்தை இயேசு தம்முடைய சீடர்களிடம் பின்வருமாறு சொன்னார்: ‘நீங்கள் தொடர்ந்து அதிகமாகக் கனி கொடுப்பதால் . . . என் தகப்பன் மகிமைப்படுகிறார்.’ * (யோவா. 15:8) நாம் ‘கடவுளுடைய சக்தி பிறப்பிக்கிற குணங்களை’ வளர்த்துக்கொள்ளும்போது அது நம்முடைய பேச்சிலும் செயலிலும் பளிச்செனத் தெரியும்; அதோடு, நம் கடவுளுக்கு மகிமையையும் சேர்க்கும். (மத். 5:16) சாத்தானுடைய உலகில் காணப்படுகிற குணங்கள் கடவுளுடைய சக்தி பிறப்பிக்கிற குணங்களிலிருந்து எவ்வழிகளில் வேறுபடுகின்றன? கடவுளுடைய சக்தி பிறப்பிக்கிற குணங்களை நாம் எப்படி வளர்த்துக்கொள்ளலாம்? அவற்றை வளர்த்துக்கொள்வது ஏன் கஷ்டமாக இருக்கலாம்? அந்தச் சக்தி பிறப்பிக்கிற குணங்களில் அன்பு, சந்தோஷம், சமாதானம் ஆகிய மூன்று குணங்களைப் பற்றி இப்போது ஆராய்கையில் இந்தக் கேள்விகளுக்கான பதில்களைச் சிந்திப்போம்.

கடவுளுடைய அன்பைப் போன்ற அன்பு

4. எப்படிப்பட்ட அன்பைக் காட்டும்படி இயேசு தம் சீடர்களிடம் சொன்னார்?

4 கடவுளுடைய சக்தி பிறப்பிக்கிற அன்பு, இந்த உலகத்தில் காணப்படுகிற அன்பிலிருந்து முற்றிலும் வித்தியாசப்பட்டது. எப்படி? இது கடவுளுடைய அன்பைப் போன்றது. இந்த வித்தியாசத்தை இயேசு தம்முடைய மலைப் பிரசங்கத்தில் விளக்கிக் காட்டினார். (மத்தேயு 5:43-48-ஐ வாசியுங்கள்.) பாவிகள்கூட மற்றவர்கள் தங்களிடம் எப்படி நடந்துகொள்கிறார்களோ அப்படியே மற்றவர்களிடம் நடந்துகொள்கிறார்கள் என்று இயேசு சொன்னார். தங்களிடம் காட்டப்பட்ட தயவுக்குக் கைமாறாகக் காட்டப்படுகிற அத்தகைய “அன்பு” சுயதியாக அன்பல்ல. நாம் ‘நம்முடைய பரலோகத் தகப்பனின் பிள்ளைகளாக இருக்க’ விரும்பினால், வித்தியாசமாக நடந்துகொள்ள வேண்டும். மற்றவர்கள் நம்மிடம் நடந்துகொள்கிற விதமாகவே நாமும் அவர்களிடம் நடந்துகொள்வதற்குப் பதிலாக, யெகோவா அவர்களை எப்படிக் கருதுகிறாரோ, நடத்துகிறாரோ அப்படியே நாமும் கருத வேண்டும், நடத்த வேண்டும். அப்படியென்றால், இயேசு சொன்னதுபோல் நம்முடைய எதிரிகளிடம் அன்பு காட்ட முடியுமா?

5. நம்மைத் துன்புறுத்துகிறவர்களிடம் நாம் எப்படி அன்பு காட்டலாம்?

