Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“உங்களுடைய பெயரைத் தெரியப்படுத்தினேன்”

“உங்களுடைய பெயரைத் தெரியப்படுத்தினேன்”

“உங்களுடைய பெயரைத் தெரியப்படுத்தினேன்”

“நீங்கள் இந்த உலகத்திலிருந்து தேர்ந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷர்களுக்கு உங்களுடைய பெயரைத் தெரியப்படுத்தியிருக்கிறேன். இவர்களுக்கு உங்களுடைய பெயரைத் தெரியப்படுத்தினேன், இன்னமும் தெரியப்படுத்துவேன்.”—யோவான் 17:6, 26.

இதன் அர்த்தம்: இயேசு ஊழியம் செய்தபோது கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தினார். அவர் வசனங்களை வாசித்தபோதெல்லாம் கண்டிப்பாகக் கடவுளுடைய பெயரை உச்சரித்திருப்பார். (லூக்கா 4:16-21) அதோடு, “தகப்பனே, உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்” என்று ஜெபம் செய்யச் சொல்லி சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.—லூக்கா 11:2.

ஆரம்பகால கிறிஸ்தவர்கள் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தினார்கள்: கடவுள் “தன்னுடைய பெயருக்கென்று ஒரு ஜனத்தை” மற்ற தேசத்து மக்கள் மத்தியிலிருந்து பிரித்தெடுத்ததாக எருசலேமில் இருந்த மூப்பர்களிடம் அப்போஸ்தலன் பேதுரு சொன்னார். (அப்போஸ்தலர் 15:14) “யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிற ஒவ்வொருவரும் மீட்புப் பெறுவார்கள்” என்று அப்போஸ்தலர்களும் மற்றவர்களும் பிரசங்கித்தார்கள். (அப்போஸ்தலர் 2:21; ரோமர் 10:13) தாங்கள் எழுதிய பைபிள் புத்தகங்களிலும் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தினார்கள். கிறிஸ்தவர்களின் புத்தகங்களை எதிரிகள் தீயில் கொளுத்தியதைப் பற்றி டோசெஃப்டா என்ற புத்தகம் (சுமார் கி.பி. 300-ல் எழுதி முடிக்கப்பட்ட யூதர்களுடைய சட்டங்களின் தொகுப்பு) இப்படிச் சொல்கிறது: “சுவிசேஷப் புத்தகங்களையும் மினிம் [யூதக் கிறிஸ்தவர்களைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது] புத்தகங்களையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. . . . அந்தப் புத்தகங்களில் கடவுளுடைய பெயர் இருந்தபோதிலும் அவை எல்லாவற்றையும் அவர்கள் நெருப்பில் எரித்துவிட்டார்கள்.”

இன்று யார் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துகிறார்கள்? அமெரிக்காவில் இருக்கும் ‘கிறிஸ்துவின் சர்ச்சுகளின் தேசீய ஆலோசனை சபை’ அங்கீகரித்திருக்கும் ரிவைஸ்டு ஸ்டான்டர்டு வர்ஷன் பைபிள் அதன் முன்னுரையில் இப்படிச் சொல்கிறது: “ஒரேவொரு கடவுள்தான் இருக்கிறார். அதனால், மற்ற கடவுள்களிலிருந்து அவரை வித்தியாசப்படுத்திக் காட்ட வேண்டும் என்று நினைத்து கிறிஸ்தவ சர்ச்சுகள் அவருக்கு ஒரு பெயரைப் பயன்படுத்துவது தவறு. இயேசு பிறப்பதற்கு ரொம்பக் காலத்துக்கு முன்பே யூதர்கள் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துவதை விட்டுவிட்டார்கள்.” அந்த பைபிள் மொழிபெயர்ப்பில் கடவுளுடைய பெயருக்குப் பதிலாக “கர்த்தர்” என்ற வார்த்தையைப் போட்டிருக்கிறார்கள். சமீபத்தில், “எந்தப் பாடல்களிலும் ஜெபங்களிலும், கடவுளுடைய பெயரைக் குறிக்கும் ய்ஹ்வ்ஹ் * என்ற நான்கெழுத்துகளை பயன்படுத்தவும் கூடாது, உச்சரிக்கவும் கூடாது” என்று கத்தோலிக்க பிஷப்புகளுக்கு வாடிகன் உத்தரவு போட்டது.

இன்று கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துகிறவர்கள் யார்? அதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துகிறவர்கள் யார்? கிர்கிஸ்தானில் சர்கே என்ற இளைஞர் ஒரு சினிமாவைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, அதில் கடவுளுடைய பெயர் யெகோவா என்று சொல்லப்பட்டதைக் கேட்டார். அதன் பிறகு கிட்டத்தட்ட பத்து வருஷங்களுக்கு அவர் அந்தப் பெயரைக் கேட்கவே இல்லை. அவர் அமெரிக்காவுக்குக் குடிமாறிய பிறகு, இரண்டு யெகோவாவின் சாட்சிகள் அவருடைய வீட்டிற்கு வந்து, கடவுளுடைய பெயரை பைபிளிலிருந்து எடுத்துக் காட்டினார்கள். யெகோவா என்ற பெயரைப் பயன்படுத்துகிற ஒரு மத அமைப்பு இருப்பதைத் தெரிந்துகொண்டபோது சர்கே ரொம்ப சந்தோஷப்பட்டார். ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், “யெகோவா தேவன்” யார் என்பதை ஒரு அகராதி (Webster’s Third New International Dictionary ) இப்படி விளக்குகிறது: “யெகோவாவின் சாட்சிகள் வணங்கும் உன்னதமான கடவுள், அவர்கள் வழிபடும் ஒரே கடவுள்.”

[அடிக்குறிப்பு]

^ பாரா. 5 தமிழில் கடவுளுடைய பெயர் பொதுவாக “யெகோவா” என்று எழுதப்படுகிறது.