5 ஒரு பைபிள் உதாரணத்தைக் கவனியுங்கள். பவுலும் சீலாவும் பிலிப்பி நகரத்தில் பிரசங்கித்தபோது எதிரிகள் அவர்களைக் கைதுசெய்தார்கள், அடித்து நொறுக்கினார்கள், உட்சிறையில் தள்ளினார்கள்; அங்கே சிறைக்காவலர் அவர்களுடைய கால்களைத் தொழுமரத்தில் பூட்டி வைத்தார். அவரும் அவர்களை மோசமாக நடத்தியிருக்கலாம். பூகம்பத்தினால் எதிர்பாராத விதமாக அவர்கள் விடுவிக்கப்பட்டபோது, அந்தச் சிறைக்காவலரைப் பழிவாங்க வாய்ப்பு கிடைத்ததாக நினைத்துச் சந்தோஷப்பட்டார்களா? இல்லை. அவர் மீதிருந்த உள்ளான அக்கறையால், ஆம் சுயதியாக அன்பினால், அவர் தற்கொலை செய்துகொள்ளாதபடி அவரைத் தடுத்தார்கள்; அதன் விளைவாக, அந்தச் சிறைக்காவலரும் அவருடைய வீட்டார் அனைவரும் கிறிஸ்தவர்களானார்கள். (அப். 16:19-34) அதேபோல், இன்றும் நம் சகோதரர்களில் அநேகர் ‘துன்புறுத்துகிறவர்களை ஆசீர்வாதிக்கும்படி கேட்கிறார்கள்.’—ரோ. 12:14.

6. நம்முடைய சகோதரர்களிடம் நாம் எவ்வழிகளில் சுயதியாக அன்பைக் காட்டலாம்? (பக்கம் 21-லுள்ள பெட்டியைப் பாருங்கள்.)

6 அப்படியானால், சக கிறிஸ்தவர்களிடம் நாம் இன்னும் அதிக அன்பு காட்ட வேண்டும், அல்லவா? “நம் சகோதரர்களுக்காக நம்முடைய உயிரைக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.” (1 யோவான் 3:16-18-ஐ வாசியுங்கள்.) என்றாலும், சின்னச் சின்ன விஷயங்களில் நம்முடைய அன்பைக் காட்டலாம். உதாரணத்திற்கு, நாம் சொன்னதோ செய்ததோ ஒரு சகோதரரைப் புண்படுத்திவிட்டால், சமாதானமாவதற்கு நாமாகவே முன்வருவதன் மூலம் அன்பைக் காட்டலாம். (மத். 5:23, 24) நம்மை யாராவது புண்படுத்திவிட்டால்? ‘மன்னிக்க மனமுள்ளவராய்’ இருக்கிறோமா அல்லது சில சமயங்களில் மனதில் வன்மத்தை வளர்க்கிறோமா? (சங். 86:5, NW) கடவுளுடைய சக்தி பிறப்பிக்கிற ஆழ்ந்த அன்பு என்ற குணத்தால் மற்றவர்கள் செய்கிற சின்னச் சின்ன தவறுகளை மூடமுடியும்; நம் தவறுகளை ‘யெகோவா தாராளமாக மன்னித்ததுபோல்’ அவர்களுடைய தவறுகளைத் தாராளமாக மன்னிக்க முடியும்.—கொலோ. 3:13, 14; 1 பே. 4:8.

7, 8. (அ) கடவுள் மீதுள்ள அன்பு எப்படி மனிதர் மீதுள்ள அன்புடன் சம்பந்தப்பட்டுள்ளது? (ஆ) யெகோவா மீதுள்ள நம் அன்பை எப்படி அதிகரிக்கலாம்? (கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.)

7 நம்முடைய சகோதரர்களிடம் நாம் எப்படிச் சுயதியாக அன்பை வளர்த்துக்கொள்ளலாம்? கடவுள் மீதுள்ள அன்பை அதிகரிப்பதன் மூலம் வளர்த்துக்கொள்ளலாம். (எபே. 5:1, 2; 1 யோ. 4:9-11, 20, 21) பைபிள் வாசிக்கும்போது, தியானிக்கும்போது, ஜெபிக்கும்போது நாம் யெகோவாவுடன் அன்னியோன்னியத்தில் ஐக்கியமாகிவிடுகிறோம்; அது நம்மை உற்சாகப்படுத்தி, பரலோகத் தகப்பன் மீதுள்ள நம் அன்பை அதிகரிக்கும். என்றாலும், கடவுளிடம் நெருங்கி வருவதற்கு நாம் நேரத்தை விலைகொடுத்து வாங்க வேண்டும்.

8 உதாரணத்திற்கு, ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட சமயத்தில் மட்டுமே உங்களால் பைபிளை வாசிக்கவும், வாசித்ததைத் தியானிக்கவும், யெகோவாவிடம் ஜெபிக்கவும் முடியுமென வைத்துக்கொள்ளுங்கள். யெகோவாவுடன் செலவிடுவதற்கான அந்தச் சமயத்தை எதுவும் அபகரிக்காதபடி பொக்கிஷம்போல் பாதுகாப்பீர்கள், அல்லவா? சொல்லப்போனால், நாம் கடவுளிடம் ஜெபிப்பதை யாரும் தடுக்க முடியாது; அதோடு, நம்மில் அநேகரால் விரும்புகிற நேரத்தில் பைபிளை வாசிக்க முடியும். ஆனாலும், கடவுளுடன் நாம் செலவிடுகிற அந்தச் சமயத்தை எண்ணற்ற பிற வேலைகள் அபகரித்துவிடாதிருக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கலாம். யெகோவாவிடம் நெருங்கி வருவதற்கு எந்தளவு முடியுமோ அந்தளவு நேரத்தைத் தினமும் விலைகொடுத்து வாங்குகிறீர்களா?

‘கடவுளுடைய சக்தியினால் கிடைக்கிற சந்தோஷம்’

9. கடவுளுடைய சக்தி பிறப்பிக்கிற சந்தோஷத்தின் சிறப்பம்சம் என்ன?

9 கடவுளுடைய சக்தி பிறப்பிக்கிற குணங்களின் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் அவை நீடித்து நிலைத்திருக்கும். அடுத்து நாம் சிந்திக்கப்போகிற சந்தோஷம் என்ற குணம் இதை நிரூபித்துக் காட்டுகிறது. சந்தோஷம் என்பது சாதகமற்ற சூழலையும் சமாளித்து செழித்தோங்கி வளருகிற பலமுள்ள தாவரத்தைப் போன்றது. உலகெங்குமுள்ள உண்மைக் கிறிஸ்தவர்களில் அநேகர் ‘பயங்கர உபத்திரவத்தின் மத்தியிலும், கடவுளுடைய வார்த்தையை அவருடைய சக்தியினால் கிடைக்கிற சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.’ (1 தெ. 1:6) இன்னும் சிலர் இன்னல்களையும் இழப்புகளையும் சந்திக்கிறார்கள். என்றாலும், ‘எல்லாவற்றையும் சகித்துக்கொள்வதற்கும் நீடிய பொறுமையைச் சந்தோஷத்தோடு காண்பிப்பதற்கும்’ யெகோவா தம்முடைய சக்தியின் மூலம் அவர்களுக்கு உதவுகிறார். (கொலோ. 1:11) அந்தச் சந்தோஷத்திற்கு ஆதாரம் என்ன?

10. நம் சந்தோஷத்திற்கு ஆதாரம் என்ன?

10 சாத்தானுடைய உலகத்தின் ‘நிலையற்ற செல்வங்களைப்’ போல் அல்லாமல், யெகோவாவிடமிருந்து நாம் பெற்றிருக்கிற ஆன்மீகப் பொக்கிஷங்கள் நிலையானவை. (1 தீ. 6:17; மத். 6:19, 20) முடிவில்லா வாழ்வு எனும் சந்தோஷமான எதிர்பார்ப்பை அவர் நமக்கு அளித்திருக்கிறார். உலகளாவிய சகோதரத்துவத்தின் பாகமாக இருக்கும் சந்தோஷத்தையும் அளித்திருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, கடவுளோடுள்ள பந்தமே நம்முடைய சந்தோஷத்திற்கு ஆதாரம். நாடோடிபோல் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட தாவீது, யெகோவாவைப் புகழ்ந்து இவ்வாறு பாடினார்: ‘ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும். என் ஜீவனுள்ளமட்டும் நான் உம்மைத் துதிப்பேன்’; அவ்வாறே நாமும் யெகோவாவைப் புகழத் தூண்டப்படுகிறோம். (சங். 63:3, 4) கஷ்டங்களின் மத்தியிலும் சந்தோஷத்துடன் கடவுளைத் துதிக்க வேண்டுமென்ற ஆவல் நம் இதயத்தில் பொங்கிவழிகிறது, அல்லவா?

11. சந்தோஷத்தோடு யெகோவாவுக்குச் சேவை செய்வது ஏன் முக்கியம்?

11 அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவர்களை இவ்வாறு ஊக்கப்படுத்தினார்: “நம் எஜமானருடைய சேவையில் எப்போதும் மனமகிழ்ச்சியாக இருங்கள்; மறுபடியும் சொல்கிறேன், மனமகிழ்ச்சியாக இருங்கள்!” (பிலி. 4:4) கிறிஸ்தவர்கள் சந்தோஷத்தோடு யெகோவாவுக்குச் சேவை செய்வது ஏன் முக்கியம்? ஏனென்றால், யெகோவாவுடைய பேரரசாட்சி குறித்து சாத்தான் எழுப்பிய விவாதத்தோடு இது சம்பந்தப்பட்டிருக்கிறது. யாருமே கடவுளுக்கு மனப்பூர்வமாகச் சேவை செய்வதில்லையென அவன் சொல்கிறான். (யோபு 1:9-11) நாம் யெகோவாவுக்குச் சந்தோஷமாகச் சேவை செய்யாமல் ஏதோ கடமைக்காகச் செய்தால், அவருக்குச் செலுத்துகிற புகழ்ச்சி பலி முழுமையானதாய் இருக்காது. எனவே, “மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்த சத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்” என்று சொன்ன சங்கீதக்காரனின் அறிவுரைக்கு நாம் கீழ்ப்படிய முயற்சிக்கிறோம். (சங். 100:2) சந்தோஷமாகவும் மனப்பூர்வமாகவும் நாம் கடவுளுக்குச் சேவை செய்யும்போது அவரை மகிமைப்படுத்துகிறோம்.

12, 13. சோர்வைச் சமாளிக்க நாம் என்ன செய்யலாம்?

12 பக்திவைராக்கியமுள்ள ஊழியர்களும்கூட சில சமயங்களில் சோர்ந்து போய்விடலாம், நம்பிக்கையான மனநிலையைக் காத்துக்கொள்ள போராட வேண்டியிருக்கலாம். (பிலி. 2:25-30) அதுபோன்ற சமயங்களில் எது நமக்கு உதவலாம்? “கடவுளுடைய சக்தியினால் எப்போதும் நிரப்பப்படுங்கள். சங்கீதங்களையும் துதிகளையும் பக்திப் பாடல்களையும் ஒன்றுசேர்ந்து பாடுங்கள்; உங்கள் இருதயத்தில் யெகோவாவைப் புகழ்ந்து இனிய கீதம் பாடுங்கள்” என்று எபேசியர் 5:18, 19 சொல்கிறது. இந்தப் புத்திமதியை நாம் எப்படிப் பின்பற்றலாம்?

13 சோர்வு நம்மை வாட்டும்போது ஜெபத்தில் யெகோவாவிடம் மன்றாடலாம், புகழ்ச்சிக்குரிய விஷயங்களைப் பற்றித் தியானிக்க முயற்சி செய்யலாம். (பிலிப்பியர் 4:6-9-ஐ வாசியுங்கள்.) ராஜ்ய பாடல்களின் இசையுடன் சேர்ந்து மெல்லப் பாடுவது சோர்வைப் போக்கி, சிந்தையைச் சீராக்க உதவியிருப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். கடும் துன்பத்தைச் சந்தித்த ஒரு சகோதரர் அடிக்கடி மனமுடைந்து சோர்ந்து போன சமயங்களில் என்ன செய்தாரென சொல்கிறார்: “தவறாமல் ஊக்கமாய் ஜெபம் செய்ததோடு ராஜ்ய பாடல்கள் சிலவற்றையும் மனப்பாடம் செய்தேன். யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கும் அந்த அழகிய பாடல்களைச் சத்தமாகவோ மனதுக்குள்ளேயோ பாடியபோது மனதுக்கு ஆசுவாசமாக இருந்தது. ஏறக்குறைய அந்தச் சமயத்தில்தான் யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் புத்தகமும் வெளியிடப்பட்டது. ஒரு வருடத்திற்குள் அதை இரண்டு முறை வாசித்து முடித்தேன். அது என் மனதுக்கு ஆறுதலின் அருமருந்தாக இருந்தது. யெகோவா என் முயற்சிகளை ஆசீர்வதித்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டேன்.”

‘சமாதானப் பிணைப்பில் ஒன்றிணைக்கப்படுதல்’

14. கடவுளுடைய சக்தி பிறப்பிக்கிற சமாதானத்தின் ஒரு சிறப்பம்சம் என்ன?

14 சர்வதேச மாநாடுகளில் பல்வேறு பின்னணியைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் கிறிஸ்தவக் கூட்டுறவை சந்தோஷமாய் அனுபவிக்கிறார்கள். இன்று கடவுளுடைய ஜனங்கள் அனுபவிக்கிற சமாதானத்தின் ஓர் அம்சத்தை, உலகளாவிய ஒற்றுமையை, அந்த மாநாடுகள் சிறப்பித்துக் காட்டுகின்றன. ஒருவருக்கொருவர் எதிரிகளாக இருப்பார்களென தாங்கள் நினைத்தவர்கள், ‘கடவுளுடைய சக்தி அருளும் ஒற்றுமையைக் காத்துக்கொள்வதற்கும் சமாதானத்தோடு [“சமாதானப் பிணைப்பில் ஒன்றிணைக்கப்பட்டவர்களாக,” அடிக்குறிப்பு] வாழ்வதற்கும் ஊக்கமாய் முயற்சி செய்வதைப்’ பார்த்து உலகத்தார் வாயடைத்துப் போகிறார்கள். (எபே. 4:3) பல போராட்டங்களின் மத்தியில் இந்தச் சமாதானத்தை அவர்கள் அடைந்திருக்கிறார்கள் என்றால், இதை ஓர் அற்புதம் என்றே சொல்லலாம்.

15, 16. (அ) பேதுருவின் பின்னணி என்ன, அது அவருக்கு எப்படிச் சவாலாக இருந்தது? (ஆ) பேதுரு தன் மனப்பான்மையை மாற்றிக்கொள்ள யெகோவா எப்படி உதவினார்?

15 பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்தவர்களை ஒன்றிணைப்பது சவால்தான். அந்த ஒற்றுமையை அடைய என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வதற்கு முதல் நூற்றாண்டில் வாழ்ந்த அப்போஸ்தலன் பேதுருவின் உதாரணத்தைச் சிந்திப்போம். விருத்தசேதனம் செய்யப்படாத புறதேசத்தாரை அவர் எப்படிக் கருதினார் என்பதை அவருடைய வார்த்தைகளிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்: “ஒரு யூதன் வேறு இனத்தைச் சேர்ந்த ஒருவரைச் சந்திப்பதோ அவருடன் பழகுவதோ எந்தளவுக்கு முறையற்றதென்று உங்களுக்கே நன்றாகத் தெரியும்; ஆனாலும், ஒருவரையும் தீட்டானவர் என்றோ அசுத்தமானவர் என்றோ சொல்லக் கூடாது என்பதைக் கடவுள் எனக்குக் காண்பித்தார்.” (அப். 10:24-29; 11:1-3) அன்று நிலவிய கருத்துக்கு இசைய, சக யூதரிடம் மட்டுமே அன்பு காட்டும்படி திருச்சட்டம் சொல்வதாகச் சிறு வயதிலிருந்து அவர் நம்பி வந்தார். அதனால், புறதேசத்தாரைப் பகைவர்களாகப் பார்ப்பதில் தவறில்லை என்று அவர் நினைத்திருக்கலாம். *

16 கொர்நெலியுவின் வீட்டுக்குள் காலெடுத்து வைக்க பேதுரு எவ்வளவு சங்கோஜப்பட்டிருப்பார் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். புறதேசத்தாரை எதிரிகளாகக் கருதிவந்த ஒருவரால் அவர்களோடு ‘இசைவாக இணைந்து,’ ‘சமாதானத்தோடு வாழ’ முடியுமா? (எபே. 4:3, 16) முடியும், ஏனென்றால் சில நாட்களுக்கு முன்புதான் கடவுளுடைய சக்தி பேதுருவின் மனக்கண்களைத் திறந்தது; தன்னுடைய மனப்பான்மையை மாற்றவும் தப்பெண்ணத்தைக் களையவும் அது அவருக்கு உதவியது. இனம், தேசம் என்ற பாகுபாடெல்லாம் தமக்கு இல்லை என்பதை ஒரு தரிசனத்தின் மூலம் யெகோவா அவருக்குத் தெளிவுபடுத்தினார். (அப். 10:10-15) அதனால்தான், “கடவுள் பாரபட்சம் காட்டாதவர், அவருக்குப் பயந்து நீதியின்படி நடக்கிறவன் எவனோ அவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அவர் ஏற்றுக்கொள்கிறார் என்பதை இப்போது நான் தெளிவாகவே காண்கிறேன்” என்று பேதுரு கொர்நெலியுவிடம் சொன்னார். (அப். 10:34, 35) ஆம், பேதுரு மாறினார், ‘சகோதரர்கள் எல்லாரோடும்’ ஐக்கியமானார்.—1 பே. 2:17.

17. கடவுளுடைய மக்கள் அனுபவிக்கிற ஒற்றுமை ஏன் குறிப்பிடத்தக்கது?

17 இன்று கடவுளுடைய மக்கள் மத்தியில் ஏற்பட்டு வருகிற மாபெரும் மாற்றங்களைப் புரிந்துகொள்ள பேதுருவின் உதாரணம் நமக்கு உதவுகிறது. (ஏசாயா 2:3, 4-ஐ வாசியுங்கள்.) “எல்லாத் தேசங்களையும் கோத்திரங்களையும் இனங்களையும் மொழிகளையும் சேர்ந்த” லட்சக்கணக்கானோர் ‘நன்மையானதும் பிரியமானதும் பரிபூரணமானதுமான கடவுளுடைய சித்தத்திற்கு’ இசைய தங்கள் எண்ணத்தை மாற்றியிருக்கிறார்கள். (வெளி. 7:9; ரோ. 12:2) இவர்களில் அநேகர் ஒருகாலத்தில், சாத்தானுடைய உலகில் காணப்படும் பகைமை, விரோதம், பிரிவினை ஆகியவற்றில் ஊறிப்போயிருந்தார்கள். ஆனால், கடவுளுடைய வார்த்தையைப் படித்ததாலும் அவருடைய சக்தியின் உதவியாலும், “சமாதானத்தை உண்டாக்குகிற காரியங்களை” நாட இப்போது கற்றுக்கொண்டிருக்கிறார்கள். (ரோ. 14:19) இதனால் விளையும் ஒற்றுமை கடவுளுக்கு மகிமை சேர்க்கிறது.

18, 19. (அ) சபையின் சமாதானத்தையும் ஒற்றுமையையும் கட்டிக்காக்க நாம் ஒவ்வொருவரும் எப்படி உதவலாம்? (ஆ) அடுத்த கட்டுரையில் எதை ஆராய்வோம்?

18 கடவுளுடைய மக்கள் மத்தியில் நிலவுகிற சமாதானத்தையும் ஒற்றுமையையும் கட்டிக்காக்க நாம் ஒவ்வொருவரும் எப்படி உதவலாம்? அயல் நாட்டைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் அநேக சபைகளில் இருக்கிறார்கள். அவர்களில் சிலருடைய பழக்கவழக்கங்கள் வித்தியாசமாக இருக்கலாம் அல்லது சிலருக்கு நம்முடைய மொழியை நன்கு பேசத் தெரியாதிருக்கலாம். அவர்களுடன் நெருங்கிப் பழக நாம் முயற்சி செய்கிறோமா? அப்படிச் செய்ய வேண்டுமென கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. யூதர்களிலிருந்தும் புறதேசத்தாரிலிருந்தும் கிறிஸ்தவர்களாக மாறியவர்கள் அடங்கிய ரோம சபைக்கு பவுல் இவ்வாறு எழுதினார்: “கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல் நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்; அப்போது கடவுளுக்கு மகிமை சேர்ப்பீர்கள்.” (ரோ. 15:7) நீங்கள் இன்னும் நெருங்கிப் பழக வேண்டிய யாராவது உங்கள் சபையில் இருக்கிறார்களா?

19 நம்முடைய வாழ்க்கையில் கடவுளுடைய சக்தி செயல்பட நாம் வேறு என்னவெல்லாம் செய்யலாம்? இந்தக் கேள்விக்கான பதிலை அடுத்த கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்; கடவுளுடைய சக்தி பிறப்பிக்கிற மற்ற குணங்களைப் பற்றி அதில் ஆராய்வோம்.

[அடிக்குறிப்புகள்]

^ பாரா. 3 கனி என இயேசு சொன்னது, ‘கடவுளுடைய சக்தி பிறப்பிக்கிற குணங்களையும் [“கனிகளையும்,” அடிக்குறிப்பு],’ நற்செய்தியை அறிவிப்பதன் மூலம் கிறிஸ்தவர்கள் கடவுளுக்குச் செலுத்துகிற ‘உதடுகளின் கனியையும்’ குறிக்கிறது.—எபி. 13:15.

^ பாரா. 15 “பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக” என்று லேவியராகமம் 19:18 சொல்கிறது. “உன் ஜனப்புத்திரர்,” ‘பிறன்’ என்ற வார்த்தைகள் யூதர்களை மட்டுமே குறிப்பதாக யூத மதத் தலைவர்கள் கற்பித்தார்கள். இஸ்ரவேலர் புறதேசத்தாரிலிருந்து விலகியிருக்க வேண்டுமென திருச்சட்டம் கட்டளையிட்டது. ஆனால், முதல் நூற்றாண்டு மதத் தலைவர்கள் கற்பித்த கருத்தை அது ஆதரிக்கவில்லை; அதாவது, யூதரல்லாதவர்கள் எல்லாருமே எதிரிகள், வெறுக்கப்பட வேண்டியவர்கள் என்ற கருத்தை அது ஆதரிக்கவில்லை.

எப்படிப் பதிலளிப்பீர்கள்?

• நம்முடைய சகோதரர்களிடம் நாம் எப்படிச் சுயதியாக அன்பைக் காட்டலாம்?

• சந்தோஷத்தோடு கடவுளுக்குச் சேவை செய்வது ஏன் முக்கியம்?

• சபையின் சமாதானத்தையும் ஒற்றுமையையும் கட்டிக்காக்க நாம் எப்படி உதவலாம்?

[கேள்விகள்]

[பக்கம் 21-ன் பெட்டி]

“இவர்கள்தான் உண்மையான கிறிஸ்தவர்கள்”

போராட்டத்திற்கும் உயிர்த்தியாகத்திற்கும் இடையே—ஹிட்லரின் ஆட்சியில் யெகோவாவின் சாட்சிகள் என்ற ஆங்கில புத்தகத்தில் ஓர் இளம் யூத கைதியின் குறிப்பு காணப்படுகிறது; அவர் நாயன்காமா சித்திரவதை முகாமை அடைந்ததும் முதன்முறையாக யெகோவாவின் சாட்சிகளைச் சந்தித்ததைப் பற்றி அதில் சொல்கிறார்:

“யூதர்களாகிய நாங்கள் டாக்காவ் சித்திரவதை முகாமிலிருந்து இந்த முகாமுக்கு வந்த உடனேயே அங்கிருந்த மற்ற யூதர்கள் தங்களிடமிருந்த எல்லாவற்றையும் ஒளித்து வைக்க ஆரம்பித்தார்கள்; எதையும் எங்களுக்குக் கொடுக்கக்கூடாது என்பதற்காக அப்படிச் செய்தார்கள். . . . [முகாமுக்கு] வெளியே இருந்த காலத்தில் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருந்தோம். இங்கோ, உயிருக்காகப் போராடும் சூழ்நிலையில், ஒவ்வொருவரும் தங்களைக் காப்பாற்றிக்கொள்வதிலேயே குறியாக இருந்தார்கள், மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படவே இல்லை. ஆனால், அந்தச் சமயத்தில் பைபிள் மாணாக்கர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? அவர்கள் ஏற்கெனவே கஷ்டப்பட்டு வேலை செய்துகொண்டிருந்தார்கள், தண்ணீர் குழாய்கள் சிலவற்றைப் பழுதுபார்க்க வேண்டியிருந்தது. அது குளிர்காலமாக இருந்தது; அவர்கள் நாள் முழுக்க ‘ஜில்’ தண்ணீரில் நின்று வேலை செய்தார்கள். இந்தச் சூழ்நிலையை அவர்களால் எப்படிச் சமாளிக்க முடிந்தது என்பதை யாராலுமே புரிந்துகொள்ள முடியவில்லை. யெகோவா தங்களுக்குச் சக்தி கொடுப்பதாகச் சொன்னார்கள். எங்களைப் போலவே அவர்களும் சாப்பிட ரொட்டி கிடைக்காதா என்று ஏங்கினார்கள், அந்தளவுக்கு அகோரப் பசி அவர்களுக்கும். ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? தங்களிடமிருந்த எல்லா ரொட்டிகளையும் சேகரித்து அவற்றில் பாதியை மட்டும் சாப்பிட்டுவிட்டு, மீதியை டாக்காவ் சித்திரவதை முகாமிலிருந்து வந்திறங்கிய சக கிறிஸ்தவர்களுக்குக் கொடுத்தார்கள். அவர்களை வரவேற்று, முத்தமிட்டார்கள். சாப்பிடுவதற்கு முன் ஜெபம் செய்தார்கள். பின்னர் எல்லாருமே திருப்தியோடும் சந்தோஷத்தோடும் காணப்பட்டார்கள். அதற்குப் பிறகு பசியாய் இருந்ததாக அவர்கள் சொல்லவே இல்லை. இவர்கள்தான் உண்மையான கிறிஸ்தவர்கள் என்று அப்போது நினைத்தேன்.”

[பக்கம் 19-ன் படங்கள்]

யெகோவாவிடம் நெருங்கி வர மற்ற காரியங்களிலிருந்து தினமும் நேரத்தை விலைகொடுத்து வாங்குகிறீர்களா?